-
24th August 2015, 04:58 AM
#11
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம்
புரட்சி நடிகர்
மன்னாதி மன்னன்
நடிகர் பேரரசர்
பொன்மனச் செம்மல்
இதய தெய்வம்
புரட்சித் தலைவர்
வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.
Last edited by jaisankar68; 24th August 2015 at 05:07 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th August 2015 04:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks