-
7th November 2014, 02:47 PM
#11
Junior Member
Seasoned Hubber

‘உரிமைக்குரலும் நம்நாடும்’
‘நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க கூடாது?’.... பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் அதிலிருந்து மீள்வது குறித்து தனது நெருங்கிய நண்பர் இந்தி நடிகர் ராஜேந்திர குமாரிடம் ஆலோசனை கேட்க, அவர் கூறிய யோசனைதான் முதல் வாக்கியம். ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் தலைவரை வைத்து சில காட்சிகள் எடுத்த ஸ்ரீதர், பின்னர் அந்த படம் நின்று போக (காதலிக்க நேரமில்லை வண்ணப்படம் எடுத்த ஸ்ரீதர், எம்.ஜி.ஆரே ஒரு கலர்தான் என்பதால் அவர் நடித்த படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்ததாகவும் இதை அவரிடம் விளக்காதது தன் தவறுதான் என்றும் ஸ்ரீதரே கூறியுள்ளார்) அதனால் தயங்கியுள்ளார். ஆனாலும் ராஜேந்திர குமாரின் வலியுறுத்தலை ஏற்று தனது நண்பர் கண்ணையா என்பவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து தலைவரின் ஒப்பனைக் கலைஞராக இருந்த பீதாம்பரம் (இயக்குநர் பி.வாசுவின் தந்தை)மூலம் தலைவருக்கு தெரிவிக்கப்பட, அதை ஏற்று ஸ்ரீதருக்காக அவர் நடித்துக் கொடுத்ததே உரிமைக் குரல் என்பதெல்லாம் வரலாறு.
இன்று உரிமைக்குரல் படத்தின் 41ம் ஆண்டு துவக்கம். மேலும் நம்நாடு, தாய் சொல்லைத் தட்டாதே படங்களின் வெளியான நாளும் இன்று. 3 வெற்றிப் படங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை என்றாலும் நேரமில்லை. பரவாயில்லை. கிணற்று நீரை வெள்ளமா கொண்டுசெல்லப் போகிறது? எப்போது வேண்டுமானாலும் அந்தப் படங்களைப் பற்றி எழுதலாம். என்றாலும் என்னை மிகவும் கவர்ந்தவை உரிமைக்குரலும் நம்நாடும். அதனால்தான் இந்த படங்களின் தலைப்பையே மேலே வைத்தேன். இந்தப் படங்களின் காட்சிகள், தலைவரின் நடிப்பு, தொழில்நுட்ப சிறப்பு போன்றவற்றை பற்றி இப்போது நான் விவரிக்கப் போவதில்லை. அதை விவரித்தால் கட்டுரை நீளும் என்பதோடு நேரமும் போதாது. உரிமைக்குரலும் நம்நாடும் தலைப்பையொட்டிய கருத்துக்களைப் பார்ப்போம்.
அதிலும் 1974ம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் அராஜக ஆட்சி நடந்து வந்த காலத்தில் ‘உரிமைக்குரல்’ என்ற தலைப்பே எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த ‘உரிமைக் குரலை’ அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எழுப்புபவர் ‘புரட்சித் தலைவர்’ என்பதால் பலத்த எதிர்பார்ப்போடு வெளியாகி வெள்ளிவிழா கண்ட காவியம் உரிமைக் குரல். இதில் தலைவர் கட்டி வந்த வித்தியாசமான ஆந்திரா மாடல் வேட்டி பாணியை பல ஆண்டுகள் வரை திரையில் கட்டாத நடிகர்கள் கிடையாது.
கடந்த திங்கட்கிழமையன்று திரு.எஸ்.வி.அவர்கள் முகநூலில் இருந்து எடுத்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தலைவருக்கும் 7ம் எண்ணுக்கும் உள்ள பொருத்தங்கள் சில குறிப்பிடப்பட்டிருந்தன. பிறகுதான் யோசித்தேன். 7ம் எண்ணுக்கும் தலைவருக்கும் உள்ள பொருத்தங்களை.
தலைவர் வாழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்தும் தொட்டுக் கொண்டும் 7 இருந்துள்ளது என்பது மட்டுமல்ல, இன்று கூட ஒட்டிக் கொண்டே இருக்கிறது.
தலைவருக்கு முன் இருந்த(இவரையும் சேர்த்து 8) வள்ளல்கள் - 7
தலைவருக்கு முன் இருந்த (இவரையும் சேர்த்து 8)அதிசயங்கள்-7.
தலைவர் பிறந்த தேதி - 17, அவர் பிறந்த ஆண்டு - 1917, அவர் இரண்டாவது பிறவி எடுத்த ஆண்டு 1967, அவர் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அண்ணா தலைமையில் அவர் இருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் படவுலகை விட்டு விலகிய ஆண்டு 1977, அவர் முதல்வரானது 1977, அவர் ஆட்சி நிறைவடைந்து அவர் மறைந்தது 1987.
அவர் மறைந்த நாள் 24-12-1987 (என்ன ஆச்சரியம் இதன் கூட்டுத் தொகை கூட 7.)
அவர் அடக்கம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 25. (இந்த தேதியின் கூட்டுத் தொகையும் 7)
அவர் பயன்படுத்திய கார் எண் 4777 (இதன் கூட்டுத் தொகை 7)
அவர் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட....
தந்தை பெரியார் ( 7 எழுத்து),
அறிஞர் அண்ணா (7 எழுத்து)
அவர்கள் கொண்ட கொள்கையை ஏற்று தலைவர் எழுப்பிய
உரிமைக் குரல் (7 எழுத்து)
அதற்கு மக்கள் ஆதரவால் அதனால் அவர் பெற்ற பதவி முதலமைச்சர் (7 எழுத்து)
உரிமைக் குரல் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது (இதன் கூட்டுத் தொகை 7)
அராஜக ஆட்சிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்ப அவர் கண்ட இயக்கத்துக்கு இன்று நடப்பது 43ம் ஆண்டு (இதன் கூட்டுத் தொகை 7)
இன்று 7ம் தேதி அதே நாளில்தான் நாம் அந்தப் படத்தை பற்றி பேசுகிறோம் என்பதால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், மற்றொரு வியப்பு காத்திருக்கிறது. இன்றைய தேதி, மாதம், ஆண்டு என்று பார்த்தால் அதன் கூட்டுத் தொகை 7-11-2014 = 7.
இப்படி தன்னோடு தொடர்புபடுத்தி 7 ஐ நமக்கு தலைவர் சுட்டிக் காட்டு விட்டு சென்றுள்ளார். எதற்கு? ஏழு என்றால் ‘எழு’ என்றும் சுருக்கமாக கூறுவதுண்டு. எழு பிறவி என்பார்கள்.
வள்ளுவரும், ‘‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் (ஏழு பிறவி) ஏமாப்பு உடைத்து’’ என்று கூறுகிறார்.
ஆக ஏழு என்றால் ‘எழு’ என்றும் கொள்ளலாம். அந்த ‘எழு’வை ‘எழுந்திரு’ என்ற அர்த்தத்தில் ‘எழு’ என்று தலைவர் கட்டளையிடுவதாகவே நாம் கொள்ளலாம்.
எதற்காக தலைவர் நம்மை ‘எழு’ என்கிறார்?. உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரான ஊருக்கு உழைத்த நம் தலைவர், உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதி கையெழுத்திடும் தலைவர் வேறு எதற்காக நம்மை எழச் சொல்லப் போகிறார். உழைக்கத்தான். யாருக்கு? ‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்றார் பாரதி. அந்த யோகக்காரரான நம் தலைவரும் நமக்கு யோகமான வழியைத்தான் காட்டுகிறார். நாமும் ஊருக்கு உழைப்போம்.
இதற்காக பெரிய சிரமம் எதுவும் பட வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பணியில் அல்லது தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். நமது தேவைகள், கண்ணியமான வாழ்க்கை, நம்மை நம்பி இருப்போரை காப்பாற்றும் பொறுப்பு இவற்றுக்காக நாம் பணியாற்றினாலும் அது, ஆசிரியர், அலுவலர், அதிகாரி, மருத்துவர், வக்கீல், பொறியாளர், தொழில் முனைவோர் என்று எந்த பணியில் அல்லது தொழிலில் ஈடுபட்டாலும் அது சமூகம் சார்ந்ததே. சமூகத்துக்கு பலனிக்காமல் எந்த பணியும் தொழிலும் நம்மை சார்ந்ததாக மட்டும் இருக்காது. இருக்க முடியாது. எனவே, பணியில், தொழிலில் நேர்மையும் திறமையுமாக செயல்படுவதே ஊருக்கு உழைத்தல்.அதுவே சமூகத் தொண்டு.
அந்த தொண்டை திறம்படச் செய்வதன் மூலம்....
லஞ்சத்துக்கு எதிராக,
ஊழலுக்கு எதிராக,
கருப்பு பணத்துக்கு எதிராக,
கள்ளச் சந்தைக்கு எதிராக,
பெண்ணடிமைக்கு எதிராக,
சாதிக் கொடுமைக்கு எதிராக,
மத வெறிக்கு எதிராக,
மிக முக்கியமாக ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் மனதைப் போல பசியை ஒழிக்கப் பாடுபட்ட நம் தலைவரின் விருப்பம் நிறைவேறும் வகையில்,
வறுமைக்கு எதிராக, இல்லாமை கொடுமைக்கு எதிராக,
தலைவரின் பெயரால் நாம் எழுப்பும் உரிமைக்குரல் தேசமெங்கும் ஒலிக்கட்டும்.
ஒரு கவளம் சோற்றுக்கும் மானத்தை மறைக்கும் ஆடைக்கும் மக்கள் ஆலாய் பறக்கும் அவலநிலை ஒழியட்டும்.
பட்டினியோடு ஒரு மனிதன் கூட உறங்கப் போவதில்லை என்ற நிலை உருவாகட்டும்.
இதற்காக தலைவரின் தொண்டர்களான நாம் அவரது நினைவோடு எழுப்பும்
‘உரிமைக் குரலின்’
அதிர்வுகளால் நாட்டை பீடித்து பிணைத்துள்ள தளைகள் அறுபட்டு, பாரினில் புகழ்க் கொடி பறக்கவிட்டு உலகத் தலைமை ஏற்கட்டும்..
‘நம்நாடு’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 7th November 2014 at 05:33 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
7th November 2014 02:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks