-
2nd August 2017, 06:35 PM
#11
Senior Member
Devoted Hubber
murali srinivasan
குங்குமம் - Small Recap
02.08.1963 அன்று வெளியாகி இன்று (02.08.2017) 54 வருடங்களை கடந்து போகும் குங்குமம் பற்றியும் அதை சிறு வயதில் பார்த்தது அதன் பிறகு மறு வெளியீட்டில் பார்த்தது பற்றியும் ஒரு சின்ன recap.
குங்குமம் மோகன் ஆர்ட்ஸ் மோகன் தயாரித்த படம். பாசமலர் என்ற காவியத்திற்கு பிறகு ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த படம். பாசமலர் படத்தை M .R சந்தானத்துடன் இணைந்து தயாரித்த மோகன் இந்தப் படத்தை தனியாக தயாரித்தார். பாச மலர் யூனிட் முற்றிலுமாக மாறியது. நடிகர் திலகம் தவிர அனைத்து கலைஞர்களும் ஏன் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட மாறி விட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும்.
குங்குமம் முதல் வெளியீட்டில் மதுரையில் பரமேஸ்வரி திரையரங்கில் வெளியானது. பொதுவாகவே ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியாகும் அரங்கம். அதுவும் அன்றைய காலகட்டத்தில் நகரை விட்டு சற்றே தள்ளி அமைந்திருக்கின்றது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த அரங்கம் கூட.[அந்த படம் வெளியாகி பத்து வருடத்துக்குள் அந்த ஏரியா பக்கா டவுன் ஆகிப் போனது வேறு விஷயம். வெகு சிறிய வயதில் தாய் மற்றும் உறவினர்களுடன் படம் பார்த்தது ஒரு சின்ன தீற்றலாய் நினைவு அடுக்குகளில். குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பாடல் காட்சி மட்டும் நினைவில் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன.
1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். நான் வாழ வைப்பேன் மாலை 5.30க்கே House full. அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் தியேட்டருக்கு போய் கூட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம். நல்ல கூட்டம். பிறகு அலங்காருக்கு போகிறோம்.[இரவு திரும்பி வரும்போது இமயம் அன்றைய மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்ற செய்தி கிடைத்தது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [அல்லது மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த ஏரியாவிலிருந்து குங்குமம் பார்க்க வந்த நண்பன் அங்கேயும் நல்ல கூட்டம் என்கிறான். எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலங்கார போவதற்கு முன் அங்கேயும் போய் பார்த்தோம். 198-வது நாள் என்று நம்பவே முடியவில்லை. அங்கேயும் ஹவுஸ்புல் போர்டு விழுந்தது என்பதை அலங்காருக்கு தாமதமாக வந்த ஒருவர் சொன்னார். அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் படத்திற்கும் நடந்தது.
படத்தின்ப கதை பற்றி இன்ன பிற விவரங்களை பற்றி அண்மையில் ஓரிரண்டு பதிவுகளில் எழுதிய காரணத்தினால் படத்திற்கு உள்ளே செல்ல போவதில்லை. பாடல்களை பற்றி மட்டும் அதற்கு அன்று கிடைத்த வரவேற்பு பற்றி மட்டும் சொல்கிறேன். டைட்டில் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். 1962 மார்ச் தொடங்கி 3 மாதங்கள் நடிகர் திலகம் அமெரிக்க நாட்டின் அழைப்பையேற்று கலாச்சார தூதுவராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த படத்தின் டைட்டில் ஓடும்போது அதற்கு பின்னணியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பூந்தோட்ட காவல்காரா முதல் பாடல். முதலில் விஜயகுமாரி பாடும்போது அமைதியாகயிருந்த அரங்கம் முறைப்பெண்ணை தேடி நாயகன் தோட்டத்தில் நுழைந்து பருத்திக்காட்டில் என்று ஆரம்பிக்கும்போது இங்கே ஆரம்பித்தது அலப்பறை. அதிலும் ஒரு நடை நடப்பார் நடிகர் திலகம். அரங்கம் அதிர ஆரவார ஓசைகள்
படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன என்று சொன்னேன். அதிலும் தூங்காத கண்ணின்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு நெருக்கமான பாடலாக மாறிப்போனது. இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். ஒருவர் பாட ஒருவர் பதில் சொல்ல என்ற முறையில் அமைந்த பாடல். பாடல் காட்சியின்போது உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 38 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல் அடுத்த அலப்பறை. மேடையில் தடுமாறும் சாரதாவிற்கு கைகொடுக்க (குரல் கொடுக்க?) நடிகர் திலகம் இருக்கையிலிருந்து எழுந்து போவதில் தொடங்கிய கைதட்டல் மென்மேலும் பெரிதானது. அதிலும் நடிகர் திலகம் ஸ்வரப்ரஸ்தாரங்களை ஆலாபனை செய்யும்போது தியேட்டருக்குள்ளே கோடையிடி. சின்ன வயதில் பார்த்தது நினைவில் இல்லாததனால் இந்தக் காட்சியை பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடைசியில் வந்த பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?
திரை மூடிய சிலை நான்
துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்
என்ற வரிகளுக்கும்
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்கு புரியாது அந்த
தெய்வம் வராமல் விளங்காது
போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!
கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இந்த படத்திற்கு மாமாவின் இசை ஒரு மிகப் பெரிய பலம். இந்தப் படம் மட்டுமல்ல. அந்த 1963-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம், குலமகள் ராதை, குங்குமம் மற்றும் அன்னை இல்லம் போன்ற மாமா இசையமைத்த நடிகர் திலகத்தின் அனைத்து படங்களிலும் மாமா மகாதேவன் தூள் கிளப்பியிருப்பார். இந்த 1963 படங்களை பற்றி சொல்லும்போது ஒரு சுவையான விஷயம் நினைவிற்கு வருகிறது. சற்று கவனித்து பார்த்தோமென்றால் குங்குமமும் சரி, அன்னை இல்லமும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்பு கொண்ட படங்களாகவே இருக்கும். (கதையின் முக்கிய முடிச்சு செய்யாத கொலையை செய்ததாக பழி சாட்டப்பட்டும் தந்தை பாத்திரம்) அதிலும் நடிகர் திலகம், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா ஆகியோர் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். இதில் மற்றொரு சுவாரஸ்யம் பாச மலர் படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்தபோது மோகன் ஆர்ட்ஸ் மோகனும் எம்.ஆர். சந்தானமும் சேர்ந்து தயாரித்தனர். அவர்கள் இருவரும் பிரிந்து தனியாக படம் தயாரித்தபோது மோகன் குங்குமத்தை எடுக்கிறார். சந்தானம் அன்னை இல்லத்தை எடுக்கிறார். பிரிந்தாலும் ஒரே மாதிரி கதையை எடுத்தார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே! ஆனால் அன்னை இல்லம் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்தது. குங்குமமோ சென்சார் புண்ணியத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் தூங்காத கண்ணின்று ஒன்று பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!
பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி!
அன்புடன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd August 2017 06:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks