-
22nd December 2014, 11:55 AM
#38
மார்கழி மஹா உற்சவம் - இசை விழா என்று சென்னை டிசம்பர் மற்றும் ஜனவரியில் அல்லோலகபடும் . இப்போதும் அப்படித்தான் அல்லகோலபட்டு கொண்டு இருக்கிறது .எந்த கச்சேரிக்கு செல்ல என்று தெரியவில்லை. அத்துனை சபாக்கள் .அத்துனை கச்சேரிகள் . மேட்டு குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்ல பட்டு வந்த கர்நாடக இசையை மற்றவர்களும் அறிய வேண்டும்,ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் திரு டி எம் கிருஷ்ணா அவர்கள் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள குப்பத்தில் இரண்டு தினங்கள் இசை விழா நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் . இந்த நேரத்தில் திரு வாலி அவர்கள் விகடன் பத்திரிகையில் எழுதிய நினைவு நாடாக்கள் நினைவிற்கு வந்தது .அதில் இருந்து சில பகுதிகள்
முரசொலியில் ஒரு செய்திக் கட்டுரை. 'சங்கீத வித்வான்கள் சபையில் பாட - எத்துணையோ தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன; இன்ன இன்னார் இயற்றிஇருக்கிறார்களே! என்று -
தமிழ்ப் பாடல்கள் யாத்துளோர் பட்டியலில் அடியேன் பேரும் இருந்தது!
கட்டுரையை எழுதிய பெரியவர் பெயர் திரு.திருவாரூர் தியாகராஜன். 'சின்னக் குத்தூசி என்றால் சகமறியும்!
இந்தக் கட்டுரை வெளியான இதழை நான் படித்துக்கொண்டிருக்கையில் -
ஓராண்டு என்னிலும் மூத்த ஒரு சங்கீத வித்வான் - என் பால்ய நண்பர் - என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பற்றிய தகவலை, அவரிடம் படிக்கக் கொடுத்தேன்.
'ஓய்! நீர் கீர்த்தனங்கள் எழுதுவீரா என்ன? என்று சற்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார்.
சங்கீத பூஷணம் தாராபுரம் திரு.சுந்தரராஜனின் ஸ்வரக் குறிப்புகளோடு - என் கீர்த்தனங்களை -
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டு இருப்பதை அவரிடம் காட்டினேன்.
அதைப் புரட்டிக்கொண்டே வந்த என் நண்பர் -
''ஓய்! உம்ம பாட்டா இது? நான் அந்தக் காலத்துல மதுரை சோமு; எம்.எல்.வசந்தகுமாரி; கல்யாணராமன்; சுதா ரகுநாதன்; பாம்பே ஜெயஸ்ரீ - இப்படி இந்தக் காலம் வரைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன்! அவ்வளவு ஏன்? நானே என் கச்சேரீல இதை ரொம்ப நாளா 'வலஜியில பாடிண்டிருக்கேன்; உம்ம பாட்டூன்னு - இப்பதான் தெரிஞ்சுண்டேன்; கிண்டலாப் பேசிட்டேன்; க்ஷமிக்கணும்!'' என்று கைகளைக் கூப்பினார்.
நண்பர் குறிப்பிட்ட என்னுடைய பாட்டு இதுதான்...
'கூவியழைத்தால்
குரல் கொடுப்பான்; பரங்-
குன்றமேறி நின்று
குமரா வென்று... ( 1)
வெகு காலமாக ஒரு வெகுஜன அபிப்பிராயம் இருக்கிறது - கோடம்பாக்கத்திற்கும் திருவையாறுக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கோவையில் 'வாணி பிலிம்ஸ் என்று ஒரு படக் கம்பெனி. அதன் பாகஸ்தர்கள் யார் தெரியுமா?
வயலின் வித்வான் டி.சௌடய்யா;
புல்லாங்குழல் வித்வான் டி.ஆர். மகாலிங்கம்;
மற்றும்
மஹா வித்வான் செம்பை திரு.வைத்யநாத பாகவதர்!
திருமதி. கே.பி.சுந்தராம்பாளும், மகாராஜபுரம் திரு.விஸ்வநாதய்யரும் நடித்த படம் 'நந்தனார்!.
திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமியும் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியமும் சேர்ந்து நடித்த படம் 'சகுந்தலை!.
திருமதி. என்.ஸி.வசந்தகோகிலம் கதாநாயகியாக நடித்த படம் 'ஹரிதாஸ்!.
திரு.பாபநாசம் சிவன் நடித்த படங்கள் 'தியாக பூமி; 'பக்த குசேலா; திரு.எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த படம் 'நந்தனார்.
திருமதி. எம்.எல்.வசந்தகுமாரியும், திரு. பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடித்து, சிறிது தூரம் வளர்ந்து நின்று போன படம் 'சுதர்ஸன்.
திரு.பாலமுரளி கிருஷ்ணா நாரதராக நடித்தது மட்டுமன்றி பல படங்களில் பாடிஇருக்கிறார்!
திரு.மதுரை டி.என்.சேஷகோபாலன், திரு.குன்னக்குடி படத்தில் கதாநாயகன்!
நாதஸ்வர மேதை திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் 'கவிராஜ காளமேகம்.
திருமதி. டி.கே.பட்டம்மாள் நிறைய படங்களில் பாடியிருக்கிறார்.
திரு.வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த படம் 'மதன காமராஜன்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே எனக்கு சங்கீத வித்வான்களோடு, நிறையப் பரிச்சயம் உண்டு!
ஸ்ரீரங்கத்தில்தான் இருந்தார், மகாவித்வான் வயலின் திரு. மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்.
வருஷா வருஷம் தன் வீட்டில், தியாகராஜ உற்சவம் நடத்துவார். வந்து பாடாத வித்வான்களே இல்லை!
நான்தான் அங்கு எல்லாருக்கும் எடுபிடி.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையைக் காவேரிக்கு அழைத்துப் போய், ஸ்நானம் செய்விப்பது; மதுரை மணி அய்யரின் துணிகளை இஸ்திரி போட்டுவைப்பது; ஜி.என்.பி-யின் பொடி டப்பாவில் - நாசிகா சூர்ணத்தை, அவ்வப்போது நிரப்புவது; கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு 'டிகிரி காபி ஏற்பாடு செய்வது...
இத்யாதி; இத்யாதி!
ஒரு சங்கீத வித்வான் மீது எனக்கும், என் ஸ்ரீரங்கத்து நண்பன் விட்டலுக்கும் பயங்கரப் பிரியம்.
அவர், திருச்சிப் பக்கம் கச்சேரிக்கு வந்தால் எனக்குக் கடிதம் போடுவார். நானும் நண்பன் விட்டலும், திருச்சி அசோகா ஹோட்டலுக்குச் சென்று அவரோடு அக்கம்பக்கத்து ஊர்க் கச்சேரிகளுக்குச் செல்வோம்.
என்னுடைய எத்துணையோ பாடல்களை அவர் இசையமைத்து விஸ்தாரமாகக் கச்சேரியில் பாடுவதுண்டு.
நான், நாளாவட்டத்தில் அவருக்குத் தம்புரா போடலானேன்.
ஒருமுறை விடியற்காலை வரை அவரது கச்சேரி, திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரில் நடந்தது. ஜே ஜே என்று கூட்டம்.
ஒரு கட்டத்தில், நான் லேசாகக் கண்ணயர்ந்து - தம்புராவோடு அவர்மீது சாய்ந்து விட்டேன்.
அப்போதுதான், அவர் அனுபவித்து 'ராகம் தானம் பல்லவி பாடிக்கொண்டிருந்தார். என் செயலால், சுதி கலைய...
'பளீர் என்று என் கன்னத்தில் ஓர் அறை விட்டார். எனக்குப் பொறி கலங்கியது. அந்த வித்வான் குஸ்தி பழகியவர்!
நாள்கள் நகர்ந்தன. நான், சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்; நண்பன் விட்டல், எம்.ஜி.ஆர். மந்திரி சபையில் மந்திரியாகி விட்டான். திருச்சி சௌந்தரராஜனின் செல்லப் பெயர்தான் விட்டல்!
பல்லாண்டுகளுக்குப் பின் - அந்த சங்கீத வித்வான் -
'சஷ்டி விரதம் என்னும் தேவர் பிலிம்ஸ் படத்துக்காகப் பாட வந்திருந்தார். என் பாட்டுதான் அது.
என்னைப் பார்த்ததும் - என் கன்னத்தில் அவர் அறைந்தது நினைவுக்கு வந்து - மிகவும் கூச்சப்பட்டார். நான், அவரது கைகளைப்பற்றிக் கொண்டு சொன்னேன்.
'அண்ணே! நீங்க மஹாவித்வான்; சங்கீத சாகரம். இன்றும் நீங்கள் விடிய விடியப் பாடினால் - கூட்டம், கொட்டகை பிதுங்க நிற்கிறது. உங்கள் பேர் சொன்னாலே, சென்னை சபாக்கள் சந்தோஷித்துச் சிலிர்க்கின்றன!
உங்கள் கையால், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஓர் அறைதான் -
நான் பாட்டுத் துறையில் இவ்வளவு பிரபலமாகக் காரணம்!
- என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
உடனே, என்னை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தார் -
மகா மகா வித்வான்
திரு. மதுரை சோமு அவர்கள்!
[ நன்றி : விகடன் ]
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks