நடிகர் திலகமும் நடிப்பிலக்கணமும்
சிரஞ்சீவி பணி ஒய்வுக் காட்சி
நடிகர் திலகத்தின் படங்களில் ஒரே மாதிரியான சூழலில் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பாத்திரப் படைப்பு இவற்றைப் பொறுத்து அவருடைய நடிப்பில் வேறுபாடுகள் காணப் படும்., அப்படியான ஒரு சூழல் தான் பணி ஓய்வு. நடிகர் திலகம் திரைப்படங்களில், வியட்நாம் வீடு திரைப்பட பணி ஓய்வு காட்சி உலகப் பிரசித்தம். அதைப் பற்றி பலவாறு விவாதிக்கப் பட்டுள்ளது. அதே பணி ஓய்வுக் காட்சியில் உலகப் பெரு நடிகரின் நடிப்பில் மற்றோர் பரிமாணத்தை இப்போது காண உள்ளோம்.
டேவிட் சிரஞ்சீவி .. TOPAZ எனப்படும் கப்பல் துப்புரவுத் தொழிலாளி. தன் தொழிலை உயிருக்கும் மேலாக மதிப்பவன். தான் உயிருடன் இருக்கும் வரையில் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என விரும்புபவன். ஆங்கிலோ இந்தியன். தன்னுடைய பணியில் மூழ்கி விட்டால் காலம் நேரம், நாள் தேதி எதையும் பார்க்காமல் பணியாற்றுவான். தன்னுடைய வயதையே மறந்து விடுவான். உடல் முதுமையடைந்தாலும் மனம் முதுமையடையாது.
அப்படி ஒரு நாள் பணியாற்றும் போது கப்பல் கேப்டனிடமிருந்து அழைப்பு. அவருடைய உழைப்பில் தங்கள் மனதைப் பறி கொடுத்தாலும் கடமை நிமித்தம் அவரை அழைத்து அவருடைய ஓய்வு அறிவிப்பை சொல்ல வேண்டும். காரணம் முதல் நாள் அவர் ஓய்வு பெற்று விட்டதை அறியாமல் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அப்படி அழைக்கப் பட்ட பின் அந்த கேப்டன் அவரிடம் ஓய்வைப் பற்றி சொல்வதாக்க் காட்சி யமைப்பு.. கேப்டனுடன் சக மாலுமிகளும் கப்பல் டாக்டரும் இருக்கிறார்கள்.
டாக்டர் மெல்ல மெல்ல உரையாடலைத் துவக்கி அவருடைய சேவையைப் பாராட்டி பின்னர் ஒரு வழியாக அவருடைய ஓய்வு அறிவிப்பினைக் கூறுகிறார். அதைக் கேட்டதும் சிரஞ்சீவி எப்படி பாதிக்கப் படுகிறான் அதற்கு அவனுடைய Reaction என்ன இது தான் இந்த காட்சியின் Concept.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும். தன் உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டமாட்டார். அப்படி வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு பக்குவம் இருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பினைத் தந்துள்ளார். இதை காட்சி வாரியாக இங்கே காணலாம்.
டாக்டராக வி.கோபால கிருஷ்ணனும், கேப்டனாக ஜெய்கணேஷும் மிகச் சிறப்பாக நடித்துள்ளது பாராட்டத் தக்கதாகும். அதுவும் ஓய்வைப் பற்றிய விஷயத்தை ஜெய் கணேஷ் தயங்கித் தயங்கி சொல்வது அவருடைய கேரக்டரின் மேல் இருக்கும் மதிப்பினை பல படி உயர்த்துகிறது.
இப்போது காட்சியைப் பார்ப்போம்.
எடுத்த வுடனேயே அறைக்குள் சிரஞ்சீவி நுழையும் போது அவருடைய நடையைக் கவனியுங்கள். எப்போதும் போல் பணியில் இருக்கும் போது சகஜமாக பழகும் தோரணையில் உரிமையோடு காலை வணக்கம் சொல்வதைப் பாருங்கள்.
Good Morning all of you என்று சொல்லும் போதே அந்த உரிமையைத் தன் குரலில் வெளிப்படுத்தி விடுவார்.
கேப்டனும் மற்றவர்களும் பதில் வணக்கம் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவி.. “கூப்பிடனுப்பினீர்களாமே.”
கேப்டன்.. “நாங்கள் கூப்பிட்டது டோபாஸ் சிரஞ்சீவியை அல்ல, அங்கிள் சிரஞ்சீவியை”
சிரஞ்சீவி... புரியாமல் விழிக்கும் பார்வை...
கேப்டன்.. “இன்னுமா புரியலே.. ஐ வாண்ட் டு சீ அங்கிள் டேவிட் சிரஞ்சீவி”
... இந்த இடத்தில் கேப்டன் மறைமுகமாக தன் கருத்தை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.
சிரஞ்சீவி.. கேப்டனின் உள் மனதில் இருப்பது தெரியாமல், அவர் உடை மாற்றிக் கொண்டு வரச் சொல்கிறார் என்பதாகப் புரிந்து கொண்டு Now I got it எனச் சொல்லி புன் முறுவல் பூக்கிறார் Just a minute please என்று கூறி விட்டு வெளியேறுகிறார். இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் கவனியுங்கள். கேப்டன் உள் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் யதார்த்தமான அர்த்தம் புரிந்து கொண்டு சிரிப்பதை.
கவனியுங்கள், உடை மாற்றிக் கொண்டு சாதாரண உடையில் அறைக்குள் வரும் போதே அவருடைய நடை உடை பாவனையில் ஒரு முதியவரின் ஆளுமை வெளிப்படுவதை..
இந்த இடத்தில் சிரஞ்சீவியை ஒரு பயணியைப் போல், வயதில் மூத்த ஒருவருக்கு தரும் மரியாதையைத் தரும் வகையில் எழுந்து நிற்கிறார்கள். Good Morning Uncle என காலை வணக்கம் செய்கிறார்கள். சிரஞ்சீவி அமருங்கள் எனச் சொல்லும் போது, நீங்கள் உட்கார்ந்தால் தான் நாங்கள் உட்காருவோம் எனச் சொல்கிறார்கள்.
இப்போது நடிகர் திலகம் அமரும் தோரணையைப் பாருங்கள். அதில் தன்னுடைய டோபாஸ் உத்தியோகத்தை மறக்காமல் அவர்களைத் தன் உயரதிகாரிகளாகவே தொடர்ந்து பாவித்து கை கட்டிக் கொண்டு அமர்வதை.
கேப்டன்... “நீங்கள் இந்த கப்பலுக்கு செஞ்ச சேவைகளெல்லாம் எண்ணிப் பார்க்கிறோம். அது, ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு செய்கிற பாசம் மிகுந்த காரியங்கள் மாதிரி எங்க கண்ணு முன்னாடியே தெரியுது.”
சிரஞ்சீவி... அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்..
இந்த புன்னகையைப் பாருங்கள்...
கேப்டன்.. “ஒரு முறை புயலில் இந்த கப்பல் சிக்கிக் கிட்டப்போ உங்க புத்தி கூர்மையாலே அதைக் காப்பாத்தினீங்களே. அந்த இன்சிடெண்ட் இன்னும் ரிகார்ட்ஸ்லே எவர்கிரீனா இருக்கு...”
இந்த இடத்தில் கேப்டனின் முக பாவத்தில் தான் சொல்ல வந்த்தை சொல்லப் போகிறோம் என்கிற முஸ்தீபு ஆரம்பிக்கிறது.
ஜெய்கணேஷின் சிறப்பான நடிப்பு இக்காட்சிக்கு சிறப்பு.
சிரஞ்சீவி.. ஏதும் பேசாமல், ஏதோ என்னால் ஆனதை செய்ய முடிந்த்தே என்கிற சந்தோஷம் என்பதைத் தன் முகத்தின் புன்னகையால் உணர்த்துகிறார்.
இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள்..
கேப்டன்.. “அங்கிள்,, இந்த கப்பல்லே எந்த இடத்திலே என்ன கோளாறு வந்தாலும் உடனே நீங்கள் வந்து சரி பண்ணிடுவீங்க. டோடலி, யூ ஆர் ஏன் ஆல்ரவுண்டர். “
சிரஞ்சீவி.. இதற்கும் அடக்கமான புன்னகை. பதில் ஏதுமில்லை.
இங்கும் நடிகர் திலகத்தின் புன்னகையில் சற்றே வித்தியாசத்தைப் பாருங்கள்.
கேப்டன்.. சற்றே உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ஒரு கேப்டன் என்கிற தொனியைத் துவக்குகிறார். “அங்கிள் இந்த கப்பலுக்கு நீங்க செய்திருக்கிற காரியங்களெல்லாம் வெறும் காரியங்களல்ல.. காவியங்கள்... இருந்தாலும் யூ ஆர் வெரி வெரி சிம்பிள் அண்ட் ஹம்பிள்..”
சிரஞ்சீவி... கேப்டன் வெட்கமும் கூச்சமும் மேலிட ஏதோ சொல்ல வருகிறார்.
டாக்டர் மறித்து... “இன்னும் உங்களைப் பத்தி சொல்ல வேண்டியது நெறைய இருக்கு...”
சிரஞ்சீவி... சிரிக்கிறார்..
கேப்டன்..... “அங்கிள்... நீங்க விரும்பியிருந்தா இதை விட பெரிய நிலைக்கே போயிருக்கலாம்.. ஆனா துப்புரவுத் தொழிலையே தொடர்ந்து செய்து அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையே கொடுத்துட்டீங்க..”
சிரஞ்சீவி.. ஏதோ விஷயம் இருப்பதை இப்போது தான் உணர்கிறார். தன் மனதில் ஏற்படும் சந்தேகத்தைக் கேட்க விழைகிறார். “கேப்டன்... நீங்க பேசிட்டீங்க.. கொஞ்சம் நான் பேசலாமா...”
இதைச் சொல்லும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். இந்த வார்த்தைகளை அப்படியே உணர்வாய் பிரதிபலிப்பதை..
கேப்டன் ... “Of course...”
சிரஞ்சீவி ... சிரிக்கிறார்... “நீங்க என்னைப் பத்தி நெறைய சொல்லிட்டீங்க.. நெறையைத் தான் சொன்னீங்களே தவிர குறையை சொல்ல்லே. அதையும் சொல்லியிருந்தீங்கன்னா என்னை நான் திருத்திக்கிறதுக்கு கொஞ்சம் வசதியா இருந்திருக்கும். அவ்வளவு தான்... வெல்.. இப்போ எதுக்காக இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்க..”
ஓய்வு அறிவிப்பினைக் கேட்ட வுடன் தன்னுடைய மனத் துடிப்பினையும் ரீ.யேக்ஷனையும் அங்கே வெளிக் காட்ட விருப்பமில்லாமல் வெளியில் வந்து விடுகிறார். பார்ப்பவர்கள் எல்லோரும் ஏதோ விழுந்து புரண்டு காட்சியை டிராமா ஆக்கி விடுவார் என்று நினைக்கும் போது அதைப் பொய்யாக்கி அமைதியாக ஆனால் உடல் மற்றும் மன வலியை மட்டும் வெளிக்காட்டுகிறார். மன சாட்சி அவருக்குள் புகுந்து அவருடைய சேவை மனப்பான்மையை எடுத்துச் சொல்லி சகஜ நிலைமைக்கு மாற்றுகிறது. இப்போது அறைக்குத் திரும்ப எத்தனிக்கும் போது அவருடைய தோரணையைப் பாருங்கள்.
அவருடைய மனசாட்சி சொல்லும் ஒரு வரி... நினைத்தாலே புல்லரிக்க வைக்கிறது..
“கண்ணீரால் கரைந்து போகும் சாதாரண சிரஞ்சீவியில்லை நீ.. காலத்தை வென்று நிற்கும் மாபெரும் சிரஞ்சீவி... கேரி ஆன் மேன். கேரி ஆன் பெல்லோ.. கேரி ஆன்...”
சிரஞ்சீவி.. யூ ஆர் கரெக்ட்.. என்று ஒரு விரலை உயர்த்தி சொல்லி சமாதான மடைந்து சிரிக்கிறார்.. ஓ வாட் ஏ foold ஐ எம்...
யாருக்காவும் காத்திருக்காமல் அலைகள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வது போல் சிரஞ்சீவியும் தொடர்ந்து தன் சேவையாற்ற செல்வதை சிம்பாலிக்காக காட்டுவது பாராட்டுக்குரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இங்கே பாராட்டைப் பெறுகிறார்கள்.
அறைக்குள் நுழைகிறார் சிரஞ்சீவி. தன்னுடைய லட்சியம் தான் வளர்ந்த இந்த கப்பலிலேயே கடைநிலை ஊழியனாகவே சாக வேண்டும் என்பதாக கூறி சென்னை சென்றடையும் வரை இக்கப்பலில் துப்புரவுத் தொழிலாளியாகவே பணி புரிய அனுமதி கோருகிறார். கேப்டன் அனுமதித்து அவருக்கு கப்பலில் வி.ஐ.பி. அந்தஸ்துடன் மரியாதை தரச் சொல்லி மேலிட உத்தரவையும் கூறுவதுடன் காட்சி முடிகிறது.
……..
இந்தக் காட்சியில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். உன்னிப்பாக்க் கவனித்தால் புரியும். குறிப்பாக புதியதாக நடிக்க வருபவர்களுக்கு இந்த காட்சியும் விளக்கமும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதன் முதலில் காமிரா முன் நடிக்க வருபவர்களுக்கு இப்படி ஒரு காட்சியை விவரிக்கும் போது எந்த விதமான ரியாக்ஷன் தர வேண்டும் என புரியாமல் விழிப்பார்கள். அல்லது ஹாலிவுட் சினிமாக்களைப் போல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஸ்டட்டில் நடிப்பு என்ற சாக்கில் முகத்தை கான்க்ரீட் சுவரைப் போல் வைத்திருப்பார்கள்.
அப்படி நடிக்க வரும் புதியவர்களுக்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு இலக்கணப் புத்தகமாக விளங்குவது சிறப்பு. இது வெறும் பேச்சு வழக்கில் கூறப் படுவதல்ல. உண்மையான கூற்றாகும். ஒவ்வொரு காட்சிக்கும் அவருடைய நடிப்பு எப்படி இலக்கணமாக விளங்குகிறது என்பதை நாம் இங்கே கோபால் சாரின் பதிவுகளின் மூலம் தெளிவாக ஏற்கெனவே அறிந்து வருகிறோம். அதனுடைய தொடர்ச்சியாக துணைப் பதிவுகளாக என்னுடைய பதிவுகளைத் தர விரும்புகிறேன். அதில் ஒன்றே இந்த சிரஞ்சீவித்துவமான காட்சி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்பிலக்கணம், நடிப்பு அகராதி என்பதை இந்தத் திரியின் மூலம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
சிரஞ்சீவி
தயாரிப்பு குருராம் மூவீஸ்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
ஒளிப்பதிவு – எம்.சி.சேகர்
கதை வசனம் – எஸ்.ஜெகதீசன்
படத்தொகுப்பு, இயக்கம் – கே.ஷங்கர்
வெளியான நாள் 17.02.1984
Bookmarks