Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 165– சுதாங்கன்.





    சரவணன் சிரித்தபடியே உட்கார்ந்திருந்தார். சுப்பையாவுக்கே பொறுக்க முடியாமல் 'நான் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு கோபம் வரலியே?’ என்றார்.
    `வரலே! ஏன்னா எனக்குத் தெரியும். நீங்க உங்க மகனைத் திட்டிக்கொண்டிருக்கிறீர்கள். என்னை நேருக்கு நேர் பார்த்து திட்ட உங்களுக்கு துணிவு இல்லை என்பது எனக்குத் தெரியாதா?’ என்றார் சரவணன்.
    `கரெக்டா பிடிச்சுட்டிங்களே' என்றபடி சுப்பையா சிரித்தார். சரவணன் மேல் இருந்த அன்பினால், தன் மகனுக்கு சரவணன் என்று பெயர் வைத்திருந்தார் சுப்பையா. அவரை வீட்டுக்கு வரவழைத்து, திட்டுவது போல் ஒரு பிராக்டிகல் ஜோக் விளையாடினார் சுப்பையா.
    `உயர்ந்த மனிதன்’ வெற்றி விழாவில் அறிஞர் அண்ணா கலந்து கொண்டு சிவாஜி கணேசனை வாழ்த்திப் பேசினார். திருப்பதி சென்றதைத் தொடர்ந்து திராவிட இயக்கத் தொடர்புகளில் இருந்து சிவாஜி கணேசன் விடுபட்டு வெளியே வந்தபோதிலும், பெரியாரிடமும், அண்ணாவிடமும் தொடர்ந்து மதிப்பும், மரியாதையும், நட்புறவும் வைத்திருந்தார் சிவாஜி. இதைப் பற்றி சிவாஜியே சொல்லியிருக்கிறார்.
    `நான் ஒரு லட்சியத்துக்காக அண்ணாவை விட்டு வெளியே வந்தேனே தவிர, அண்ணா எப்போதும் என் அண்ணாதான். நான் இருந்த இடத்தை விட்டு வெளியே வந்தனே தவிர, அண்ணாவை விட்டுப் பிரியவில்லை. அண்ணா கட்சியை அரசியலால் நடத்தவில்லை. அன்பால் நடத்தினார். அதை ஒரு மாபெரும் கட்சியாக வளர்த்தார்.
    1967 தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சில காலத்திற்குப்பின் அண்ணாவுக்கு உடல் நலம் குன்றி லண்டனுக்கு பரிசோதனைக்குப் போனார். அப்போது என் மகள் சாந்திக்கு திருமணம். என் நண்பர் வேலுச்சாமி என்ற டாக்டருக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து, லண்டனுக்கு அனுப்பி, அண்ணாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செய்தேன்.
    `திருமணம் நன்றாக நடக்கட்டும். இன்னும் பத்து நாட்களில் நான் சென்னை திரும்பி வந்துவிடுவேன்’ என்று அண்ணா செய்தி அனுப்பினார்.என் மகள் சாந்தியின் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அதற்கு அடுத்த வாரம் அண்ணா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வைத்தே `மகளையும், மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வருமாறு கணேசனிடம் சொல்லுங்கள்’ என்றார்.
    நான் என்னுடைய மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு அண்ணா வீட்டுக்குச் சென்றேன். அண்ணாவை வணங்கியவுடன் அவர் ஒரு வேட்டியையும், புடவையையும் அன்பளிப்பாக வழங்கினார். ஏவி.எம்மின் `உயர்ந்த மனிதன்’ என்னுடைய 125 படமாக வெளியாகியிருந்தது. அதையொட்டி ஏவி.மெய்யப்பனும், என்னுடைய நண்பர் கோபாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு விழா நடத்தினார்கள்.
    வடநாட்டில் இருந்து பெரிய தலைவர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஒய்.பி. சவான் வந்திருந்தார். இந்த விழாவில் அண்ணா கலந்து கொண்டு என்னை வாழ்த்தி பேச வேண்டும். என்னை விரும்பாத சிலர் அண்ணாவிடம் சென்று `விழாவுக்கு போகாதீர்கள். சிவாஜியை வாழ்த்திப் பேசாதீர்கள்’ என்று சொன்னார்கள்.
    `ஆயிரம்தான் இருந்தாலும் சிவாஜி, சிவாஜிதான். அவன் எனக்கு எப்போதுமே வேண்டியவன்தான். அவனைப் போல் அன்புள்ளவன் எவனும் கிடையாது’ என்று சொல்லிவிட்டு அண்ணா விழாவுக்கு வந்தார். உடம்பு முடியாமல் இருந்த நேரத்திலும் அண்ணா அந்த கூட்டத்தில் முக்கால் மணி நேரம் பேசினார். `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்றார்.
    மேலும், `இந்த மலர் மலர்ந்த பிறகுதான் நீங்கள் பார்க்கிறீர்கள். இது மொட்டு விடும்போதே, இது நன்றாக அரும்பி வாசனை கொடுக்கும் என்று எனக்குத் தெரியும்' என்றும் கூறினார். அதன்பின் `கணேசா! என் அருமைத் தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனம் திறந்து வாழ்த்தினார்.
    `பெருமாள் முதலியார் கூட்டி வந்ததனால், கணேசன் திரை உலகுக்கு சீக்கிரம் வந்துவிட்டான். இல்லையென்றாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்திருப்பான். அவனுடைய வரவை யாராலும் தடுத்திருக்க முடியாது’ என்றும் கூறினார் அண்ணா.
    இந்த நிகழ்ச்சிக்குப் பின் அண்ணா, தி.நகரில் என்.எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார்கள். அதன்பின் சில நாட்கள் கழித்து அண்ணா மறைந்துவிட்டார்கள். நான் `சிவாஜி’ ஆவதற்கு வழிவகுத்துத்தந்த அந்த மாமேதையின் மறைவு என்னை எப்படி பாதித்தது என்பதை வேறு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் நாடகங்களிலும், படங்களிலும் தமிழைப் பேசும்போதெல்லாம் அந்த தமிழ்ச் செல்வரின் நினைவு வரும். அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்’ என்றார் சிவாஜி. சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் தனது 72வது வயதில் காலமானார். சிவாஜியின் வெற்றிப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டமது!
    1969ல் 'அன்பளிப்பு', 'தங்கச் சுரங்கம்', 'காவல்தெய்வம்', 'குருதட்சணை', 'அஞ்சல் பெட்டி 520', 'நிறைகுடம்', 'தெய்வ மகன்', 'திருடன்', 'சிவந்த மண்' என்று 9 படங்கள் வெளியாகின. சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த `தெய்வ மகன்‘ படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கினார். அந்தப் படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். அந்த படத்திற்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன். அப்பாவாகவும், இரண்டு மகன்களாகவும் சிவாஜி சிறப்பாக நடித்தார். ஆஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படம் இது.
    `காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்,’
    `கேட்டதும் கொடுப்பவனே கீதை நாயகனே,’ `தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே’ என்று இந்த படத்தின் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம். ஒரு காட்சியில் தந்தை சிவாஜி, மூத்த மகன் சிவாஜி, இளைய மகன் சிவாஜி, என்று மூன்று சிவாஜிக்கள் அந்தக் காட்சியில் இருப்பார்கள்.
    இளைய மகன் சிவாஜி தந்தையிடம் பீரோவுக்கு பின்னால் ஒளிந்தபடி பணம் கேட்பார். தந்தை சிவாஜி மறுப்பார். எதிரில் இருக்கும் மூத்த மகன் சிவாஜி `பாவம் கொடுங்கள்’ என்று சைகை காட்டுவார். இன்று நினைவில் நிற்கிறது. சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானபோது இந்த காட்சிக்கு ரசிகர்களின் விசில் பறந்தது.
    `தெய்வ மகன்’ சிவாஜியின் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். எத்தனை பாவங்கள், எத்தனை உணர்ச்சிகள், தந்தைக்கு ஒரு நடிப்பு! மூத்த மகனுக்கு ஒரு மானரிஸம்! இளைய மகனுக்கு ஒரு ஸ்டைல்! சிவாஜி சிவாஜிதான்!
    (தொடரும்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •