-
26th January 2017, 11:41 PM
#11
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், பல்வேறு சூழல்கள், பணிகள் மற்றும் பல காரணங்களினால் திரியை தொடர்ந்து பார்வையிடவோ பங்களிப்போ செய்ய இயலாத சூழ்நிலை, இப்படி ஒரு இடைவெளி நேர்ந்தற்கு மன்னிக்கவும்.
வாசு, உங்களிடம் sorry சொல்ல வேண்டும். இன்ப நிலையத்தில் சிபிஐ ஆபிஸர் ராஜன் நடத்தும் அட்டகாசத்தை விவரிக்கும்போது பார்த்து பார்த்து வார்த்தைகளை செதுக்கியிருந்தீர்கள். அதில் என் பெயரை சொல்லி எனக்கும் ரொம்ப பிடிக்கும் என்பதையும் சொல்லியிருந்தீர்கள். அதற்கு கூட என்னால் பதில் எழுத முடியவில்லை. மன்னிக்கவும். அது போன்றே நேற்றைய ராஜாவும். ராஜா என்னிக்குமே ராஜாதானே! அந்த மனம்கவர்ந்த ராஜாவை அண்மையில் ஸ்ரீனிவாசா திரையரங்கில் (இடைவேளை வரை) பார்த்து ரசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் மனம் ஒன்றி உங்களது மற்றும் கோபாலின் "ராஜ" பதிவுகளை நிறையவே ரசிக்க முடிந்தது.
அதுவும் ராஜாவை சரியாக 36 வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு. பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ராஜா எப்போதெல்லாம் மதுரையில் மறு வெளியீடு கண்டதோ அப்போதெல்லாம் பார்த்து வந்திருக்கிறேன். 1980 தீபாவளிக்கு நம்முடைய விஸ்வரூபம் வெளியானபோது அதனுடன் பொல்லாதவன் மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு வெளியானது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.[ இந்த மூன்று படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியபோது மூன்றிற்குமே மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்ததை சாரதா அவர்கள் குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வருகிறது]. பொல்லாதவன் படம் மதுரையில் சிந்தாமணியில் வெளியாகி 75 நாட்களை கடந்தபோது அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போகவே அதன் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அடுத்து என்ன படம் போடுவது என்று யோசிக்க தொடங்கி விட்டார்கள். காரணம் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகஸ்தராக இருந்த சேது பிலிம்ஸ் தங்களது அடுத்த வெளியீடான தேவர் பிலிம்ஸின் ராம் லக்ஷ்மன் படத்துக்காக சிந்தாமணி திரையரங்கை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் அது 1981 பிப்ரவரி 28 அன்றுதான் வெளியாவதாக இருந்தது. அதுவரை பொல்லாதவன் போகாது என்பதனால் 1981 ஜனவரி 23 முதல் ஊட்டி வரை உறவு படத்தை திரையிட்டார்கள். படம் பிரமாதமாக போகவே இரண்டாம் வாரமும் தொடரப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு பிப்ரவரி 6 முதல் ராஜா திரையிடப்பட்டது. படம் சக்கை போடு போட்டது. பேய்த்தனமான கூட்டம். மொத்தம் 22 நாட்கள் சிந்தாமணியில் மட்டும் ஓடியது[பிப்ரவரி 6 முதல் 27 வரை]. ஊட்டி வரை உறவு படத்தை அந்த இரண்டு வாரத்தில் இரண்டு முறை பார்த்தேன் என்றால் ராஜாவை 3 அல்லது 4 முறை பார்த்த நினைவு. அதன் பிறகு வேலை நிமித்தமாக மதுரையை விட்டு வெளியே சென்று விட்டதால் தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு பிறகு கிடைக்கவில்லை. இப்போது இரண்டு வாரங்களுக்கு முன்னர் பார்த்தபோது அந்த பழைய நினைவுகள் எல்லாம் வந்து போனது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நமது சிவிஆர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ராஜா குமார் என்ற ரந்தவாவோடு மோதும் காட்சியையும் மற்றும் கிளைமாக்ஸில் தாய் துன்புறுத்தப்படும்போது சிரித்துக் கொண்டே அழும் காட்சியையும் திரையிட்டோம். தியேட்டர் hangover மற்றும் விழா hangover முடிவதற்குள்ளே இந்த பதிவுகளும் மீண்டும் அந்த hangover ஐ அதிகப்படுத்தி விட்டது. ஆனால் இது சந்தோஷமான யாருக்கும் தீங்கு செய்யாத hangover.
கோபால், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராஜா மற்றும் சிவகாமியின் செல்வன் மீள் பதிவுகளுக்கு நடுவே ராஜபார்ட் பற்றியும் எழுதியதற்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் பற்றி பின்னர் விவாதிக்கலாம்.
செந்தில்வேல்,
மீண்டும் ஒரு பதிவுக் குவியலுடன் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! அவற்றுள் சில படங்களின் விளம்பரங்கள் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டன. ஆதிபகவன் விளம்பரம் நான் இதுவரை பார்க்காத ஒன்று. அதே போல் அன்பு மகள் விளம்பரமும் பார்த்தது போலும் அதே நேரத்தில் பார்க்காத ஒன்றாகவும் தோன்றுகிறது. திசைகள் திரும்பும் ரிஷிமூலம் ஆக மாறி வந்தபோது [சரியாக 37 வருடங்களுக்கு முன்பு இதே ஜனவரி 26 அன்று வெளியானது] கண்ணே கண்மணியே என்ற பெயர் மாற்றப்பட்டு வெற்றிக்கு ஒருவன் என்ற பெயரில் வெளியானது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த ரிஷிமூலம் திரைப்படமும் தொடர்ந்து 50 நாட்களை தாண்டி நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் என்ற உண்மையும் இங்கே பலருக்கு புதிய செய்தியாக இருந்திருக்கும்.
உங்களது இடைவிடாத ஆவண தேடல்களுக்கும் அபார உழைப்பிற்கும் சிரந்தாழ்ந்த நன்றி.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th January 2017 11:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks