http://i1028.photobucket.com/albums/...ps69fmqard.jpg
நெருக்கியடிக்கும் திருவிழாக் கூட்டத்தில் வெயிலில் அலைந்த களைப்பு தீர
மரத்தடி நிழலில் நின்று
பருகும் இளநீர் தரும் ஒரு
குளுமையை...
சத்தம், சாப்பாடு,சந்தோஷம்
எல்லாமே கொஞ்சம் அதிகமாக
காணப்படுகிற கல்யாண வீட்டு
களேபரத்திலும், பெண்ணைப்
பெற்றவனின் மனம் காணும்
நிம்மதி மிகுந்த மௌனத்தை..
மடித்துக் கட்டிய வேட்டியும்,
பனியனை வெளிக் காட்டும்
மெல்லிய ஜிப்பாவும், கண்களில்
கனலும், நீட்டி முழக்கிப் பேசும்
பேச்சுமாய் நடிகர் திலகம்
வாழ்ந்த "கருடா சௌக்கியமா"
படத்தின் வேகப் போக்கினூடே
இந்த மென்பாடலைப் பார்த்த
போது உணர்ந்திருக்கிறேன்.
சில வருத்தங்கள் நம் மனதோடு தங்கி விடுகின்றன.
"வேறு மாதிரியான நல்ல படம்" என்பதற்கான மிகச்
சிறந்த உதாரணப் படமாய்
அமைந்த இந்தப் படம் ஏன்
அதிகமாகப் பேசப்படவில்லை..
போற்றப்படவில்லை..?
- என்கிற வருத்தத்தைப் போல.
ஒரு படம்.அதற்குள் பாடல்களைத் திணிக்கிற கதைச் சூழல்கள்.. இதெல்லாம்
மீறி இந்தப் படத்தின் கதையோடு ஈஷிக் கொண்டு
வருகிற இந்தப் பாடலின்
சூழல் அற்புதமானது.
சதையைப் போற்றும் சராசரிப்
பாடல்களிலிருந்து தூரமாய்
விலகிக் கொண்டு, காதலைக்
கண்ணியமாய்ப் பேசுகிறது..
இந்தப் பாடல்.
மெல்லிசை மாமன்னர் இந்தப்
பாடலின் மென்மையில்
வாழ்கிறார்.
அரிதான, இனிமையான சசிரேகாவின் குரலை நமக்கும்,
காற்றுக்கும் மிகவும் பிடிக்கிறது.
"பாடும் நிலா" என்று எஸ்.பி.பி
அவர்களை அழைப்பது சரிதான்
என்று அழுத்தமாய் நிரூபிக்கிறது இந்தப் பாடல்.
இசை வெளிச்சமற்று இருண்டு
கிடக்கிற நம் இதயங்கள்
ஒளிர, ஒளிர "நிலா" பாடுகிறது.
ரௌடிக் கட்டு விடுத்து, கண்ணியமான அந்த வேட்டிக்
கட்டல், அடர் நீலச் சட்டை அணிந்து நடந்து வரும் அழகு,
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த அழகு.
" சந்தன மலரின் சுந்தர வடிவில்" என்று பாடத்
துவங்குகிற நிமிஷத்தில்,
மனைவியின் முன் நின்று
ஓர் வளர்ந்த குழந்தை போல்
சட்டையின் கீழ்ப்புறமாய்
நீவி விட்டுக் கொண்டு பாடும்
நடிப்பை இந்தத் தலைமுறை
நடிகர்களெல்லாம் பார்த்துப்
பார்த்துக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
ஊரையே பயந்து மிரள வைக்கும் தீனதயாளு தன் அன்பான மனைவிக்கு மட்டும் தனது சுயரூபம் காட்டாது,
மென்மையானவனாய்க் காட்டிக் கொள்கிற கதைச் சூழலை உள்வாங்கிக் கொண்டு
அவர் வெளிப்படுத்துகிற
நடிப்பில் அசந்து போகிறோம்.
-----------
"மு த் து க் கி ரு ஷ் ணா.."
என்று விரல் சொடுக்கி
அழைப்பதிலும், சிரித்த முகம்
மாற்றாமல் கானம் பாடி"
நடப்பதிலும் மயங்கிக் கிடக்க
நாமிருக்கிறோம்.
எது வேண்டுமென்று நாம்
நினைக்கிறோமோ.. அதை
அப்படியே தருவதற்கு அவர்
இருக்கிறார்.
பிறகென்ன..?
https://youtu.be/-FWGP3ubDus