-
27th May 2015, 10:58 AM
#11
Senior Member
Seasoned Hubber
செலுலாய்ட் சோழன் – 75
(From Mr.Sudhangan's Facebook)
அது என்ன `ஆண்டவன் கட்டளை’ ?
1964ம் வருடம் வந்த சிவாஜியின் படம் தான் `ஆண்டவன் கட்டளை’!
அதே சமயம் இந்த வருட சிவாஜிக்கு பல்வேறு கதாபாத்திரங்கள்!
இந்த வருடம் வந்த முதல் படம் கர்ணன் பற்றி பார்த்தோம்!
இந்த வருடம் வந்த இரண்டாவது படம் ` பச்சை விளக்கு ‘
இந்தப் படம் வேல் பிக்சர்ஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அரங்கண்ணல் தயாரித்த படம்!
இந்த படத்தின் மூலக்கதையை ஜி.கே. சூர்யம் என்பவர் எழுதியிருந்தார்.
வசனத்தை ராம. அரங்கண்ணலும், இறைமுடிமணி என்பவரும் சேர்ந்து எழுதியிருந்தார்கள்.!
திரைக்கதை – இயக்கம் பீம்சிங்!
வழக்கம் போல விஸ்வநாதன் – ராமமூர்த்தி! கண்ணதாசன் காம்பினேஷன் தான்!
இந்தத் தொடரை எழுதும்போது எனக்கு இன்னொரு விஷயமும் சிவாஜி படங்களின் மூலமாக கிடைக்கிறது!
படத்தின் தரம் எப்படி ? அது கலைப்படமா ? அது நாடகப் பாணியாக இருக்கிறதா என்பதெல்லாம் விமர்சகர்களின் வேலை! ஆனால் ஒரு பாமரனாக சினிமா ரசிகனாக படங்களைப் பார்த்தால், மனித குணங்களின் மேன்மையையும், கீழ்மையையும், காட்டி, அவர்களுக்குள்ள படைப்பாற்றல்களையும், கலையான ரசனைகளையும் கொண்டுவந்தது அன்றைய படங்கள்!
பாசமலர் படம் என்பது பாசத்திற்கு வலு உள்ளது என்தை தமிழகத்திற்கே உணர்த்திய படம் !
அண்ணன் – தங்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு உணர்த்திய படம்!
பாசத்திற்கு முன்னால் பணத்தின் பகட்டு நிற்காது என்பதை உணர்த்திய படம் பார் மகளே பார்!
அடுத்த கட்டத்திற்கு போன படம் தான் `பச்சை விளக்கு’
பாசம் என்பது உடன்பிறந்தவர்கள் மீது மட்டுமே காட்டப்படுவதல்ல!
நன்றியை தெரிவிக்கும் இன்னொரு பாணி பாசம் என்பதை உணர்த்திய படம் தான் ` பச்சை விளக்கு’
படம் முழுவதுமே இந்த நன்றியுணர்ச்சியும், படிப்பில்லாதவரிடம் இருக்கும் மேன்மையையும் காட்டிய படம்!
சிவாஜிக்கு இந்தப் படத்தில் ரயில் என்ஜின் ஒட்டுனர் கதாபாத்திரம்! அந்த மாதிரி கரியினால் ஒடும் ரயிலை இந்த தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள்! அவருக்கு ரயிலில் உதவியாளர் நாகேஷ்! அதாவது சிவாஜி ரயிலை ஒட்டும்போது, அவர் கரி அள்ளிப் போடுவார்! அந்த நாளில் சென்னை, எழும்பூர், வேப்பேரி, ஜாம்பஜார் பகுதிகளிலிருக்கும் ஆங்கிலோ- இந்தியர் ஆண்கள் பெரும்பாலும் நாகேஷ் இந்த படத்தில் செய்யும் பணியில் தான் இருப்பார்கள்! அந்த ஆங்கிலோ இந்தியர்கள் இங்கேயே தங்கிவிட்டதால் அறைகுறை தமிழில்தான் பேசுவார்கள்!
அந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார் நாகேஷ்! அன்றைய நாட்களில் ஆங்கிலோ இந்திய கணவர்களுக்கு ரயிலில் வேலையென்றால், அவர்களின் மனைவிமார்கள் நர்ஸரி பள்ளி ஆசிரியைகளாக இருப்பார்கள்!
அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பாலர் ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கில அரிச்சுவடியைக் கற்றுக்கொடுத்ததே இந்த ஆசிரியைகள் தான்!
பச்சை விளக்கு படத்தின் ஆரம்பமே நன்றியுணர்ச்சியின் உச்சகட்டத்தில் தான் துவங்கும்!
சிவாஜியின் தந்தை நாகையா! அவருக்கு இரண்டு பிள்ளைகள்! மூத்தவர் சிவாஜி! இளையவர் ஏவி.எம்.ராஜன்!
இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களின் தாயார் இறந்து போவார்! குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், நாகையா தவிக்கும்போது அந்த வீட்டில் வேலை செய்யும் பெண், `அய்யா என்னுடைய இந்த சின்னப் பெண்ணை வளர்ப்பது மாதிரி, இந்த பிள்ளைகளையும் நான் வளர்க்கிறேன்’ என்பார்!
அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான சிறுமியும், சிவாஜி சகோதரர்களும் அண்ணன் தங்கைகளாக வளர்வார்கள்! இப்போது அந்த தங்கைக்காக உயிரையே விடுவார் சிவாஜி! சிவாஜி திருமண நாளன்று அந்த வேலை செய்த பெண் இறந்து போவார்! அந்த பெண்மணி யார் என்று மனைவி செளகார் கேட்பார்! தாயில்லாத எங்களுக்கு அந்த ` அன்னம்மா’ தான் தாய்! அந்த அன்னம்மாவின் தங்கை என் சகோதரி’ என்பார் சிவாஜி!
அதனால்.....! அந்தப் பெண்ணை நன்கு படிக்க வைக்க சிவாஜி தம்பதிகள் குழந்தையே பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்வார்கள்! அந்த பெண் தான் வளர்ந்த பின் விஜயகுமாரி! அவரை டாக்டராக்க சிவாஜி படாத பாடு படுவார்!
தன்னை வளர்த்த தாயின் பிள்ளையிடம் சிவாஜி காட்டும் பாசத்தை வைத்தே சுழுலும் கதை!
முதியோர் இல்லங்களை தோற்றி வித்தவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம்! `
நன்றி உணர்ச்சிதான் நல்லொழுக்கங்களின் ராணி’ என்பார் ரோமானிய தத்துவ ஞானி சிசெய்ரோ! பின்னர் இந்த நன்றியுணர்ச்சியைப் பற்றி தன் புத்தகத்தில் அப்துல் கலாம் எழுதியிருக்கிறார்!
ஒரு சமூகம் செழிக்க நன்றியுணர்ச்சி தான் ஒழக்க முதலீட்டின் அஸ்திவார கூறு. என்பார் அப்துல் கலாம்!
உலகத்தின் மிகப்பெரிய தேவை நன்றியுணர்ச்சி!
மனித குல மேம்பாட்டின் உச்சநிலை நன்றியுணர்ச்சி!
இதை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்து பல நாடுகளைப் பார்த்து, இன்றைக்கு பல லட்சம் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து அப்துல் கலாம் பறைசாற்றுவதை 1964 களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்கள் மூலமாக நம் திரைப்படக் கலைஞர்கள் சொல்லிக்கொண்டிருந்ததை என்ன சொல்ல ?
கூடவே கலைப் படிப்பை பற்றியும் கலாம் சொல்கிறார்! கலை ரசனை வளராத தேசம் வளராது என்கிறார்!
காரணம் அப்துல் கலாம் ஒரு வீணை இசைக் கலைஞர்! அவருக்கு ராகங்களின் மேன்மை தெரியும்!
தமிழ் கவிதைகளின் புனிதத்துவம் புரியும்! இவையெல்லாமே பச்சை விளக்கு படத்தின் விரவிக் கிடக்கும்!
இந்தப் படத்தின் பாடல்களில் தான் எத்தனை வேறு பாடுகள்!
இன்றும் முதல் வரியை பாட ஆரம்பித்தால் கடைசி வரி வரையில் பாடக் கூடிய வார்த்தைகள்! இசை!
சிவாஜி தன் இன்ஜின் டிரைவர் வேலையை முடித்துவிட்டு தன் மேல் கோட்டை தோளில் போட்டபடியும், தன் தலைத் தொப்பியை கையில் பிடித்தபடி, விசில் அடித்தபடி ஒரு ஒய்யார நடை நடந்து பாடலை ஆரம்பிப்பார்!
இந்த பாட்டில் பல்லவி முதலில் விசிலிலேயே வந்துவிடும்! அவர் வரிகளை ஆரம்பிக்கும்போது நாகேஷ் ரயில்வே நிலைய படிக்கட்டுகளிலிருந்து இறங்கி சிவாஜியுடன் சேருவார்!
`கேள்வி பிறந்தது அன்று – நல்ல
பதில் கிடைத்தது இன்று! ஆசை
பிறந்தது அன்று - யாவும்
நடந்தது இன்று!
இந்த பாட்டை சிவாஜி பாடிக்கொண்டே வரும்போது, கூட நடந்து வரும் நாகேஷின் அங்க அசைவுகளை `நடிப்பு’ சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளில் போட்டுக் காட்ட வேண்டும்!
நடிப்பின் அடிப்படை இலக்கணமே ஆக்சன் அல்ல! ரியாக்சன் என்பார்கள்!
அதற்கு உதாரணம் இந்தப் பாடல் காட்சியில் வரும் நாகேஷ் தான்!
(தொடரும்)
Last edited by KCSHEKAR; 27th May 2015 at 11:03 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
27th May 2015 10:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks