-
24th July 2015, 11:00 PM
#11
Junior Member
Seasoned Hubber

சிவாஜியிடம் எம்.ஜி.ஆர்.சொல்ல விரும்பியது என்ன?
பழைய நினைவுகள் சுகமாக இருக்கும்...அடடா இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என வியக்க வைக்கும்.சில வருந்த வைக்கும் !
''சே,நாமா இப்படி செய்தோம் '' என நம் மீதே கோபம் வரும்!
ஆனால் ......?
நடக்காமல் போய் விட்ட சில நிகழ்வுகள் மனதை அரிக்கும்.!
ஏன் சொன்னார்,எதை நினைத்து சொல்லி இருப்பார்,அதன் பொருள் என்ன என புரியாது நமது மூளையை குழப்புவோம்!
அந்த வகையை சேர்ந்ததுதான் இப்போது சொல்லப் போவது...!
அமரர் எம்.ஜி.ஆர்.உடல் நலம் ஓரளவு சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பி இருந்தார்.
அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வந்தார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக !
அமரர் சிவாஜியும் ஆர்.வெங்கட்ராமனும் நல்ல நண்பர்கள்.
அந்த விழாவுக்கு சிவாஜியும் வந்திருந்தார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.தனது தம்பியாக கருதிய சிவாஜியை தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
சிவாஜிக்கு சற்று சங்கடமாக இருந்தது.
கடும் குளிர்!
போலீஸ் அதிகாரி ஒருவர் சால்வையை எடுத்துக் கொண்டு வந்தார் .
அதை வாங்க மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அந்த சால்வையை சிவாஜி வாங்கி எம்.ஜி.ஆருக்கு போர்த்தி விட்டார்.
அப்போது தான் சிவாஜியிடம் ஒரு தகவலை சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!
''பிரசிடென்ட் இன்னும் பத்து நாளில் ஹாஸ்பிடல் திறப்பதற்காக சென்னை வரப் போகிறார்.அவர் போனதும் நீ வா!உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் '' என்று சொன்னாராம்.
விழா முடிந்து வீட்டுக்கு சென்றதும் கமலா அம்மையாரிடம் அண்ணன் எம்.ஜி.ஆர் .தன்னிடம் இப்படி கூறினார் என்பதை சொல்லி இருக்கிறார்.
இருவரும் சேர்ந்து ராமாவரம் தோட்டத்துக்கு போவதாக முடிவு செய்தனர்.
ஆனால் ...?
விதி வேறு விதமாக விளையாடிவிட்டது!
மருத்துவமனை திறப்பு விழாவுக்கு முன்னதாகவே புரட்சி தலைவர் அமரர் ஆகி விட்டார்.
குடும்ப துக்கம் விசாரிப்பதற்காக இரண்டு நாட்கள் கழித்து ஜானகி அம்மையாரை பார்க்க சென்ற போது அவர் ''தம்பி கணேசன் வரப்போறான் அவனிடம் முக்கியமான விஷயம் பேசப் போறேன்.அவனுக்கு பிடித்த ஆப்பமும் ,கருவாட்டுக் குழம்பும் பண்ணி வை என்று சொன்னவர் உங்களிடம் எதுவும் சொல்லாமல் போய்விட்டாரே'' என்று அழுதிருக்கிறார் ஜானகி அம்மையார்.
இந்த நிகழ்வை அவ்வப் போது சொல்வார் சிவாஜி.
''அண்ணன் மனசில் என்ன இருந்ததோ தெரியலியே''என்று புலம்பியது எனக்கு
இன்னும் நினைவில் இருக்கிறது.
அமரர் எம்.ஜி.ஆர். என்ன சொல்ல எண்ணி இருப்பார் என்பது ஊகிக்க முடியாத கேள்வியாகவே இருக்கிறது!
Courtesy : http://devimanian.blogspot.in/
-
24th July 2015 11:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks