-
9th June 2016, 02:32 PM
#11
Junior Member
Platinum Hubber
9.6.1972
நான் ஏன் பிறந்தேன்
நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.
அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.
மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.
படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'
"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'
"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'
"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'
"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'
இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,
"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
இந்த படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th June 2016 02:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks