-
3rd December 2016, 11:58 PM
#1
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு - 35
---------------------------------
வீணை இசை என்ன இத்தனை இனிக்கிறது
என்று விசாரித்தால், வீணை பலா மரத்தில்தான்
செய்யப்படுகிறதாமே?
அதுவும் "வாணி"யே மீட்டினால்.. இனிமைக்கா
பஞ்சம்?
*****
மிதமிஞ்சிய ஒப்பனை அழகு. கற்பழிக்க விரட்டும்
தடியர்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகனின் மீது காதல். நாலு ஜோடிப் பாட்டு. நடிப்பதற்கே
வாய்ப்பில்லாத காட்சிகள்... இப்படியான கதாநாயகி நடிகர் திலகத்தின் படங்களில் காணக்
கிடைக்க மாட்டாள்.
நவராத்திரியில், பாசமலரில் - நடிகையர் திலகம்,
நெஞ்சிருக்கும் வரை, இரு மலர்களில் - புன்னகை
அரசி,
பாலும் பழமும், ஆலயமணியில் - அபிநய சரஸ்வதி,
அவன்தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாளில் -
கலைச் செல்வி,
வசந்த மாளிகையில், சிவகாமியின் செல்வனில் -
வாணிஸ்ரீ...
சராசரி நாயகிகளில்லை.. சாதித்த நாயகிகள்.
நடிப்பென்பதின் மனித உருவமாய்த் திகழ்ந்த
எங்கள் நடிகர் திலகத்தின் நேர் நின்று, பேர் வென்று சாதித்த நாயகிகள்.
*****
" ல(த்)தா"-
மறக்க முடியாத பெயர்.
கதவிடுக்கில் சிக்கிய பல்லியாய் அன்றாடங்களின் பிடியில் சிக்கி அல்லலுறும்
மனிதர்களுக்கு சினிமாக் கொட்டகைகள் ஆறுதல் தளமாகின்றன.
எல்லோருக்குமே சினிமா என்பது பொழுதுபோக்கில்லை. தன்னை, தன் கஷ்ட நஷ்டங்களை திரையும் உலவும் பிம்பத்தோடு
பொருத்திப் பார்த்துக் கொண்டு, ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷிக்கவோ, வருந்தவோ செய்யும்
சாதாரணர்களுக்கு சினிமா ஒரு திருத்தலம்.
வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி் போல்
அலங்காரப் பதுமையாக மட்டும் வளைய வராமல், நடுத்தரக் குடும்பங்களில் திடீர் திடீரெனச் சூழும் இருளை விரட்டும் சுள்ளென்ற சூரியப் பெண் ல(த்)தாவை தமிழ் மக்கள் வசந்த மாளிகையில் கதாநாயகியாகப் பார்த்தார்கள்.
ஒரு அடிமைத் தனம் கிடையாது. பிறையில் ஏற்றி
வைத்த தீபமாட்டம் அழகில் அலப்பல் கிடையாது.
காசென்றால் வாய் பிளக்கும் கேவலம் கிடையாது.
எந்தவொரு சூழலிலும் தன் கம்பீத்தை சிறிதும் இழக்காத கதாநாயகி, தமிழ்த் திரைகள் பழகாத புதுசு.
அன்புக்கு சந்தனமாய் குழைவதும், அதிகாரத்தை
திராவகமாய் பொசுக்குவதுமாய் ஒரு குணம்.
தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கிறவன் காதலனே ஆனாலும், அவனே தனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியாய் இருந்தாலும், துணிந்து நெற்றிக் கண் திறக்கிற ல(த்)தா என்கிற கதாநாயகியை, நான் வசந்த மாளிகையை முதன் முதலாகப்
பார்த்த அந்தச் சின்ன வயசிலேயே பிடித்துப் போனது.
"ல(த்)தா"-
மறக்க முடியாத பெயர்.
( தலைவர், "லத்தா" என்று அழைத்து அழகாக்கிய
பிறகு "லதா" வாவது..? "லத்தா" தான்! )
*****
அந்தக் கால இரவுகளில் என்னோடு அதிக நேரம் வசித்த வானொலிப் பெட்டியிலிருந்து "அடுத்ததாக வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு பாடல்" என்று குரல் வந்தால், எம். ஆர். ஆர். வாசு அறைக்குள் நுழைந்து உருட்டிய சத்தம் கேட்டு, கண் தெரியாத தவப்புதல்வன் நிர்மல் காதோடு
கை குவித்து கவனமாதல் போல நானும் ஆவலோடு காது தீட்டிக் காத்திருப்பது... இந்தப்
பாடலுக்காகத்தான்.
நன்றிகளுக்குரிய கவியரசர் நடிகர் திலகத்தை
வீணையாக உருவகப்படுத்திய போதே பாடல்
ஜெயித்து விட்டது.
"கலைமகள் கைப்பொருள்" கலைமகளின் மடிமீது
கிடக்கிறது.. குழந்தை போல. மடி கிடத்திப் பார்த்த
கலையன்னைக்குத் தன் திறமை நாதத்தால் பெருமை சேர்த்த குழந்தைதானே நம் நடிகர் திலகம்?
"கவனிக்க ஆளில்லையோ"...
கவனிப்பு - அன்பு மிகுந்த அக்கறை.
சரியான விரல்களால் மீட்டப்படாத அற்புதமாய்
நாயகன். நாதம் நிரம்பிய வாத்தியம் நல்லிசை
தாராமல் வீணாகிறதே என்கிற நாயகியின் கவலை, பாடலாகியிருக்கிறது.
கவலை எவ்வளவு இனிமை கேளுங்கள் என்கிறார்
திரை இசைத் திலகம்.
நாயகன் குறித்த நாயகியின் கவலையை மூன்று
பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் .. கவியரசரும், திரை இசைத் திலகமும்.
"உன்னிடம் ஆயிரம் ராகங்களே - என்றும்
உனக்குள் ஆயிரம் கீதங்களே..
இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் - இல்லை
எனக்கேனும் வழிகாட்டுங்களேன்!?"
- அக்கறை. காதல் மிகுதியில் கசியும் கரிசனம்.
கெட்டழியும் காதலனை நல்வழிப்படுத்த வேண்டும்
என்கிற துடிப்பு. தானே அந்த நல்ல காரியத்தைச்
செய்ய வேண்டுமென்பதுதான் நினைப்பு. இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் என்பதெல்லாம் சும்மா நடிப்பு.
"நான் யார் உன்னை மீட்ட?
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட?
ஏனோ துடிக்கின்றேன்..
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்..!"
- சுய பரிசீலனை. காதலனை நல்வழிப்படுத்தும்
யோக்கியதை தனக்கிருக்கிறதா என்று தனக்குத்
தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. தனது தவிப்பையே தன் கேள்விக்குப் பதிலாகத் தரும்
பரிதாபம்.
"சொர்க்கமும், நரகமும் நம் வசமே.
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே.
சத்தியம், தர்மங்கள் நிலைக்கட்டுமே.
இது, தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே."
- ஏக்கத்தையும், கவலையையும் அறிவுரையாக மாறும் உரிமை. தன் நேசத்திற்குரியவன் மேல்
தான் கொண்ட அன்பெல்லாம் திரட்டி தாயாகி
நிற்கிற பெருமை.
*****
சுசீலாம்மா ஆயிரம், ஆயிரம் என்று பாடும் போது
அந்த "ரம்", உள்ளே சிவப்பு பரவிய அறையில்
தலைவர் ஊற்றி, ஊற்றிக் குடிக்கும் மதுவை விட
போதை.
*****
சிவப்பு வெல்வெட் விரித்த மாடிப் படிகளில் ஊன்றி, ஊன்றி நடந்து வரும் அழகை வி்டுங்கள்..
வெளிர் நீல உடையணிந்த மெழுகுச் சிலை போல
நிற்கும் அழகை விடுங்கள்..
"இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே" என்று
வாணிஸ்ரீ பாட, உதடு சுழித்துச் சிரிக்கிற அழகை
விடுங்கள்..
"ஏனோ.. துடிக்கின்றேன்" என்று அழுது பாடும்
பெண் குரல் கேட்டதும், நின்று நிமிர்ந்து திரும்பிப்
பார்க்கும் ஒரு பார்வை போதாதா.. எங்கள் தலைவனை நினைத்து, நினைத்து நாங்கள்
கொண்டாட..!?
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd December 2016 11:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks