30.06.1977
மறக்க முடியாத நாள். மக்கள் தம் மனங்களை ஆண்ட மக்கள் திலகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நாள். மகுடம் தரிக்காத மன்னவனாக நம் மனங்களைக் கொள்ளைகொண்ட அந்தக் கோமகன் கோட்டையை வெற்றி கொண்டு கோலோச்சிய நாள். மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட ஒரே முதலமைச்சர் நம் மக்கள் திலகம் மட்டும் தான் என்பதில் நமக்கெல்லாம் எல்லையில்லா இன்பம். அரசியல் என்பது மக்களுக்காக என்பதை உணர்ந்து ஆட்சி செய்த உன்னதத் தலைவன் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள். மக்கள் தம் மனக்கவலைகளை மறந்து , அடிப்படை தேவைகள் யாவும் கிடைக்கப் பெற்று 10 ஆண்டுகள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அவர் ஆட்சிக்காலம் முடியும் வரை அரிசி விலை , பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற எல்லாவற்றிலும் தனிக்கவனம் செலுத்தி அவற்றின் விலை உயர்வு மக்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற மறைமொழிக்கேற்ப நல்லாட்சி நடத்தினார். அவர் இருக்கும் போது அவரைத் தூற்றிய பத்திரிக்கைகள் கூட பின்னாளில் அவர் இப்படி எல்லாம் செய்து திறமையாக செயல்பட்டார் என்று போற்றுகின்றன. அவர் காட்டிய வழியைப் பின்பற்றுமாறு பின்னாள் அரசுகளுக்கு வழிகாட்டின. அந்நாள் மீண்டும் வந்திடாதா என்ற ஏக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது இந் நாள் நினைவு.

