Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan,


    “அரசியல்வாதிகள் மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” - வேதனைப்படும் சிவாஜி


    தேசிய திரைப்பட விருதுகளைப்பெற டெல்லி வந்த மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் திரைப்பட விழா இயக்குநரகம் கனிஷ்கா ஓட்டலில்தான் ரூம் போடப்பட்டிருந்தது. சிவாஜிக்கு மட்டும் அசோகாவில்! அசோகாவின் 542-ம் எண்ணுள்ள ‘நாகா’வில் தங்கியிருந்தார் நடிகர் திலகம்.

    விருது வழங்கும் விழாவுக்கு முன்தினம், மாலை ஐந்து மணிக்கு ஐந்தாவது ஃப்ளோரிலுள்ள அந்த ‘சூட்’டின் அழைப்பு மணியை அழுத்தினோம். இரண்டு நிமிடங்களில் கதவு திறக்க... லுங்கி, ஷர்ட் சகிதமாக வெளிப்பட்டார். சிவாஜியின் மகன் ராம்குமார். பின்னால் திருமதி கமலா சிவாஜி.

    “அப்பாவுக்கு உடல்நிலை சற்றுச் சரியில்லை. இன்று மாலைதான் நாங்கள் டெல்லி வருவதாக இருந்தோம். சென்னையில் நிறைய விசிட்டர்கள். அவர்கள் ஆனந்தம் பொங்க வாழ்த்தும்போது, அப்பா ரொம்ப எமோஷனலாகி விடுகிறார். அதனால்தான் அங்கிருந்து சீக்கிரமாகவே கிளம்பி டெல்லி வந்துவிட்டோம். நீங்களும் கூட இப்போது அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். நாளைக் காலை பத்து மணிக்கு வர முடியுமா?” என்று ராம்குமார் கேட்க - “விகடன் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டுப் போகலாமா?” என்று நாம் பதிலுக்குக் கேட்க - “சற்று வெயிட் செய்யுங்கள்” என்று நம்மிடம் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றார் ராம்குமார். மூன்று நிமிடங்கள் கழித்துக் கதவைத் திறந்த அவர், ‘`ஓகே... வாழ்த்துத் தெரிவியுங்கள். ரிலாக்ஸ்டான டிரஸ்ஸில் இருப்பதால் போட்டோ வேண்டாம்” என்றார்.

    கையில் மலர்க்கொத்துடன் உள்ளே நுழைந்தோம். நடையில் லேசான தளர்ச்சி இருந்தாலும் சிம்மக்குரலோனின் கம்பீரமும் கண்களும் சேர்ந்து வெளிப்படுத்தும் அந்தப் பரந்த சிரிப்பு குறையவில்லை. “நன்றி தம்பி!” என்று சொல்லி பொக்கேயை வாங்கிக்கொண்டு உடனே நமக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் சிவாஜி.

    மறுநாள் விருது வழங்கும் தினம். காலை பத்து மணிக்குச் சிவாஜியின் அறை முன் இருந்தோம். ராம்குமாரும் பிரபுவும் வெளிப்பட்டனர். “இன்னொரு சூட்டில் டி.வி-க்குப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. சற்று வெயிட் பண்ணுங்களேன்” என்றார் ராம்குமார். லாபியில் நாம் உட்கார, கையில் மொபைல் போனுடன் நம்முடன் ஜோடி சேர்ந்தார் பிரபு.




    “அப்பா நடித்த படங்களிலிருந்து அருமையான ஸீன்கள் அடங்கிய இருபத்தைந்து நிமிட விடியோ கேசட் தயாரிச்சு வெச்சிருக்கேன். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னில் ‘மஞ்சள் அரைத்தாயா?’ வசனத்திலிருந்து அப்பாவின் முக்கியப் படங்களின் கிளிப்பிங்குகள் அதில் இருக்கு. ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சு அந்த கேசட்டைப் போட்டுக் காட்டணும். எங்க வீட்டிலுள்ள எல்லோருக்குமே அப்பா விருது வாங்குவதை நேரடியாகப் பார்க்க ஆசைதான். ஆனா, பசங்களுக்கு ஸ்கூல். வீட்டைப் பார்த்துக்கவும் யாராவது இருக்கணும் என்பதால் மத்தவங்க டெல்லிக்கு வரலை” என்று சொன்னார் பிரபு.

    “இப்பவும் சிவாஜி சாருக்கு அரசியல் ஆர்வம் இருக்கா?” - பிரபுவிடம் கேட்டோம்.

    “என்னைக்கு அப்பா அரசியலிலிருந்து விலகினாரோ, அன்னையிலிருந்து அவருடன் அரசியல் பேசறதை நாங்க விட்டுட்டோம். அப்பா மாதிரி நேர்மையானவர்களுக்கு இன்றைய அரசியல் சரிபட்டு வராது!” என்றார்.

    அதற்குள் ராம்குமார் வந்து “அப்பா ரெடி” என்று சொல்ல, நாம் உள்ளே நுழைந்தோம்.

    பனியன் அணியாமல் வெளீரென்ற கதர் சட்டை - வேட்டியுடன் பளீரென்று சோபாவில் அமர்ந்திருந்தார் சிவாஜி. நெற்றி முழுக்க விபூதிப்பட்டை. ‘`வாங்க தம்பி! நேத்து நீங்க அக்கறையா பொக்கே கொடுத்ததால்தான் இன்னிக்கு உங்களைக் கூப்பிட்டேன்” என்று தனக்கே உரித்தான ஸ்பெஷாலிட்டியாகத் தலையை உயர்த்தி வெடிச்சிரிப்பு சிரித்து நம் தோளில் தட்டினார். சற்றுத் தள்ளி உட்காரப்போன நம்மை ‘`சரிதான்! இங்க, பக்கத்துல வந்து உட்கார மாட்டீங்களா?” என்று பக்கத்தில் கை காட்ட, ‘நன்றி’ சொல்லிவிட்டு உட்கார்ந்தோம்.

    ``நிறைய பேட்டி கொடுத்தாச்சு. ஆனா, நிறைய பேர் ஒரே மாதிரி கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ‘உங்களுக்கு ஏன் இவ்வளவு லேட்டாக விருது கொடுத்திருக்கிறார்கள்’ என்று இவர்களுக்குப் பதில் சொல்லியே எனக்குப் பொறுமை போயிடுச்சு. லேட்டாகக் கொடுத்தால் அதுக்கு நான் என்னப்பா செய்ய முடியும்? ஒருத்தராவது விருது கொடுத்தவங்களை இந்தக் கேள்வி கேட்டுப் பதில் வாங்கிப் போடமாட்டீங்களா?” என்றவர், “நீங்களும் அதே கேள்வியைத்தானே கேட்கப் போறீங்க?” என்றார்.

    “நீங்கள் நடிக்காத ரோல் இல்லை. அதிலும் குறிப்பாக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற தேசப்பற்றுக்கு உதாரணமான நிஜ கேரக்டர்களை ஏற்று உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறீர்கள். அதனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய பொருத்தமானவர் நீங்கள்தான். சுதந்திரம் அடைந்த இந்த ஐம்பதாண்டு காலத்தில் இந்தியாவோட வளர்ச்சி எப்படி இருக்கு என்று நினைக்கிறீர்கள்?”

    நீளமாக இப்படி ஒரு கேள்வி கேட்டதும் உள்ளங்கையால் முகவாயைத் தாங்கிக்கொண்டு கண்களை அகட்டி நம்மைப் பார்த்துவிட்டு சிவாஜி சொன்னார்...





    “இன்னிக்கு காமராஜ் பிறந்த நாள். அதுதான் எனக்கு முதல்ல நினைவுக்கு வருகிறது. பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள்ல அவரோட ஆளான எனக்கு டெல்லியில் வெச்சு, ‘அவார்டு’ கொடுக்கப் போறாங்க. அதுக்காக முதல்ல நான் ரொம்பவும் சந்தோஷப்படறேன்!” - சொல்லும்போதே சிவாஜியின் கண்கள் பனித்தன.

    ‘`ம்... சுதந்திரம் வாங்கி ஐம்பது வருஷம் ஆயிடுச்சில்லே. என்னத்தை நாம பெரிசா சாதிச்சுட்டோம்? நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்ப நான் ஒரு அரசியல்வாதி மாதிரி பேசலை. இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்தியப் பிரஜை என்ற முறையில் சொல்கிறேன்... ஐம்பது வருஷம் ஓடிடுச்சுங்கிறதுக்கே வெறுமனே விழா கொண்டாடிட்டா போதுமா?” - உணர்ச்சிவசப்பட்டு உயர்ந்த சிவாஜியின் குரல் சட்டென்று தடைப்பட்டு நிற்கிறது.

    “ஒவ்வொரு நாளும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போது “நேத்து நீ பெரிசா என்ன காரியம் செய்தாய் என்று கேட்டுக்கொண்டே தேதியைக் கிழி” என்று பெரியார் சொல்வார். அப்படி நினைச்சுப் பார்க்கறவங்க இப்ப யார் இருக்கா..?” - சிரிக்கிறார் சிவாஜி.

    அசோகா ஓட்டல் பேரர், இரண்டு ஃப்ளாஸ்க்குகளை ஒரு தட்டில் சிவாஜியின் முன் உள்ள டீபாயில் வைக்கிறார். “பாய், அவுர் ஏக் கிளாஸ் லாவோ!” என்று சிவாஜி இந்தியில் சொல்ல, கிளாஸ் கொண்டு வருகிறார் பேரர். ஒரு ஃப்ளாஸ்க்கிலிருந்து கொதிக்கும் வெந்நீரை கிளாஸில் ஊற்றி, கிளாஸை நாப்கின் பேப்பரால் பிடித்துக்கொண்டு ஊதி ஊதி மெதுவாகக் குடிக்கிறார்.

    ``இந்தியா போதுமான அளவு முன்னேறவில்லைனு எப்படி சார் சொல்றீங்க?” என்று கேட்டதும், அவர் முகத்தில் கோபம் துளிர்விடுகிறது.

    “பின்னே..? மொதல்ல ஜப்பானைப் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோம். இப்ப சைனாக்காரன் ஜப்பானை முந்தப் பார்க்கறான். உடனே சைனா பத்திப் பேசறோம். ஆனால், நாம் அந்த அளவுக்கு முன்னேறலையே. நம்மிடம் என்ன குறை இருக்கு? நம்மிடம் உள்ள ஆற்றலை ஒழுங்காக ‘சானலைஸ்’ செய்யலையே ராஜா. உங்கொப்புரானே சொல்றேன்... நாம் ஒழுங்காக இருந்தால் எல்லா நாட்டையும் மிஞ்சிடுவோம்!”

    எழுந்துபோய் ஜன்னலருகே நிற்கிறார். சமீபத்தில் சன் டிவி-யில் சௌகார் ஜானகி, சிவாஜியைப் பற்றிக் கூறியதை அவரிடம் சொல்ல, பழைய நினைவுகள் கண்முன் தெரிவது போன்ற பாவனையில் நம்மிடம், “யார், ஜானகியா? ஜானகி ஒரு நல்ல பார்ட்னர்...” - உதட்டில் மெலிதான சிரிப்பு ஓடுகிறது.ஜன்னலருகே நின்றிருந்தவர் சோபாவில் வந்து உட்கார்ந்துகொண்டு, கைகளைப் பின்னால் நீட்டியவாறு பேசுகிறார்.

    “எனக்கு நல்லா தெரியுது. நான் முதியவனாகிவிட்டேன். நாளுக்கு நாள் வயசாகிக்கிட்டே போகுது. இதுவரை என்ன செஞ்சோம்னு ஒரு பக்கம் இருக்கட்டும்... வருங்காலச் சந்ததியினருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற நினைப்பிலேயே என் நாட்களைக் கழிச்சுக்கிட்டிருக்கேன்...” - இதைச் சொல்லும்போது சிவாஜியின் கண்கள் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தை நோக்குகின்றன.

    எதிரேயிருக்கும் ஃப்ளாஸ்க்கைத் திறந்து ஒரு கிளாஸில் டிகாஷனை ஊற்றிப் பாலைக் கலக்குகிறார். “என்னாலே காபியில்லாமல் இருக்க முடியாது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு எட்டு காபி குடிச்சுடுவேன். இப்போ மிஞ்சிப் போனா ரெண்டுதான். இத்தனை கட்டுப்பாட்டுக்குக் காரணம் என் மனைவி கமலாதான்...” - சொல்லிக் கொண்டே ஆனந்தமாக காபியைச் சுவைத்துக் குடிக்கிறார்.





    “நான் தஞ்சாவூர்க்காரன். தஞ்சாவூர் காபியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே. இதெல்லாம் என்ன காபி... சென்னை வந்தா போகிற ரோட்ல நம்ம வீட்டுக்கு வாங்க அருமையான தஞ்சாவூர் காபி தர்றேன்.’’

    திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டதுபோல் ‘`ஒருநாள் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்து சேர்றேன். அது நல்ல இரவு நேரம் விமானநிலையத்தில் விமானம் இறங்கும் போது மேலிருந்து பார்த்தால் வெளிச்சமே இல்லாமல் விமானநிலையம் அழுது வடியுது. என்னோட பிளேனில் இருந்த வெள்ளைக்காரங்க நம்ம ஊரைப் பத்தி மட்டமாகப் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் இன்னமும் இருநூறு வருடங்கள் பின்தங்கித்தான் இருக்கோம். ஏன் இப்படி? இதான் நம் தலையெழுத்தா தம்பி?” - பேச்சின் உஷ்ணத்தில் மூச்சிறைக்கிறது. கண்களை ஒருகணம் மூடிக்கொண்டு யோசிக்கிறார்.

    “நான் சாகறதுக்குள்ளே இந்தியா நல்ல நிலையை அடையணும் வெளிநாட்டுக்காரங்க நம்ம நாட்டைப் பார்த்துட்டு, ‘அடடே! இந்தியாவா? எப்படி மளமளன்னு மாறிப்போச்சு’ அப்படினு கேட்கணும். அதுக்கு அந்த ஆண்டவன்தான் அரசியல்வாதிங்க மனதில் புகுந்து இந்தியாவைத் காப்பாத்தணும்!” - சொல்லிவிட்டு முணுமுணுத்த குரலில்.

    “ஆண்டவன் அரசியல்வாதி மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” என்றவர், மீண்டும் உரக்க ‘`ஆனா, அப்படியெல்லாம் பார்த்தா காரியம் நடக்குமா? நான் ஒரு சாதாரண நடிகன். அதிகமாகப் பேசினா இவன் வசனம் பேசறான்னு சொல்லிடுவாங்க. ஆனா, என் மனசுக்குள்ளே என்ன இருக்குனு நான் சொல்லித்தானே ஆகணும்.”

    முதன்முதலில் நாம் கேட்ட கேள்விக்கே திரும்ப வந்துவிடுகிறார். “சுதந்திரம் பத்திக் கேட்டீங்க இல்லே...?இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்தப்போ ஏதோ ஒரு நாடகத்தில் நான் நடிச்சுக்கிட்டிருந்தேன். ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே’னு பாரதியின் பாடலைப் பாடினதுகூட நல்லா நினைப்பிருக்கு. ஆனா, இப்போல்லாம் சுதந்திரப் போராட்டம் பத்தி தேசத்தோட மகிமையைச் சொல்ற படங்கள் வர்றதில்லை பார்த்தீங்களா? ப்ச்! சுதந்திரம் அடைந்த புதிதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பத்தின சப்ஜெக்ட் ‘கரெண்ட்’டா இருந்ததால் ஜனங்க பார்த்து ரசிச்சாங்க. அப்படிப்பட்ட படமெல்லாம் இப்போது எடுத்தா ஓடாது. இப்போல்லாம் ‘லைட்’டாதான் படம் எடுக்கறாங்க. ரெண்டு டான்ஸ், ரெண்டு ஃபைட் இப்படி... அந்தக் காலத்து டைப்ல வசனம்.. பேசறது இப்போ எடுபடறதில்லே. பழைய மாதிரி வசனம் பேசினால் ‘என்னடா இவன் நமக்கு Preach செய்யறானே’னு மக்கள் கேட்கறாங்க. இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லோருமே ‘லைட்’ ஆகத்தான் இருக்காங்க. ஆனா, அதில் ஒண்ணும் தப்பில்லே. அதுக்குத் தகுந்தாப்பல நம்மை மாத்திக்க வேண்டியதுதான்!’’ திரும்ப - கன்னத்தில் கை வைத்துக் கொள்கிறார்.

    ‘`கரெக்ட்தான். ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு இந்தத் தலைமுறைக்குத் தகுந்த மாதிரி பிரமாதமா ஈடு கொடுத்திருக்கீங்க!” - மனதார நாம் சொல்லவும்..

    “நான் எங்க படத்துல நடிச்சேன்? ஏதோ இரண்டு நாளைக்குக் கூப்பிட்டாங்க... போனேன். படம் ஓடுதா இல்லையானுகூட பார்க்கலை. ஏன்னா நான் பிஸினஸ்மேன் கிடையாது!” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டுக் கை கூப்பிய சிவாஜி, ‘மெட்ராஸ் வந்தா கண்டிப்பா நீங்க நம்ம வீட்டுக்கு வந்து தஞ்சாவூர் காபி குடிச்சே தீரணும்...” என்று அன்புக் கட்டளையுடன் நம் தோளின் மீது தட்டி வழியனுப்புகிறார், நடிப்புக்கே இலக்கணம் வகுத்த அந்த மேதை!

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •