-
23rd August 2014, 11:06 AM
#21
Senior Member
Senior Hubber
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
14 ரகசியம் இல்லாத ரகசியம்..!.
*
கணப் பொழுது என்பது என்ன.. ஆயிரம் தாமரை இதழ்களை ஒன்றன் மேலொன்றாக அடுக்கி அதனுள் ஒரு மெல்லிய ஊசியினை விட்டால் ஓரிதழுக்கும் அடுத்த இதழுக்கும் அந்த ஊசி செல்லும் நேரமே அது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். கணப்பொழுதில் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் எத்தனை..அது எப்படி நிகழும் எங்கு நிகழும் என யாராலும் சொல்ல முடியாது..அது கால தேவனின் விளையாட்டு.. அப்போது நிகழ்ந்ததும்அது தானோ என்னவோ..வெகு நாட்களாக மனதுக்கினிய காதலனைப் பிரிந்திருந்த துயரம் ,அந்தக் காதலன் தன்னை மறந்து விட்டானோ என நினைத்திருந்ததில் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த துக்கம், அவனை எதிர்பாராத விதமாகக் கண்டதில் ஏற்பட்ட மனச் சிலிர்ப்பு, பருவமடைந்த உடலில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்கள் இன்ன பிறவால் உந்தப் பட்டு விரைவாய் ராஜாதித்தரை அடைந்து அணைத்து கணப் பொழுதில் அவரிதழ்களில் முத்திட்டு மீண்ட அந்த ராஷ்டிர கூட மங்கையானவள் தளர்ந்து ஒரு கையால் புன்னை மரத்தைப் பிடித்துக் கொண்டும் மறுகையால் கன்னத்தில் தாடி மீசை குத்தியதால் ஏற்பட்ட மென்வலியால் சிறிது துடைத்த படி நின்று கொண்டாள்.. அவளது உடல் நங்கென்று அடிக்கப் படும் கோவில் மணி முதலில் வேகமாகவும் பின்னர் சிச்சிறிதாகவும் அதிர்வது போல மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. அவளது.கண்ணோரம் கொண்ட நீரும் மெல்லிய ஒளியில் பளபளத்தது..
*
ராஜாதித்யருக்கும் அதே கணப் பொழுது தான்..ஆனால் அவர் ஆண்மகன்.. உரங்கொண்ட தோள்கள்..திடங்கொண்ட மனது..தீர்க்கமான கண்கள்.. இருப்பினும் அவரும் எதிர்பாராமல் கிடைத்த பரிசினில் மயங்கி விட்டார்.. பிற்காலப் புலவரொருவர் சொன்னது போல,
முத்தமிட வாய்வழி மோகம் தலைக்கேறி
பித்தம் பெருகிடும் பார்..
என அவருக்கும் ஆகி விட மெல்லச் சென்று உடல் நடுங்கிக் கொண்டிருந்த நங்கையின் அனிச்ச மலரை விட மென்மையான தோளின் மீது சற்றே ஸ்பரிசித்தார். “ரேணுகா” எனச் சொல்லவும் செய்ய அவள் மெல்ல அவர் மீது சாய்ந்தாள்..பின்னர்….
*
விழிகள் நோக்குகையில் வாய்ச் சொற்கள் பலனற்றதாய்த் தான் போய் விடுகின்றன..இருப்பினும் சிறிது நேரம் கழித்தே “நேரம் கூடிவிட்டதே என நினைத்த ராஜாதித்யர் “ரேணுகா.. நாளைக் காலை கோவிலுக்கு நான் வருவேன்..உன்னைச் சந்திக்க இயலுமா..அல்லது எங்கு சந்திப்பது.. நிறையப் பேசவேண்டும்” என வினவ அவள் முகத்தில் வெட்கத்துடன் கூடிய குறு நகை விரிந்தது..”அதற்குள்ளாகவா போகவேண்டும்” எனக் கேள்வியும் வர, மறுபடி ஓசை வராமல் கெக்கெக்கெக் என சிரித்தபடி மாறன் மலர்க்கணைகளை எய்ய காதல் நாடகம் தொடர்ந்தது ரகசியமாய் அந்த மரத்தடியில்.. அப்படித் தான் நினைத்தனர் இருவரும்..
*
ஆனால் வாழ்க்கையில் எதுவும் ரகசியம் கிடையாது.. நாம் செய்யும் செயல்களை அஷ்டதிக்கு பாலகர்கள், நட்சத்திரங்கள், மரங்கள் என நிறைய சாட்சிகள் பார்த்துக் கொண்டு தானிருப்பர் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்.. அது போலவே சரித்திர நாடகங்களில் வருவது போல அந்தக் காதலரிருவரும் தனிமையில் இருப்பதை மரத்தின் பின்னிருந்து இரு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன!
*
(தொடரும்)
-
23rd August 2014 11:06 AM
# ADS
Circuit advertisement
-
23rd August 2014, 04:27 PM
#22
Senior Member
Platinum Hubber
நடத்துங்க! ம்ம்ம்..சல்லாபம்!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd August 2014, 05:20 PM
#23
Senior Member
Senior Hubber
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
15 வெட்கம் பயம் வியப்பு!.
*
வயிறு நிறையப் பசிக்கிறது..என்ன செய்கிறோம் பிடித்த உணவை ஒரு பிடி பிடிக்கிறோம்… இட்லியாக இருந்தால் ஒரு சின்னக் கணக்கிற்காக பத்து என வைத்துக் கொள்ளலாம்..அதற்கு மேலென்றால் கூட இரண்டு சாப்பிடலாம்..மேலும் சாப்பிட்டால் உள்சென்றது வெளிவந்து விடும்..எனில் எதற்கும் அளவு இருக்கிறது.. நன்றாகப் பாலில் வெல்லம் அரிசி இட்டுக் நன்குகொதிக்க வைக்கப் பட்டு சுத்தமான நறு நெய்யினால் வறுக்கப் பட்ட முந்திரிப் பருப்புகள் இடப்பட்டு நன்கு கிளறப் பட்ட சர்க்கரைப் பொங்கல் தான்..ஆனால் இரண்டு கிண்ணத்திற்கு மேல் உண்ண இயலாது.. திகட்டி விடும்..
*
ஆனால் மெளனம்+உணர்ச்சி இவைகளால் உந்தப் பட்டிருந்த காதலர்களுக்கு இது தெரியாமல் நேரம் நீளத் தான் செய்தது..இத்தனைக்கும் எல்லை மீறிய எதையும் அவர்கள் செய்து விடவில்லை..இது தவறு என்று தோன்றியதாலோ என்னவோ அங்கு வீசிய தென்றல் சற்றே கொஞ்சம் வேகமெடுக்க புன்னை மரத்துக் கிளியிலிருந்த சில பூக்கள் ரேணுகாவின் மீது உதிர்ந்தன..சிவந்து விட்ட கண்களைத் திறந்த ரேணுகா சற்றே ராஜாதித்யரை விலக்கி கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொண்டு விலகி உட்கார்ந்தாள்..
*
” நாளை உங்களைக் கோவிலில் அல்லது வழியில் எப்படியாவது சந்திக்கப் பார்க்கிறேன்” என மெல்லிய குரலில் சொல்ல ராஜாதித்யர் அவளது கரம் பற்றி சிறு முத்தம் கொடுத்து எழுந்து நந்தவன வாயிலை நோக்கி நடந்தார். அதுவரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த கண்களுக்குச் சொந்தக் காரன் சற்றே வெளியில் வந்தான்..
*
காதலில் சேர்ந்திருப்பதும் வேதனை, பிரிவென்பதும் வேதனை எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள் ரேணுகா.. கன்றிப் போயிருந்த தோள்கள், கன்னங்கள் என மெலிதாகத் தடவிக் கொள்கையில் அவள் கண்களில் வெட்கம் குடிகொண்டிருந்தது.. சற்றே திரும்பி தலைகுனிந்து நடக்கையில் அந்த நபரிடம் சற்றே மோதிக் கொண்டு நிமிர்ந்து பார்த்த அவள் கண்களில் ஆச்சரியமும் பயமும் வெட்கத்தை விலக்கிக் குடியேறின..
(தொடரும்)
-
24th August 2014, 07:45 AM
#24
Senior Member
Platinum Hubber
அதெப்படி பத்திக்கு பத்தி சஸ்பென்ஸ்???
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
24th August 2014, 10:22 PM
#25
Senior Member
Senior Hubber
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
16 மாமனும் மைத்துனியும்.
*
கறுத்த உடல்..கொஞ்சம் நீண்டு கழுத்தளவு தொங்கிக் கொண்டிருந்த குழல்.. சீற்றம் மிகக் கொண்ட கண்கள்..கன்னத்தில் ஒற்றைக் கோடாய் வாட் தழும்பால் கொஞ்சம் கொடூரம் பறை சாற்றிய முகம்..ஓங்கு தாங்காய் இருந்து நீண்டும் பரந்துமிருந்த உடல் வாகு..என்ன பானை வயிறு தான் இல்லை..இருந்திருந்தால் கைலாயத்தில் சிவபிரானைக் காத்திடும் பூதகணங்களில் ஒன்று ரேணுகா தேவியின் மேல் மோதியவன் என்று கண்டவர்கள் நம்பியிருப்பார்கள்..
*
தன் மீது மோதிய ரேணுகாவைத் தடுத்தாட் கொண்டு கொஞ்சம் கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தான் அவன்..”என்ன ரேணுகா..உனது அரசியல் காதலன் என்ன சொல்லுகிறான்” என.. எதிர்பாராவிதமாய் மோதினாள் எனினும் தான் மோதியது தனது சகோதரி ரேவா தேவியின் கணவர் பூதுகனே என் உணர்ந்ததால் சற்றே சுதாரித்தாலும், அவர் தன்னையும் தன் காதலனையும் பார்த்திருப்பாரோ எனப்பயந்திருந்த ரேணுகா அவரது கேள்வி புரியவே கொஞ்சம் அலட்சியத்தின் வசப்பட்டாள் தான்.. கொஞ்சம் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், “மாமா..நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றாள்
*
சற்றே உரக்க நகைத்தான் பூதுகன். “ நீ ஒன்றும் சமாளிக்க வேண்டாம்.. நீ அவனைச் சந்தித்ததை நான் பார்த்தேன்.. பின் ஏகாந்தத்தில் இருக்கும் உங்களைத் தொந்தரவு செய்வது தவறென்று இந்த மரத்தின் பின்னாலேயே சற்றே கண்ணயர்ந்து விடப் பார்த்தேன்.. நல்லவேளை..விரைவில் அவன் விலகி ச் சென்று விட்டான்..ம்ம்.. என்ன..உன்னை மணம் புரிவதன் மூலம் நம் நாடுகள் இணையுமா.. நமது ராஜ்ய விஸ்தரிப்புக்குத் துணைவருமா உன் காதல்.. உன்னைக் கண்டிப்பாய் மணம் புரிவான் என நம்புகிறாயா.. ஒன்று தெரிந்து கொள்..எனது உயிரானவள் உனது சகோதரி..உனது சகோதரியின் உயிர் நீ..உனக்கு ஏதாவது நிகழ்ந்தால் நான் எதுவும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” எனச் சொல்லி நிறுத்தினான்..
*
மாமன் தங்களை முழுக்கப்பார்க்கவில்லை எனக் கொஞ்சம் நிம்மதியான ரேணுகா சற்றே நகைத்தாள்..”கிருஷ்ணச் சக்கரவர்த்தியின் தளபதியான மாமா..உங்கள் மண்ணாசையை பெண் கொடுத்துப் பூர்த்தி செய்ய வேண்டுமா..இருப்பினும் நான் அறிந்தவரை ராஜாதித்யர் என்னைக் கைவிட மாட்டார் என நினைக்கிறேன்..உங்களுடன் உறவு எனக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை அந்த ஆண்டவன் தான் அவருக்குத் தரவேண்டும்” எனப் பதிலிறுக்க பூதுகனின் புருவங்கள் நெளிந்தன.. “புரியவில்லை பெண்ணே.. பகைவன் எனத் தெரிந்தும் நீ ஆசைப்பட்ட படியினால் நாங்கள் பொறுமையுடன் இருக்கிறோம்..உன்னை ராஜாதித்யர் மணந்தால் உறவு பலப்படத் தானே செய்யும்..பராந்தகர் நம்மீதுபடையெடுத்து அழித்தது இன்னும் எம் நினைவில் இருக்கிறது.. இருப்பினும் உன் மீது கொண்ட பாசத்தால்..” பூதகன் சொல்லிக் கொண்டே சென்றதைத் தடுத்துச் சீறினாள் ரேணுகா.. நிறுத்தும் மாமா..நீங்கள் என்னிடம் பாசம் என்பது போல் நடித்து என்னைப் பகடைக்காயாய் பயன் படுத்துகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்” என்றாள்..
*
(தொடரும்)
-
25th August 2014, 10:28 PM
#26
Senior Member
Senior Hubber
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
17 கனல் கண்ணீர், கேள்விகள்
“பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ” என்ற சொலவடை பெரியவர்கள் அடிக்கடிச் சொல்வார்கள்.. அஃதாகப் பட்டது பெண்ணும் பீர்க்கங்காயும் படக்கென வளர்ந்துவிடுவார்களாம்..ஆண்கள் வளர்வதிலலை போல என பூதகன் நினைத்தான்.. கங்க நாட்டு மன்னன் பிரத்வீபதியை முறியடித்து வெற்றி கொண்டாலும் கூட அந்த வெற்றியைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து இராஷ்டிர கூடச் சக்ர்வர்த்தி கிருஷ்ணனிடம் கொடுத்ததும் அவர் அதை ஏற்காததுடன் தனக்குத் தன் சகோதரி ரேவகா தேவி என்றழைக்கப்படும் ரேவா தேவியை மணமுடித்து வைத்த பெருந்தன்மையையும் நினைத்தான்.. அதே சமயத்தில் அந்தத்திருமணத்தின் போது ரேணுகா தக்கணூண்டு இருந்து இரட்டைப் பின்னல், சீனத்துப் பட்டில் தைத்த சிகப்புப் பட்டுப் பாவாடை, கலிங்க நாட்டுப் பருத்தியில் நெய்த பொன்னிற மேலாடை அணிந்து ரேவகாவை ஒட்டியே நின்று இவனது கரிய நிற உருவத்தை பயந்து.”அக்கை , யாரிது ” எனக் கிசுகிசுக்க, வெட்கம் ததும்பிய விழிகளுடன் ரேவகா,” இது உன்னுடைய பாவா..இனிமேல் பாவா என்றே அழைக்க வேண்டும்” என ராஷ்டிர கூட மொழியில் சொல்ல உடன் பயம் போய் பாவா பாவா என பாசத்துடன் ஒட்டிக் கொண்டது..தானும் அந்தச் சிறுமியின் மேல் மகளைப் போல் பாசம் வைத்தது..ம்ம் எல்லாம் மாயை தானா..
எனில் அந்தச் சிறுமி தான் வளர்ந்து இளம் பெண்ணாகித் தன்னைக் கேள்வி கேட்கிறது..பாவமே தமிழகத்திற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூட்டி வந்தால் பகைவனிடம் கத்தரிக்காய்க் காதல், இப்போது அவளே பகடைக்காயாம்..ஹீம் எல்லாம் நேரம் தான்..
கொஞ்சம் வாய்விட்டே பூதுகன் சொல்லிவிட,”எந்த நேரம் என்கிறீர் மாமா” எனக் கேட்டாள் ரேணுகா. கொஞ்சம் தமிழ் கற்றதும் அறிந்ததும் அவனை மாமாவென்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள் அவள். மேலும் தொடர்ந்தாள் “ சோழரின் மூத்த இளவரசரை அறிமுகப் படுத்தியது யார்..அவரைச் சிலமாதம் தங்கியிருந்து ராஷ்டிர கூட மொழி கற்க வைத்தது யார்.. நீங்கள் தானே..என்னைப் பழகவும் விட்டது நீங்கள் தானே..பின்னர் பின்னர்..”
அவள் கண்களில் கண்ணீர் ததும்பினாலும் கனல் அணையவில்லை.. “எதனால் சென்றார் அவர்..அவர் இருந்த காலத்தில் ஏதுமறியாதவர் போல நீங்கள் ஏதோ ஒரு பொய்சொல்லிவிட்டு கங்க நாட்டைக் கைப்பற்றி அவரது நண்பரி ப்ரத்வீபதியின் மகனான விக்கியண்ணனை – இளம் சிறுவனை படுபாதகமாய்க் கொல்ல வைத்தீர்..பின் அவரது நண்பரையும் கொன்று நாட்டைக் கைப்பற்றினீர்.. என்ன தான் தந்தை ராஷ்டிர கூடத்தை வென்றாலும் கூட அதைத் திருப்பித் தருவதற்கான முயற்சியில் தானே அவர் இருந்தார்..ஏன் அதெல்லாம் செய்தீர்..இப்போது கூட..” பேசிய அவளுக்கு மூச்சிறைத்தது.. “இப்போது கூட அவரை சந்தர்ப்பம் கிடைத்தால் முடிக்கலாம் என்று தானே இருக்கிறீர்..” என்றாள்..பூதுகன் கபகபவென நகைத்தான்..ரேணுகாவைப் பயம் சூழ்ந்தது..
(தொடரும்)
-
26th August 2014, 08:06 PM
#27
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2014, 09:45 PM
#28
Senior Member
Senior Hubber
*
கடல் மைனா..
சின்னக் கண்ணன்..
18 மாமன் மனம்..
சிரிப்பு என்ற மகோன்னத விஷயத்தை ஏன் மனிதர்களுக்கு மட்டும் வைத்தான் ஆண்டவன்..? பூனை, ஆடு, மான் போன்றவை சிரித்தால் ஏதோ ஏகடியம் அல்லதுகிண்டல் செய்வது போலிருக்கும்..ஆனால் நரியின் சிரிப்பு பயத்தை வரவழக்கும்..அதனால் விளையும் விளைவுகளும் விபரீதம் தான். கிட்டத் தட்ட பூதுகனின் சிரிப்பு அதைப்போலத் தான் என நினைத்தாள் ரேணுகா. கொஞ்சம் இடத்தை விட்டு நகரவும் முற்பட்டாள்.
பூதகன் சிரிப்பை நிறுத்தி கண்களில் கூர்மையுடன் “ரேணுகா” என்றான்.. “ நீ சொல்வதெல்லாம் முழுக்கத் தவறல்ல.. கங்கமன்னனை உன் சகோதரியைக் கைப்பற்றிய போதே வெற்றி கொண்டிருந்தேன்..பின் சில காலம் அவனே ஆளட்டும் என விட்டும் வைத்திருந்தேன்.. எனக்குத்தலைவணங்காமல் அந்த தஞ்சைச் சோழனிடம் நட்பு கொண்டு என்னை ஏமாற்றவும் பார்த்தான்.. அதனால் தான் அவனுக்கந்த முடிவு.. தவிர அவன் மகனை நான் கொல்லவுமில்லை..திடீரென நோயுற்று இறந்ததை இப்படி நான் கொன்றேன் என்று வதந்தியைப் பரப்பியது சோழ நாடு தான்..இந்த இளவரசன் மட்டும் என்ன.. நம் நாட்டிற்கு வந்தது சமாதானத்திற்கென்றா நினைக்கின்றாய்.. இல்லை..இல்லை.. மறுபடியும் புலிக் கொடி நாட்டினால் என்ன என்ற நாட்டமும் தான்..ஏதோ விதிவசத்தில் உன்னிடம் அன்பு கொண்டும் விட்டான்.. எனில் நானும் உன் தந்தையும் அவனை விட்டு விட்டோம்..பின் எத்தனை வருடங்கள் கழிந்தன..
இந்த எட்டு வருட காலத்தில் என்ன செய்திருக்கிறான் தெரியுமா உன் காதலன்.. மறுபடியும் இராஷ்டிர கூடத்தைக் கைக் கொள்ள வேண்டும் என படை பலத்தைப் பெருக்கியுமிருக்கிறான்.. உன்னைப் பற்றி ஏதாவதுகேட்டு ஒரு சிறு ஓலையாவது அனுப்பியிருக்கிறானா..இல்லை இல்லை..இருப்பினும் உன் மனம் அவன் பால் ஈடுபட்டிருப்பதனால் சரி சமாதானமாகச் சென்று உன்னைக் கொடுத்து நட்பாய் இருக்கலாம் எனத் தான் நினைத்தோம்..அதற்காகத் தான் இங்கு வந்தும் இருக்கிறேன்..அவனைக் கொல்வது என்பது என்றால் அது முன்னமேயே நிகழ்ந்திருக்கும்..” என்றான்..
இப்படிச் சொன்ன போது பூதகனின் கண்கள் உணர்ச்சி வசத்தால் கலங்கியிருந்தன.. அவனது வார்த்தைகளை நம்பலாம் என அவன்கண்கள் சொல்லியதாலோ என்னவோ மறுபடியும் எதுவும் பேசாமல் “ வாருங்கள் மாமா.. நாம் தங்கியிருக்கும் இடம் போகலாம்” என ரேணுகா நடக்க “ நீ போ ரேணு.. நான் சற்று நேரம் கழித்து வருகிறேன்” என பூதுகன் திரும்பி நடந்தான்.. அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வான்மதி திடீரென ஏதோ நினைவு வந்தாற்போல் விரைந்து வீர நாராயணர் வீட்டுக் கொல்லைப் புறத் தோட்டம் பக்கம் பார்வையை ஓட்ட எழிலும் வீரனும் இருந்த நிலையைக் கண்டு வியந்தது!
(தொடரும்)
-
26th August 2014, 09:49 PM
#29
Senior Member
Senior Hubber
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
19 மடலும் மடந்தையும்....
*
”கள்ளப் பார்வை என்பது என்ன..யாருக்கும் தெரியாமல் பார்ப்பது –அதுவும் இளம் பருவத்துப் பெண்கள் பார்க்கும் பார்வை எனப் பெரியவர்கள் சொல்வார்கள்..யாரிடம்.. காதலனிடம்.. ஆனால் நான் இவளைச் சந்தித்தே சில நாழிகைகள் தானே ஆகிறது. எதுவும் வீரச் செயல் எதுவும் புரியவில்லை அவள் தான் என்னைக் காப்பாற்றினாள் இருமுறை.. எப்படிக் காதல் வரும்….”.என வீரன் யோசித்தான்..வள்ளுவரும் அவன் புலவ நண்பனும் அவன் நினைவுக்கு வந்தார்கள்..
” கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது-
எனச் சொன்ன வள்ளுவர் என்ன பொருத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்..பெண்ணானவள் விடுகின்ற சிறு கள்ளப் பார்வையானது காதலில் செம்பாகமல்ல அதாவது சரிபாதியல்ல மிகப்பெரியது என........என்ன சொன்னான் நண்பன்..
சிறுநோக்கில் சிற்றம்பு சீராகப் பாய
உருகியே ஓடும் உளம்...
இருக்கலாம் தான்..ஆனால் இப்பொழுது பசிக்கிறது..உண்ணலாம்..”
பசியின் தாக்கத்தில் பழங்களும் பாலும் விரைவாக அருந்திய வீரன் ரகசியமாய் எழில் கண்ஜாடை காட்டிய ஓலையைக் கைக்குள் அடக்கி வெளியில் வந்து கிணற்றருகே இருந்த இரும்பு வாளியில் இருந்த தாமிரப்பாத்திரத்தில் நீரெடுத்து கைகழுவிவிட்டு கொஞ்சம் கொல்லைப் புறத்தில் சற்று தூரம் நடந்தான்..
*வள்ளுவர் மறுபடி மனதில் வந்தார்..
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்..நண்பன் சேயோன் என்ன சொன்னான்.
சின்னவளை கொண்டிருந்த சின்னவளும் தந்தமடல்
பின்னும் துயரினைப் பார்..அதாவது சின்னவளை கொண்ட காதலி மடலை மட்டும் தரவில்லை..கூடவே மாலையில் வரும் துயரத்தையும் தந்துவிட்டாள்.. அதுபோல இருக்குமா இந்த ஓலை..எழில் கழுத்தில் எதுவும் அணிகலன் அணிந்திருந்தாளோ..ஆமாம். பொன் நகையில் சற்றே இளைத்திருந்த சங்கிலி..அவள் நிறத்தில் தெரியவில்லையே.. சரி ஓலையைப் பிரித்துப் படிக்கலாம் என முடிவு செய்தான் வீரன்.. ஆனால் அவனுக்கு கொஞ்சம் பயமாக கொஞ்சம் கிளர்ச்சியாக,கொஞ்சம் நெகிழ்ச்சியாக கொஞ்சம் நடுக்கமாகவும் தான் இருந்தது..முதல் அனுபவம் என்பதால்..ஓலையைப் பிரித்தால் “கைகழுவி விட்டு உள்ளே வரவேண்டாம் வீரரே..வேப்பமரப் பள்ளத்தின் அருகிருக்கவும்..சில கேள்விகளுக்கு விடை வேண்டியிருக்கிறது” என எழிலான எழிலின் எழில் எழுத்துக்கள் கோணலாக இருந்தாலும் அழகாய்த் தான் தெரிந்தது அந்த நிலவொளியில்..
* “மறுபடியும் கேள்விகளா” எனத் தலையில் கைவைத்த படி அவள் சொன்ன வேப்பமரத்தின் பின்புறம் கொஞ்சம் பள்ளத்தைச் சற்றே தள்ளியிருந்த புல்தரையில் அமர்ந்து கொண்டு மேலே பார்த்தால் நிலா காணாமற் போயிருக்க கொஞ்சம் இருளாகத் தான் அந்த இடம் இருந்தது..சில நட்சத்திரங்கள் மட்டும் அவனை ப் பார்த்துக் கண்சிமிட்டி “என்ன நண்பா யோகம் தான் நடத்து” எனச் சொல்வது போல இருக்கையில் காதுகளில் சின்னதாக ரம்மியமான இசை விழுந்தது.. இசையில்லை.. கொலுசொலி!
*
(தொடரும்)
Last edited by chinnakkannan; 26th August 2014 at 09:55 PM.
-
27th August 2014, 07:43 PM
#30
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks