http://i59.tinypic.com/4t0x3k.jpg
Printable View
மது அண்ணா!
1983-ல் ராஜேஷ்கண்ணா, ஷபனா ஆஸ்மி நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அவ்தார்' இந்திப் படம் தமிழில் நடிகர் திலகம், அம்பிகா நடித்து 'வாழ்க்கை' (1984 ) யாக வெளிவந்து தூள் கிளப்பியது. 'வாழ்க்கை'யும் மலையாளத்தில் 'ஜீவிதம்' ஆனது. மது, கே.ஆர்.விஜயா நடிக்க பாலாஜி தயாரித்த படம் இது.
இப்போது ஒரு சிறு சந்தேகம். தாங்கள் குறிப்பிட்டுள்ள 'பூப் பூவா பூத்திருக்கு' படத்தின் இந்தி அவதாரம் வேறு 'அவதாரா'?
தமிழில் 'காலம் மாறலாம்...நம் காதல் மாறுமா' டூயட் மலையாளத்தில் எங்கன இருக்கும்?
உங்க பேர் கொண்டவரும்,:) 'புன்னகை அரசி'யும் பாடுகிறார்கள். இசை ராஜாவின் தம்பியாமே!
'என் மானசும் என்னும் நிண்டே ஆலயம்'
https://youtu.be/dJIvpJvn96g
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 18: வன தேவதைகளின் விருப்பப் பாடல்
மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம். குளிர்காற்று வருடும் வனப் பாதை ஒன்றில் ஊர்ந்து செல்கிறது வாகனம். அதன் விளக்கொளியில் கரும்பச்சைக் குவியல்களாகத் தெரிகின்றன புதர்க் காடுகள். வனத்தின் மவுனத்தைக் கலைத்தபடி குளிர்க்காற்றுடன் கலந்து பரவத் தொடங்குகிறது வாகனத்தின் மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலிக்கும் அந்தப் பாடல்.
‘ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்’. அருகில் எங்கோ ஒரு மலைக் கிராமத்துப் பெண் தனது காதலனை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்க வைக்கும் உயிர்ப்பான பாடல் இது. வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினி, தேவி, ப்ரியா நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ (1982) படத்தில் இடம்பெற்றது. ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், செந்தாமரை, சங்கிலி முருகன், விஜயகுமார் என்று ஏகப்பட்ட வில்லன்களை எதிர்த்து நிற்கும் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ரஜினியின் காதலியாக வரும் தேவி, அவரைக் காப்பாற்ற வில்லன் ஜெய்சங்கரை மணந்துகொள்வார். வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் உண்டு.
குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
காதலனின் நினைவில் நாயகி பாடும் இப்பாடல் முழுவதும் அவளது தோழிகளின் ஆறுதல் மொழியாகப் பெண் குரல்களின் ஹம்மிங் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘ராசாவே’ எனும் பல்லவியின் முடிவில் நாயகியின் காதல் மனதுக்கு வாழ்த்துச் சொல்லும் தோழிகளின் ஹம்மிங் ஒலிக்கத் தொடங்கும். ‘தனதம் தம்தம் தம்தம் தம்தம்’ எனும் அந்த ஹம்மிங் செறிவான மரங்கள் அடர்ந்த வனப் பாதையில் ஒரு கற்பனை உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். துல்லியமான ஒலியமைப்பில் மெலிதான தாளக்கட்டும் கிட்டார் இசையும் துணைக்கு வரும். குளிர்ந்த ஓடையின் நீர்ப்பரப்பில் மிதக்கும் கிட்டாரை மீட்டி ஒலிப்பதிவு செய்திருப்பார்களோ என்று தோன்றும் அளவுக்கு கிட்டார் கம்பிகளின் வழியே ஈரத்தைக் கசிய விட்டிருப்பார் இளையராஜா.
‘மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்’ எனும் வரியில் பெண் மனதின் காதல் பிரார்த்தனையை எளிய மொழியில் சொல்லியிருப்பார் வாலி. வன தேவதைகள் எனும் விஷயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாகனத்தில் ஒலிக்கும் இப்பாடலை அடர்ந்த மரங்களுக்குப் பின்னே வலம் வரும் அந்தத் தேவதைகள் ரசித்துக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. இப்பாடல் உருவாக்கும் கற்பனை வனத்துக்கும் பாடல் படமாக்கப்பட்ட விதத்துக்கும் அத்தனை பொருத்தம் இருக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒலிப்பதிவின் புதுமைக்கு உதாரணம் என்று சொல்லத்தக்க மற்றொரு பாடல் ‘சந்தனக் காற்றே’. எஸ்.பி.பி. – ஜானகி ஜோடியின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று இது. மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடலும் அடர்ந்த வனத்தின் சித்திரத்தைக் கண் முன் நிறுத்தும். நெடிய மரங்களுக்கு நடுவே, முகத்தில் அறையும் சிலீர் காற்றைக் கிழித்துக்கொண்டு பைக்கை ஓட்டிச் செல்லும் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். வனப் பகுதியில் உலவச் செல்லும் நகரவாசியின் கண்களுக்குப் படும் காட்சிகளின் இசை வடிவம் என்று இப்பாடலைச் சொல்லலாம். வனப் பாதைகளில் பகல் நேரத்தில் ஒலிக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தின் சாயலை இப்பாடலில் உணர முடியும். பல்லவி மற்றும் சரணங்களின் முடிவில் எஸ்.பி.பி.-ஜானகி குரல்கள் சங்கமித்துக் கரைவதைப் போல் ஒலிப்பதிவை வடிவமைத்திருப்பார் இளையராஜா. ‘நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே’ எனும் வரி வாலியின் அற்புதக் கற்பனை.
உள்ளூர்ப் பண்ணையாரான ஜெய் சங்கரின் அடக்குமுறைக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுதிரட்டி ரஜினி பாடும் ‘கூவுங்கள் சேவல்களே’ எழுச்சியூட்டும் இசையும் புரட்சிகரமான பாடல் வரிகளும் கொண்ட பாடல். வயலின்கள், ட்ரம்பெட் இசையுடன் அதிரும் தாளக்கட்டுடன் தொடங்கும் பாடல் இது. ஆவேசத் துடிப்புடன் எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை எண்ணெய்க்கும் வக்கு இல்லை’ என்ற வரிகளில் ஏழை மக்கள் மீது நாயகன் காட்டும் கரிசனத்தைப் பதிவுசெய்திருப்பார் வாலி. இப்பாடலின் தொடக்க இசை, வானொலி நிகழ்ச்சியொன்றின் முகப்பு இசையாகப் பயன்படுத்தப்பட்டது.
இப்படத்தில் ‘நான்தான் டாப்பு’, ‘நான்தாண்டா இப்போ தேவதாஸ்’ ஆகிய இரண்டு பாடல்களும் உண்டு.
எண்ணத்தில் தேனூறி ஏற்றபல கொண்டுவரும்
கண்ணில் வழிந்தோடிக் கற்பனைக்கு வித்தாகும்
திண்மைச் சிரிப்பில் திசையெங்கும் பொங்கிவிழும்
மென்மை மழையதுவா மே…
*
மழையது வென்றிங்கே மாந்தரவர் போற்றிக்
குழைந்து வணங்கிகை கூப்பி – கலையாமல்
இன்னும் பொழிகவென ஏதோ சொலிவணங்க
மின்னலிடி தந்திடுவாள் தான்
*
தானாய்க் கருமேகம் தக்கபடி உண்டாக
மானாய்ப் புவியின் மடியினிலே – மீனாய்
விழுந்தே பலவாறாய் வித்தைகள் செய்யும்
குழுவாய் மழைத்துளிகள் ஆம்..
*
ஆமென்றால் இல்லையென ஆர்ப்பாட்டம் பலகொண்டு
போமென்றால் போய்யாபோ போட்டியுடன் – தாமென்ற
எண்ணமெதும் கொள்ளாமல் எத்தனையோ நாட்டியம்தான்
வண்ணமழை ஆடிடுமே வா..
*
வாவென்றே வஞ்சிவிழி வாகாகப் பார்ப்பதுபோல்
தாவென்றே நெஞ்சைத் தயக்கமின்றி கேட்டுவிடும்
வேழமது கர்ஜனையாய் விண்ணில் இடிமுழக்கி
ஆழமாய்ப் பெய்யும் மழை..
*
மழையென எண்ணியிங்கு மாண்பாய்க் கவியைக்
கலையுடன் கற்பனையைச் சேர்த்தே – வலையிலே
இட்டேன் அடியேன் எழிற்குறைவு என்றாலோ
சுட்டித்தான் இங்குசொல்வீ ரே..
*
காலையில்கேட்ட அழகிய மழைப்பாடல்.. இத்துடன் திடீரென்று பாட்டுக்கள் எழுதிப்பார்க்கலாம் என இப்போது நினைத்து எழுதியது….. ( மேற்கண்ட பாக்கள் வடிக்க நான் எடுத்துக்கொண்ட நிமிடங்கள் பத்து..ஓ.கேயாங்க..?)
குடும்பத்தலைவன் சரோஜா தேவி.. வெகு அழகான பாடல்..வரிகளும் தான்..
*
https://youtu.be/tdxrpD7QQpM
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும்
கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்
தென்றல் தழுவிக் கொண்டே வரும்
இரவைக் கண்டே பெண்மைதவித்துக் கொண்டே இருக்கும்
ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்
இன்று கூட்டுக்குள்ளே இருக்கும்
நாளை வீட்டுக்குள்ளே இருக்கும்
எங்கள் கூட்டுக்குரல் இன்பக்கோட்டைக்குள்ளே
என்றும்கேட்டுக்கொண்டே இருக்கும்
பின்ன வாரேன் :)
சிக்கா...
பல்லவியில் தண்ணீர் வரும் பாடல்களில் சில..
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
தண்ணிக்குடம் எடுத்து தனிவழியே போற குட்டீ
போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வெறும்
பாறை மட்டும்தான் பாட்டு படிக்கும்
இந்த அல்லித்தண்டு என்னைக் கண்டு
தண்ணிக்குள்ளே விக்கி நிக்குது
மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
இன்னும் சரணங்களில் இருக்கும் பாடல்கள்
தேவை என்றால் அது உங்களுக்கே தண்ணி பட்ட பாடு இல்லையோ ?
Courtesy: Tamil Hindu
திரை விலகிய சென்னையின் முகம்!
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, கதை நடப்பது நகரத்தில் என்று வைத்துக்கொண்டால் அந்த நகரம் பெரும்பாலும் சென்னையாகவே இருக்கும். “என் மகன் வேலை தேடிப் பட்டணத்துக்குச் சென்றிருக்கிறான்” என்று ஒரு ஏழைத் தாய் விட்டத்தைப் பார்த்துக் கவலைப்படும் காட்சிக்குப் பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையத்தை கேமரா கீழிருந்து பிரம்மாண்டமாகக் காட்டும் காட்சி கண்டிப்பாக வரும்.
அறுபதுகள், எழுபதுகளில் வெளியான திரைப்படங்கள் என்றால் வாகன நெரிசலற்ற அகலமான மவுண்ட் ரோடு இடம்பெறும். எண்பதுகளில் வெளியான பெரும்பாலான படங்களில் பி.ஏ., படித்த நாயகன் எந்த வேலையும் கிடைக்காமல் மெரினா கடற்கரையின் காந்தி சிலைக்குக் கீழ் நின்று நியாயம் கேட்டுப் பாட்டுப் பாடுவான்.
இப்படியாகச் சில டெம்ப்ளேட் ‘லொக்கேஷன்’கள் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், சென்னையில் நடக்கும் கதை என்று ஓரளவு நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்ட படங்கள் எண்ணிக்கையில் குறைவுதான். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் கதை நடக்கும் நகரிலேயே பீச் இருக்கும், மலைவாசஸ்தலம் இருக்கும். ரசிகர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வார்கள்.
எண்பதுகளின் இறுதியில் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது. குறிப்பாக கமல் ஹாஸனின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சத்யா’, மணிரத்னம் இயக்கிய ‘மவுன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, வஸந்தின் ‘கேளடி கண்மணி’, கதிர் இயக்கிய ‘இதயம்’, விக்ரமனின் ‘புதுவசந்தம்’ போன்ற திரைப்படங்களில் மாநகர சென்னையின் அடையாளம் வெளிப்பட்டிருந்தது. சென்னைச் சாலைகளின் வாகனப் பரபரப்பு, அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் போன்றவற்றை அவற்றின் இயல்புடன் இப்படங்கள் சித்தரித்தன.
நகர வாழ்வைச் சித்தரிப்பதில் ஓரளவு தேர்ந்தவர் என்று சொல்லத்தக்க இயக்குநரான மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து, மர நிழல்கள் அடர்ந்த நகரப் பகுதிகளின் அழகைக் காட்சிப்படுத்தினார். குறிப்பாக, ‘மிஸ்டர் சந்திரமவுலி’யை ஒரு கப் காபி சாப்பிட கார்த்திக் அழைக்கும் காட்சியைச் சொல்லலாம் (அநேகமாக வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் இக்காட்சி எடுக்கப்பட்டிருக்கலாம்.)
‘அஞ்சலி’ படத்தில் வரும் அபார்ட்மெண்ட் குடியிருப்பும், உயர் நடுத்தர மக்களின் வாழ்க்கையும் தமிழ்த் திரைப்படங்களில் அதுவரை காட்டப்படாத ஒன்று. அபார்ட்மெண்ட் காட்சிகள் ‘செட்’களில் எடுக்கப்பட்டவை என்றாலும் மது அம்பட்டின் ஒளிப்பதிவு அதை உயிர்ப்புடன் காட்டியது. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் மின்சார ரயில் காட்சிகளை அதன் அசல் ஒளியில் படமாக்கியிருப்பார் மணிரத்னம். ‘சத்யா’ படம் சென்னை தெருக்களில் உலா வரும் இளைஞர்களின் உலகைப் புதிய கோணத்தில் சித்தரித்தது.
90-களின் பிற்பாதியில் வஸந்த் இயக்கிய ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, அகத்தியனின் ‘காதல் கோட்டை’ போன்ற திரைப்படங்கள் சென்னையின் அசல் நகரத் தன்மையை ஓரளவுக்கு வெளிப்படுத்தின. ’காதல் கோட்டை’ படத்தில் மழைக் காலத்துச் சென்னையை அசலாகக் காட்டியிருப்பார் அகத்தியன். இக்காலகட்டத்தில் தமிழ்த் திரையிசையில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியிருந்தார் தேவா. சென்னையின் பிரத்யேக இசை வடிவமாகக் கருதப்படும் கானா பாடல்களின் வரவு, சென்னைகுறித்த சித்திரத்தைத் திரைப்படங்கள் ஓரளவு அசலாக வெளிப்படுத்த உதவியது. ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்த தொலைச்சேன்’, ‘விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி’, ‘குன்றத்துல கோயில கட்டி’ போன்ற பாடல்கள் வட சென்னையின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.
வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’, பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ போன்ற படங்கள் சென்னை குடிசைப் பகுதிகளின் வாழ்வைச் சித்தரித்தன. என்றாலும், படமாக்கப்பட்ட விதம், சூழல் ஆகியவற்றில் நம்பகத்தன்மை சற்று குறைவாகவே இருந்தது. அதேபோல், சென்னைத் தமிழ் பேசப்பட்ட படங்கள் பல வெளியாகியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ‘செட்’ களில் எடுக்கப்பட்டவை அல்லது பொருத்தமற்ற கதைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கதை நடக்கும் இடம் இதுதான் என்ற தெளிவுடன் படமெடுக்கத் தொடங்கிய இளைஞர் பட்டாளம்தான் சென்னையின் அசல் முகத்தைச் சித்தரிப்பதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
‘புதுப்பேட்டை’யில் சென்னை ரவுடி களின் நிழல் உலகத்தை செல்வராகவன் காட்டிய விதம் அசலுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது. குடிசைப் பகுதிகளின் இருள் வாழ்க்கை, ’ஏரியா’ பிரித்துக்கொள்வதில் ரவுடிகளுக்கு இடையிலான ‘புரிந்துணர்வு’, பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை இப்படம் துல்லியமாக முன்வைத்தது. வெற்றி மாறன், ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இவ்விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அப்படத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் கிஷோருக்கும் டேனியல் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் அசல் தன்மை, தமிழ்த் திரைமொழிக்கு மிகவும் புதியது. இந்தப் படத்தில் வெளிப்பட்ட சென்னை மொழியின் தன்மை பிரமிப்பூட்டக்கூடியது.
இதே காலகட்டத்தில் வெளியான, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’, சென்னை இளைஞர்களின் கிரிக்கெட் காதலை அற்புதமாகச் சித்தரித்தது. நண்பர்களுக்குள் நடக்கும் சிறு உரசல்கள், நண்பனின் தங்கையுடனான காதல், பிரிவு என்று பல்வேறு விஷயங்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்திய படம் இது. மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற திரைப்படங்கள் இரவு நேரச் சென்னையின் மர்மங்களை, அழகியலுடன் வெளிப்படுத்தின. சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ கற்பனை வளத்துடன் சித்தரித்தது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையை ரசனையுடன் சித்தரித்த ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தில் வட சென்னைப் பகுதி மக்கள் வாழ்வில் அரசியல் குழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்பைச் சிறப்பாகச் சித்தரித்தார். சந்தோஷ் நாராயணன் - கானா பாலாவின் பாடல்கள் சென்னையின் அசல் குரலாகவே ஒலித்தன.
இன்றைய தேதிக்குத் தமிழில் வெளியாகும் பல படங்கள் சென்னையின் நடுத்தரக் குடும்பங்கள், குடிசைப் பகுதி மக்கள், தாதாக்கள், காவல்துறையினரின் பணி வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை முடிந்தவரை நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் வந்த ‘நான் மகான் அல்ல’ படத்தில் சென்னையில் உள்ள சில அபாயகரமான போக்குகளும், திட்டமிட்டு ஆளைக் கொலை செய்வதில் உள்ள கச்சிதத்தன்மையும் பதைக்கவைக்கும் விதத்தில் பதிவாகியிருந்தன.
பல்வேறு வண்ணங்களாலான சென்னையின் அசல் உருவத்தை இளம் கரங்கள் சிரத்தையுடன் திரை ஓவியமாக வரைந்துகொண்டிருக்கின்றன.
ஆமாம் மது அண்ணா! எனக்கும் மாசூம் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. பிரபு ரோலுக்கு ஷா, சரிதாவுக்கு ஷபனா, அமலாவிற்கு சுப்ரியா பதக். பூ.பூ.பூ சக்கை போடு போட்டது. தமிழிற்கு இசை டி.ஆர்.
'வாசம் சிந்தும் வண்ணச் சோலை'
நல்லாவே இருக்கும்.
இன்னொரு அம்புலிமாமா பாடல் உண்டுதானே!
'உங்கப்பா வாங்கி வந்த குதிர'
https://youtu.be/ew53HCZbSMI
இந்தாங்கோ!
சிவக்குமார் நொந்து போய் 'சொர்க்கம் நரகம்' படத்தில் பாடுறார்.
'தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள்
கண்ணீரைக் காணாமல் ஓய்ந்ததுமில்லை
அவர்கள் கண்மூடித் தலையணையில் சாய்ந்ததுமில்லை'
https://youtu.be/svfDtOlnFbk