பரத நாட்டியத்தில் புகழ்பெற்று வரும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ!


பல சீரியல்களில் மாறுட்ட கேரக்டர்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் ரோஜா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் பிசியாக நடத்தி வருகிறார் ஜெயஸ்ரீ.


அதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறிய வயதில் இருந்தே பரத நாட்டியம் பயிலத் தொடங்கி விட்டேன். என் அம்மா லட்சுமிராவ் பரத நாட்டிய கலைஞர் என்பதால் எனது ஐந்தாவது வயதிலேயே அரங்கேற்றம் நடத்தி விட்டார். அதனால் பள்ளியில் படித்த காலத்திலேயே பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தேன். அது இப்போதுவரை தொடர்கிறது.


சீரியல்களில் நடிப்பது போக மீதமுள்ள நேரத்தை பரத நாட்டியத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். அனைத்து தரப்பினரும் பரத நாட்டியத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக வள்ளி கல்யாணம் போன்ற ஆன்மீக கதைகளை மையப்படுத்தும் நடன நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறேன். நான் சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியிருப்பதால், நடனமாட செல்லும் இடங்களில் எனக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். பரத நாட்டியத்தில் நல்ல பெயரும், புகழும் கிடைக்கிறது.


அந்த வகையில், இதுவரை 1500 பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி விட்டேன். நான் கற்ற இந்த கலையை மற்றவர்களை ரசிக்க வைப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எனது கணவரான சீரியல் நடிகர் ஈஸ்வரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அதனால், எதிர்காலத்தில பரத நாட்டிய நிகழ்ச்சியினை இன்னும் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.

நன்றி: தினதந்தி