-
11th December 2009, 02:19 PM
#1
Senior Member
Veteran Hubber
'Vennira Aadai' SHREEKANTH
'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்
UPDATES.....
முழு ஆய்வுக்கட்டுரைகள் / விமர்சனங்கள் (Analysis / Reviews)
1) வெண்ணிற ஆடை
2) அவள்
3) கோமாதா என் குலமாதா
4) ராஜ நாகம்
5) வியட்நாம் வீடு
6) ராஜபார்ட் ரங்கதுரை
7) சில நேரங்களில் சில மனிதர்கள்
8) தெய்வீக ராகங்கள்
9) இவர்கள் வித்தியாசமானவர்கள்
10) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
11) காசி யாத்திரை
12) திருமாங்கல்யம்
13) வெள்ளிக்கிழமை விரதம்
குறு ஆய்வுகள் / தகவல்கள் (Tid-Bits):
1) எதிர் நீச்சல்
2) அவன் ஒரு சரித்திரம்
3) இளைய தலைமுறை
4) வசந்த மாளிகை
5) வாணி ராணி
6) ஞான ஒளி
7) அன்னப்பறவை
8) வெற்றிக்கனி
9) சித்திரச் செவ்வானம்
சிறப்புப் பதிவுகள்:
ஸ்ரீதரின் அறிமுகத்தில் ஸ்ரீகாந்த்
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீகாந்த் பாசம்’
'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
-
11th December 2009 02:19 PM
# ADS
Circuit advertisement
-
11th December 2009, 04:06 PM
#2
Senior Member
Devoted Hubber
Re: 'Vennira Aadai' SHREEKANTH
Originally Posted by
saradhaa_sn
'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்
-
12th December 2009, 11:46 AM
#3
Senior Member
Veteran Hubber
ஸ்ரீகாந்த்
'வெண்ணிற ஆடை' …… நியாயப்படி ஸ்ரீகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைத்திருக்க வேண்டிய பெயர். நிர்மலாவுக்கும், மூர்த்திக்கும் கிடைத்தது.
அமெரிக்கன் கான்ஸலேட் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே ராகினி கிரியேஷன்ஸ் என்ற அமெச்சூர் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு ஸ்ரீதரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாக தேடி வந்தது. வெங்கட்ராமன் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு அலுவகத்தில் பெயர் 'வெங்கி', நாடக மேடைகளில் இவரது பெயர் 'ராஜா', திரையில் மட்டுமே ‘ஸ்ரீகாந்த்’.
காதலிக்க நேரமில்லை படத்தின் அபார வெற்றிக்குப்பின், ஸ்ரீதர் எடுத்த ஒரு பரீட்சாத்த முயற்சியான 'வெண்ணிற ஆடை'யில் இன்னொரு பரீட்சாத்த முயற்சியாக, முழுக்க முழுக்க அனைத்து பாத்திரங்களுக்கும் புதுமுகங்களையே போடுவது என்று ஸ்ரீதர் முடிவெடுத்தபோது, அவரது யூனிட்டுக்குள்ளேயே கொஞ்சம் சலசலப்பு துவங்கியது. ஏற்கெனவே அந்தக் கதையையே மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று சந்தேகம் இருக்கும்போது, முழுக்க முழுக்க புதுமுகம் என்ற இன்னொரு அக்னிப்பிரவேசம் வேண்டாம் என்றும், அடுத்து ஏதாவது கமர்ஷியல் பொழுதுபோக்குப்படம் எடுக்கும்போது முழுதும் புதுமுகங்களாக அறிமுகம் செய்யலாம் என்றும் யூனிட்டாருக்கு, குறிப்பாக மாதவன், சி.வி.ஆர்., கோபு, வின்சென்ட் எல்லோருக்கும் ஒரு எண்ணம், ஆனால் ஸ்ரீதரிடம் சொல்ல பயம். எப்படியோ கதை டிஸ்கஷன்போது லேசுமாசாகச் சொல்லியும் ஸ்ரீதர் மறுத்துவிட்டார். முழுக்க புதுமுகங்கள்தான் வேண்டும். இது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடும் என்று (தவறாக) முடிவெடுத்துவிட்டார்.
அப்படி யார், யாரைப்போடலாம் என்று ஆராய்ந்தபோது, நாடக மேடைகளில் 'ராஜா' என்ற ஒரு இளைஞர் துடிப்பாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு, ஸ்ரீதரும் மக்களோடு மக்களாக அமர்ந்து நாடகம் பார்த்தார். தான் உருவாக்கியிருக்கும் மனோதத்துவ டாக்டர் ரோலுக்கு இவரே சரியென முடிவெடுத்து விட்டார். மறுநாள் காலை 'ராஜாவை' அழைக்க வண்டி அனுப்பியபோது, அவர் அமெரிக்கன் கான்ஸலேட் அலுவலகம் சென்றிருப்பதாகவும் மாலைதான் வீட்டுக்கு வருவார் என்றும், நாடகம் இருக்கும் நாட்களில் மாலையில் நேராக நாடகம் நடக்கும் இடத்துக்கே போய்விடுவார் என்றும் தகவல் வர, கொஞ்சம் தயக்கம் வந்தது. இதையே சாக்காக வைத்து அவரது அஸிஸ்டண்ட்கள் தூபம் போட்டனர்... 'பார்த்தீங்களா?. பகலில் வேலைக்குப்போய்விட்டு மாலையில் மட்டும் நடிப்பது என்பது நாடகத்துக்கு சரியாக வரும். சினிமாவுக்கு சரிப்படுமா?. இவர் வரும் நேரம் பார்த்து மற்ற நடிகர்கள் வருவாங்களா?. வேண்டாம்ணே. இந்தப்படத்தை நாம் வழக்கப்படி முத்துராமனையே போட்டு எடுப்போம். அடுத்த படத்துக்குப் பார்க்கலாம்" என்றனர்.
ஸ்ரீதருக்கு மனம் ஒப்பவில்லை. 'எதுக்கும் மாலையில் அழைத்து, நம்ம ஷூட்டிங்குக்குத் தகுந்தபடி வேலையில் அட்ஜஸ்ட் பண்ண முடியுமா என்று கேட்போம்' என்றார். ஸ்ரீதரிடமிருந்து அழைப்பு என்றதும் 'ராஜா' நாலுகால் பாய்ச்சலில் வந்தார். ஸ்ரீதரின் கண்டிஷன்களைக்கேட்டதும், ஒருபக்கம் கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவவிடத்தயக்கம், மறுபக்கம் அலுவலக வேலைக்கு இடையூறு ஆகுமோ என்ற பயம். நண்பர்களோடு யோசித்தார். நண்பர்கள் சூப்பர் ஐடியா கொடுத்தனர். இரண்டுமாதம் கழித்துதான் அவர் வருடாந்திர லீவுக்கு தகுதியாவார். ஆனால் மேலதிகாரிகளைக் கேட்டு முன்கூட்டியே அந்த லீவை எடுத்துவிடுவது, ஸ்ரீதரிடம் பவ்யமாகச்சொல்லி அந்த ஒருமாத லீவுக்குள் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளனைத்தையும் எடுக்கச்செய்வது. ஒருசில சீன்கள் பாக்கியிருந்தால், ஜஸ்ட் அலுவலகத்தில் சில மணி நேர பெர்மிஷனில் வந்து நடித்து முடிப்பது என்று முடிவெடுத்து ஸ்ரீதரிடம் சொல்ல, சற்று தயங்கிய அவர், 'சரி..இப்போது லீவு எடுக்க வேண்டாம். நான் எல்லா ஏற்பாடுகளையும், மற்ற நடிகர் நடிகைகளையும் ரெடி பண்ணிட்டு சொல்றேன். அப்போ எடுத்தால் போதும்' என்று சொல்லிவிட்டார். பிரச்சினைக்கு பெரிய தீர்வு கிடைத்தது போலிருந்தது.
ராஜா, ஸ்ரீதரின் படத்தில் நடிக்கப்போகிறார், அதுவும் கதாநாயனாக என்று அவரது நாடக வட்டாரத்தில் செய்தி பரவியது. பலருக்கு பொறாமை. அதுவும் அலையாமல், தேடாமல் வலிய வரும் வாய்ப்பு என்றால் யாருக்குத்தான் பொறாமை வராது?.
கதாநாயகியாக அப்போது ஒன்றிரண்டு கன்னடப் படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை புக் பண்ணினார். அவரது தாயார் சந்தியா, சித்தி வித்யாவதியெல்லாம் ஏற்கெனவே ஸ்ரீதருக்குப் பரிச்சயமானவர்கள். அதனால் சுலபமாகப்போய்விட்டது. எப்படியும் நகைச்சுவைக்கு நாகேஷ் - சச்சுவைத்தான் போடுவார், அதை மாற்றமாட்டார் என்று நினைத்திருக்க, அவர்களுக்கும் பதிலாக மூர்த்தியையும் ஆஷாவையும், காதலி ரோலுக்கு நிர்மலாவையும் ஒப்பந்தம் செய்தார். எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு, 'நாளைமறுநாள் முதல் விடுமுறை எடுங்கள்' என்று சொல்ல ராஜாவுக்கு அதிர்ச்சி. அமெரிக்கன் கான்ஸலேட் நிர்வாகப்படி பத்து நாட்களுக்கு முன் லீவுக்கு அப்ளை பண்ண வேண்டும். இதைச் சொன்னதும் இதைச்சாக்காக வைத்து அவரைத் தவிர்க்க முயன்றனர். ஆனால் ஸ்ரீதர் விடவில்லை. 'ஏன் அவனைத்தள்ளி விடுவதிலேயே குறியா இருக்கீங்க?. நான் முடிவு பண்ணிட்டேன். அவன்தான் HERO. ராஜா லீவு எடுத்துக்கொண்டு வரும்வரை மற்றவர்களின் சீனை எடுப்போம்' என்று ஸ்ரீதர் பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
‘ராஜா’ என்ற பெயர் நாடகமேடைக்கு சரி. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும்போது இன்னும் சற்று கவர்ச்சியான, வித்தியாசமான பெயர் வைக்கலாமே என்று யோசித்தபோது, 'வெங்கி' என்ற 'ராஜா' சொன்னார். 'சார், நான் முதன்முதலாக உங்கள் படத்தில் அறிமுகமாகிறேன். அது காலத்துக்கும் நினைவிருக்கிறாற்போல உங்கள் பெயரையும் சேர்த்து வையுங்கள்' என்று சொல்ல, உடனே ஸ்ரீதர் கோபுவைப்பார்த்து ‘கோபு, என்ன பெயர் வைக்கலாம்னு நீயே சொல்லு' என்றது கோபு சட்டென்று, 'உங்க பெயரில் துவங்குகிறாற்போல ‘ஸ்ரீகாந்த்'னு வச்சிடலாம்'னு சொல்ல அது எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஸ்ரீதரின் மோதிரக்கையில் குட்டுப்பட்டவராக திரையுலகில் நுழைந்தார் ஸ்ரீகாந்த்.
-
12th December 2009, 12:59 PM
#4
Senior Member
Veteran Hubber
"வெண்ணிற ஆடை"
காதலிக்க நேரமில்லை படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து தெம்படைந்த இயக்குனர் ஸ்ரீதர், தனது பரீட்சாத்த முயற்சியாக வெண்ணிற ஆடையைத் தயாரித்து இயக்கினார். மணம் முடித்து சில மணி நேரங்களிலேயே கணவனை விபத்தில் பறிகொடுத்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஷோபா (ஜெயலலிதா), அவரைக்குணப்படுத்த வரும் மனோதத்துவ டாக்டர் ஸ்ரீகாந்த், அவருடைய காதலி கீதா (நிர்மலா). ஷோபாவைக் குணப்படுத்தும்போது, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் மீது ஒருதலையாய் காதல் ஏற்பட, டாக்டருக்கு தர்ம சங்கடம். இதில் பெரிய பிரச்சினை ஷோபாவின் பெற்றோரும், அவளுடைய காதலுக்கு சப்போர்ட் செய்வதுதான். ஷோபாவின் மனதில் காதல் வளர்ந்துவரும் வேளையில், டாக்டர் இனிமேலும் தாமதித்தால் ஆபத்து என்று தனக்கும் கீதாவுக்குமான காதலைப் பற்றிச்சொல்ல, ஷோபாவுக்கு அதிர்ச்சி. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றத்திலிருந்து மீண்டு வருவதோடு, டாக்டருக்கும் அவரது காதலி கீதாவுக்கும் தன்னுடைய முயற்சியிலேயே திருமண ஏற்பாடு செய்ததோடு, திருமணம் முடித்து தன்னைச் சந்திக்க வரும்போது, வெண்ணிற ஆடை அணிந்து விதவைக்கோலம் பூணுகிறாள். தன் மனநிலை தெளிந்து தான் விதவை என்று உணர்ந்து அந்தக்கோலத்தைப்பூண்டாளா, அல்லது தான் விரும்பிய தன் காதலன் வேறொரு பெண் கழுத்தில் தாலி கட்டியதால் விதவைக் கோலம் பூண்டாளா என்ற கேள்விக்குறியோடே படம் முடிகிறது.
முழுக்க முழுக்க புதுமுகங்களைப்போட்டது மக்களுக்கு சிறிது ஏமாற்றமளித்ததே தவிர, நடித்த புதுமுகங்கள் ஏமாற்றவில்லை. மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். அதிலும் ஜெயலலிதா மிகப்பிரமாதமாக நடித்திருந்தார். முதல் தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியிருந்தார். முதலில் பைத்தியமாக அறிமுகமாகும் பாடலில் துடிப்பு, போகப்போக மனநிலை சரியாகி வரும்போது கூடவே சாந்தமும் படிப்படியாக அவர் மனதில் குடிகொள்கிறது. இறுதியில் ஒரு துறவி நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ளும்போது நம் மனதை ரொம்பவே பாதிக்கிறார். அதிலும் கடைசியில் வெண்ணிற ஆடை அணிந்து விதவைக்கோலம் பூணுவதை விட, சரியாக மண்டபத்தில் ஸ்ரீகாந்த் - நிர்மலா திருமணம் நடக்கும் நேரம், வீட்டில் தன்னை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்துக்கொள்வது நம் மனதைப்பதற வைக்கும்.
அதுபோலவே ஸ்ரீகாந்தும், தான் ஏற்றிருந்த மனோதத்துவ டாக்டர் ரோலுக்கு கச்சிதமாகப்பொருந்தினார். அந்த ரோலுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருந்தார். அலட்டிக்கொள்ளாத அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருவேளை நாலு ரவுடிகளை இவருடன் மோதவிட்டு அவர்களுடன் சண்டையிடுவதாகவெல்லாம் காண்பிக்காததால் மக்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. காதலி நிர்மலாவுடனான இரண்டு டூயட் காட்சிகளிலும் கூட அழகாக நடித்து மனதைக்கவர்ந்தார். ஒரே குறை, இவர் மனோதத்துவம் படித்தது ஜெயலலிதா என்ற ஒரே நோயாளியைக் குணப்படுத்துவதற்கு மட்டுமே என்பது போலக்காண்பித்தது, அந்தப்பாத்திரத்தை சற்று குறைவடையச்செய்துவிட்டது.
நிர்மலாவைப்பொறுத்தவரை, இது அவருடைய முதல் படம் என்பது காட்சிக்கு காட்சி தெரியும்வண்ணம் ரொம்ப அமெச்சூர்தனமாக நடித்திருந்தார். டைரக்டர் சொல்லிக்கொடுத்ததைச் செய்தால் போதும் என்ற லெவலோடு நின்றுவிட்டார் போலும். இட்லர் மீசையுடன் வரும் மூர்த்தியும் அவரது ஜோடியான ஆஷாவும் நகைச்சுவைக்கொடுக்க முயன்றிருந்தனர். எந்த அளவுக்கு வெற்றிகரமாகச்செய்தார்கள் என்பது தெளிவாக இல்லை.
படத்தை 75 சதவீதம் காப்பாற்றியது பாடல்கள்தான் என்றால் மிகையில்லை. 'படம் சுமாராக இருந்தாலும் பாடல்களுக்காகப் பார்க்கலாம்' என்பது அன்றைய பல பத்திரிகைகளின் விமர்சனமாக இருந்தது. கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் (1965 கிட்டத்தட்ட இருவரும் பிரியும் நேரம் நெருங்கிய சமயம் அது) படத்தின் முதுகெலும்பாக நின்று தூக்கி நிறுத்தியிருந்தனர். அதற்கு உறுதுணையாக நின்ற வின்சென்ட் - பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு. இப்படத்தின் பாடல்கள் இன்றைக்கும் ஜீவனோடு திகழ்ந்து, இன்றைய தலைமுறையினரும் பல்வேறு இசைப்போட்டிகளில் பாடிவரும் அளவுக்கு பசுமையாக உள்ளன.
'நீ என்பதென்ன.. நான் என்பதென்ன' ஜெயலலிதாவின் அறிமுகப்பாடல், மனநிலை சரியில்லாத நிலையில் பாடுவதாக அமைந்தது. L.R.ஈஸ்வரி பாடியிருந்தார். ஜெயலலிதாவின் ஸ்டெப்கள் நன்றாக இருக்கும்.
'அல்லிப்பந்தல் கால்களெடுத்து ஆட்டம் ஆடி வா' (மூர்த்தி) ஆஷாவுக்காக ஈஸ்வரி பாடியது. ('மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்' பாடலை நினைவுபடுத்தும்).
'என்ன என்ன வார்த்தைகளோ... சின்ன விழிப் பார்வையிலே' சுசீலாவின் குரலில் அழகான மனதை வருடும் கம்போஸிங். ஸ்ரீகாந்த் பியானோ வாசிக்க, ஜெயலலிதா பாடும் இண்டோர் பாடல். குளோசப்பில் ஸ்ரீகாந்த் பியானோ வாசிப்பதாகக் காண்பிக்கப்படும் கைகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யுடையவை என்று ஒரு பேச்சு உண்டு.
'சித்திரமே சொல்லடி... முத்தமிட்டால் என்னடி' பி.பி.எஸ்., எஸ்.ஜானகி குரல்களில் ஸ்ரீகாந்த் நிர்மலா முதல் டூயட் பாடல். பாடலில் பங்கோஸ் துள்ளி விளையாடும். ஸ்டுடியோ செட்டில் எடுக்கப்பட்ட டாப்கிளாஸ் பாடல்களில் ஒன்று.
'ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி' இதுவும் அதே ஜோடிக்கான டூயட்தான். ஊட்டி கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது.
'நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் எங்கே' பி.சுசீலா பாடிய இப்பாடல் ஒரு புதிர். அதாவது, இப்பாடல் படத்தில் இருந்தது என்பார்கள் சிலர். இல்லை என்பார்கள் சிலர். (நான் பார்த்த பிரிண்டில் 'இல்லை'). பாடல் கேட்பதற்கு இனிமையோ இனிமை.
'கண்ணன் என்னும் மன்னன் பேரைச்சொல்லச் சொல்ல' மனநிலை தெளிந்தபின், சுய நினைவோடு ஜெயலலிதா பாடும் பாடல். சுசீலாவின் குரலில் பயங்கர HIT. நாற்பத்தைந்து வருடங்களூக்கு முன் கனவிலும் நினத்துப்பார்க்க முடியாத ஒரு கம்போஸிங். உண்மையில், மெல்லிசை மன்னரின் திறமைக்கும் சாதனைக்கும் உரித்தான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் இந்த அரசோ, சமுதாயமோ, ரசிகர் கூட்டமோ அளித்திருக்கிறதா?. இல்லை... இல்லை... நிச்சயமாக இல்லை. இதுவரை ஒருமுறையேனும் தேசிய விருதையோ, குறைந்த பட்சம் ஒரு பத்மஸ்ரீ விருதையோ இந்திய அரசு கொடுக்கவில்லை. அவரது அபார திறமைக்கு அதிகபட்சமாக கிடைத்தது "வெறும்" கலைமாமணி....?. அதைக்கூட அவர் திருப்பியளித்துவிடலாம். தப்பேயில்லை.
'அம்மம்மா காற்று வந்து ஆடைதொட்டுப்பாடும்' சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அவர் உள்பட யாருமே இன்றைக்கும் பாடமுடியாத பாடல். அதிலும் அந்த "அம்மம்மா..........." என்ற துவக்கம் பள்ளத்தில் விழுந்து எழும் அழகு. இப்பாடலின் இடையிசையை கம்போஸ் செய்ய இனியொருவன் பிறந்து வரணும். (இந்தப்பாடலில் ஒளிப்பதிவும் துல்லியமாக இருக்கும். உதாரணம் சின்ன அருவியிலிருந்து விழும் தண்ணீரின் தெளிவு.)
இதுபோன்ற பாடல்களை எவனாவது ரீமிக்ஸ் செய்தால் அவனை கொலைக்குற்றத்தில் கைது செய்ய இ.பி.கோ.செக்ஷன்கள் அனுமதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற முற்றுகைப்போராட்டம் நடத்தலாம்.
ஒரு ‘ஆர்ட் பிலிம்’ ரேஞ்சுக்கு படம் ஸ்லோவாக நகரும். மூர்த்தி ஆஷா காமெடி ட்ராக் இருந்தும், படத்தை விறுவிறுப்பாகக்கொண்டு செல்ல உதவவில்லை. முழுக்க முழுக்க புதுமுகங்கள் என்ற முடிவு சரியான முறையில் ஒர்க் அவுட் ஆகவில்லை. போதாக்குறைக்கு, ஜெயலலிதா ஒரு பங்கு துக்கப்பட்டால், அவரது பெற்றோராக வரும் மேஜரும் ருக்மணியும் பத்துமடங்கு அழுது தீர்த்தனர். காதலிக்க நேரமில்லை என்ற படு ஜோவியலான, படு ஸ்பீடான படத்தைப் பார்த்த அனுபவத்தை நினைத்துக்கொண்டு தியேட்டருக்குப்போன ரசிகர்களை படம் ஏமாற்றியது. ரிபீட்டட் ஆடியன்ஸ் வராததால் தியேட்டர் வெறிச்சோடியது. ஸ்ரீதர் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்றாகிப்போனது.
'வெண்ணிற ஆடை' தோல்வி பற்றி இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர் சொன்னார்... "இருபது ஆண்டுகள் கழித்து தர வேண்டிய படத்தை முன்கூட்டியே கொடுத்தது என் தவறுதான்".
-
12th December 2009, 04:16 PM
#5
Senior Member
Veteran Hubber
'எதிர் நீச்சல்' கிட்டு மாமா.
ஸ்ரீகாந்த் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமான போதிலும், அவருக்கு தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. பெரும்பாலானவை சப்போர்ட்டிவ் ரோல்களே. அவையும் பலசமயம் நல்ல எஃபெக்டிவ் ரோல்களாக அமைந்தது உண்டு. அவற்றில் ஒன்றுதான் எதிர்நீச்சலில் நடித்த கிட்டுமாமா ரோல்.
எதிர்நீச்சல் படத்தின் கதை மிகப்பெரிது. அந்த வீட்டில் வந்து ஒண்டியிருந்துகொண்டே கல்லூரியில் படிக்கும் மாது என்ற பரிதாபமான ஜீவனை, எப்படி எல்லோரும் தங்கள் சுயநலத்துக்குப் பந்தாடுகிறார்கள். ஒரு ரூபாய் பெறுமான சோற்றைப்போட்டுவிட்டு, பதிலுக்கு அவனிடமிருந்து பத்துரூபாய்க்கான வேலையை எப்படி வாங்குவது என்ற வித்தையை அனைவரும் அறிந்துள்ளனர். இதையும் விட்டால் தனக்குப் போக்கிடமில்லையே என்று நினைக்கும் அவன், எல்லாவற்றையும் சகிக்கிறான். மாது (நாகேஷ்) ஒரு பணக்காரரின் மகன் என்று நாயர் (முத்துராமன்) கிளப்பிவிடும் புரளியை நம்பி, திடீரென ஒவ்வொருவரும் அவன் மீது காட்டும் அக்கறையென்ன, அது பொய்யென்று தெரிந்ததும், தங்கள் சுயரூபத்தைக்காட்டும் பச்சோந்தித்தனம் என்ன?. கே.பி.யின் சிந்தனையே தனிதான்.
படத்தின் முக்கிய பாத்திரம் நாகேஷ் நடித்த 'மாடிப்படி மாது' பாத்திரமாக இருந்தாலும், அதற்கு துணை நின்ற அனைவரது கதாபாத்திரங்களுமே சிறப்புப் பெற்றன. படத்தின் கதையமைப்பு சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர் பகுதிகளில் ஒரே வீட்டில் பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒண்டுக்குடித்தன வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது. அந்தக்குடித்தனக்காரர்களில் ஒன்றுதான் 'பட்டுமாமி-கிட்டுமாமா' தம்பதியினர் மற்றும் அவர்களின் கைக்குழந்தை. மடிசார் கட்டிய பட்டுமாமியாக சௌகார் ஜானகியும், பஞ்சகச்சம் வேஷ்டி, முழுக்கை சட்டை, துண்டு, மீசையில்லாத முகம் இவற்றுடன் ஸ்ரீகாந்த். மூச்சுக்கு மூச்சு 'ஏன்னா கேட்டேளா' என்றும் 'அடியே பட்டூ... நோக்கு விஷயம் தெரியுமோன்னோ?' என்றும் வளைய வ்ரும் 'டிப்பிக்கல்' மைலாப்பூர் பிராமணக்குடும்பம். இருவரும் ஜாடிக்கேத்த மூடி. இப்பாத்திரத்தில் நடிக்க, ஸ்ரீகாந்துக்கு நிச்சயம் நாடகமேடை அனுபவம் கைகொடுத்திருக்க வேண்டும். (இந்த படமும், நாடகத்திலிருந்து திரை வடிவம் பெற்றதுதான்). நாடகம் திரைப்படம் இரண்டையுமே செதுக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்தான்.
இந்ததம்பதியினரின் பாடல், 1968-ன் சூப்பர் பாடல்களில் ஒன்று...
'ஏன்னா.. நீங்க சமத்தா இல்லை அசடா?
சமத்தாயிருந்தா கொடுப்பேளாம் அசடாயிருந்தா தடுப்பேளாம்.
ஏண்டி புதுசா கேக்கிறே என்னைப்பாத்து?
அடுத்தாத்து அம்புஜத்தைப்பாத்தேளா -அவ
ஆத்துக்காரன் கொஞ்சறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையே வாங்கிக்கறா பட்டுப்பொடவையே வாங்கிக்கறா.
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி - அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்தை மூணுஷோவும் பார்த்தது நீதாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா
பொடவைக்கு ஏதுடி, பட்டூ பொடவைக்கு ஏதுடி’
என்ற பாடல் ஒலிக்காத நாளே இல்லையெனலாம்.
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட இப்படத்திலிருந்து (இது ஸ்ரீகாந்த் திரியென்பதால்) அவர் ஏற்றிருந்த 'கிட்டுமாமா' ரோலைமட்டும் சொல்லியிருக்கிறேன்.
-
13th December 2009, 08:09 PM
#6
Senior Member
Veteran Hubber
தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு, தேசிய திலகத்தின் பக்தையான சகோதரி சாரதா அவர்கள் ஆரம்பித்திருக்கும் இத்திரி பற்பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் !
சாரதா அவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு எமது பாராட்டுக்கள், நன்றிகள் !!
அன்புடன்,
பம்மலார்.
-
14th December 2009, 08:40 AM
#7
Senior Member
Diamond Hubber
-
14th December 2009, 05:09 PM
#8
Senior Member
Veteran Hubber
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பம்மலார்.
Originally Posted by
groucho070
I won't call Srikanth underrated or underappreciated. He was there, part of the history, and for NT fans like me, he was the reason why NT's characters went ballistic in many notable films
அந்த வகையில் சட்டென்று நினைவுக்கு வருவது 'தங்கப்பதக்கம்'.
Originally Posted by
groucho070
Anyway...I recall my aunt (our family film historian) saying that back in the days, Vennira Aadai was noted as "adult" film and got the youngsters all excited. But then, when they saw the actual film, they were very disappointed. Similar reactions there?
Rakesh....
நீங்கள் சொன்னது போல வெண்ணிற ஆடை படத்துக்கு சென்ஸாரில் 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை. அதற்குக்காரணம், இப்போது போல 'ஏ' சர்டிபிகேட்டெல்லாம் அன்றைக்கு தமிழ்த்திரையுலகம் கேள்விப்படாத ஒன்று (இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் ஒரேயொரு படத்துக்கு வழங்கப் பட்டிருந்ததாம்). இந்திய அளவிலேயே 'ஏ'சர்டிபிகேட் என்பது ரொம்பவே அபூர்வம்.
'வெண்ணிற ஆடை' படத்துக்கு 'ஏ' வழங்கப்பட்டதும் ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு, 'எதையோ' எதிர்பார்த்து தியேட்டருக்குப்படையெடுத்த கூட்டம், எதிர்பார்த்த மாதிரி இல்லையென்றதும் புஸ்வாணமாய் அடங்கிப்போனது.
சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில், தனது ஆஸ்தான தியேட்டரான காஸினோவில் 'வேறு' ஒரு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கவே, வெண்ணிற ஆடையை ஸ்ரீதர் அப்போதைய புதிய தியேட்டரான ஆனந்த் தியேட்டரில் திரையிட்டார். ஆனந்த தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுவார். முதல்நாள் மாலைக்காட்சியில் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸைப் பார்க்க வந்த சித்ராலயா கோபுவிடம், 'யப்பா, ஸ்ரீதரிடம் அடுத்த படமாவது நல்லதா எடுக்கச்சொல்லி போய்ச்சொல்லு' என்றாராம். கோபுவுக்கு ஷாக். என்ன முதல் நாளே இப்படிச்சொல்றாரே என்று. ஆனால் அவர் சொன்னதுபோலவே ஆனது. வெண்ணிற ஆடை. தரத்தில் நல்ல படம்தான், ஆனால் தியேட்டர் அதிபர்கள் கல்லாவில்தானே கவனமாக இருப்பார்கள்.
(ஜி.உமாபதி அன்றைய நாளில் 'தியேட்டர் மன்னன்' என்று பெயர் பெற்றவர். இன்றைக்கு 'அபிராமி ராமநாதன்' போல. தனது தியேட்டரில் ஒரு டிக்கட் கூட'பிளாக்'கில் போக அனுமதிக்க மாட்டார். தியேட்டர் வாசலிலேயே, நான்கு பக்கமும் பார்க்கக்கூடிய விதமாக கண்ணாடி அறை அமைத்து, ஸ்க்ரீன் உள்ளே இருந்து கண்காணிப்பார். ஆனந்த், லிட்டில் ஆனந்த மட்டுமல்ல, புகழ்பெற்ற சாந்தி தியேட்டரை உருவாக்கியவரும் அவர்தான்).
-
14th December 2009, 05:19 PM
#9
Regular Hubber
சாரதா மேடம்
நீங்கள் செய்யும் பணி மகத்தானது. வருங்காலம் ஷ்ரிகாந்த் போன்ற நல்ல குணசித்திர நடிகர் இருந்தார் என்பதை அறிய வேண்டும். ஆதற்கு உங்களின் பதிவுகள் ஆவன செய்யும் என்பது திண்ணம்.
நான் உங்களிடம் மிகவும் எதிர்பார்ப்பது :
தங்கப்பதக்கம்
ராஜ நாகம்
சதுரங்கம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஆவலுடன் எதிர்பார்கிறேன்
-
14th December 2009, 06:24 PM
#10
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Irene Hastings
வருங்காலம் ஸ்ரீகாந்த் போன்ற நல்ல குணசித்திர நடிகர் இருந்தார் என்பதை அறிய வேண்டும்.
அதற்கு அடையாளமாகத்தான் அவர் நடித்த காலத்தால் அழையாத பல படங்களை அடையாளமாக விட்டு வைத்திருகிறாரே
Originally Posted by
Irene Hastings
நான் உங்களிடம் மிகவும் எதிர்பார்ப்பது :
தங்கப்பதக்கம்
ராஜ நாகம்
சதுரங்கம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி.....
நீங்கள் குறிப்பிட்ட படங்களில் 'சதுரங்கம்' பார்த்ததில்லை. மற்றவை பார்த்திருக்கிறேன். இவையல்லாமல் மேலும் ஏராளமான படங்களில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவற்றில் சட்டென நினைவுக்கு வந்த சில...
கோமாதா என் குலமாதா
தெய்வீக ராகங்கள்
காசியாத்திரை
இவர்கள் வித்தியாசமானவர்கள்
........போன்றவை.
இவைபோக தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கதுரை, அவள் போன்ற பல்வேறு படங்களில் கதையின் முக்கியமான திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையெனும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்தார். அதுபோல மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் ஏராளமான படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவற்றை இங்கே பதிப்பிக்க வேண்டும் என்பதே என் ஆவல்.
அவரைப்பற்றி அறிந்த எல்லோரும் தங்கள் எண்ணங்களை இங்கே பதிப்பிக்க வேண்டும்.
Bookmarks