-
22nd May 2011, 02:15 AM
#1971
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 194
கே: நிறைந்த நாடக அனுபவமும், பதினெட்டு ஆண்டு திரை அனுபவமும் கொண்ட நடிகர் திலகம், எப்போது டைரக்ட் செய்வார்? அவருக்கு சிவாஜி என்று நாடகத்தில் பட்டம் கிடைத்ததே, அந்த வேடத்தை எப்போது மேடையிலோ, திரையிலோ ஏற்பார்? (ஆர்.ரங்கராஜன், சென்னை - 33)
ப: ஓய்வு ஒழிவின்றி படங்களில் நடித்து வருவதால், டைரக்ட் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை. சிவாஜி வேடமேற்று நடிக்கப் போவதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறாரே !
(ஆதாரம் : பேசும் படம், மே 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
22nd May 2011 02:15 AM
# ADS
Circuit advertisement
-
22nd May 2011, 02:38 AM
#1972
Senior Member
Veteran Hubber
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்" பாடல் பதிவுக்கு, பதில் பதிவுகளை வழங்கிய சந்திரசேகரன் சாருக்கும், Avadi to Americaவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
"இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச்சுவடுகள்" புத்தகம், சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் உள்ள 'சாந்தி புக்ஸ்' புத்தகக் கடையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd May 2011, 03:24 AM
#1973
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 195
கே: நடிகர் திலகத்தால் டி.எம்.எஸ். புகழ் பெற்றாரா? டி.எம்.எஸ்.ஆல் நடிகர் திலகம் புகழ் பெற்றாரா? (எஸ்.சிவாஜி காளிமுத்து, திருவாரூர்)
ப: இருவராலும் தமிழ்த் திரை புகழ் பெற்றது !
(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1997)
அன்புடன்,
பம்மலார்.
-
22nd May 2011, 02:40 PM
#1974
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
எங்கள் எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று மறுபடியும், நடிகர் திலகத்தின் இந்த ஒப்பற்ற திரிக்குள் நுழைந்ததற்கு, உங்களுக்கு நன்றிகள்.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
மீண்டும் உங்கள் பதிவைப் பார்த்தவுடன் பெரு மகிழ்ச்சி. வழக்கம் போல் தொடருங்கள்.
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
தங்களுடைய பங்கு இந்த விஷயத்தில் மகத்தானது. உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
திரு. பம்மலார் மற்றும் அனைத்து ஹப்பர்களுக்கும் மிக்க நன்றி.
நாம் எல்லோரும் வழக்கம் போல், நடிகர் திலகத்தின் புகழைப் பாடிக்கொண்டே இருப்போம்!
அன்புடன்,
பார்த்தசாரதி
-
22nd May 2011, 02:48 PM
#1975
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
ருஷ்ய தூதரகத்தின் விழா ஒன்றில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்கு - நடிகர் திலகத்தின் படங்களின் மூலமாக - என்ற தலைப்பில் ஒரு படம் ஒளிபரப்பப்பட இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும், அவன் இந்தியன் என்ற வகையில் பெருமை - அதாவது இந்த மாபெரும் கலைஞனை ஈன்ற தமிழ் நாட்டில் நாமும் பிறந்தது என்றால் - இன்னொரு பெருமை, அதனை இயம்புவதற்கு உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. உங்களுடைய பங்களிப்புக்கு முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவிப்பதில், அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் பெருமை கொள்கிறோம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
22nd May 2011, 05:00 PM
#1976
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் படங்களில் மிகச் சிறந்த பாடல்கள்
இது நடிகர் திலகத்தை வேறொரு கோணத்தில் ரசிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி. அவரது வெவ்வேறு படங்களில் ஒரு பத்து பத்து படங்களாகப் பிரித்து ஆராய தலைப்பட்டதில், இப்போது தான் ஒரு இருபது படங்களை முடித்தேன். இது போல் இன்னும் பல பத்து படங்களைப் பதிவதற்கு முன்னர், வேறொரு தலைப்பில் அவரது பங்களிப்பினைப் பற்றிய ஆய்வு. இதுவும், ஒரு இரு பாகங்களை அடக்கிய கட்டுரைதான்.
தலைப்பு ஒன்று - நடிகர் திலகமும் அவர் படத்தில் இடம் பெற்ற சாகாவரம் பெற்ற பாடல்களும்.
ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும், அவர் வெற்றிகரமாக செயல்படுவதற்கு முக்கியமான தேவை, அறிவு மற்றும் ஆற்றல். ஆனால், அந்த பயணம் நீண்ட நாட்களுக்கு வெற்றிகரமாக செல்ல, இவைகளை விட முக்கியமான தேவை - தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடாமல் (core activity என்கிறார்களே), தொடர்ந்து தன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, காலத்திற்கேற்பவும், மாறி வரும் ரசனை மற்றும் தொழில் நுட்பத் தேவைகளுக்கும் ஏற்றவாறும் தன்னை மாற்றிக் கொள்ளும் முனைப்பு மற்றும் இடையறாத முயற்சி.
நண்பர் திரு. தனுசு அவர்கள் பதிந்திருந்த, நடிகர் திலகம் மற்றவர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இதுதான் தன்னுடைய நிலைத்த, நீண்ட கால வெற்றிக்கு முக்கியமான காரணமாயிருக்கக்கூடும் என்று நடிகர் திலகம் கூறியிருந்தார்.
நாடக உலகம் அடிப்படையில் பெரிய visual இலக்கணங்களுக்கு உட்படாமல், பெரிதும், அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் பெர்பார்மன்சையே சார்ந்திருந்தது. அதற்கு, அந்த நடிகர்கள் பெரிய உடல் மொழியின்றி, நின்ற இடத்திலிருந்து, மேடையில் இருந்து, கடைசி இருக்கையில் அமர்ந்திருப்பவர் வரை கேட்கும் படியாக உரக்கப் பேசி நடித்தால் போதும் என்ற நிலை இருந்ததால், நாடக நடிகர்களும் சத்தம் போட்டு நடித்து, உடல் மொழியைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. இருப்பினும், நாடக உலகம் தான் உண்மையில் ஒரு கலைஞன் - நடிகனுக்கு - பெரிய சோதனைக் களம் மற்றும் வலுவான அடித்தளத்தை அளிக்க வல்லது. ஏனென்றால், நாடகத்தில் நடிப்பவருக்கு சரளமாக தடுமாறாமல் நடிக்க பெரிய பயிற்சி தேவைப் படுகிறது. அவருக்கு மறு டேக் எல்லாம் கிடையாது. மேடையில் தோன்றிய கணத்தில் இருந்து, தங்கு தடையின்றி பேசி, நடித்தாக வேண்டும்; கொஞ்சம் தடுமாறினாலும், மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பும் கூச்சலும், ஏன் கல்லடி கூட கிடைத்து விடும்; நேரடியாக (live) மக்களுக்கு நடிக்க வேண்டி வருவதால். ஆனால், சினிமா உலகிலோ, ஆயிரம் முறை ரீஷூட் செய்து பட்டை தீட்டிக் கொண்டே போகலாம். ஒரு நடிகனுக்கு நாடக உலகம்தான் மிகுந்த சுய நம்பிக்கையைத் தரும். சினிமா உலகம் முற்றிலும் ஒளி ஊடகமாக இருப்பதால், கதையை visual -ஆக சுவாரஸ்யம் குன்றாமல் சொல்ல வேண்டி உள்ளது. இதில் நடிப்பதற்கு, வசன உச்சரிப்பும் தேவை என்றாலும், பெரும்பாலும், உடல் மொழிதான் அடிப்படைத் தேவையாகிறது.
அந்தக் காலத்தில், நாடகம் மற்றும் அதன் முன்னோடியான கூத்து என்று சொல்லப் படும் கலையில், கதை பாடல்கள் மற்றும் நீண்ட வசனங்கள் மூலமாகவும் தான் சொல்லப் பட்டது. சினிமா என்ற visual ஊடகத்தில், கதை யதார்த்தமாக சொல்லப் படுவதற்கு, அடிப்படையில், இசையும், பாடல்களும் தேவையில்லை என்பதை விட முரண் என்றுதான் சொல்ல முடியும். யதார்த்த உலகில், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் போது யார் இசையமைக்கிறார்கள்? இல்லை, நாம்தான் பாடிக்கொண்டே இருக்கிறோமா? இருப்பினும், இசை என்பது, இந்தியக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் பிணைந்து விட்ட ஒன்று என்பதாலும், இசை மற்றும் பாடல்கள் மூலம் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் அழுத்தமாகவும், சுவையாகவும் சொல்லி, அந்த விஷயத்தை மக்களுக்குச் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும் என்பதாலும், சங்கீதம் என்பது சினிமாவின் - அதாவது இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. மேலும், சினிமா என்பதே பொழுது போக்கு சாதனம் என்னும்போது, சங்கீதம் தவிர்க்க முடியாதவை என்று சொல்லுவதை விட, மிக முக்கியமான அம்சம் என்று சொல்வது தான் பொருத்தம்.
இப்பொழுது, எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம். இசையின் மூலம், பாடல்களின் மூலம், கதைப்போக்கையும், காட்சியையும் சொல்லி, அவை மக்களுக்குப் பூரணமாக சென்றடைந்தது என்கிற வகையில், தமிழில், பல பாடல்களைச் சொல்லலாம். இந்தப் பாடல்கள், அந்தப் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் வெளிவந்த காலகட்டங்கள் மட்டுமின்றி, இன்றளவும், மக்களை பாதித்துக்கொண்டிருக்கிற சாகாவரம் பெற்ற பாடல்கள்.
இந்தக் கட்டுரையில், நான் எடுத்துக் கொள்வது அந்தப் பாடல்களின் இசையமைப்பு, பாடல் வரிகள், பாடியவரின் பங்கு மட்டுமல்லாது, அந்தப் பாடல்களில் நடித்தவர்களின் நடிப்பாலும், இயக்கிய விதத்தாலும், பார்ப்பவர்களையும் பெரிய அளவில் பாதித்த பாடல்களை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். அதனால், இங்கு நம்மைப் போன்ற நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் குறிப்பிடப் படாமல் போகலாம். கட்டுரையின் நோக்கம், பெரும்பாலான மக்களைக் கவர்ந்த/பாதித்த, இன்றளவும், பார்த்து ரசிக்கப் படுகிற/சிலாகிக்கப் படுகிற காலத்தை வென்ற பாடல்களைப் பற்றி சொல்வதுதான்.
இந்தப் பாடல்களின் வெற்றி ஒரு அற்புதக் கூட்டு முயற்சி. நடிகர் திலகத்தின் நடிப்பு இவைகளில், போனஸ்.
1. நலந்தானா? (தில்லானா மோகனாம்பாள், 1968) பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசை - திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்; பாடியவர் - பி.சுசீலா; நாதஸ்வரம் - மதுரை எம்.பி.என்.சேதுராமன் மற்றும் மதுரை எம்.பி.என்.பொன்னுசாமி - இயக்கம் - ஏ.பி.நாகராஜன் - நடிப்பு - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டியப்பேரொளி பத்மினி.
இந்தப் பாடலின் முதல் வரியான நலந்தானா? - என்ற பல்லவி பாடப் படுவதற்கு முன்பாக, நாயகி பத்மினி மேடையில் நுழைந்து, முக பாவனையாலேயே, நாயகன் நடிகர் திலகத்தைப் பார்த்து, "நலந்தானா?" என்று கேட்க, நடிகர் திலகமும் "நலமே!" என்று முக பாவனையாலேயே விடை பகரும் போதே, இந்தப் பாடல் முழு வெற்றி பெற்று, பார்க்கும் ஒட்டு மொத்த மக்களையும் நூறு சதவிகிதம் சென்று சேர்ந்து விடுவதால், இன்றளவும், தமிழில் வெளி வந்த சாகாவரம் பெற்ற திரைப் பாடல்கள் வரிசையில் - கேட்க மட்டும் அல்ல - பார்க்கவும் - இந்தப் பாடலே முதல் பாடல் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதற்கப்புறம் வரும் ஒட்டு மொத்த பாடலும், அதில் நடித்த நடிகர் திலகம் மற்றும் பத்மினியின் நடிப்பு - முக்கியமாக நடிகர் திலகம் - ஒரு போனசாகவே அமைந்து விடுகிற விதத்தில் - பார்ப்பவர்கள் வாடிக்கையாளர்கள் என்கிற வகையில், வாடிக்கையாளர் திருப்தியைத் தாண்டி, அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திய பாடல். It’s not customer satisfaction, it’s customer delight!
இந்தப் பாடலைப் பொறுத்தவரை, நாயகி, நாயகனை அவன் கத்திக்குத்துப் பட்டு, அவன் பரிபூரண நலம் பெற்றதற்க்கப்புறம், அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார். பார்த்தவுடன், அவருக்கு, நாயகன் எப்படியிருக்கிறார், அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது, தன் மனம் என்ன பாடுபட்டது, பார்க்க முடியாவிட்டாலும், தன் மனம் அவர் நலமடைய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது போன்ற உணர்வுகளை, பாடி அவருக்கு உணர்த்துவதற்கு பயன்படுகிறது. அதனால், இந்தப் பாடலில், நடிகர் திலகத்தை விட பத்மினிக்குத் தான் தன் மொத்த நடிப்பாற்றலையும் காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது. இருப்பினும், வழக்கம் போல், நடிகர் திலகம், பாடாத போதும், உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஒட்டு மொத்த உணர்வுகளையும் காட்டி நடித்து, ஒருபோதும், அதிகமாக நடிக்காமல், பாடலின் சுவை மாறாமல், அது ஒரு கூட்டு முயற்சி என்னும் அடிப்படையில், முழு ஒத்துழைப்பையும், அளித்து, பாடல் சாகா வரம் பெற உதவுகிறார்.
பாடல் துவங்குவதற்கு முன், நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் கையிலிருந்து வரும் குருதியைக் கண்டு, அனைவரும் அடையும் அதிர்ச்சி; உடனே சமாளித்து மறுபடியும் நாதஸ்வரம் இசைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு; மெய் சிலிர்க்கும்.
"நலம் பெற வேண்டும் நீ என்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு" எனும் போது பத்மினியின் நடிப்பு அதற்கு; நடிகர் திலகத்தின் மறு மொழி (விழிகளாலேயே); டி.எஸ். பாலையாவின் மறு மொழி;
அடுத்த சரணம்; "கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நான் அறியேன்" - பத்மினியின் நடிப்பு அற்புதம் என்றால், அதற்கு நடிகர் திலகம் விழிகளில் பெருகும் கண்ணீரைத் தேக்கி அவை கீழே விழாமல், பார்ப்பவர்களைக் கலங்கடித்த விதம்; அதியற்புதம்!
கடைசியில், "நடந்ததெல்லாம் மறந்திருப்போம்; நடப்பதையே நினைத்திருப்போம்" எனும்போது, பத்மினியின் நடிப்பு அதற்கு நடிகர் திலகம் உற்சாகத்துடன் விழிகள் மற்றும் முக பாவனையிலேயே பகரும் மறு பொழி; அவ்வப்போது காட்டும் குறும்பு, முதலில், ஒரு கண்ணை இமைத்து (அதாவது குறும்புடன் கண்ணடித்து), பின்னர் இரண்டு கண்களையும் இமைத்து நடிப்பது - இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் நிலை பெற்றுவிட்டது.
நாடக உலகில் இருந்து வந்த ஒரு கலைஞர், சினிமாவெனும் ஒளி ஊடகத்தின் தேவைக்கேற்ப, நாதஸ்வரத்தை இசைப்பது போல் தத்ரூபமாக நடித்தது மட்டுமின்றி, அந்தக் காட்சியில் பொதிந்து கிடக்கும் உணர்ச்சிகளின் சங்கமத்தை, வெறும் விழிகளாலும், முக பாவனையாலும் மட்டுமே, உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடித்து, என்றென்றும், தான் ஒருவனே நடிகர் திலகம் என்பதை பரிபூரணமாக நிரூபிக்கிறார்.
மற்ற பாடல்கள் பிறிதொரு பதிவில்,
தொடரும்,
பார்த்தசாரதி
-
22nd May 2011, 05:05 PM
#1977
Senior Member
Senior Hubber
நலந்தானா - இந்தப்பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசனின் வரிகள், பாடல் இசையமைக்கப்பட்ட விதம், (கே.வி.மகாதேவன்), பாடிய பி.சுசீலா, இயக்கிய ஏ.பி.நாகராஜன், பாடலில் நடித்த நடிகர் திலகம் மற்றும் பத்மினி அனைவரது பங்களிப்பை விஞ்சுகிற ஒரு பெர்பார்மன்ஸ் இன்றளவும் இல்லை.
மற்ற பாடல்கள் பிறிதொரு பதிவில்,
தொடரும்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 22nd May 2011 at 05:10 PM.
-
22nd May 2011, 05:41 PM
#1978
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd May 2011, 06:48 PM
#1979
சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடல் டி.வியில் ஓடிக் கொண்டிருந்தது. 42 வருடங்களுக்கு முன்பு அந்த பாடல் காட்சி ஏற்படுத்திய பிரமிப்பு இன்றும் சற்றும் குறையாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்.
பாடல் ஆரம்பிப்பதற்கு முன் வரும் காட்சியே பரபரப்பை அதிகப்படுத்திவிடும். படத்தில் முதன் முதலில் திவானை சந்திக்கும் பாரத்திடம் இவ்வளவு பெரிய விபத்தில் உங்களுக்கு ஒரு சின்ன காயம் கூட படாமல் தப்பித்தது ஆச்சரியம்தான் என திவான் சொல்ல தன் வலது மணிக்கட்டின் அடிப்பாகத்தில் ஏற்பட்ட காயத்தை பாரத் காட்டும்போது சாதாரணமாக தோன்றும் அந்த நிகழ்வு [அந்த காட்சியில்தான் நடிகர் திலகம் எவ்வளவு அழகாக இருப்பார்! இதற்கும் முகத்திற்கு மேக்கப் ரொம்ப லைட்டாக இருக்கும்], நடன நிகழ்ச்சியில் திவானின் கையை குலுக்கும் போது அரேபிய உடையில் மாறு வேடத்தில் இருக்கும் பாரத்தை அடையாளம் காட்டி விடுகிறது. அந்த இடத்தில் இருந்து பாடல் முடிந்து விளக்குகள் அணைந்து துப்பாக்கி சத்தம் கேட்கும் வரை நம்பியாரின் உடல் மொழியை கவனித்தால் அந்த படப்படப்பு, தவிப்பு, பயம் அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
நடிகர் திலகமோ எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும், வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற உறுதி, தீவிரத்தன்மை, அழுத்தம் மற்றும் intensity ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பார்.
எகிப்திய பிரமிட் பாணியில் அமைக்கப்பட்ட அரங்கில் பாடல் காட்சி. [சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற அரங்கங்கள் அதில் படமாக்கப்பட்ட ஒளிப்பதிவின் சிறப்புகள் பற்றி சாரதா இரண்டு மூன்று முறை விரிவாக இந்த திரியில் எழுதியிருக்கிறார்]. ஆகவே அந்த பாடல் காட்சியில் வேறு சில சிறப்புகளை பார்ப்போம். முதலில் சொன்னது போல் நடிகர் திலகம் வெளிப்படுத்தும் intensity அதை பார்க்கும் மக்களால் உணர முடியும்.
அரங்கத்தின் நடுவே மேடையில் அமைந்திருக்கும் இரண்டு வட்டங்கள். ஒன்று சிறிதாகவும் மற்றொன்று பெரிதாகவும் இருக்க அதில் சின்ன வட்டம் சுழன்று கொண்டே இருக்க பெரிய வட்டம் நிலையாக இருக்கும். இந்த இரண்டு வட்டங்களில் இரண்டு விதமாக நடிகர் திலகம் நடப்பார்.
நடிகர் திலகத்தின் பல சிறப்புகள் பற்றி பேசும் போது காமிராவிற்கு முதுகை காட்டி நடிக்கும் போது கூட பார்வையாளனுக்கு தன் உடல் மொழி மூலமாக கதாபாத்திரத்தின் உணர்வுகளை கொண்டு சேர்ப்பதில் அவரின் அசாத்திய திறமையை பேசியிருக்கிறோம். யார் அந்த நிலவு, படைத்தானே, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடல் காட்சிகள், நெஞ்சிருக்கும் வரை, தங்கப்பதக்கம் வசன காட்சிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் பட்டத்து ராணி பாடலும் இடம் பெறும்.
முதல் சரணத்தின் இடை இசையின் போது காமிராவிற்கு முதுகை காண்பித்துக் கொண்டு இடது கையில் துப்பாக்கி,வலது கையில் சவுக்கை பிடித்துக் கொண்டே வேக நடை போடும் நடிகர் திலகம். சுழலும் வட்டத்தில் சுழற்சிக்கு எதிராக நடக்கும் நடை மிட் லாங் ஷாட்டாக திரையில் தோன்றினாலும் பாரத்தின் இலட்சியத்தை முடிக்கும் மன உறுதியை நடிகர் திலகம் எத்தனை நேர்த்தியாய் கொண்டு வருகிறார். அது போல் சுழலாத வட்டத்தில் அவர் நிற்க சுழலும் வட்டத்தில் காஞ்சனா ஆடும் நடனம், மேடையில் நடுநாயகமாய் நிற்கும் பிரமிடின் மேலிருந்து எடுக்கப்பட்ட கிரேன் ஷாட், அதில் மொத்த அரங்கத்தையும், நடனத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களையும் ஒரு சேர திரையில் கொண்டு வரும் என். பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, அடுத்த ஷாட்டில் பாடல் வரிகள் இல்லாமல் காஞ்சனாவின் நடனம், முன்னரே தீர்மானித்தபடி அடுத்த அடி எப்போது என்பதை அந்த டைமிங்படியே மனதுக்குள்ளே பாரத் கணக்கிடுவதை சவுக்கை உயர்த்தி பிடித்திருக்கும் வலதுகை மணிக்கட்டின் அசைவின் மூலமாகவே உணர்த்தும் நடிகர் திலகம், அதையும் காமிராவிற்கு முதுகை காண்பித்துக் கொண்டே செய்யும் திறன், அடுத்த ஷாட்டில் அடி வாங்கியவுடன் கிழே விழும் காஞ்சனா, தரையில் கண்ணாடி வைத்து அதன் மேல் விழுந்து கிடக்கும் காஞ்சனா, அந்த கண்ணாடி தரையில் வலது காலை தூக்கி வைத்து நிற்கும் நடிகர் திலகம் [அன்றைய நாளில் அது போன்ற காமிரா கோணங்கள் அரிதானவை], முகமெங்கும் வியர்த்து தன் கைத்துப்பாக்கியின் குதிரையை தயார் நிலையில் வைக்கும் நம்பியார், மீண்டும் பாடல் வரிகள் இல்லாமல் வேகமான பின்னணி இசை, பதினைந்தாவது அடி எப்போது விழும், அப்போது என்ன நடக்கும் என்ற உச்சக்கட்ட பரபரப்பில் சீட்டின் நுனிக்கே பார்வையாளனை கொண்டு வந்து விடும் காட்சியின் வேகம் இவை அனைத்துமே நான் ஆரம்பத்தில் சொன்னது போல் 42 வருடங்களுக்கு பிறகும் இன்றைக்கும் அதே சுவை குறையாமல் அமைந்திருப்பதுதான் இந்த பாடலின் வெற்றி.
அன்புடன்
-
22nd May 2011, 06:52 PM
#1980
பட்டத்து ராணி பாடலை திரையில் பார்த்தவுடன் தோன்றிய எண்ணங்களை எழுத்திலே வடித்து இங்கே பதிந்த பிறகுதான் பார்கிறேன், சாரதி அவர்கள் நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளைப் பற்றிய தன் ஆய்வின் முதல் பகுதியை பதிவு செய்திருக்கிறார். ஆகா! என்ன coincidence!
அன்புடன்
Bookmarks