-
4th October 2013, 05:32 PM
#11
Senior Member
Senior Hubber
******************
தேவிகா....
**************
அது ப்ளஸ்டூ முடித்த சமயமா, கல்லூரி ஆரம்பித்த பொழுதா என எனக்குச் சரியாக நினைவிலில்லை. ஒன்று மட்டும் நினைவிருக்கிறது. பழைய- பார்க்காமல் விட்டுப் போன சிவாஜி படங்களைத் தேடிப் பார்த்த பருவமது.
• *
எங்களூர் (மதுரை) சாந்தி தியேட்டரில் வெள்ளி வெள்ளியன்று படம் மாற்றுவார்கள். சிவாஜி படமென்றால்
சனிக்கிழமை மாலைக்காட்சி நான் ஆஜர்.
• *
அப்படி சாந்தி தியேட்டரில் வராத ஒரு படம் செல்லூர் போத்திராஜாவில் ஓடுவதைக் கண்டேன். அதைப் பார்க்க
வேண்டுமென்று வழி கேட்டால் இப்படியே 25 ம் நம்பர் பஸ் -சென்ட் ரல் - குலமங்கலமோ ஏதோ போட்டுச் செல்லும்
அதில் போய்ச் செல்லூரில்(வைகையாற்றின் அக்கரையில்) இறங்கு என்றான் வக்கீலாத்து ராதா. சரி என்று ஒரு சனி
மாலை ஏறிச் சென்றால் அது ஒரு சின்னத் தியேட்டர்.. கைலி,வேட்டி, சேலை என்று கிராம பாஷையுடன் மனிதர்கள்
வர பேண்ட் போட்ட எனக்கு ராஜ மரியாதை. 80 பைசாவுக்கு மாடியில் டிக்கட். குஷியுடன் படம் பார்க்க ஆரம்பிக்க
அந்தக் கதானாயகி அறிமுகமாகும் காட்சியிலும் பின்னர் கண்டிப்புக்கார புரபஸர் சிவாஜி மழையில் அவளை
அணைக்க..குறும்புடன் அவள் இடி மழை புரபஸர் எனச் சொல்ல- ஆமாம் இடியும் மழையும் வானத்தின் குழந்தைகள் என்று
டால்ஸ்டாய் சொல்லியிருக்கிறார் என சிவாஜி வழிய- அந்த நாயகி என் மனதில் குட்டிச் சுவரில் சினிமாப்
படப் போஸ்டர் மாதிரி பச்சக் என்று ஒட்டிக் கொண்டாள்..
• *
அது தேவிகா.. படம்.. ஆண்டவன் கட்டளை..
இந்த பிரம்மா இருக்கிறாரில்லையா.. சரஸ்வதி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்த தருணத்தில் அவளைப்
(தேவிகாவை) படைத்திருப்பார் போல.. முகம் முழுக்க குறும்பு. ஆப்பிளை நன்றாக அரைத்து அதனுடன் இட்லி
மாவையும் கலந்து இட்லித் தட்டில் எடுத்துவைத்த பொசு பொசு இட்லி மாதிரி கன்னங்கள். தள்ளுவண்டியில் வரும்
காய்கறிக் காரனிடம் பேரம் பேசி இரண்டு ரூபாய்க்கு வாங்கும் வாழைத் தண்டு மாதிரி முற்றலாக இல்லாமல்
நிஜமாகவே இளம் வாழைத்தண்டாட்டம் கைகள்.. மற்றும் என்று ஆரம்பித்தால் ராயர் கிளப்பில் மெம்பர்ஷிப் கான்ஸல்
செய்து விடுவார்கள்.
• *
1966 ல் பொம்மை -யின் முதல் இஷ்யூவில் அட்டைப் படமாக வந்தவராம் அவர். (அப்போது கைக்குழந்தையான எனக்கு
அம்மா நிலாச் சோறு ஊட்டியிருப்பார் என நினைக்கிறேன்)
• *
சிவாஜியுடன் நடித்த படங்களில் மட்டும் கொஞ்சம் நெருக்க்கம்.. மற்ற படங்களில் அப்படிக் கிடையாது..
எம்ஜிஆருடன் ஒரே ஒரு படம்..ஆனந்த ஜோதி..நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..மறக்க
முடியாத பாடல்..
• *
ஆண்டவன் கட்டளை பார்த்த பிறகு தேவிகா படங்களாகத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.
*
மேற்கண்ட படத்தில் 'ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன், நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய், என்ன
தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய், உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்' என்று பாடிய போது அவர் முகத்தில்
பிரதிபலித்த குறும்பு, நீல வானத்தில் 'மலரில்லாத தோட்டமா கனியில்லாத வாழையா மனதில் மட்டும்
அன்னையா மகனே நீ இல்லையா..' என்ற சோக நடிப்பு,அதே படத்தில் 'வருடந்தோறும் வசந்தம் தேடி வருவோம்
இங்கே, வாடைக் காற்றில் மூடும் பனியை ரசிப்போம் இங்கே' என்ற உற்சாகம், கொழுக் மொழுக்கென்ற உடம்பு
முழுவதும் முழுத் திரையில் தெரிய 'குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்' என்று கர்ணனில் பாடுவதைப்
பார்த்த போது சிரிப்பு, திருவிளையாடலில் box officeற்காக பாண்டிய ராணியாக 'பொதிகைமலை
உச்சியிலே புறப்படும் தென்றல்' எனப் பாடிய வண்ணம் நீராடிய போது கண்களில் காட்டிய நாணம் +ஆசை,
சாந்தியில் 'நூலிடை மீதொரு மேகலை ஆட மாலைக் கலைகள் ஆசையில் வாடும், ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட - காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது.. நிம்மதி
ஏது ' என்று காதல் வயப்பட்டுப் பாடுவதைப் பார்த்த போது போன நிம்மதி..ம்ம் சொல்லிக் கொண்டே
போகலாம்.
**
வாழ்க்கைப் படகில் 'மன்னவனே ஆனாலும் வாள்பிளந்து அறுத்தாலும் பெண்மனதை நீ அடைய முடியாது' என்று விழிகளில்
காண்பித்த சீற்றம்,ஜெமினியுடன் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே' எனும் போது
கொள்ளும் வெட்கம், 'என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது.. என் அழகு செய்த பாவம் உன்னைக்
கண்டது..என் கண்கள் செய்த பாவம்..' என்ற போது காண்பித்த சோகம் எனச் சேர்த்துக் கொள்ளலாம்..
• *
கண்ணதாசன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ' வாழ்க்கையில் ஜாக்கிரதையாக இருக்கத் தெரியாதவர்
தேவிகா (என்ன என எனக்குத் தெரியாது). நான் திரைப்படங்கள் எடுத்த போது நன்கு ஒத்துழைப்புக் கொடுத்த
நடிகை அவர்.. என்னை எப்போது பார்த்தாலும் அவர் பாடும் பாட்டு'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்
பெருமானே.. உனைப் புரிந்து கொண்டாள்.. ஒன்று தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே'' என்று
எழுதியிருந்தார் (குமுதத்தில் வெளியான கட்டுரை என நினவு).
• *
உண்மையான ரசிகனுக்கு நடிக நடிகையரின் பெர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு விருப்பம் கிடையாது எனச்
சொல்லலாம். அவனுக்குத் தேவை நடிப்பு + அழகு. பிற்காலத்தில் அவர் அண்ணி, அம்மா என நடித்திருந்த படங்களைப்
பார்த்த போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது.
• *
எனக்குக் கல்யாணமான புதிதில் வேறு படம் கிடைக்காமல் வீடியோவில் கரகாட்டக் காரன் பார்த்துக் கொண்டிருந்த
போது - இந்த நடிகையின் தாய் தான் எனது க.க' என இலக்கியத் தனமாக உளறி விட என் அகம் கொடுத்த
எக்ஸ்பிரஷன் இருக்கிறதே.. மறக்கவே முடியாது.(கூடவே இலவச இணைப்பாக ஒரு கிள்ளும் கிடைத்தது வேறு
விஷயம்.)
• *
இப்போதும் கூட தேவிகாவின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் - என் வீட்டில் 'யோவ்.. நாக்கை உள்ளே
இழுத்துக்கய்யா.. ஜொள்ளுவிடுவது தாங்கலை' எனப் பொறாமைக் குரல் வரும்.
•
• *
Last edited by chinnakkannan; 4th October 2013 at 05:42 PM.
-
4th October 2013 05:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks