-
30th May 2013, 08:51 AM
#11
Junior Member
Platinum Hubber
நன்றி ; புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜியார் இணைய தளம்
1963 – ஆம் ஆண்டு
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு 1963 – ஆம் ஆண்டாகும். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறத்தாழ அனைத்துமே வெற்றிகளை ஈட்டிய படங்களே எனலாம்.
இந்த ஒன்பது படங்களில், எட்டுப் படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றிருந்தன என்றால் நம் இதயங்களே வியப்பில் விம்முகின்றன அல்லவா!
அவரது பாடல் இடம்பெறாது வெளிவந்த ஒரே படம் மேகலா பிச்சர்ஸ் சார்பில், கலைஞர் கருணாநிதி தயாரித்து, அவரே வசனம் எழுதி, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சித்தலைவன்’ படம் மட்டுமேயாகும்.
இனி 1963 – ஆம் ஆண்டு, முதன்முதலில் 11.1.63 அன்று வெளியான, ‘பணத்தோட்டம்’ படத்தில் கவிஞர் எழுதிய மகத்தான பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக:
வாருங்கள்! சுவைமிகுந்த காதல் பாடலில் எம்.ஜி.ஆரின் பெருமையைப் பேசவைக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இன்பம் பொங்கும் பாடலைப் பார்ப்போம்!.
ஆண்: “பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி மொழியா?
கோயில் கொண்ட சிலையா?
கொத்து மலர்க்கொடியா?”
பாடலின் தொடக்கமே, இன்பவாரியில் நம்மை நீந்தச் செய்கிறதல்லவா? அடுத்த வரிகளை வாசியுங்களேன்!
பெண்: “பாடுவது கவியா? இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”
வாசித்தீர்களா? இனி யோசியுங்கள்!
பாடுவது யாராம் கவியா?
ஆமாம்! கவித்துவத்தை உணர்ந்த இரசனைக்குரிய சீமான்தான்!
அவர் யார்? பாரிவள்ளல் மகனா?
அவர்தான் கலியுகப் பாரிவள்ளல் என்று பெயர் பெற்ற பெருமகனார் ஆயிற்றே!
அவர் என்ன சேரனுக்கு உறவா?
ஒரு காலத்தில் முடியுடை மூவேந்தர்களில் முதலிடம் பெற்ற சேரமன்னர்கள் ஆண்ட, வாழ்ந்த பூமியிலே பிறப்பெடுத்த புண்ணியன்தானே!
அவர் என்ன செந்தமிழர் நிலவா?
செந்தமிழர் உள்ளங்களில் எல்லாம் உறவாடி, நித்த நித்தம் நீந்தி வரும் வெள்ளிநிலாவாய்த் திகழ்ந்தவர், திகழ்பவர் அல்லவா எம்.ஜி.ஆர்!
இப்படியெல்லாம் கவிமகனார் கண்ணதாசன் எழுதிய காதல் கவிதையிலேயே எம்.ஜி.ஆர். எனும் ஏந்தலின் பெருமை பேசப்பட்டுள்ளதை அறியும்போது, நமது உள்ளங்களில் உவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன அல்லவா?
இன்னும்:
“வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
கொல்லாமல் கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் கவலன்தானா?
மன்னாதிமன்னர்கள் கூடும் மாளிகையா? – உள்ளம்
வண்டாட்டம் மாதர்க்ள கூடும் மண்டபமா?”
இப்படிப் பெண்மையைப் பாடவைத்து, பார்போற்றும் நாயகனின் புகழை ஏற்றிப் போற்றும் விதமே விந்தைதான்!
‘வில்லேந்தும் காவலனாம்!
கோட்டை கட்டும் காவலனாம்!
அவர் உள்ளமோ!
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையாம்!
மாதர்கள் கூடும் மண்டபமாம்!’
இவையெல்லாம் உண்மைதானே!
வீரத்திருமகனாய், கோட்டையிலே கொலுவிருந்து ஆண்ட காவலனாய்; நாட்டிலுள்ள அரசியல் விற்பன்னர்கள், அரசு அதிகாரிகள், மிட்டாமிராசுதாரர்கள் உள்ளிட்ட மன்னாதி மன்னர்களும் கூடிய இல்லம் அவர் இல்லம்! அவர்களைக் குடிவைத்ததோ அவரது உள்ளம்!
அவரது உள்ளம் கோடானகோடி மாதர்களாம் தாய்க்குலத்தையும் மகிழ்வித்த உள்ளந்தானே! இவையனைத்தும் உயர்ந்த உண்மைகள்தானே!
தவழ்ந்துவரும் தத்துவங்கள்!
கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?
தொகையறா:
“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”
பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?
மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!
இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.
இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?
அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!
“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”
சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?
மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….
சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.
ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!
இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!
இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!
பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!
“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”
மீதியைப் பார்த்தோம்!
ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!
மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!
எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.
நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?
இனி என்ன?
‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?
அதையும் பார்த்து விடுவோம்!
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”
‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!
அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!
எப்படி?
“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”
இப்படித்தான்….!
உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.
இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.
‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.
தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.
இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.
Last edited by esvee; 30th May 2013 at 08:55 AM.
-
30th May 2013 08:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks