-
17th January 2015, 03:25 PM
#35
Junior Member
Seasoned Hubber
முன்னமே படித்திருந்தாலும் இப்பவும் படிக்க நன்றாக இருக்கு... நன்றி ராம்குமார் மற்றும் சண்டியர் கரன்.

விஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...
சத்தியவேடு... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன், வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவிர வேறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கடந்த இரு நாட்களிலேயே அந்த ஊர் அல்லோல அல்லோல பட்டுக் கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. Audi முதல் Alto வரை நூற்றுக்கணக்கான கார்கள், Enfield முதல் டி.வி.எஸ் 50 வரையிலான சில ஆயிரம் வண்டிகள், NTL முதல் Welcome, Fasttrack வரை எக்கச்சக்கமான கால் டாக்ஸிகள் இந்த ஊரின் வயலோரங்களில் பார்க்கிங்க்குக்கு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. என்.டி.ஆரை பூஜையறையில் வைத்துக் கொண்டாடும் அந்த ஊர் ஆந்திரவாடுகளுக்கே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இத்தனைக்கும் காரணம் ஒரே ஒரு திரையரங்கம். ஸ்ரீநிவாசா திரையரங்கம். சென்னையின் அருகாமையில் என்ற கணக்கில் இந்தத் திரையரங்கத்தில்தான் விஷ்வரூபம் uncut version தமிழில் ஓடிக் கொண்டிருக்கிறது. வேளச்சேரியில் இருந்து கணக்குப் பண்ணினால் ஏறக்குறைய 80 கிலோமீட்டர்கள்...
சனிக்கிழமை மதியம் கிளம்பலாம் என்ற முடிவு எடுத்தபொழுது, அவ்ளோ தூரம்.. பெருசா கூட்டம்லாம் ஒன்னும் இருக்காது என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. ஆக கூகிளாண்டவரின் தம்பி கூகிள்-மேப் ஆண்டவரிடம் போய் Srinivasa Theatre, Sathyav என்று டைப் செய்து முடிக்கும் முன்னரே சரியாக suggest செய்தார். Thatz y I always used to say #WhyGoogleIsGod... காரைக் கிளப்பி கொண்டு கிளம்பியாயிற்று. சென்னை பைபாஸிலும் பின்னர் ஆந்திரா பைபாஸிலும் சில பல தடைகளைக் கடந்து ஊரை நெருங்கிக் கொண்டிருக்கையில் எதிரில் வரும் வண்டிகளைக் காணும் பொழுதே கொஞ்சம் கிலி அடிக்க ஆரம்பித்தது. அத்தனையும் Chennai registration வண்டிகள். நம்மூர் இளவட்டங்கள். கூட்டம் இராது என்ற எனது எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்தது. என்னதான் கூகிளாண்டவர் சரியாகச் சொன்னாலும் அந்த ஊரில் ஏதேனும் ஒரு லோக்கலாண்டவரிடம் கேட்கலாம் என்று கார் கண்ணாடியை இறக்கினது போதும். எதுவும் கேட்கும் முன்னர் அவரே சொன்னார் "விஷ்வரூபம் தியேட்டர்தான.. அப்படிப் போய்த் திரும்பி வந்துருங்க... நேரா ரோடு போடுறாங்க..." காலையில் இருந்து ஒரு முந்நூறு நானூறு வண்டிகளுக்கேனும் வழி சொல்லியிருப்பார் போலும். பின்னர் சில ஓட்டை ஒடைசல் ரோடுகளைக் கடந்து போனால், ஊரின் ஒதுக்குப்புறத்தில் விளையாத வயல்வெளிகளுக்கு நடுவாக இருந்தது அந்தத் தியேட்டர். மணி சரியாக மாலை நாலரை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பொழுதில் கடைசியாக வெள்ளை அடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கால் கிலோமீட்டர் தள்ளிப் போய் காரை பார்க் செய்து திரும்பிய போதே தெரிந்தது கூட்டம் கூட்டமென.
ஜன.25ஆம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் தடை செய்யப்பட அவசர அவசரமாக ஜன 26ம் தேதி வாங்கி படத்தை இறக்கியிருக்கிறார்கள். அந்தத் தியேட்டர் ஓனரின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைக்கப் போகும் தருணம் அதுவென அவருக்கு அப்பொழுதில் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இனிமேல் அவருக்கும் அவர் சந்நதிக்கும் என்றைக்குமான ஒரே ஒரு தெய்வம் மாண்புமிகு இதயதெய்வம் கண்கண்ட புரட்சித்தலைவி அம்மாதான் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. அத்தனை கார்கள் சுற்றி நின்ற பொழுதிலும் நண்பர் லக்கி பதிவிட்டதைப் போல அந்தத் தியேட்டரே enlarged omni van சைஸில்தான் இருந்தது. தில்கூஸ், பட்டர் பன், டீ, பிஸ்கட், கின்லே வாட்டர் பாட்டில் என ஜரூர் வியாபரம் மூலமாக தியேட்டரைச் சுற்றி உள்ள ஒவ்வொரு குடும்பமும் வாழ்வாதார உயரத்தை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. டி.வி.எஸ் எக்ஸலில் வைத்து டீ விற்றுக் கொண்டிருந்தவரிடம் கேட்டேன் "என்ன பாஸ்.. செம பிசினஸா?" "லேது அன்னையா.. இப்பத்தான் நான் வந்தனே என்று வெட்கப்பட்டு சிரித்தார்." ஆனால் எத்தனை ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கும் அவரிடத்தில் சில்லறை இருந்தது என்பது நகைமுரண்.
திடீரென்று இரன்டு கவுன்டர்களில் டிக்கெட் குடுக்கத் தொடங்கினார்கள். போயிருந்த நாங்கள் ஐந்து பேரில் இருவர் இருவர் பிரிந்து ஒவ்வொரு வரிசையில் நிற்க நான் இருவருக்கும் மீடியேட் செய்து கொண்டிருந்தேன். டிக்கெட் குடுக்கத் தொடங்கிய இருபதாவது நொடியில் "வரிசை எனப்படுவது யாதெனின், கவுன்டரை ஒட்டிய ஒரு சதுர மீட்டர் இடத்தில் நூற்றி முப்பது பேர் நிற்பது" என்ற தமிழக பொதுவிதி அமல்படுத்தப்பட்டது. நான் கடைசியாக ஒரு தியேட்டரில் போய் இவ்வளவு கூட்டத்தின் நடுவில் டிக்கெட் எடுத்துப் பார்த்ததெல்லாம் கல்லூரிக் காலங்களில்தான் இருக்கக் கூடும். சென்னை வந்தபிறகு தியேட்டரின் கூட்ட நெரிசலை கணினித் திரையில் தெரியும் சிவப்பு மற்றும் பச்சை வண்ண நாற்காலிகளில் பார்ப்பதோடு சரி. ஆனால் படம் பார்க்காமல் போனால் பயணம் முழுமையடையாது என்ற வகையில் நானும் அந்த ஒரு சதுர மீட்டர் இடத்தை நெருங்கி ஒரு காலை வைக்கலாமா என யோசித்து முடிக்கும் முன்னரே எனது காலின் மேலேறி இருநூறு கால்கள் நின்றிருந்தன. நொடி நொடியில் கூட்டத்துக்குள் இழுத்து விட்டு நொங்கைப் பிதுக்கிக் கொண்டிருந்தார்கள். மூச்சு என்பது முப்பது நொடிகளுக்கு ஒரு முறைதான் உள்ளேயும் வெளியேயும் வந்து போய்க் கொண்டிருந்தது. அதுவும் காது வழியாக... இரவு நேர non-prime time தொலைக்காட்சிகளில் போடப்படும் பரிசுத்த ஆவியை உள்ளழைக்கும் ஜெபக்கூட்டத்தில் வருவதைப் போல அனைவரும் கைகளை மேலே தூக்கி ஆட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கையிலும் சில நூறு, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். "டேய் ப்ளீஸ் விடுங்கடா வெளில போயிர்றேன்" என்று மூக்கு வழியாக ஈனஸ்வரத்தில் கத்திக் கொண்டிருந்த பொழுதுதான் எனது மூக்கின் உயரமே இருந்த ஒருத்தன் வாய் முழுவதும் பழ வாசனையோடு மூக்குக்கு நேராக வந்து கத்தினான்... "உல்ல்ல்ல்ல்ல்ல்ல்லக நாயக்க்க்க்கன் கமல்... வோழ்க...." ஷ்ஷப்ப்பா. அப்பு கப்பு தாங்கல...
இத்தனைக்கும் நடுவில் கூட வந்திருந்த நண்பன் ஸ்ரீராம் தன்னுடைய திறமையால் இரண்டு கவுன்டரிலும் டிக்கெட் எடுத்த ஒரு கும்பலைப் பிடித்து ஐந்து டிக்கெட்டுகள் வாங்கி விட்டதாய்ச் சொல்ல வெளியே உருவிக் கொண்டு வந்தேன். கால் மணி நேரத்துக்கும் மேலாக கரும்பு மெஷினில் மாட்டியது போன்ற ஒரு பிரமை. பிழிந்தெடுத்துலு...
இதோடு adventure நிற்கவில்லை. தியேட்டருக்குள் நுழைந்து செல்லும் படலம் இதை விட சில மடங்கு அதிக adventurous என்பதை எதிர்கொண்டாலும் ஐந்து பேரும் ஒன்றாக நின்று அதை எதிர்கொள்ளத் துணிந்தது கொஞ்சம் ஆறுதலளித்தது. கூட்டத்தில் இருந்து யாரோ யாரையோ எதற்காகவோ அர்ச்சித்த சில கெட்டவார்த்தைகள் ஆந்திரவின் அனல்காற்றில் கலந்து கொண்டிருந்தன. முந்தய ஷோ முடியும் வரை காத்திருந்தது கூட்டம். முடிந்த நொடி அந்த மிகப் பெரிய இரும்புக்கதவை உடைத்துக்(திறந்து அல்ல... உடைத்து.. உடைத்து..) கொண்டு உள்ளே நுழைந்தது கூட்டம். எதிரியின் கோட்டையை உடைத்துக் கொண்டு போருக்குப் போன காலாட்படைகளுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை இந்தக் 'கமல்'ஆட்படையும். ஏறக்குறைய 150 இருக்கைகளைக் கொண்ட அந்தத் தியேட்டருக்குள் குறைந்தது ஒரு ஆயிரம் பேராவது இருந்திருக்கக் கூடும். கர்த்தர் கருனையில், இன்ஷா அல்லாவின் இறையருளில் எங்களுக்கு ஏதோ இடம் கிடைத்து விட்டது. தியேட்டரின் நடுப்பாதையெங்கும் அமர்ந்தும், நின்றும் முட்டியிட்டும் பார்த்துக் கொண்டிருந்தது கூட்டம். படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் பின் சீட்டில் இருந்தவர் கொஞ்சம் குனிந்து உட்காரச் சொன்னார். சரி மறைக்கிறது போலும் என நன்றாக குறுக்கிக் கொண்டு தலை மட்டுமே மேலிருக்கும் வண்ணம் அமர்ந்தேன். சில நிமிடங்களுக்குப் பின் இன்னும் குனியச் சொன்னார்... "இதுக்கு மேல எப்படிங்க...?" என்றால் அவருக்குப் பின்னால் நடைபாதையில் தரையில் அமர்ந்திருந்தவருக்கு மறைப்பதாகச் சொன்னார்கள். தலையையும் சீட்டுக்குள்ளேயே குறுக்கிக் கொண்டேன். இடைவேளையில் கூட இருக்கையை விட்டு எழவில்லை. எழுவதற்கு வாய்ப்புமில்லை என்பதுதான் சரி...
ஒருவாறாக படம் முடித்து வந்தோம்... அடுத்த காட்சிக்காக இன்னுமொரு ஆயிரம் பேர் கொண்ட கமலாட்படை தயராக நின்றிருந்தது... டீ விற்பவர் யாரோ ஒருவனிடத்தில் ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை குடுத்தவாறே சொல்லிக் கொண்டிருந்தார்... "லேது அன்னையா... நான் இப்பத்தான் வந்தது...."
எது எப்படியோ... இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து எனது பேரப்பிள்ளைகளிடம் சொல்ல எனக்கொரு கதை கிடைத்திருக்கிறது... "அந்தக் காலத்துல நாங்கெல்லாம் விஷ்வரூபம் படம் பாக்கப் போகேல...."
)
what an unforgettable movie..Vishwaroopam
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks