-
2nd January 2012, 11:24 AM
#1761
Senior Member
Senior Hubber
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
2nd January 2012 11:24 AM
# ADS
Circuit advertisement
-
2nd January 2012, 11:55 AM
#1762
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தாங்கள் பதிவிட்டு வரும் ஒவ்வொரு ஆவணப் பதிவும் மிகச் சிறப்பாக அமைகின்றன. தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அயர வைக்கிறது. ஒவ்வொரு பதிவினைப் பார்க்கும் போதும் / படிக்கும் போதும், நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
தங்களின் இந்தத் தொண்டு இந்தப் புத்தாண்டில் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. வாசுதேவன் மற்றும் திரு. கார்த்திக் அவர்களே,
திரு. பம்மலார் அவர்களது பதிவைப் போல, தங்களுடைய பதிவுகளும் தொடர்ந்து இந்தத் திரிக்கு வளம் சேர்க்கின்றது. ஒவ்வொரு நாளும், இந்தத் திரிக்குள் நுழையும் போது, திரு. பம்மலார் மட்டுமல்லாது, உங்கள் மூவருடைய பதிவுகளும் தொடர்ந்து இடம் பெற்று இந்தத் திரிக்கு கூடுதல் வளம் சேர்க்கிறது.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்.
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
இப்போதெல்லாம் தங்களது பதிவு மிகவும் அரிதாகி விட்டாலும், ஒவ்வொரு முறை உங்களது பதிவு இடம் பெறும் போதும், அந்தப் பதிவு இந்தத் திரிக்கு எப்போதும் கூடுதல் சுவையையும் சுவாரஸ்யத்தையும் அளித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் எழுத்துக்கு ரசிகனான நானும் மற்றவர்களைப் போல உங்களிடமிருந்து தொடர் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
சாரதா மேடம் அவர்களும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சில பதிவுகளைத் தந்து உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.
மேற்கூறிய அன்பர்கள் அல்லாது, இந்தத் திரிக்கு மேலும் மேலும் சுவையை நல்கிடும் அனைத்து நண்பர்களே,
திரு. ராமஜெயம் கூறியது போல், கடந்த ஆண்டு (2011) நடிகர் திலகத்தின் திரிக்கு மிகவும் சிறப்பான ஆண்டு. பல புதிய உறுப்பினர்கள் இந்தத் திரியில் நுழைந்தது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு தான் பல பக்கங்களையும் பூர்த்தி செய்த ஆண்டு.
இந்தத் திரி மேலும் மேலும் வளம் பெறப்போவது உறுதி.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 2nd January 2012 at 12:00 PM.
-
2nd January 2012, 02:20 PM
#1763
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
ஆங்கிலப்புத்தாண்டு அன்பளிப்பாக தாங்கள் அளித்துள்ள 'அன்பளிப்பு' ஆவணப்பொக்கிஷங்கள் அருமையாக உள்ளன. நேற்று நீங்கள் அளித்திருந்த, இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைப்பக்கங்களும் கன ஜோர். ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஆவணங்களை பல்வேறு பத்திரிகைகளில் இருந்து நீங்கள் சேகரித்து, தொகுத்து, அழகுற அளித்து வரும் பாங்கு பாராட்டுக்குரியது.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இங்கு பதிவிடுவோர் மட்டுமல்லாது வெளியிலிருந்து பல்வேறு ரசிகப்பெருமக்களும் தங்களின் சளைக்காத சேவையைப்பாராட்டி நன்றி தெரிவிக்கின்றனர். சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுதும் மடல்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்து, 'எங்களுடைய இத்தனை வயதிலும் இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை. எப்பவோ வெளியான சாதனைகளையெல்லாம் இவர் தேடித்த்ருகிறார். இந்தப்பிள்ளை நல்லாயிருக்கட்டும்' என்று எழுதுகின்றனர். படிக்கும்போது எனக்குப்பெருமையாக இருக்கிறது.
தங்கள் தொண்டு ரசிகர்களின் இதயங்களில் முத்திரையைப் பதித்து விட்டது.
-
2nd January 2012, 02:56 PM
#1764
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பார்த்தசாரதி சார், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்களின் பாராட்டுக்கு நன்றி. முரளிசாரை அடிக்கடி வரச்சொல்லும் நீங்களும் அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்களின் மகத்தான பாடல் ஆய்வுகள் அனைத்தும் என்ன சாமானியமானவையா?. 'சக்கை போடு' போட்ட பிறகு தங்களின் ஆய்வுப்பதிவைக்காண முடியவில்லை. பணிச்சுமையாக இருக்கலாம். பரவாயில்லை. போதிய நேரம் எடுத்துக்கொண்டு அடுத்த அதிரடியுடன் வந்து கலக்குங்கள்.
நீங்களும் திரு ராமஜெயம் அவர்களும் சொன்னதுபோல, 2011-ம் ஆண்டு விசேஷமான ஆண்டு மட்டுமல்ல. அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து, நடிகர்திலகத்தின் சாதனைச்செப்பேடுகளான ஆவணமழை கொட்டத்துவங்கிய ஆண்டு.
2012 இதை விட சூப்பராக இருக்கும் என்று நம்புவோம்.
-
2nd January 2012, 02:59 PM
#1765
Senior Member
Veteran Hubber
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)
இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.
நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.
சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).
ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).
ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.
கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.
குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.
பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.
-
2nd January 2012, 03:12 PM
#1766
Senior Member
Veteran Hubber
பொங்கல் நாளுக்கு இன்னும் பத்துநாட்களுக்கு மேல் இருக்கையில் இப்போது ஏன் 'மோகனப்புன்னகை' பதிவை இட்டாய் என்று நினைக்கலாம். பொங்கலுக்கு வேறு சில படங்களும் வர இருப்பதால் மோகனப்புன்னகை முந்திக்கொண்டு விட்டது.
-
2nd January 2012, 04:07 PM
#1767
Senior Member
Senior Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பார்த்தசாரதி சார், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்களின் பாராட்டுக்கு நன்றி. முரளிசாரை அடிக்கடி வரச்சொல்லும் நீங்களும் அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்களின் மகத்தான பாடல் ஆய்வுகள் அனைத்தும் என்ன சாமானியமானவையா?. 'சக்கை போடு' போட்ட பிறகு தங்களின் ஆய்வுப்பதிவைக்காண முடியவில்லை. பணிச்சுமையாக இருக்கலாம். பரவாயில்லை. போதிய நேரம் எடுத்துக்கொண்டு அடுத்த அதிரடியுடன் வந்து கலக்குங்கள்.
நீங்களும் திரு ராமஜெயம் அவர்களும் சொன்னதுபோல, 2011-ம் ஆண்டு விசேஷமான ஆண்டு மட்டுமல்ல. அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து, நடிகர்திலகத்தின் சாதனைச்செப்பேடுகளான ஆவணமழை கொட்டத்துவங்கிய ஆண்டு.
2012 இதை விட சூப்பராக இருக்கும் என்று நம்புவோம்.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களின் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து விட்டதால், தொடர்ந்து எழுத முடியவில்லை.
தங்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் அருமையாக, சரளமாக இருந்தது.
இந்தப் படம் துவங்கப்பட்ட அன்று, நடிகர் திலகமும் ஸ்ரீதரும் கை கோர்த்துக்கொண்டு நிற்கும் போட்டோவுடன் தினத்தந்தி நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் இன்னமும் கண்ணில் நிழலாடுகிறது. எப்பேர்பட்ட எதிர்பார்ப்பைத் தூண்டி விட்ட படம். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் திரைக்கதை சொதப்பலும், பொருந்தாத, அந்தக் காலத்தில் அந்த அளவுக்கு பிரபலம் ஆகாத கதாநாயகிகளும் தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
2nd January 2012, 06:09 PM
#1768
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
2. "கா... கா...கா"; படம்:- பராசக்தி (1952); இயக்கம்:- கிருஷ்ணன்-பஞ்சு
எனக்குத் தெரிந்து இது தான் தமிழ்த் திரைப்படங்களில் ரொம்பவும் காஷுவலாக நாயகன் பாடுவதாக (கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டு) முதல் முறையாக எடுக்கப் பட்ட பாடல் (என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல், முதல் படத்திலிருந்தே!).
மிகவும் எளிமையாக எடுக்கப் பட்ட பாடல் - இத்தனைக்கும் ஆழமான பொருள் பொதிந்த கருத்துக்கள் இடம் பெற்ற பாடல். சமூகத்தின் மேல் நாயகனுக்கு இருக்கும் கோபம் வன்மையாகவும் சற்றே கேலியாகவும் வெளிப்பட்ட பாடல். பிற்காலத்தில், எத்தனையோ விதமான நடிப்பு இந்தக் கலைஞனிடத்தில் வெளிப்படப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல். ஆம், முதல் படத்திலேயே, முழுப் பாடலையும், படு காஷுவலாக கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டே தனது சரளமான உடல் மொழியைக் காட்டி, நடித்த பாடல்.
இந்தப் பாடலில் இரண்டு முக்கிய அம்சங்கள் - அவரது உடை மற்றும் ஒப்பனை - அதாவது, நாடோடி போல் திரிந்து கொண்டிருப்பவன் எப்படி இருப்பானோ, அப்படியே இருப்பார். இந்தப் பாடல் துவங்குவதற்கு முன், அவர் பண்டரிபாயிடமிருந்து, ஏதோ ஒரு பொட்டலத்தைப் பிடுங்கிக் (திருடி) கொண்டு ஓடி, தவறுதலாக, அறியாமல், மற்றவரிடமிருந்து தப்பித்து, அவசரமாக, அவரது வீட்டுக்கே சென்று வீட்டின் பின்புறம் வழியாகச் சென்று, ஹாயாக, ஒரு கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டு அங்கிருக்கும் காக்கைகளைப் பார்த்து அவைகள் கரையத் துவங்கியவுடன், அந்த உணவை அவைகளுக்கும் போட்டு விட்டு, பாடத் துவங்குவார்.
முதல் சரணம். "சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ..." அந்த முகத்தை கவனித்தால், அந்த வரிகளுக்கேற்ற முக பாவம் - இரக்க உணர்வு, "தாழ்ப்பாளைப் போடுறாங்க..." என்று பாடி, "அந்தச் சண்டாளர் ஏங்கவே, தன்னலமும் நீங்கவே", எனும் போது கோபம், பின், "தாரணி மீதிலே பாடுங்க" என்று முடித்து, "ராகம் கா... கா...கா..." எனும் போது முகத்தில் மறுபடியும் மலர்ச்சியையும் உற்சாகத்தையும் காட்டியிருப்பார்.
இரண்டாவது சரணம். "எச்சிலை தன்னிலே..." என்று சி.எஸ்.ஜெயராமன் ஒரு நீண்ட ஆலாபனை செய்யும்போது, அதற்கேற்றாற்போல், வாயசைத்த விதம். (முதல் படம்?!!!) இந்தச் சரணத்திலும், அதே லாகவம், உடல் மொழி, வாயசைப்பு.
இந்தப் படம் வருவதற்கு முன்பு வரை, அநேகமாக எல்லாத் தமிழ்ப் படங்களிலும், படத்தில் வரும் நடிகர்களே பாடி நடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், பெரிய பாடகர்களாயிருந்ததால், அந்தப் பாடல் இடம் பெறும் சூழலையும், அந்தப் பாடலில் வரும் வரிகளின் அர்த்தத்தையும் பற்றிப் பெரிதாக நினைக்காமல், பாடும் முறை பற்றியே நினைத்துக் கொண்டு ஒரு பாடகரைப் போல் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பர். அந்த முறையை மாற்றி, சினிமாவில் பாடல் என்பது வேறு; அதில் நடிப்பவர்களது பொறுப்பு என்ன என்பதை முழுதும் உணர்ந்து, பின் வரும் சந்ததியினர், எப்படி, சினிமா பாடல்களை அணுக வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம், அதாவது, முதல் படத்தின் மூலமே (அதுவும் நாடகத்திலிருந்து வந்தவர்!) அடி கோலினார்.
இந்தப் பாடலையும் உற்று நோக்கினால், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம், எதையும் வித்தியாசமாக சிந்தித்து புதுமையாக அதே சமயம் முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு தென்படுவதைக் காணலாம். மேம்போக்காக, உயிரோட்டமில்லாமல், அவரால் முதல் படத்திலிருந்தே செய்ய முடியவில்லை.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
2nd January 2012, 07:19 PM
#1769
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகனின் முத்தான சமுதாய சிந்தனையைத் தூண்டும் பாடலை மிகச் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் அலசியுள்ளீர்கள்.
சினிமாவில் பாடல் என்பது வேறு; அதில் நடிப்பவர்களது பொறுப்பு என்ன என்பதை முழுதும் உணர்ந்து, பின் வரும் சந்ததியினர், எப்படி, சினிமா பாடல்களை அணுக வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம், அதாவது, முதல் படத்தின் மூலமே (அதுவும் நாடகத்திலிருந்து வந்தவர்!) அடி கோலினார்.
பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள்.
பாராட்டுக்கள்.
-
2nd January 2012, 07:41 PM
#1770
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக்,
சித்ரா தியேட்டர் என்றைக்குமே நம் தியேட்டராகவே இருந்தது. சாந்தி தியேட்டருக்கு முன் அது தான் நம் ரசிகர்களை வளர்த்தது என்றால் மிகையில்லை. பாசமலர் உள்பட பல முக்கியமான படங்களை வெளியிட்ட தியேட்டர். அங்கே மோகன புன்னகை வெளியான அன்று பழைய நினைவுகளுடனும் படத்தின் ரிசல்ட்டுடனும் உரையாடிக்கொண்டிருந்த நாட்கள் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன என்றால், நீங்கள் அதையும் தாண்டி அடியேன் வைத்திருந்த சின்ன பேனருக்கே போய் விட்டீர்கள். எனக்கு ஞாபகம் உள்ள வரையில் உத்தமன் படத்திலிருந்து சின்னச் சின்ன சார்ட்டுகளை வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முதல் நாள் தியேட்டரே கதி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது. இதற்கெல்லாம் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த வேகம், அந்த ஆர்வம், அந்த வெறி, நடிகர் திலகத்தின் ஆகர்ஷண சக்தி நம் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. படிப்படியாக முன்னேறினேன்.. எதில் வாழ்க்கையிலா.. இல்லை.. சார்ட்டின் டிசைனை மெருகேற்றுவதில்... அதற்காக பிளாசா தியேட்டர் வாசிலில் இருந்த முதியவர் தான் ஆபத் பாந்தவர்.. வரும் ஸ்டில்களையெல்லாம் வாங்கி விடுவோம்.. அநைத்தும் சார்ட்டில் ஏறி விடும் (இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன். அவற்றையெல்லாம் இன்னொரு காப்பி எடுத்திருக்கலாமே என்று ). [அடியேன் ஆரம்பித்து சில வருடங்களில் கிரிஜா அவர்களும் துவங்கி விட்டார். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. அவருடைய உழைப்பைப் பாராட்டத் தனித்திரியே துவங்க வேண்டும்]. அப்படிப்பட்ட ஒரு சார்ட்டைத் தான் மோகனப் புன்னகைக்காக வடிவமைத்து அதைப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது. தங்களுக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
மோகனப் புன்னகைக்கு வருவோம். நானும் பைலட்டில் தான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே சிறப்புக் காட்சியில் பார்த்து விட்டோம். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு படம் முடிந்ததும் உடனே கிளம்ப முடியாமல் உணர்ச்சி மயமாய் அமர்ந்திருந்தோம்.
இப்போது பேசப் படும் Shuttle Acting, Method Acting, போன்றவற்றையெல்லாம் தன் முதல் படத்திலேயே ஊதித்தள்ளி விட்ட நடிகர் திலகம், மீண்டும் இப்படத்தில் அதற்கான பொருளை உணர்த்தினார். குறிப்பாக தலைவன் தலைவி பாடல் simply class.
சற்றே வித்தியாசமான கதையமைப்பு, புதிய ஜோடி, சிறந்த இசை, நல்ல ஒளிப்பதிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தன.
இவற்றையெல்லாம் மீறி படம் ஓடவில்லை என்றால்..
ஒரே காரணம்...
துர்ப்பிரச்சாரம்...
நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது உடலமைப்பைப் பற்றியும் கிளப்பப் பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் பரவலாகப் பரப்பப்பட்டதாலும் அவரது படங்களைப் பற்றி கிண்டலும் கேலியும் மிகப் பரவலாக செயற்கையாக உருவாக்கப் பட்டதாலும் பல நல்ல படங்கள் சரியான முறையில் சென்றடைய விடாமல் தடுக்கப் பட்டதாலும் தான் 80 களில் அவரது படங்கள் பாதிக்கப் பட்டன. அப்படிப் பட்ட படங்களில் ஒன்று தான் மோகன புன்னகை. குறை சொல்லுமில்லாத சிறந்த படம். 80களில் மிகச் சோதனையான காலங்களில் அவருடனேயே இருந்த பல கோடி ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் அந்த ஏளனங்களுக்கும் ஏகடியங்களுக்கும் பதில் கொடுத்து நின்ற ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் பல முறை இப்படிப்பட்ட நல்ல படங்கள் தோல்வியடைந்த போது மனம் வேதனை யடைந்திருக்கிறேன். அதே போல் தான் கார்த்திக்கும் உணர்ந்திருப்பார் என்பதை அவருடைய பதிவுகளில் அனைவரும் உணர முடியும்.
நம்மையெல்லாம் அந்த அளவிற்கு உணர்ச்சி மயமாக்கிய மோகனப் புன்னகை பாடலைப் பார்த்து நினைவுகளை அசை போடுவோமே..
Bookmarks