-
26th November 2011, 08:25 PM
#1011
Moderator
Diamond Hubber
துரத்தும் அம்மா! ஓடும் மகள்!
விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அவள்' தொடர், ரசிகர்ளை கவர்ந்த தொடராகி இருக்கிறது.
பெற்றவர்களால் அனாதையாக்கப்பட்டு, சாந்தா அம்மாளுக்கு வளர்ப்பு மகளாகவும், மகேஷிற்கு உடன்பிறவா தங்கையாகவும் செல்லமாக வளர்கிறாள் ஷாலினி.
மகேஷிற்கு திருமணமாக, அந்த வீட்டிற்கு மருமகளாக வருகிறாள். புரபசர் ஜெயந்தியின் மகள் அமலா, திருமணத்திற்கு முன் ஷாலினியைக் கண்டறியாத ஜெயந்தி, ஷாலினியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.
தன் மகள் அமலாவின் உரிமை, சந்தோஷம் அந்த வீட்டில் ஷாலினியால் பறிபோய்விடுமோ எனப் பயப்படுகிறாள் புரபசர் ஜெயந்தி. அதனால் ஷாலினியை அந்த வீட்டிலிருந்து பிரிக்க முயற்சி செய்கிறாள்.
இந்நிலையில், ஷாலினியை சாந்தாவுக்கு வளர்ப்பு மகளாக கொடுத்த மெய்யப்பனுக்கு, புரபசர் ஜெயந்தி தான் ஷாலினியை பெற்றெடுத்த தாய் என்று தெரிய வருகிறது. அதோடு ஷாலினி வளரும் வீட்டிற்கே தன் மகள் அமலாவை மருமகளாக அனுப்பியிருக்கிறாள் என்றும் தெரியவருகிறது. இந்த உண்மை மெய்யப்பனைத் தவிர யாருக்கும் தெரியாது.
ஷாலினி தனது மகள் என்று தெரியாத ஜெயந்தி, அவள் அந்த வீட்டை விட்டு மட்டுமல்ல, மகேஷை விட்டும் நிரந்தரமாகப் பிரியவேண்டும் என்று பல வழிகளில் துன்புறுத்துகிறாள். தன்னை பாசமாக வளர்த்த அண்ணன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஷாலினி எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாள்.
ஜெயந்தியின் துன்புறுத்தலால், ஷாலினி எங்குமே நிம்மதியாக இருக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள். காலம் அவளை ஜெயந்தியின் காலடியிலேயே வந்து தள்ளுகிறது.
தன் வாழ்வில் ஒரே எதிரியாக வந்த ஷாலினி, தன் வயிற்றில் பிறந்த மகள் என்று ஜெயந்திக்கும் தெரியாது... தன்னை ஓட ஓட துரத்தும் ஜெயந்தி தான் தன்னைப் பெற்ற தாய் என்று ஷாலினிக்கும் தெரியாது. எப்போது இருவருக்கும் உண்மை தெரிய வரும் என்ற எதிர்பார்ப்போடு தொடர்கிறது, தொடர்.
புரபசர் ஜெயந்தியாக பெரிய திரை முன்னணி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். ஷாலினியாக நடிப்பவர் ஸ்ரீகலா. மற்றும் சஞ்சீவ், மகாலட்சுமி, மணிகண்டன், சந்திராயன், ஏ.ஆர்.எஸ், பாரதி, சிவன் சீனிவாசன், ஸ்ரீராம் நடிக்கிறார்கள். இயக்கம்: ஜி.ஜெயகுமார்.
நன்றி: தினதந்தி
-
26th November 2011 08:25 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2011, 08:26 PM
#1012
Moderator
Diamond Hubber
புதியதோர் கவிஞன் செய்வோம்
திறன் படைத்த புதிய கவிஞர்களை தேடிக்கண்டு பிடிக்கும் அரிய பணியை ராஜ் டிவி தொடங்கியிருக்கிறது. இதற்காக கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் முதல்கட்டத் தேர்வு நடந்தது. கவிவிஞர் கண்ணதாசனின் மகளும் கவிஞருமான விசாலி கண்ணதாசன் புதிய கவிஞர்களை அவர்கள் கவிதைத்திறன் அடிப்படையில் தேர்வு செய்தார்.
அவருடன் கவிஞர்கள் கபிலன், மதன் கார்க்கி, பிரியன் ஆகியோரும் புதியகவிஞர் தேர்வுக்காக இணைந்ததில், இரண்டாம் கட்டமாக 60 கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தகட்டதேர்வு நகரின் பிரமாண்ட அரங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் டிசம்பர் முதல் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு இந்த புதியகவிஞர் தேடல் நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
26th November 2011, 08:27 PM
#1013
Moderator
Diamond Hubber
ரஞ்சனியின் `குழந்தை' போராட்டம்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "முத்தாரம்'' தொடர் எடுத்த எடுப்பிலேயே வேகம் பிடித்து விட்டது.
கணவர் விட்டுப்போன பிறகு நான்கு பிள்ளைகளை வளர்க்க படாத பாடுபடும் மாமியார் சாரதா, ஒரு பேரப்பிள்ளை வேண்டுமென்ற ஆசையில், அதை பெற்றுத் தர முடியாத மருமகள் ரஞ்சனி மேல் கோபப்படுவது தப்பா?
வாழ வந்த வீட்டில் எல்லாருக்கும் ஈடு கொடுத்து, அடங்கிப்போய், கணவனின் தம்பி, தங்கைகளை தன் பிள்ளைகளாக நினைத்துப் பாசம் காட்டும் ரஞ்சனி, ஒரு பிள்ளைக்காக நடத்தும் போராட்டம் தப்பா?
தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தாய்க்கும், தன் மீது அபரிமிதமான அன்பு கொண்ட மனைவிக்கும் மத்தியில் ஊசலாடும் முரளி, தாய்க்கு ஆதரவாக இருப்பது தப்பா?
அன்பு கொண்ட அண்ணியை அம்மாவாக நினைக்கும் மது மற்றும் சூர்யாவின் அளவு கடந்த பாசம் தப்பா?
அவரவர் பக்கத்தில் இப்படி நியாயங்கள் இருக்க, இந்த குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது யாருடைய தப்பு?
ஒருபெண்ணின் ரத்தமும், சதையுமான உணர்வுகளின் அப்பட்டமான நிஜம் இந்த `முத்தாரம்.'
நாத்தனார் புஷ்பாவின் வளைகாப்பில், குழந்தை பெற முடியாத ரஞ்சனி, மாமியார் சாரதாவால் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறாள். இதைப் பார்த்து கொதித்து எழும் மது, அண்ணியின் கண்ணீரைத் துடைக்க, அவளை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு எதிர்பாராமல் வரும் சாரதா, ரஞ்சனியைப் பார்த்தால்... என்ன செய்யப் போகிறாள்? மது எடுக்கும் முயற்சி குடும்பத்தில் எப்படி புயலாக வெடித்துச் சிதறப்போகிறது?
வரப்போகும் வாரங்களில் இத்தனை பரபரப்பான கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
தொடரில், தேவயானி ரஞ்சனி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். கதை, திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு: `மெட்டிஒலி' எஸ்.சித்திக்.
நன்றி: தினதந்தி
-
26th November 2011, 08:29 PM
#1014
Moderator
Diamond Hubber
தேவி
அம்மனின் அருள் பெற்ற தேவிக்கு நவசக்தி கொண்ட சங்கு கிடைக்கிறது. இதே சங்கை அடைய துர்காபுரத்தின் செல்வந்தனான கேசவ்நாத்தின் தாத்தா மார்த்தாண்டன் பலமுறை முயன்று தோற்றார். அவரின் கனவை நனவாக்கத் துடிக்கும் கேசவ்நாத், பல சந்தர்ப்பங்களில் சங்கை அடைந்தும் அது அவரின் கையில் தங்காமல் தேவியிடம் பாதுகாப்பாக இருந்து வந்தது.
கேசவ்நாத் தன் குரு நம்பூதிரியிடம் சங்கை அடையும் வழியைக் கேட்க, அவர் தேவியின் அண்ணன் சந்தானத்தின் மூலம் கிடைக்கும் என்று கூற, தன் பணபலத்தை பயன்படுத்தி அவன் மூலம் சங்கை அடைகிறான். சங்கை ஊதி உபயோகப்படுத்துமுன் சில பரிகாரங்களை செய்யக்கூற, கேசவ்நாத் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றார். இதற்கிடையில் கேசவ்நாத்தின் உதவியாளன் கோபால் மற்றும் நம்பூதிரியின் சிஷ்யன் வசந்த் ஆகியோரும் சங்கை அடையத் துடிக்க, கேசவ்நாத்தின் சந்தேகம் நம்பூதிரியின் மீது எழுகிறது.
சங்கை உபயோகப்படுத்தும் நாள் வருகிறது. அப்போது சந்தானத்திற்கு தேவியின் மீது இருந்த தவறான எண்ணம் போக, சங்கை தேவியிடமே திருப்பித்தர முடிவு செய்கிறான்.
பலரும் பல கோணங்களில் நவசக்தி கொண்ட சங்கை அடையத் துடிக்க, சங்கு யாரை அடைந்தது? தேவி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகும் `தேவி' தொடரில் காணலாம்.
நன்றி: தினதந்தி
-
26th November 2011, 08:31 PM
#1015
Moderator
Diamond Hubber
வாலி-1000
கவிஞர் வாலி சினிமாவுக்கு பாட்டெழுத வந்து 50 ஆண்டுகளை தாண்டி விட்டார். 1948-ம்ஆண்டில் `அழகர் மலைக்கள்ளன்' படத்தில் தன் பாட்டு சாம்ராஜ்யத்தை தொடங்கியவர், இடைவிடாமல் தொடர்ந்து தேடிவந்த வாய்ப்புகளில் 15 ஆயிரம் பாடல்களை தாண்டி விட்டார். இப்போதும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடல் `சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான்.' நல்லவன் வாழ்வான் படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா இசையில் இந்தப்பாடலை எழுதினார். இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் மெலடிப்பாடல் இது. தொடர்ந்து வாலியை பிரபலப்படுத்தியது எம்.ஜி.ஆரின் படகோட்டி படம். அந்தப்படத்தில் `தரை மேல் பிறக்கவைத்தான்', `பாட்டுக்குப் பாட்டெடுத்து' போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சம் கொண்டு போயின. பிறகென்ன, வாலிக்கு பாட்டு வாசல் நிரந்தரமாகத் திறந்தது.
வாலி எழுதிய 15 ஆயிரம் பாடல்களில் இருந்து ஆயிரம் பாடல்களை தெரிவு செய்து அதை மேடையில் பாடகர்களை பாடவைத்து வசந்த் டிவிக்காக தயாரிக்கிறார், `சாதகப்பறவைகள்' சங்கர். இந்த பாடல் நிகழ்ச்சியில் வாலி பற்றி அவரது சிறுவயது நண்பர்கள், இசை ரசிகர்கள், கல்லூரிமாணவர்கள் காலத்தால் அழியாத வாலியின் பாடல்களின் தனித்துவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், கதிர், எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, கவிஞர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், நாடக ஆசிரியர் கிரேசிமோகன், நடிகை குஷ்பு ஆகியோர் கவிஞர் வாலியை சந்தித்து பேசினார்கள். அவர்களின் கலந்துரையாடல்களும் பாடலினூடே இடம் பெறுகிறது.
விரைவில் வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
26th November 2011, 08:32 PM
#1016
Moderator
Diamond Hubber
மீண்டும் வந்தாச்சு!
விஜய் டிவியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி, "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.'' இளைஞர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு பிரபுதேவா நேரில் வந்திருந்து அடுத்த `பிரபுதேவாவை' தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி மீண்டும் `உங்களில் யார் பிரபுதேவா' நிகழ்ச்சியை தொடங்குகிறது. இதற்கான நேர்முகத்தேர்வுகள் கோவை, திருச்சி, மதுரையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
நாளை சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 14 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட நடன ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
26th November 2011, 08:36 PM
#1017
Moderator
Diamond Hubber
கம்சனை வதம் செய்த கண்ணன்
ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது, `மகாபாரதம்' தொடர்.
தன் சுயநலத்திற்காக திருமணம் நடந்த அன்றே தங்கை தேவகி மற்றும் அவளின் கணவன் வசுதேவர் இருவரையும் சிறையில் அடைக்கிறான் கம்சன். விதிப்படி தேவகியின் எட்டாவது மகன் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அறிந்த கம்சன் கோகுலத்துக் கண்ணன்தான் தேவகியின் எட்டாவது மகன் என்பதை தெரிந்து கொள்கிறான். தன் நண்பனின் உதவியுடன் கண்ணனை கோகுலத்திலிருந்து மதுராவிற்கு வரவழைக்கிறான்.
எப்போதும் தைரியமாக இருந்த கம்சனுக்கு, கண்ணனின் வரவு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் கண்ணன் கம்சனுடன் மல்யுத்தப் போட்டி நடத்த, போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் கம்சனை வதம் செய்கிறான்.
அந்த மகிழ்ச்சியுடன் கண்ணன் சிறைச்சாலையில் இருக்கும் தன் தாய், தந்தையரை விடுதலை செய்கிறான். இது ஒருபுறம் இருக்க, கிந்தம முனிவரின் சாபத்தால் தன் மனைவிகளை தொடாதிருந்த பாண்டு ஒரு நாள் தனது இரண்டாவது மனைவியான மாதுரி குளிப்பது கண்டு அவளை அணைக்க முற்பட உயிர் துறக்கிறான். பாண்டுவின் சாவிற்கு தன்னை காரணம் காட்டி மாதுரியும் உயிரை விட, குந்தி தன் ஐந்து பாண்டவ புத்திரர்களுடன் ஹஸ்னாபுரத்திற்கு வருகின்றாள். இவர்களின் வருகையை ஒருபோதும் விரும்பாத துரியோதனன் பாண்டவர்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறான்.
நன்றி: தினதந்தி
-
11th December 2011, 01:57 AM
#1018
Moderator
Diamond Hubber
ராதாவின் மாயாஜாலம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `ராதா கல்யாணம்.'
தனது கண்களுக்கு மட்டுமே தெரிந்து வரும் ராதாவை அடைத்து வைத்து, வீட்டில் இருப்பவர்களிடம் அவள் காணாமல் போகவில்லை என்று நிரூபிக்க நினைக்கும் கீர்த்தி ஒருபுறம். மகளின் இந்த நிலைக்காக கீர்த்தியின் தாய் எடுக்கும் அதிர்ச்சி முடிவு இன்னொருபுறம்.
ராதாவின் பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கீர்த்தியை கொலை செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் இல்லை என்று நினைக்கும் சந்தனாவின் திட்டம் நிறைவேறுமா? சந்தனாவின் இந்தத் திட்டத்திற்கு அவளுக்கு உதவப் போவது யார்?
இதற்கிடையே டெண்டரில் ராதாவின் கையெழுத்து எப்படி வந்தது? கீர்த்தி சொல்வது போல் ராதா இருப்பது உண்மையா? உண்மையென்றால், ராதா ஏன் கீர்த்தியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறாள்? ராதா இருப்பது எங்கே?அழைத்த அந்த நிமிடத்தில் வந்து போகும் ராதாவின் நோக்கம் என்ன? இதன் பின்னால் ஏதாவது ச(க்)தி இருக்கிறதா? இருந்தால் அதற்குக் காரணம் என்ன? வம்சியின் தேடல்களுக்கான பதில் என்ன?
இதற்கிடையே சந்தனா பற்றி விஸ்வநாதன் தெரிந்து கொண்டது என்ன? அவர் பிடியில் இருந்து சந்தனா தப்பிப்பாளா? அல்லது அகப்பட்டு வம்சியை அடையும் திட்டத்தைக் கைவிட்டு அவர் வாழ்க்கையில் இருந்து விலகுவாளா? சுவாரசிய திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
11th December 2011, 01:58 AM
#1019
Moderator
Diamond Hubber
நோய் போக்கும் ருத்ராட்சம்
சிவன் கண்ணிலிருந்து விழுந்த கண்ணீர்த்துளிதான் ருத்ராட்சமானது என புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதன் சக்தியை வாரணாசி இந்தியன் இன்ஸ்ட்டிடிïட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளார்கள்.
மருத்துவரீதியாக டயாபடீஸ், கேன்சர் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. காலையில் ருத்ராட்சத்தில் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் பருகி வந்தால் அல்சர், அஜீரண கோளாறு ஏற்படாது என்கிறது, இயற்கை மருத்துவம். மேலும் பல சுவையான தகவல்களை சனிக்கிழமை தோறும் காலை 7.30 மணிக்கு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் வரும் ஸ்ரீஷாப்பி நிகழ்ச்சியில் காணலாம்.
நிகழ்ச்சியை நடிகை மாளவிகா தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
11th December 2011, 01:58 AM
#1020
Moderator
Diamond Hubber
பாட்டுத்திருவிழா
அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை, மூன்றாம்பிறை, சந்தியாராகம், வீடு போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது முகவரி தந்தவர் இயக்குனர்-ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. இவரது படங்களில் பெரும்பாலும் காமிராவே பேசிவிடும். கமல், ரஜனி உள்ளிட்ட பிரபலங்களை இயக்கியவர், புதுமுகங்களையும் தனது இயக்கத்தால் பிரபலமாக்கினார்.
பாலுமகேந்திராவின் கலை சாதனையை பாராட்டி `ஒப்பற்ற ஒளிப்பதிவு மேதைக்கு பாட்டுத்திருவிழா' என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கில் நாளை விழா நடைபெறுகிறது. `ஸ்ரீதேவி பைன்ஆர்ட்ஸ்' சிவசங்கர் நடத்தும் இந்த விழாவில், `சரிகமபதநிசா' இசைக்குழுவினர் பாலுமகேந்திரா படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடுகிறார்கள். பாலுமகேந்திரா இயக்கிய அத்தனை படங்களுக்கும் இளையராஜாவே இசை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர், பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.
பிரபல தனியார் சேனல் ஒன்றில் இந்த இசை நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
Bookmarks