-
28th November 2016, 10:06 AM
#11
Junior Member
Devoted Hubber

MGR Wax Statue Content - Lakshman Sruthi
"சென்னையில் திருவையாறு" இசை விழாவில் "எம்.ஜி.ஆர் மெழுகுச்சிலை"
--------------------------------------
லஷ்மன்ஸ்ருதி இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 முதல் 25 வரை
"சென்னையில் திருவையாறு" என்னும் இசை மற்றும் நாட்டிய விழா தொடர்ந்து 11 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக.நடைபெற்று வரும் இவ்விழா 12 வது வருடமாக அரங்கேறுகிறது.
"மக்கள் திலகம் பாரதரத்னா திரு.எம்.ஜி.ஆர்" அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் "இசையரசி பாரதரத்னா திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி"அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச்சிலைகள் "லண்டன் வேக்ஸ் மியுசிய"த்தில் உள்ளது போல் "சென்னையில் திருவையாறு" விழா நடைபெறும் காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

இத்திருவுருவச்சிலைகளுடன் பொதுமக்களும், மக்கள்திலகத்தின் ரசிகர்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் திலகத்தின் சிலை அமைப்புக்கான உதவியை சென்னை, பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழக"த்தின் நிறுவனரும் வேந்தருமான " நண்பன் ஐசரி கணேஷ்" வழங்கியுள்ளார்.
எம்.எஸ் ஸின் சிலை அமைப்புக்கான உதவியை "சுஸ்வரலஷ்மி ஃபவுண்டேஷன்" வழங்கியுள்ளது.
உலகெங்குமிருந்து வருகை தரும் இசையுலக ரசிகர்களுக்கும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கும் இச்செய்தி சந்தோஷத்தையும், புத்துணர்வையும் நிச்சயம் அளிக்கும்.
எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.
தன் படங்களின் பாடல்கள் நன்றாக வரமேண்டுமென பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என்று எல்லோரோடும் ஆலோசனைகள் செய்து, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு, சக நடிக நடிகையரின் முழு ஈடுபாட்டையும் வரவழைத்து, தொழில்நுட்பக்கலைஞர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, தன் சிந்தனைகளையும் கலந்து தீர்க்கதரிசனத்தோடு உழைத்தவர் எம்.ஜி.ஆர்.
பாடல்களுக்காகவும் அதன் தரமான இசைக்காகவும் உலகில் வேறு ஒரு திரைப்பட நடிகர் இவ்வுலகில் பணியாற்றியிருப்பார்களா என்று ஆராய்ந்து பார்த்தால் விரல்விட்டு சிலரே இருக்கக் கூடும்.
அதனால்தான் அவர் நடித்த பாடல்கள் இன்றும் உயிர்ப்போடும், இளமையோடும், துள்ளலோடும், கருத்துக்களோடும் காற்றலைகளில் கலந்து ஒலித்து நம்மை மகிழ்வித்து வருகின்றன.
அவர் நடித்த படங்களில் 1500 பாடல்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கின்றன. அதில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இன்றும் பிரபலமாகவும், மக்களின் உதடுகளால் முனுமுனுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, இணையம் நம் இதயம் என்றில்லாமல், எல்லா தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்குள்ளும் புகுந்து வந்து கொண்டிருக்கின்றன எம்.ஜி.ஆர்.பாடல்கள்.
இத்தனை இசை சாதனையும், இசையுலகிற்கான சேவையும் செய்த மக்கள் திலகத்திற்கு "சென்னையில் திருவையாறு" இசை விழாவில் சிலை அமைப்பது எங்கள் பாக்கியம் என்று லஷ்மன்ஸ்ருதி இசைக்குழு இயக்குநர்கள் ராம், லஷ்மண் இருவரும் தெரிவித்தனர்.
டிசம்பர் 18 முதல் 25 வரை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இச்செய்தியினை அனைவருக்கும் பரிமாறி எண்ணற்ற ரசிகர்களை சென்றடையச் செய்யுமாறு "சென்னையில் திருவையாறு" விழாக்குழுவினர் வேண்டுகோள் வைத்தனர்.
நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல்
-
28th November 2016 10:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks