‘தாழம்பூவில்’ கட்டழகன்!

ஸ்ரீ பாலகுமாரன் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில், எம்.எஸ். ராம்தாஸ் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், புரட்சி நடிகரும், ‘புன்னகை அரசி’ கே.ஆர். விஜயாவும் இணைந்து நடித்த ‘தாழம்பூ’ திரைப்படம்23.10.1965 அன்று வெளியானது.

படத்தில் கண்ணதாசனின் முத்தான மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

அவற்றுள் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

“பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால்போல் காய்ந்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு – அங்கு
தனியே தவித்தது பெண்ணழகு!….”

என்று தொடங்கும் பாடல் காட்சியில், தன் இளமைக்காலப் பருவ அழகைப் பக்குவமாய்க் காட்டி கே.ஆர். விஜயா, கவிஞரின் பாடலுக்கு உன்னத உயிரோட்டத்தைத் தந்திருப்பார்.

பேசும் பெண்ணழகி, கூறுவதைக் கேளுங்களேன்!

“காலடி ஒசை கேட்டுவிட்டாள் – அந்தக்
கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்!
நாலடி நடந்தாள் முன்னாலே – அங்கு
நடந்தது என்னவோ? பின்னாலே!….”

……கேட்டீர்களா? காலடிஓசை கேட்டுவிட்டாளாம்? யார் காலடி ஓசை? அது அவளுக்குத்தான் தெரியுமே! அந்தக் கட்டழகன்… ‘கட்டான கட்டழகுக் கண்ணா!’ என்றழைக்கப்படும் கட்டழகன் (எம்.ஜி.ஆரின்) முகத்தைப் பார்த்து விட்டாளாம்.

பார்த்தவுடன்,

நாலடி நடந்தாளாம் முன்னாலே!
அதன்பின்பு, அங்கு நடந்தது….
என்னவோ?… பின்னாலே!’

இதனைக் கூறுவது நாகரிகமில்லையே’….இத்தகு நயத்தக்க நாகரிகமான காதல் பாடலைக் கவிஞர் தந்தால், எம்.ஜி.ஆரின் கட்டழகு முகத்தைப் பற்றிய பாடலைப் பாராமல் நாமதான் பாய்ந்தோட முடியுமா?

அடுத்து….தூவானந்தான்!…ஆம்!

“தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்ட சொட்டா உதிருது உதிருது!….”

எனத் தொடங்கி,

“பூவாடும் இளங் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது!…..”

என நீண்டு செல்லும் பாடலும், நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் கவிஞரின் பாடலே.

இன்னும்….!

ஆண்: “ஏரிக்கரை ஓரத்திலே
எட்டுவேலி நிலமிருக்கு
எட்டுவேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்?”

என எழிலான வினாவுடன் தொடங்கி,

பெண்: “வாழை வைத்தால் தோப்பாகும்!
மஞ்சள் வைத்தால் பிஞ்சுவிடும்!
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்!….”

இவ்விதமாகப் பல விடைகளைப் பெற்றுத் தரும் சுவை மிகுந்த கவியரசர் பாடலில்,

கண்ட கனா பலிக்காதா?
கதவு இன்று திறக்காதோ?
நினைத்துவிட்டால் நடக்காதோ?
நெருங்கிவிட்டால் பிறக்காதோ?….”

என, அழகின் ஆராதனைகளாய்த் தொடரும், ஆசைமனங்கள் பேசும் பாடலைச் சுவைத்தால் சுவை கூடுந்தானே!