
Originally Posted by
esvee
தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.
எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.
அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.
இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.
ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.
அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்
காட்டும் பொய்யே சொல்லாதது...
எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.
***
Bookmarks