Quote Originally Posted by saradhaa_sn View Post
டியர் பார்த்தசாரதி,

நடிகர்திலகத்தின் காவியப்படங்கள் பலவும், வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட விதம் பற்றியும், அப்போது நடந்த நிகழ்வுகள் பற்றியுமான தங்களின் விரிவான பதிவு அருமை. பலருக்கும் இதுவரை தெரிந்திராத பல புதிய விஷயங்கள்.

எனவே முரளியண்ணா சொன்னது போல, இங்கு சிலர் பெயரைக்குறிப்பிட்டு, அவர்கள் போல எழுத முடியாது என்று சொல்லியிருக்கும் உங்களின் கூற்றை வன்மையாக மறுக்கிறேன். உங்களின் பதிவுகளும் விவரங்களும் யாருடைய பங்களிப்புக்கும் குறைந்ததல்ல. இங்கு பதிவிடும் எல்லோருமே சிறந்த பங்களிப்பாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நடிகர்திலகத்தின் படங்கள் வேற்று மொழியில் எடுக்கப்படும்போது, அவற்றில் அவருடைய பாத்திரங்களை ஏற்கும் கதாநாயகர்கள் முதலில் சொல்லும் ஒரே விஷயம், 'என்னுடைய லெவலுக்கு நான் பண்றேன். தயவு செஞ்சு அவருடைய பெர்பார்மென்ஸோடு ஒப்பிடாதீர்கள். அப்படி ஒப்பிட்டால் நான் காணாமல் போயிடுவேன்' என்பதுதான். அந்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களிடம் பெரும் மரியாதையைப்பெற்றிருந்தார் நடிகர்திலகம்.

ஒரு உதாரணம், கார்கில் போர் நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது அதில் பல இந்தி நடிகர்களும் கலந்துகொண்டனர். ஆட்டம் முடிந்ததும், அங்கே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முதல்வர் கலைஞர், அப்போதைய சென்னை மேயர் ஸ்டாலின், நமது நடிகர்திலகம் ஆகியோர் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப்பெற்றனர். அப்போது மேடைக்கு வந்த இந்தி நடிகர் 'அனுபம் கெர்' முதலில் மேயரிடம் கைகுலுக்கினார், அடுத்து நின்ற முதல்வரிடமும் கைகுலுக்கியவர் அவரையடுத்து நின்ற நடிகதிலகத்திடம் வந்ததும் சட்டென்று காலில் விழுந்து எழுந்தார். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கெல்லாம் மெய்சிலிர்த்துப்போனது.

அந்த அளவுக்கு மற்ற மொழி கலைஞர்களிடமும் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவர் நமது அண்ணன். உங்கள் ஆய்ப்புப்பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
நன்றி சாரதா மேடம் அவர்களே. என்னுடைய ரசிப்புத்தன்மையும் வர்ணனையும் வேண்டுமானால் குறைத்து மதிப்பிடாதபடி இருக்கலாம். ஆனால், புள்ளி விவரங்களை அளிப்பதிலும் அதற்கு முனைப்பு காட்டுவதிலும், நீங்கள் எங்கோ இருக்கிறீர்கள். உங்களைத் தொட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதற்குப் பெரிதும் உதவுவது, எனது நினைவுகள், சேகரித்த (பெரும்பாலும் மனதில்) தகவல்கள், என்னுடைய நண்பர்கள், எனது உறவினர்கள் (என்னுடைய நெருங்கிய உறவினர்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில் பணி புரிந்து கொண்டிருந்தனர். நானும் சில காலம் குமுதத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்.) இதற்கும் மேல், திரு ராகவேந்தர் சாரின் இணைய தளம் மற்றும் இந்தத் திரியில் பொதிந்து கிடக்கும் திரு பம்மலார், முரளி சார் மற்றும் நீங்கள் அளித்துள்ள விவரங்கள்.

அன்புடன்,

பார்த்தசாரதி