புதிய தொடர் அனுபல்லவி
அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `திருப்பாவை' தொடர், வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து இதே நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர் அனுபல்லவி. இந்ததொடர் 26-ந்தேதி முதல் இதேநேரத்தில் ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
வாழ்க்கை ஒரு இனிமையான சங்கீதம். அந்த சங்கீதம் ஸ்ருதிலயத்துடன் அமைய பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் முக்கியம்!
ஒரு பாடலில் சரணம் சிறக்க வேண்டுமெனில் பல்லவியும், அனுபல்லவியும் சரியாக இருக்க வேண்டும். சங்கீதத்தை பற்றிய பொது விதி இது.
தொடராக வரும் இந்த `அனுபல்லவி'யில் சரணமாக இன்ஜினீயர் ராஜாராமன் விளங்க, பல்லவியாக அவனின் முதல் மனைவி அனுவும்; அனுபல்லவியாக இரண்டாவது மனைவி பல்லவியும் திகழ்கின்றார்கள்.
இவர்களின் வாழ்க்கை சங்கீதத்திலும் ஸ்ருதி, லய பேதங்கள் ஏற்படுகின்றன. அதை எல்லாம் சரி செய்து இவர்களால் இசைபட வாழமுடிந்ததா என்பதே இந்த `அனுபல்லவி' தொடர்.
இன்ஜினீயர் ராஜாராமன் தன் இரு மனைவியருமே நன்றாக வாழவேண்டும்; அவர்களின் நிம்மதியும், சந்தோஷமும் எக்காரணத்தைக் கொண்டும் பறிபோய் விடக்கூடாது என்று நினைப்பவர். உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுடனும் அன்போடு பழகி அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர். ஆனால், முதல் மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடமோ, இரண்டாவது மனைவி பற்றி முதல் மனைவியிடமோ இவர் கூறவில்லை. இரு குடும்பங்களையும் தனித்தனியாக நடத்தி வருகிறார்.
முதல் மனைவி அனுவிற்கு மூன்று குழந்தைகள்... இதில் இரண்டு பெண்கள், ஒரு பையன்!
இரண்டாவது மனைவி பல்லவிக்கு இரண்டு குழந்தைகள்... இதில் ஒரு பெண்; ஒரு பையன்!
தனலட்சுமி, ஸ்ரீவித்யா, சங்கீதா, `மின்னல்' தீபா
பிள்ளைகள் அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயில்கிறார்கள்.
சமூகம் போற்றும் நிலையில் வாழும் ராஜாராமனின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் எப்படி நுழைந்தார்கள்? அதற்கான சூழல் என்ன?
ராஜாராமன், தனது இரு மனைவியரிடமும் உண்மையை மறைப்பது ஏன்?
இந்த உண்மை எப்படி வெளிப்படப்போகிறது? அப்போது ராஜாராமன் மற்றும் குடும்பத்தினரின் நிலை என்ன? இந்த உண்மை, அவரின் குழந்தைகள் வாழ்க்கையை எப்படி பாதிக்கப்போகிறது?
இரு குடும்பங்களும், மனைவியரும் ஒன்று சேர்ந்தார்களா?
கேள்வி முடிச்சுகளை அவிழ்த்து சுவாரசியங்களும், ரகசியங்களும் வெளிப்பட பதில்களை தரப்போகிறது `அனுபல்லவி' என்கிறார் தொடரின் இயக்குனர் ஜே.கே.
ராஜாராமனாக நடிகர் அபிஷேக் நடிக்கிறார். மற்றும் நட்சத்திரங்கள்: யுவஸ்ரீ, தீபாநரேந்திரன், சங்கீதா, ஸ்ரீவித்யா, தனலட்சுமி, `மின்னல்' தீபா, காத்தாடி ராமமூர்த்தி.
கதை:ஜே.கே. திரைக்கதை: சி.யு.முத்துச்செல்வன். வசனம்:ஆர்.எஸ்.பாலமுருகன். ஒளிப்பதிவு: ஆர்.பார்த்திபன். இசை: சத்யா. பாடல்: காதல்மதி. டைட்டில் பாடல்: ஸ்ரீனிவாஸ். கிரியேட்டிவ் ஹெட்: ஜே.கே.ஆனந்த். தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி. இயக்கம்: மணிபாரதி தண்டபாணி
Bookmarks