Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Murali Srinivas

    · 7 hrs

    பாலாடை
    16.06.1967 அன்று வெளியாகி இன்று 16.06.2017 அன்று 50 பொன்விழா ஆண்டுகளை நிறைவு செய்யும் பாலாடை படத்தைப் பற்றி 2012-ல் எழுதியது.
    இந்தப் படத்தைப் பொருத்தவரை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படம் எனபது ரசிகர்களை தவிர பொது மக்களுக்கு பரவலாக தெரியுமா என்றால் தெரியாது என்றே பதில் வரும். காரணம் படத்தை பற்றிய சரியான விளம்பரமின்மை. அதை பற்றி பேசுவதற்கு முன் நமது நடிகர் திலகத்தின் performance பற்றி பார்த்து விடலாம்.
    நாம் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் படங்களில் சொன்ன அதே வரிதான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் வெகு இயல்பான நடிப்பை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தியிருப்பார். மனைவி மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் ஒரு கணவன்தான் இந்த சேகர் என்பதை முதல் காட்சியிலேயே establish பண்ணி விடுவார். நீ இதுவரை எதுவுமே என்னிடம் கேட்டதிலையே என்று அவர் கேட்கும் காட்சியிலே படத்தின் நடுவில் வரப்போகும் முடிச்சிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விடும்.
    நண்பனின் வீட்டிற்கு நவராத்திரி கொலுவிற்கு மனைவியுடன் செல்கிறார். நண்பனின் நண்பன் insurance ஏஜென்ட் பாலிசி எடுப்பது பற்றி பேச ஆரம்பிக்கிறார். அப்போதுதான் பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்ற செய்தி சேகரின் நண்பனால் சொல்லப்படுகிறது. ஏன் சார் டாக்டரை பார்க்கலாமே என்ற கேள்வி வருகிறது. குழந்தை இல்லை என்பதே sensitive ஆன விஷயம். அதை பற்றிய ஒரு discussion வரும்போது அதிலும் குறிப்பாக அறிமுகமில்லாத முதன் முறை சந்திக்க நேர்கிற ஓர் மனிதனுக்கு முன்பு பேச வேண்டும் என்கிறபோது பாதிக்கப்பட ஒரு ஆண் மகன் எப்படி தர்மசங்கடப்படுவான், பதில் சொல்ல எப்படி தடுமாறுவான் என்பதை அச்சு அசலாக காட்டியிருப்பார் நடிகர் திலகம். அடுத்து டாக்டர் கிளினிக். உள்ளே மனைவிக்கு பரிசோதனைகள் நடந்துக் கொண்டிருக்க வெளியே உட்கார்ந்து அங்கே இருக்கும் ஒரு பருவ இதழில் வந்துள்ள குழந்தைகளின் புகைப்படங்களை ரசிக்கும் அந்த மனிதன் மனதில் உள்ள குழந்தை ஆசை பார்வையாளனக்கு உணர்த்துவார். வெளியே வரும் மனைவியின் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் டாக்டரை பார்க்க நான் ஜானகிகிட்டே சொல்லியிருக்கிறேன்-னு சொல்ல பத்மினி குழந்தை பிறக்கும்னு சொல்லியிருக்காங்க என்றவுடன் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் போகலாம் என்று மனைவியை கூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டு சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தது போல் திரும்பி உள்ளே வந்து டாக்டரிடம் Thank You டாக்டர் என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த elegance, அழகாய் செய்திருப்பார்.
    பின்னாளில் பொருட்காட்சியில் வைத்து டாக்டரின் மகனைப் பார்த்து பேசும்போது உண்மை தெரிய வர அந்த அதிர்ச்சியை அவர் மறைக்கும் விதம் பிரமாதம். என்ன சொல்றது ராமு என்று ஆரம்பித்து விட்டு என்ன சொல்றது என்று மட்டும் சொல்லி ஒரே வார்த்தையை வேறு அர்த்தத்தில் அவர் சொல்லும்போது ஏமாற்றப்பட்ட கையாலாகாத அந்த முகபாவம் எல்லாம் வெகு இயல்பு.
    வீட்டிற்கு வந்து யாரோ ஒருவருடன் பேசுவது போல தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்ப்பது [எப்படிப்பட்ட விஷயம் அதை யார்ட்டே மறைக்கிறது? கட்டின கணவன்கிட்டேவா?], குழந்தை மட்டுமே தன்னுடைய ஆசை இல்லை மனைவியும் அவள் மேல் இருக்கும் அன்பும்தான் முக்கியம் என்பதை மனைவியின் மனதில் பதிய வைக்கும் அந்த காட்சியும் அவர் நடிப்பில் பரிமளிக்கும்.
    அவரின் நடிப்பில் icing of the cake என்று இந்த படத்தில் சொல்ல வேண்டும் என்றால் அவர் தான் கண்ட கனவு பற்றி கே.ஆர்.விஜயாவிடம் விவரிக்கும் அந்தக் காட்சியைத்தான் சொல்ல வேண்டும். ரூமிலிருந்து நடந்து வரும் சிவாஜி. ரேடியோவில் ஒலிப்பரப்பி கொண்டிருக்கும் மலர்ந்தும் மலராத பாடலை நிறுத்தி விட்டு ஒரு வெறித்த பார்வையுடன் வந்து உட்காரும் சிவாஜி. இதை பார்த்தவுடன் தன்னுடைய அறையிலிருந்து வந்து என்ன ஆச்சு என்று கேட்கும் விஜயா. கனவை விவரிக்கும் சிவாஜி. வாசலிலே பெல் சத்தம். போய் பாக்கறேன் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு குழந்தை அப்படியே ஓடி வரான் இந்த சோபாவிலே வந்து உட்காறான் என்று ஆரம்பிப்பார். அப்போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே. இங்கேயா என்று விஜயா கேட்க, yes இந்த இடத்திலிருந்து ஓடி அங்க மாட்டியிருக்கிற கண்ணாடி மேல இந்த சாமானை எறியறான். கண்ணாடி உடைந்து சிதறுது. வாயெல்லாம் ரத்தம். ஏன்பானு கேட்க கடகடன்னு சிரிக்கிறான். ரத்தத்தை துடைக்கலாம்னு போறேன்" என்று பேசிக்கொண்டே அந்த அறையை சுற்றி வருவார். Mesmerising என்று வார்த்தையின் அர்த்தத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்தல் போதும். இந்தக் காட்சியைப் பொறுத்தவரை கவனித்தோம் என்றால் ஒன்று புலப்படும். உளவியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஒரு பொருளை ஒரு விஷயத்தை நாம் அளவிற்கு அதிகமாக விரும்புகிறோம் ஆனால் நமக்கு அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் ஆழ் மனது hallucinations எனப்படும் ஒரு வித பிரமையில் சிக்கிக் கொண்டு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நிகழ்வுகளை கனவு வடிவத்தில் கற்பனை செய்யும் என்கிறார்கள்.[உடல் நிலை சரியில்லாத போது உட்கொள்ளும் strong anti biotics கூட எப்போதும் ஏதாவது பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் சஞ்சல மனம் உடையவர்களுக்கு இது போன்ற hallucinations-ஐ கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்].அத்தகைய illusions மிகவும் weird ஆக இருக்கும் என்றும் உளவியாளர்கள் சொல்கிறார்கள்.
    இப்படிப்பட்ட ஒரு மனோநிலையில்தான் நமது நாயகன் இருக்கின்றான் என்பதை இப்படி ஒரு காட்சியமைபபின் மூலமாக திரைக்கதையில் கொண்டு வந்த கதாசிரியருக்கும் அதை சரியான விதத்தில் கையாண்ட இயக்குனருக்கும் அதை அழகாய் உள்வாங்கி தன அற்புதமான நடிப்பால் திரையில் ஒரு காவியமாக உருவாக்கிய நடிகர் திலகதிற்கும் ஒரு royal salute.
    இதை தவிர அவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் கே.ஆர்.விஜயாவிடம் கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் அவர் பழகும் விதம் பற்றி சொல்ல வேண்டும். கல்யாணத்திற்கு முன் மனைவியின் தங்கை என்ற உரிமையில் கிண்டல் செய்வது கேலியாக கமண்ட் அடிப்பது என்று ஜாலியாக இருக்கும் அவர் உடல் மொழி. அதே பெண் சந்தர்ப்ப சூழல் காரணமாக தன மனைவியாக வந்தவுடன் அவளிடம் ஓட்ட முடியாமல் விலகி விலகி போவதை அருமையாக செய்திருப்பார். அந்தப் பெண்ணும் மனைவிதான். ஆனாலும் முதல் மனைவியிடம் உள்ள attachment இரண்டாவதில் இல்லை எனபதை அவர் உணர்த்தும் விதம் நேர்த்தி.
    இறுதிக் காட்சியில் உயிருக்குயிராய் நேசித்த மனைவி தான் விரும்பிய குழந்தையை கொடுத்துவிட்டு இறந்து விடும் போது அந்த scene ஒரு melodrama-வாக மாறி விடக் கூடிய அனைத்து சாத்தியங்களும் இருந்தும் அதற்கு இடம் கொடுக்காமல் அடக்கி வசிப்பது அவர் எந்தளவிற்கு பல படங்களில் subtle acting செய்திருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்.
    ஒரு சில நடிகர் திலகத்தின் படங்களில் அவரை தவிர வேறு யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள் பாலாடை படமும் அதில் ஒன்று. மனைவியாக வரும் நாட்டியப் பேரொளியும் சரி இரண்டாவது மனைவியாக தோன்றும் புன்னகை அரசியும் சரி மனதில் தங்குகிற மாதிரி பெரிதாக ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.
    இந்தப் படத்தில். அன்றைய நாட்களில் படவுலகில் எழுதப்படாத சட்டப்படி நாகேஷ் மனோரமா நகைச்சுவை பகுதியும் உண்டு. படத்தின் கதைக்கு தொடர்பு வேண்டும் என்பதற்காக சிவாஜியின் சித்தப்பாவாக வரும் விகேஆர் பாத்திரத்தையும் இந்த நகைச்சுவை காண்டத்தில் சேர்த்திருப்பார்கள். ஆனால் நீலவானம் படம் போல இந்தப் படத்திலும் நகைச்சுவை ஒட்டாது என்பது மட்டுமல்ல ரசிக்கும்படியாகவும் இருக்காது.
    மோகன் ஆர்ட்ஸ் என்ற பானர் வரையும் நிறுவனத்தை நடத்தி வந்த மோகன், நடிகர் எம்.ஆர்.சந்தானத்துடன் சேர்ந்து ராஜாமணி பிச்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி காலத்தால் அழிக்க முடியாத காவியமான பாச மலர் திரைக் காவியத்தை 1961-ல் நமக்கு அளித்தனர். பிறகு 1963-ல் அதே பானரில் மோகன் தனியாக தயாரித்த படம் குங்குமம். அந்த படத்திற்கு பிறகு ராஜாமணி பிச்சர்ஸ் படம் எதுவும் தயாரிக்கவில்லை.
    இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்த எம்.ஆர்.சந்தானம்.[இயக்குனர் சந்தானபாரதியின் தந்தை] இதற்கிடையில் கமலா பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அன்னை இல்லம் படத்தை தயாரித்தார்.இது 1963-ம் வருடம் நவம்பர் 15 அன்று வெளியானது. சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் தயாரிக்க துவங்கி அதற்கு தங்களின் முதல் பட இயக்குனரான பீம்சிங்கை ஒப்பந்தம் செய்தார். 1965-ல் வெளிவந்த பழனி, சாந்தி திரைப்படங்களுக்கு பிறகு பீம்சிங் இந்தி படவுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இருப்பினும் இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒப்புக் கொண்டார்.
    அந்தக் காலத்தில் பருவ இதழ்களில் கதை தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தவர் பிலஹரி. ராமன் என்ற இயற் பெயருடைய இவருடைய கதைதான் பாலாடை. அவரே வசனம் எழுத படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் தமிழ் இந்தி என்று ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்துக் கொண்டிருந்த பீம்சிங்கால் இந்தப் படத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் படபிடிப்பு விட்டு விட்டு நடந்தது.
    கல்யாணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாத மனைவி தன கணவனுக்கு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்து தன் தங்கையையும் கணவனையும் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள். திருமணம் முடிந்து அவர்கள் முதலிரவுக்கு செல்லும் நேரத்தில் இங்கே இவள் கர்ப்பம் என்று தெரிய வருகிறது. இந்த சுவாரசியமான முடிச்சு விழும் போது இடைவேளை. ஆடியன்ஸ் நிமிர்ந்து உட்காரும் நேரம். ஆஹா இதை எப்படி கொண்டு போகப் போகிறார்கள் என கற்பனை செய்யும் போது அந்த சுவாரஸ்யத்திற்கு ஈடு கொடுக்காமல் தடுமாறும் திரைக்கதை இறுதிவரை அப்படியே அதே பாட்டையில் பயணிக்க ஆடியன்ஸ் ஏமாற்றமடைகின்றனர். இது எதனால் நேர்ந்தது என்பது நமக்கு தெரியாத புதிர்.
    முன்பே சொன்னது போல் பிலஹரி கதை வசனம் எழுதியிருக்க பீம்சிங் இயக்கினார். பீம்சிங் இந்தியில் பிசியாக இருந்த நேரம் எனவே அவரின் associate இயக்குனர்கள் திருமலை மகாலிங்கம் பல காட்சிகளை இயக்கியதாக அன்றைய நாளில் ஒரு பேச்சு உண்டு.
    இந்தப் படத்திற்கு இசை கே.வி.மகாதேவன். பாசமலர் படத்திற்கு மெல்லிசை மன்னர்களை பயன்படுத்திய ராஜாமணி பிக்சர்ஸ் தங்களது அடுத்த படமான குங்குமம் படத்திற்கு மகாதேவனை ஒப்பந்தம் செய்தார்கள். இரண்டிலுமே பாடல்கள் பெரும் புகழ் பெற்றன. எம்.ஆர்.சந்தானம் தனியாக எடுத்த அன்னை இல்லம் படத்திற்கு மாமாவை ஒப்பந்தம் செய்தார். குங்குமம் படத்தில் மாமாவை பயன்படுத்திக்கொண்ட அந்த நெருக்கமோ என்னவோ அன்னை இல்லம் பிறகு பாலாடை ஆகியவற்றுக்கும் மகாதேவனே இசையமைப்பாளர் ஆனார்.
    நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இரண்டிற்கு மட்டுமே மாமா மியூசிக்.ஒன்று படிக்காத மேதை மற்றொன்று பாலாடை.[இதே கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி படத்திற்கு டி.ஆர். பாப்பாவும், பெற்ற மனம் படத்திற்கு C.ராஜேஸ்வர ராவும் இசையமைத்தனர். மற்றவை எல்லாம் மெல்லிசை மன்னர்கள்.இந்தக் கூட்டணியின் கடைசி படமான பாதுகாப்பு மட்டும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள்].
    அந்தக் காலகட்டத்தில் புராணப் படங்களிலும் சமூக படங்களிலும் [பேசும் தெய்வம் போன்றவை] வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மாமா இந்தப் படத்தில் கோட்டை விட்டிருப்பார்.
    பட்டாடை கட்டிக் கொள்ள வேண்டும் - நடிகர் திலகத்திற்கு உண்மை தெரிந்தவுடன் பத்மினியிடம் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்க பத்மினி மன்னிப்பு கேட்க அந்நேரத்தில் இது எதுவும் தெரியாமல் உள்ளே வரும் கே.ஆர். விஜயா பாடுவது. இது ஓரளவிற்கு பிரபலமான பாடல். சுசீலாவின் குரல் இனிமை பிளஸ்.
    அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் - அணைக்கட்டு வேலைக்கு சென்றிருக்கும் போது அங்கே நடக்கும் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சிவாஜியும் விஜயாவும் போவார்கள். அந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பாடுவதாக வரும் பாடல். நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலை இந்தப் பாட்டில் ரசிக்கலாம்.
    டூயட் டூயட் பாடும் முதலிரவு - நாகேஷ் மனோரமா முதலிரவில் பாடுவதாக வரும் பாடல். தாராபுரம் சுந்தர்ராஜன் பாடியிருப்பார்.
    எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே - படத்தில் நடிகர் திலகத்திற்கு ஒரே பாடல் இது மட்டும்தான். அதுவரை காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு கைதட்ட ஆராவரிக்க ஒரு சீன். அந்த ஸ்டைல் போஸ் தனித்துவமான அந்த நடை என்று கலகலப்பாய் போகும்.
    தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக படம் 1967 ஜூன் 16-ல் வெளியானது. ஆனால் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட இதே போன்ற கதையமைப்பை கொண்ட இதே நாயகனும் நாயகியும் நடித்த பேசும் தெய்வம் 1967 ஏப்ரலில் வெளியாகி வெற்றியும் பெற்று பாலாடை வெளியாகும் போது ஓடிக் கொண்டிருக்கிறது.அது மட்டுமல்ல நடிகர் திலகத்திற்கு action hero என்ற ஒரு புதிய இமேஜ் நல்கிய தங்கை படமும் 1967 மே-யில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நேரத்தில் வெளியான பாலாடை போதிய வெற்றியை பெறாமல் போனது. மெயின் நகரங்களில் எல்லாம் ஐம்பது நாட்களை கடந்து ஓடிய பாலாடை எங்கள் மதுரை மாநகர் மீனாட்சி திரை அரங்கில் தன அதிக பட்ச நாட்கள் ஓட்டத்தை பதிவு செய்தது.
    நடிகர் திலகத்தின் படங்களைப் பொருத்தவரைக்கும் எது எப்படி இருப்பினும் அவருக்காக [மட்டும்] சில படங்களை பார்க்க நேரிடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பாலாடை

    அன்புடன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •