-
28th August 2012, 12:11 PM
#1
Senior Member
Senior Hubber
நதி மூலம்...ரிஷி மூலம்...
நதிமூலம்.... ரிஷி மூலம்...
சின்னக் கண்ணன்
(கே. ஆர். ஐயங்கார் என்ற பெயரில் எழுதியது
முதலில் ஒரு கல்வெட்டு:-
***************
காலம்: பண்டைய காலத்திலும் தமிழகத்தில் ஒரு போதாத காலம்.
ஆட்சி : 'சோழப் புலி கொண்ட சுறா ' வான பாண்டிய மன்னன் சற்குண பாண்டியனின் ஆட்சி.
வேலை முடியப் போகிறது இன்னும் சில நாழிகைகளில் - என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டால் அவ்வளவு தான். எல்லா வேலைகளையும் விரைவாய் முடித்துவிட்டு கடைசித் தருணத்தில் கொஞ்சம் ஓய்வில் இருக்கவே அனைவரும் விரும்புவர்.
சூரியனுக்கும் அன்று அவ்வாறு தோன்றி விட்டதோ என்னமோ. உச்சி வெய்யில் ஏறி சில நாழிகைகள் ஆகியும் கூட தனது கிரணங்களை நன்றாகப் பாய்ச்சி வீடு செல்ல வேண்டும் என்ற தவிப்பை வெளிப்படுத்தினான். அவனுடைய தவிப்பை அவனே வைத்துக் கொள்ளப் படாதோ. ஏன் இப்படி மற்றவர்களையும் வதைக்க வேண்டும் ?
அதுவும் 'நடுக்காடு ' என்றழைக்கப் பட்ட அந்த கிராமத்தில் பிரதானத் தெருவில் இருந்த படோடாபமான மாளிகையின் உள் அமர்ந்திருந்த அந்த இருவருக்கும் - சூரியனின் உஷ்ணத்தாலோ- அல்லது மனதின் உஷ்ணத்தாலோ நெற்றியில் வியர்வைத் துளிகள் பொங்கி வந்து கொண்டிருந்தன.
தலைப்பாகை அணிந்து, மீசையில் வெண்ணிறம் பாதி நிறைந்திருக்க ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்த முதலாமவர் - நடுக்காடு உட்பட்ட 26 கிராமங்களின் தலைவர்- சயங்கொண்ட நாதர் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.
'என்ன சொல்கிறீர்கள் மெய்க்கீர்த்தி ? நீர் கூறுவதெல்லாம் உண்மையா ? '
மெய்க்கீர்த்தியானவர் சிறு துணியினால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சொன்னார். 'ஆம் பிரபோ '
'அதாவது நாம் அரசாங்கத்துக்குக் கட்டவேண்டிய வரியைக் குறைத்துக் கட்டியதைப் பற்றி அவன் அரசரிடம் சொல்லப் போகிறானாமா ? '
'ஆம் பிரபோ ' என்றார் மெய்க்கீர்த்தி மறுபடியும்.
'யாரய்யா அவன் ? அவன் பேர் என்ன ? கரிக்காற் நெடுக்கிள்ளி. இப்படியொரு பெயரை யார் வைத்தார்கள் ? எப்படிக் கூப்பிடுவார்கள் ? கரி என்றா கால் என்றா நெடு என்றா ? '
'கிள்ளி என்று அழைப்பார்கள். அவனுக்குச் சொந்தமாகவும் சில நிலங்கள் இருக்கின்றன. நாம் எல்லா கிராமங்களில் இருந்தும் வரி வாங்குகிறோமாம். ஆனால் அரசுக்குக் கொடுப்பதில்லை எனக் குற்றஞ்சொல்கிறான் '
'பேசிப் பார்த்தீரா ' எனக் கேட்டார் சயங்கொண்ட நாதர்.
'ஆ பேசினேனே. கேட்க மாட்டேன் என்கிறான் '
'அப்படி என்றால் ஒன்று செய்யும். மறுபடியும் போம். எப்படியாவது அவன் வாயை அடைக்கப் பாரும்... ஆமாம்.. அவனுக்கு உறவு என்று சொல்ல அம்மா.. அப்பா ? '
'அப்பா பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த போரில் மடிந்து விட்டார் பிரபோ. அன்னையும் தவறி விட்டாள். இருப்பது ஒரே ஒரு பாட்டி '
'சரி.சரி. உண்டானதைச் செய்யும்.. விரைவாக ' என்றார் சயங்கொண்ட நாதர்.
*****************
-
28th August 2012 12:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks