Quote:
சின்னத்திரை உலகின் பெண்கள்?
எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது நுழைந்து வெற்றிக் கொடி நாட்டி, தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி அவர்கள் முத்திரை பதித்திருக்கும் துறைகளில் சின்னத்திரையும் ஒன்று.
ஆனால் சின்னத்திரையில் நடிப்பு, தயாரிப்பு என்று தங்களின் முத்திரையை பதிக்கும் பெண்களால், அதன் இதர துறைகளான எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றில் பேசப்படும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இதுக் குறித்து "பாலாஜி டெலி ஃபிலிம்ஸ்' நிறுவன கிரியேட்டிவ் ஹெட் திருமதி. சுபா வெங்கட்டிடம் கேட்டபோது,
]
""சினிமா எப்படி ஆண்களுடைய துறையாக இருக்கிறதோ, அதுபோல பெண்களுடயை துறை சின்னத்திரை என்றாகிவிட்டது. டி.வி.யில் வரும் சீரியல்களை பொறுத்தவரையில் பெண்கள்தான் ஹீரோக்கள்! சீரியல்களில் பெண்களுக்குதான் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதுபோல பொருளாதார ரீதியாக பார்த்தாலும், சினிமாவில் எப்படி ஹீரோவுக்கு நிறைய சம்பளம் தரப்படுகிறதோ, அதுபோல சின்னத்திரையில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஏனென்றால் கதையில் முக்கிய பாத்திரங்களாக அமைவதும், அதை ஏற்று நடிப்பதும் பெண்கள்தான். பெண்களைச் சுற்றித்தான் கதை நகரும். சினிமாவில் வில்லன் என்றால், தொடர்களில் வில்லி பாத்திரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுவும் பெண்களுக்கான ஒரு தனிச் சிறப்பு.
அதனால் சின்னத்திரையில் நடிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், சினிமாவில் மற்ற துறைகளில் பெண்கள் சாதிப்பதை பார்க்கும்போது சின்னத் திரையில் பெண்களின் பங்களிப்பு கம்மிதான். சினிமாவில் நிறைய பெண் இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பெண் உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் டி.வி. மீடியாவை பொறுத்தவரையில் நிகழ்ச்சித் தயாரிப்பில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களே தவிர கேமராவுக்குப் பின்னால், தொழில்நுட்ப வேலைகளில் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. அது போன்று எழுத்துத் துறையிலும் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக எழுதி வருகிற இரண்டு, மூன்று பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.
2000-ல் கே. பாலசந்தரின் "அண்ணி' தொடருக்கு நான்தான் வசனம் எழுதினேன். அது போன்று "வீட்டுக்கு வீடு லூட்டி' என்ற தொடருக்கு இன்னொரு பெண் எழுத்தாளர் எழுதினார். இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே அன்றும் இன்றும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது மாறவேண்டும்.
அதுபோல டெலி ஃபிலிம், ஒரு எபிசோடு நிகழ்ச்சி... இப்படி சின்னச் சின்ன படைப்புகளைதான் பெண்கள் இயக்கியிருக்கிறார்களேத் தவிர யாரும் மெகா தொடர்களை இயக்கியதில்லை. மெகா தொடர் என்பது ஒரு மெகா கூட்டணியின் உழைப்பு அடங்கியது. ஆனால் அந்த மாதிரியான மெகா தொடர்களின் "கிரியேட்டிவ் ஹெட்' ஆக பெண்கள் வொர்க் பண்ணியிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவர்.
சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நடிக்க வரும் பெண்களில் நல்ல திறமை சாலிகள் இருக்கிறார்கள். ஆனால் என்ன? ஓரிரு தொடர்களில் நடித்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.
அவர்களுக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களது குடும்ப சூழ்நிலைகளால் நடிப்பை தொடர முடியாமல் போய்விடுகிறது. பெரிய திரையில் இருந்த வந்த ராதிகா, குட்டி பத்மினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி ஆகியோரெல்லாம் சின்னத்திரையிலும் சாதித்திருக்கிறார்கள், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய விஷயம். இது போன்று திறமையான பெண்கள் நிறைய பேர் வந்தால் சின்னத்திரை துறையிலும் பெண்களின் கை ஓங்கி நிற்கும். தமிழ்நாட்டில்தான் நிறைய பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை பார்த்தும் நிறைய பெண்கள் சின்னத்திரைக்கு வருகிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.
சாதிக்க நினைக்கிறவர்களுக்கு சின்னத்திரையில் நிறைய துறைகள் இருக்கிறது. புதியவர்கள் வரும்போதுதான் புதிய புதிய சிந்தனைகள் பிறக்கும். முயற்சி செய்தால்தான் தங்களோட கற்பனைகளையும், படைப்புகளையும் திரையில் கொண்டுவர முடியும்.
அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்போம். அவர்களின் திறமையை பாராட்டுவோம். இது என்னுடைய தீபாவளி செய்தியாக இருக்கட்டும்'' என்றார்.