-
10th January 2015, 10:20 AM
#1
Junior Member
Devoted Hubber
கொலையா ? தற்கொலையா?
செந்தில் கெமிக்கல் அண்ட் பெஸ்டிசைட் கம்பனி
தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார்.
சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை, இந்த உலகத்தை விட்டு ஒரேயடியாகஒழித்து கட்டுவது என்று.
“யாரிடம் வேலை காட்டுகிறான், அயோக்கியன் ” செந்தில் புகைந்தார். “பணிக்கர், நீ என்ன பண்ணுவியோ, எப்படி பண்ணுவியோ தெரியாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே! பெருமாளை போட்டுத்தள்ளனும், ஏற்பாடு பண்ணு!”.
பணிக்கர், செந்திலின் அடியாள். அவரது அந்தரங்க காரியதரிசியும் கூட.
“ஐயா! அது அவ்வளவு சுலபமான காரியமில்லே! அமைச்சரை நாம நெருங்கவே முடியாது. ”
“இதோ பாரு பணிக்கர், அவனால எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இதுவரை நான் அவனுக்கு ஐந்து கோடி அழுதிருக்கிறேன். இவ்வளவு நாள் நான் பாத்துக்கிறேன், நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு, இன்னிக்கு கைய விரிச்சுட்டான், ராஸ்கல்” செந்தில் பொருமினார்.
“இருக்கட்டும் ஐயா! கொஞ்சம் பொறுமையா யோசிப்போம்!”
“அதெப்படி சும்மா இருக்கிறது! அவன் போட்ட ஆர்டர்னாலே, இன்னிக்கு நம்ம தொழிற்சாலையை இழுத்து மூடி சீல் வெச்சுட்டாங்க. எனக்கு ஐநூறு கோடி இழப்பு.. இதுக்கு அவனை தீர்த்து கட்டினால் தான் எனக்கு மனசு ஆறும்”
“ஐயா! மேல் கோர்ட் எதுக்கு இருக்கு? அப்பீல் பண்ணுவோம்! கேசை உடைப்போம். பெருமாளை கொலை பண்ணி என்ன லாபம்?”
“என்ன பணிக்கர், புரியாத மாதிரி பேசறே! அதெல்லாம் நடக்கற காரியமில்லை. நம்ம பாக்டரிலேருந்து வரும் நச்சுப் புகையினாலே இந்த பக்க மக்களுக்கு கான்சர் நோய், சாவு அப்படின்னு அரசாங்கம் முடிவு எடுத்திடுச்சு. பெருமாளை தீர்த்து கட்டிட்டு வேறொரு அமைச்சர் மூலமாகத்தான் இந்த பாக்டரியை திறக்கணும். சும்மா வளவளன்னு எனக்கு அட்வைஸ் பண்ணாதே! நீ எப்படி பெருமாளை ஒழிக்கபோறோம்னு மட்டும் யோசி.”
“அதைத்தான் ஐயா நானும் சொல்ல வரேன். ஏற்கெனவே இரண்டு முறை பெருமாளை போட்டுத்தள்ள, அவரது எதிராளிங்க முயற்சி பண்ணியிருக்காங்க. ரெண்டு தடவையும் அது நடக்கவில்லை. அதனாலே, பெருமாள் ரொம்ப அலெர்ட். எப்பவும் அவரை சுத்தி பத்து தடியாட்கள். கிட்டே நெருங்க முடியாது”
“இதோ பாரு பணிக்கர், எனக்கு இருக்குற கோபத்திலே நானே அவனை சுட்டுத்தள்ளிடலாமான்னு இருக்கு. உனக்கு பத்து நாள் டைம். அதுக்குள்ளே பெருமாளை க்ளோஸ் பண்றே. இல்லே, உனக்கு உங்க வீட்டிலே திதி கொடுக்க வேண்டியிருக்கும்.”. கோபத்தோடு தொழிலதிபர் செந்தில் வெளியேறினார். சோர்ந்து போய் உட்கார்ந்தார் பணிக்கர். என்ன பண்ணலாம்?
****
ஒரு தனியார் மன மருத்துவ மனை
முகுந்தன், ஒரு கை தேர்ந்த ஹிப்னாடிஸ்ட். ஒரு 35 வயது. ஒரு தனியார் மன மருத்துவ மனையில் பணி.
குடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தற்கொலை முயற்சி பண்ணியவர்கள், மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் போன்றோருக்கு ஹிப்னாசிஸ் முறையில் ஆலோசனை, தீர்வு காண்பது அவன் வேலை.
அன்று அவன் ஒரு பத்து சமூக ஆர்வலர் மற்றும் மன நோயாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.
“ஹிப்னாசிஸ் , அப்படின்னா என்ன டாக்டர்?”- கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
“ஹிப்னாசிஸ்னா லத்தின் மொழிலே தூக்கம்னு அர்த்தம். நான் உங்கள் மூளையை கட்டுப்படுத்தி ஒரு அரை மயக்க நிலைக்கு கொண்டு செல்வேன். அப்போ, உங்கள் அடி மனசில் இருக்கும் எண்ணங்கள், பழைய நினைவுகள் வெளியே வரும். எனது கேள்விகளுக்கு நீங்கள் உண்மையா பதில் சொல்ல, நான் உங்கள் பிரச்சனை என்னன்னு கண்டுபிடித்து, நீங்க என்ன பன்னனும்னுங்கறதை சொல்வேன். அந்த நிலையிலேயே, உங்க மனசு அதை முழுசா வாங்கி செயல்படுத்தும்.”
“அதெப்படி?” ஒரு நோயாளி
“இப்போ, உங்களுக்கு சிகரெட்டு பழக்கம் இருக்குன்னு வெச்சுக்குங்க. அதை விட முடியல்லே. இதற்கு மனோவசிய முறையில் தீர்வு காண முடியும். நான் உங்களை ஹிப்னாசிஸ் மூலமா உங்க சின்ன வயசுக்கு, பழக்கத்துக்கு அடிமையான ஆரம்ப நிலைக்கு கொண்டு போயிடுவேன்.”
“அது எனக்கு தெரியுமா?”
“தெரியாது ! நீங்க ஆழ்ந்த உறக்க நிலைக்கு போயிடுவீங்க! ஆனால், உங்கள் மூளை மட்டும் விழித்துக் கொண்டிருக்கும். நான் உங்களை, அந்த கால நினைவுகளை பற்றி கேட்டால், துல்லியமா,நீங்க சிகரேட் பிடிக்க ஆரம்பித்த காரணம், அப்போ உங்களோட இருந்த உங்க நண்பர் பெயர், அவரோட அந்த சமயம் பாத்த சினிமா முதற்கொண்டு எல்லாம் சொல்வீங்க. ஏன்னா, உங்க அடி மனசில் அது ஆழமா புதைஞ்சிருக்கும் நினைவுகள்.”
“அப்படியா!”
“அப்போ, அந்த அரை மயக்க சமயத்திலே, நான் உங்களுக்கு சிகரெட் பிடிக்கறதாலே ஏற்படற கெடுதல் பற்றி சொல்வேன். இந்த வயசிலே, அது ஏன் வேண்டாம் என்பதையும் சொல்வேன். நீங்க கேட்டுப்பீங்க!. அதை அப்படியே மனசிலே வாங்கிப்பீங்க. விழிப்பு வந்ததும், அந்த நினைவாலே, சிகரெட் பிடிக்கற வழக்கத்தை நீங்களே விட்டுடுவீங்க.”
முகுந்தன் தொடர்ந்தான். “சுருக்கமா சொல்ல போனா, உங்க மைண்டை நான் கண்ட்ரோல் பண்ணுவேன். ஆனால், உங்க நன்மைக்காக!, உங்க அனுமதியோட ! ”
“ஆச்சரியமா இருக்கே!”
“இதிலே ஆச்சரியப் பட ஒண்ணுமில்லே. சின்ன குளவிகிட்டேயே இந்த மூளை சலவை திறமை இருக்கச்சே, நம்ம கிட்ட இருக்க கூடாதா?”
“நம்பவே முடியலியே?”
முகுந்தன் சிரித்தான். “நம்பித்தான் ஆகணும். இதோ இந்த படத்தை பாருங்க”
ஒரு படத்தை திரையில் காட்டினான்.
“இந்த சிலந்தி கோஸ்டா ரிகா என்கிற இடத்திலே தன் பாட்டுக்கு சிவனேன்னு வலை பின்னிக்கிட்டு, ஈ, எறும்பு தின்னுகிட்டு இருக்கும். திடீர்னு எங்கேருந்தோ ஒரு குளவி இங்கே வரும். சிலந்தி வலையிலே மாட்டிக்க இல்லே. சிலந்திய ஒரு வழி பண்ண. அதை தனது இனப்பெருக்கத்துக்காக மைன்ட் கண்ட்ரோல் செய்ய. குளவி, நேரே வந்து, ஏமாந்த சமயம் பார்த்து சிலந்தியை கொட்டிவிட்டு, அதன் வயிற்றில் தனது முட்டையை இட்டுவிட்டு பறந்து போயிடும். விழித்த சிலந்தி, பழையபடி சிவனேன்னு தன் பாட்டுக்கு, தனது வேலைய தொடரும்.
கொஞ்ச நாள் கழித்து, முட்டையை உடைத்து கொண்டு வெளியே வரும் குளவிப் புழு, சிலந்தியின் வயிற்றின் மேலேயே உட்கார்ந்து சிலந்தியின் ரத்தத்தை குடித்து வளரும்."
முகுந்தன் தொடர்ந்தான் "குளவிப் புழு, கூட்டு புழு பருவம் வரும்போது, அதற்கு ஒரு திரவம் சுரக்கும். அந்த திரவத்தை, மூளை சலவை கெமிகலை, சிலந்தியின் வயிற்றில் , குத்திவிடும். பாவம் சிலந்தி, அவ்வளவுதான், கிறுக்கு பிடித்தாற்போல், வழக்கமான ஆறு கோண வலைக்கு பதிலா, இரண்டு கோண வலை பின்ன ஆரம்பித்து விடும், ஒரு கூடு மாதிரி. அப்புறம், ஒரு மாதிரி மந்திரிச்சு விட்டா மாதிரி , கூட்டு நடுவிலே போய் உக்காந்துடும்.
புழு, சிலந்தியை கொன்று, முழுவதும் உறிஞ்சி விட்டு, அடர்த்தியான, இரண்டு அடுக்கு வலையில், மழைக்கு பாதுகாப்பா, கூட்டுப் புழுவா அமர்க்களமா அமர்ந்து விடும். உழைத்தது யாரோ! அனுபவிப்பது யாரோ? கொஞ்சம் முதலாளித்துவம் போல இல்லே?
கூட்டை விட்டு வெளியே வரும்போது ஒரு குளவியாக. கொஞ்ச நாள் கழித்து இது இன்னொரு பாவப்பட்ட சிலந்தியை தேடும். இது மாதிரி, இந்த உலகத்திலே நிறைய மைன்ட் கண்ட்ரோல் விஷயங்கள் நடந்து கிட்டு தான் இருக்கு“- முகுந்தன் முடித்தான்
“அப்போ, நீங்க சொன்னா, நான் தற்கொலை கூட பண்ணிக்கிடுவேனா? அப்படி யெல்லாம் கூட நடக்குமா என்ன?”
"நிச்சயமா ! மனோ வசிய முறையில் உங்களை என் வசப்படுத்தி , நான் சொன்னா, தற்கொலையும் பண்ணிக்குவீங்க , ஏன் கொலை கூட பண்ணுவீங்க !நீங்க இன்னும் என்னை நம்பவில்லை போல ! அப்போ, இந்த படக் காட்சியை பாருங்க. என்ன அழகா, இந்த ஜ்வல் குளவி, கரப்பான்பூச்சியை கொட்டி, அதை மூளைக் கட்டுப்பாடு பண்ணி , தன் இனத்தை பெருக்குது !
கரப்பை ஒரு கோமா நிலைக்கு கொண்டுபோய், நாள் பட உயிரோட வெச்சு , கொஞ்சம் கொஞ்சமா ரத்தத்தை குடிக்குது. கிட்டதட்ட சாப்பாடு வெச்சுருக்கிற ஒரு ப்ரிட்ஜ் மாதிரி ! எப்படி இருந்த கரப்பான் இப்படி ஆயிடுச்சி பாருங்க ! "
அந்த நேரத்தில், அலைபேசி அழைத்தது.
“நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்! இங்கே வரும்போது அலைபேசியை அனைச்சிட்டு தான் வரணுமென்று.”- முகுந்தன் கொஞ்சம் கோபமாக சொன்னான்.
“சார்! அது உங்க மொபைல்”
“ஓ! சாரி, ஒரு நிமிஷம்!” – முகுந்தன் வழிந்தான்.
“ஹலோ! இங்கிட்டு முகுந்தன், அங்கிட்டு நீங்க யாரு?”
“நான் செந்தில் கெமிக்கல் அண்ட் பெஸ்டிசைட் கம்பனிலேருந்து முதலாளியின் செகரட்டரி பணிக்கர் பேசறேன். உங்களை உடனடியா பாக்கணும், வர முடியுமா?”
“என்னையா? நான் எதுக்கு? ஒண்ணும் புரியலியே?”
“நேரே வாங்க சொல்றேன்! நாலு மணிக்கு கார் அனுப்பறேன். கட்டாயம் வரணும். முதலாளி ஐயா காத்துகிட்டு இருப்பார்”
“சரி வரேன்”
*****
மாலை 5 மணி. தொழிலதிபர் செந்தில் அறை.
செந்தில், பணிக்கர், முகுந்தன் அமர்ந்திருந்தனர்.
“நான் நேரே விஷயத்திற்கு வரேன் முகுந்தன். எங்களுக்காக நீங்க ஒருத்தரை ஹிப்னடைஸ் பண்ணனும்.” – பணிக்கர்
“யாரை?”- முகுந்தன் குழப்பமாக
“சுகாதார அமைச்சர் பெருமாளின் கார் டிரைவரை”
“எதுக்கு?”
“சொல்றேன். நாங்க சொல்றபடி நீங்க செய்தீங்கன்னாக்க உங்களுக்கு 50 லட்சம் தரோம்.”
“சார், நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே?”
“நாங்க அமைச்சர் பெருமாளை தீர்த்து கட்டணும். அவரது டிரைவரை நீங்க வசிய படுத்தி, அவர் மூலமா ஒரு பெரிய கார் விபத்து நிகழ வைக்கணும். அதில் அமைச்சர் பெருமாள் இறக்கணும்."
“அப்போ டிரைவர்?”
“அவரையும் சேர்த்து தான். அது அவரோட தலைஎழுத்து”
அதிர்ந்தான் முகுந்தன்.“சாரி, மன்னிக்கணும், என்னாலே முடியாது”
“இங்கே பாருங்க முகுந்தன், உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் வராது. அதை நாங்க பார்த்துக்கிறோம். சின்ன வேலை. பெத்த லாபம்”
“வேண்டாம். என்ன விட்டுடுங்க. ப்ளீஸ்!” முகுந்தனுக்கு வியர்த்தது.
“நாலு நாள் டைம் தறோம். யோசிச்சு முடிவெடுங்க.”
****
....தொடரும்
Last edited by Muralidharan S; 11th January 2015 at 08:41 AM.
-
10th January 2015 10:20 AM
# ADS
Circuit advertisement
-
10th January 2015, 10:29 AM
#2
Junior Member
Devoted Hubber
கொலையா ? தற்கொலையா? ...தொடர்ச்சி
முகுந்தன் வீடு
முகுந்தனுக்கு அலைபேசியில் அழைப்பு.
“நான் பணிக்கர் பேசறேன். உங்க பையன் இப்போ எங்க கஸ்டடியில். எங்க பேச்சை நீங்க கேக்கலைன்னா, உங்க பையனை நீங்க பார்ட் பார்ட்டா தான் பாக்க முடியும். பார்சல் பண்ணி அனுப்பிடுவோம் ”
“நான் போலிசுக்கு போனா?”
“ஒண்ணும் பண்ண முடியாது. உங்க பையனை மட்டுமல்ல, உங்க குடும்பத்தையே சீரழிச்சிடுவோம். பேசாம, இப்ப உடனே இங்கே வரீங்க. ஒப்புக்கறீங்க. 25 லட்சமும், உங்க பையனையும் சேர்த்து அழைச்சிகிட்டு போறீங்க. பாலன்ஸ், காரியம் முடிஞ்ச பிறகு உங்க வீடு தேடி வரும். நினச்சி பாருங்க, ரொம்ப சின்ன வேலை, உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது”
முகுந்தன் யோசித்தான். “வரேன்! வரேன்! என் பையனை ஒண்ணும் பண்ணிடாதீங்க”
*****
செந்தில் பங்களா
செந்திலும், முகுந்தும் தனியாக, செந்திலின் அறையில் அமர்ந்திருந்தனர். காரியதரிசி பணிக்கரை காணோம். ஏதோ வேலையாக வெளியே போயிருந்தார்.
முகுந்தன் சொன்னான் “ஐயா ! நீங்க சொல்றபடி செய்யறேன். அந்த டிரைவரை எனக்கு காமியுங்க. நான் அவனை மெஸ்மெரைஸ் பண்ணனும். எந்த இடத்திலே எப்படி விபத்து நடக்கணும் என்கிற செய்தியை அவன் அறியாம அவன் உள்மனதுக்கு சொல்லணும். என்னோட கட்டளையை அவன் ஏற்று நடக்க அவனை ஹிப்னாடைஸ் பண்ணனும் !”
“வெரி குட். நானே ஏற்பாடு பண்றேன் . நான் இரண்டு நாளில் அமைச்சரை அரசு ஆணை விஷயமா பாக்கணும். அப்போ, அந்த டிரைவரை உன்னை தனியா பாக்க சொல்றேன்.” –செந்தில். “இந்தா உன் அட்வான்ஸ். உன் பையன் வீடு தேடி வந்துடுவான். இதோ பாரு முகுந்தன், இதிலே ஏதாவது குழப்பம் ஆச்சு, முதல்லே உன்னை ஒழிச்சிடுவேன்!”
“ஏன் ஐயா, சந்தேகமா இருக்கா?வேண்டாட்டி ,பேசாம என்ன விட்டுருங்களேன்!"
"அது முடியாது!. இப்ப உனக்கு எங்க விஷயமெல்லாம் தெரியும். இனிமே உன்னை விட முடியாது. நீ செஞ்சிதான் ஆகணும். "
"அப்ப சரி. என்னை நம்புங்க ! என்னால நிச்சயம் முடியும் ஐயா! இப்பவே உங்களுக்கு நான் நிருபிக்கட்டுமா?”
“ம்.. சரி! நான் என்ன பண்ணனும்”
“அப்படியே என்ன பாருங்க!”
முகுந்தன், தன் கையிலிருந்த ஒரு சங்கலி கொத்தை செந்தில் முன் ஆட்டினான். அவர் கண் சொக்கியது. இரண்டு நிமிடத்தில் செந்தில் அவனுக்கு வசியமானார்.
சற்று நேரம் கழித்து அவர் விழித்தவுடன், முகுந்தன் கேட்ட முதல் கேள்வி
“ ஐயா! நீங்க லயோலா கல்லூரிலே தானே படித்தீங்க!”
“ஆமா!”
“அப்போ, நீங்க சிநேகா என்கிற பெண்ணை காதலித்தீங்க தானே?”
“ஆமா! சரிதான் முகுந்தன் !”
“அப்புறம் அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு , அந்த பெண்ணை கை விட்டுட்டீங்க தானே?”
“ஆமா! ஆச்சரியமா இருக்கே?“அது எப்படி உனக்கு தெரியும் ? நம்பவே முடியலியே”-பிரமித்தார் செந்தில்.
"எல்லாம், என்னோட வசியத்திலே இருக்கறப்போ , நீங்க சொன்னது தான்!"
"அட ஆச்சரியமாயிருக்கே?"
“பத்து வருஷம் முன்னாடி, உங்க தொழிற்சாலை யூனியன் தலைவர் தனபாலை கொன்னுட்டீங்க ! சரியா?”
“அட அதிசயமா இருக்கே. ரொம்ப ரகசியமாச்சே! எப்படி இதெல்லாம் சொல்றே?”
“நீங்க தான், எல்லாம் கொஞ்ச நேரம் முன்னாடி என் கிட்டே சொன்னீங்க, நீங்க என் வசத்திலே இருக்கும்போது. அடி மனசிலிருந்து , என் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது! இப்போ சொல்லுங்க ! என் மேலே நம்பிக்கை வந்துடுச்சா ?”
“போதும்பா! சூப்பர் முகுந்தன் ! எனக்கு நம்பிக்கை வந்துடுத்து. உன்னாலே அமைச்சருக்கு சாவு நிச்சயம்” - சிரித்தார் செந்தில்.
“சரியா சொன்னீங்க ஐயா ! நிச்சயம் முடிச்சுடறேன் ! ” முகுந்தன் எழுந்தான். "அப்ப நான் உத்திரவு வாங்கிக்கவா ?"
"சரி! போயிட்டு வா. உன் பையன் இன்னும் கொஞ்ச நேரத்திலே வீட்டுக்கு வந்திடுவான் ! பணிக்கர் கிட்டே ஏற்கெனவே சொல்லிட்டேன் ! நீயும் பணிக்கரை பாத்துட்டு போ !”
முகுந்தன் " இப்போ போகச்சே பார்த்துட்டு போறேன் ஐயா!."
செந்தில் சிரித்தார் "அவனையும் கொஞ்சம் ஹிப்னாடிஸ் பண்ணி என்னை பத்தி அவன் என்ன நினைக்கிறான்னு நைசா கேட்டு ,எனக்கு சொல்லு !"
"அப்படியே ஆகட்டும் ஐயா! அவரையும் வசியம் பண்ணிட்டால்போச்சு !"முகுந்தன் முறுவலித்தான்.
****
அடுத்த நாள்
தினசரி பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி.
“நேற்றிரவு, தொழிலதிபர் செந்தில், சென்னையில் கொலை செய்யப்பட்டார்.அவரது அந்தரங்க காரியதரிசியே அவரை, அவரது பங்களாவின், இரண்டாவது மாடியிலிருந்து தள்ளி விட்டார். கீழே விழுந்த செந்தில், சம்பவ இடத்திலயே,பரிதாபமாக உயிரிழந்தார்.
"நேற்றிரவு, தொழிலதிபர் செந்திலும், அவரது காரியதரிசி பணிக்கரும், செந்தில் வீட்டு மேல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். திடீரென, பணிக்கர் செந்திலை, மாடியிலிருந்து தள்ளி விட்டார் என தெரிகிறது . சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சியங்களின் பேரில், பணிக்கர் கைது செய்யப் பட்டார்.
செந்தில் கெமிக்கல்ஸ் ஆலையை அரசு மூடியதால் ஏற்பட்ட நஷ்டத்தினால், தொழிலதிபர் செந்திலுக்கும் , அவாது காரியதரிசி பணிக்கருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி இந்த கொலை செய்யப் பட்டிருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்ட பணிக்கர் "நான் இந்த கொலையை செய்ய வில்லை !இது முதலில் கொலையே இல்லை. தற்கொலை !. முதலாளி அய்யா தான் , பேசிக்கிட்டே இருந்தாரு, திடீர்னு கீழே குதிச்சிட்டாரு. நான் அவரை பிடிக்க தான் போனேன் ! நான் அவரது விஸ்வாசமான செக்ரட்டரி ! நான் எதுக்கு அவரை கொலை செய்யணும் ? ” என்று சொல்கிறார். போலீஸ் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இது தற்கொலை அல்ல, கொலை தான் என்பது காவல்துறை வாதம் !"
போலீஸ் விசாரணை தீவிரமாக நடக்கிறது."
****
பெங்களூரு
முகுந்தன் இப்போது தமிழ் நாட்டிலேயே இல்லே. பெங்களூரில், ஊருக்கு வெளியே ஒரு தனியார் மருத்துவ மனையில் அவன் ஒரு வேலை தேடிக்கொண்டான்.
தொழிலதிபர் செந்தில் மேல் முகுந்தனுக்கு ஏற்கெனவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகம், அவனது வசியத்தில் இருக்கையில் , செந்தில் மற்றும் பணிக்கர் சொன்ன பதிலில் ஊர்ஜிதமானது.
செந்திலால் கொலையுண்டு இறந்த யூனியன் தலைவர் தனபால், முகுந்தனின் தந்தை. செந்திலும், அவரது அடியாள் பணிக்கரும் தான் அவரை பகை காரணமாக போட்டு தள்ளினார்கள்.
அப்பாவை கொன்றவர்களை , அயோக்கியர்களை , ஹிப்னாசிஸ் முறையை பயன்படுத்தி, பழி வாங்கிய திருப்தி அவனுக்கு. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள , இருபத்தி ஐந்து லக்ஷம் அன்பளிப்பு வேறு அவர்கள் அட்வான்ஸ் ஆக கொடுத்தார்கள் !!
நினைக்கையிலேயே சிரிப்பு வந்தது அவனுக்கு.
****
முற்றும்
நன்றி: கூகிள், விக்கிபீடியா
ஆசிரியர் பின் குறிப்பு: ராபர்ட் கென்னடி, மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியின் தம்பி. இவர் ஒரு செனெட்டர். இவரும், கொலை செய்யப் பட்டார். இவரை கொன்ற சிர்ஹான் சிர்ஹான் என்னும் கொலையாளி, 'நான் கென்னடியை சுடலை. கொலை செய்யலை. ஹிப்னாசிஸ் மூலமா என்னை யாரோ தூண்டி விட்டாங்க' அப்படின்னு சொன்னாராம். சர்ச்சை இன்னிக்கும் ஓடிகிட்டு தான் இருக்கு. ....
கொசுறு 1 : ஒரு தகவலுக்காக-- வலையில் படித்தது.
"A trained psychiatric professional can put someone under hypnosis and tell him to commit a certain act very easily".
“I can hypnotize a man — without his knowledge or consent — into committing treason against the United States,” boasted Dr. George Estabrooks in the early 1940s.
கொசுறு 2 :
Mind Control : விரும்பியோ விரும்பாமலோ ஒரு புழு இங்கே வாடகை தாயாகிறது. பாவப்பட்ட ஜன்மம்!
எதிரியின் குட்டிகளை பெத்துப் போட இது படும் பாடு, செய்யும் உயிர்த்தியாகம், என்ன கொடுமை சார் இது?
சே ! இந்த இயற்கையின் நியதியை புரிந்து கொள்ளவே முடியவில்லை !!
Body Invaders : A parasitic wasp has injected her eggs into a caterpillar -- and now they're ready to hatch.
Last edited by Muralidharan S; 12th January 2015 at 11:50 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th January 2015, 11:05 AM
#3
Senior Member
Platinum Hubber
இத...இத...இதத்தான் நான் எதிர்பார்த்தேன்! தார்மீக நியாயம்! Poetic justice! அது சாகாது, சாகக்கூடாது! நல்ல கதை!Thanks for all the interesting info and the videos showing it!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th January 2015, 09:19 AM
#4
Junior Member
Devoted Hubber
மேடம் !
Bookmarks