Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    நண்பர்களுக்கு வணக்கம்,


    நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன். இப்போது பதிவிடும் இந்த பதிவை போலவே ஒவ்வொரு பதிவையும் இடவே எனக்கு விருப்பம். நமக்கு பிடித்தவரை ரசிக்கும்போதே சமூக பிரச்சினைகளையும் கலந்து சொல்வது என் பாணி. என்றாலும், மற்றவர்களும் இதேபோல, சமூக நிகழ்வுகளை குறிப்பிட்டு பதிவுகள் போட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில், நாம் சொல்லித்தான் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆனாலும், ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அதுவும் நமக்கு பிடித்தவருடன் ஒப்பிட்டு சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவலாகும், வலுப்படும் என்பது என் எண்ணம்.

    ஒரு நாளைக்கு திரியை சராசரியாக 1,000 பேர் பார்த்தால், பார்ப்பவர்கள் ஒரு நபரிடம் இதைப்பற்றி பேசினால் கூட, அது 2,000 பேரை சென்றடையும். அப்படியே கருத்து பரவலாகும். அதனால் என்னவாகி விடப் போகிறது? என்று கேட்கத் தோன்றும். 6 மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மதுவிலக்கு வரும் என்று யாராவது சொன்னால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பதில் சொல்லியிருப்போம். ஆனால், இன்று.... தேர்தலுக்கு முன் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பேச்சுக்கள். மக்கள் கருத்து பரவலாகி வலுப்பெற்றதுதான் இந்த நிலை ஏற்படக் காரணம்.

    அந்த வகையில், மக்களை பாதிக்கும் சமூக அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரவ, நியாயம் நிலைத்திட, நல்லவை நடந்திட, நீதி வென்றிட நம்மாலான முயற்சியை செய்வோமே என்ற எண்ணம்தான் இதுபோன்ற என் பதிவுகளுக்கு காரணம். அதோடு, நம்மால் தீயவைகளை தடுக்க முடியாமல் போனால் கூட, அதற்கு எதிராக குரல் கொடுத்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். மேலும், 25 ஆண்டுகள் கழித்து நாம் இருப்பது சந்தேகம். 50 ஆண்டுகள் கழித்து நிச்சயம் இருக்க மாட்டோம். ஆனால், நாம் இங்கு எழுதியது இருக்கும்.

    மக்களை பாதிக்கும் அக்கிரமங்களை கண்டித்திருக்கிறார்கள் என்று எதிர்காலத் தலைமுறையினர் நம்மை பாராட்ட வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நாமே இல்லாதபோது பாராட்டினால் என்ன? திட்டினால் என்ன? நமக்கு தெரியவா போகிறது? இதுபோன்ற திரிகள் மூலம் கூட, சமூக அநியாயங்களுக்கு எதிராக குரலெழுப்பியிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அநீதியை தட்டிக் கேட்க முன்வந்தால் நமது சந்ததிகளுக்கு நல்லதுதானே?

    ஆயிரம் பதிவுகளை நான் இடுவதற்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதோடு, சர்ச்சைகளை தவிர்த்தால் பயனுள்ள பதிவுகளை எல்லாரும் இடலாம் என்று கூறி, அதற்கு பாரபட்சமில்லாமல் அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டு, பொறுமையாக படிப்பவர்களுக்கு நன்றி நவின்று, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் உரிமைக்குரல் எழுப்புவோம் என்று சொல்லி .....

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
    அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
    அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
    நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....

    ...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

    --------------------------------------------------


    ‘என் உரிமைக்குரல்...........’

    சோழவள நாடு சோறுடைத்து.. என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட தஞ்சை தரணி இப்போதே போதுமான அளவு விவசாயம் நடக்காமல் விளைச்சல் இல்லாமல் காய்ந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை முற்றிலும் பாலைவனமாக்காமல் போகமாட்டோம் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாய் தோன்றுகிறது.

    ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பா.ஜ. அரசும் தொடர முயற்சித்தது. அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு எல்லாம் நடத்தினர்.தமிழக அரசும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வரை பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

    பின்னர், மீத்தேன் வாயு திட்டம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்தது. பரவாயில்லையே, மத்திய அரசுக்கு தொலைநோக்கும் நல்லெண்ணமும் இருக்கிறதே என்று நினைத்தால், அந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்யாததால் திட்டம் ரத்து என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்தது. ஆக, நிலைமைகளை ஆராய்ந்து திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்பது தெளிவு.

    சரி போகட்டும், தஞ்சையை வறண்டபூமியாக்கும் திட்டம் போய்த் தொலைந்தால் சரி என்று விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்குள் மீத்தேன் திட்டமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் என்று அடுத்த அணுகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

    மீத்தேன் எரிவாயு திட்டத்தை விட ஷேல் எரிவாயு திட்டம் மேலும் ஆபத்தானது. முதலில் மீத்தேன் வாயு, ஷேல் எரிவாயு என்றால் என்னவென்று பார்ப்போம்.

    பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த பொருட்கள் வேதியியல் மாற்றங்களால் நிலக்கரியாக மாறும். நிலத்தடி நீரின் அழுத்தத்தால் மேலே வரமுடியாமல் நிலக்கரி படுகையின் மீது படிந்திருப்பதுதான் மீத்தேன் வாயு (Methane Gas)

    அதுபோலவே, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்த பொருட்கள் கால மாற்றத்தில் மக்கிப்போய், வேதிமாற்றம் அடைந்து பூமியில் 3 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள படிம வடிவில் உள்ள அடுக்குப் பாறை இடுக்குகளில் எரிவாயுவாக தங்குகின்றன. இந்த பாறை எரிவாயுதான் ஷேல் வாயு (Shale Gas) என்று வழங்கப்படுகிறது.

    பொதுவாக பூமியில் துளைபோட்டு நீரை உள்ளே செலுத்தி அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த வாயுக்களை வெளியே கொண்டு வரும் முறை பின்பற்றப்படுகிறது. 200 அடி ஆழத்துக்கு துளைகள் ஏற்படுத்தி அதில் வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி மீத்தேன் வாயு எடுக்கப்படுகிறது.

    ஆனால், பூமியில் 15,000 அடி வரை ஆழ்குழாய் துளை ஏற்படுத்தப்பட்டு, பக்கவாட்டில் நான்குபுறமும் குழாய்கள் மூலம் வெடிபொருட்கள் செலுத்தப்பட்டு பாறைகள் பிளக்கப்படும். பின்னர், குழாய் வழியே தண்ணீரும் அபாயகரமான வேதிப்பொருட்களும் செலுத்தப்பட்டு பாறைகள் முழுமையாக உடைக்கப்பட்டு ஷேல் வாயு வெளியே எடுக்கப்படுகிறது.

    இந்த முறையில் பாறைகள் பிளக்கப்படுவதை, ஷேல் வாயுவை வெளியே எடுப்பதற்காக தண்ணீர் மூலம் பாறைகள் முழுதாக உடைக்கப்படுவதை தமிழில் நீரியல் முறிவு என்று சொல்கின்றனர். ஆங்கிலத்தில் ஃப்ராக்கிங் (Fracking) என்கிறார்கள். இதுபோன்ற ஃப்ராக்கிங் முறையால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் இணையதளத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.



    http://www.dangersoffracking.com/


    அமெரிக்காவிலே ஃப்ராக்கிங் முறையை எதிர்த்து இயக்கமே நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என்று சூற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்த விவரங்களுக்கான இணைப்பு கீழே:

    http://www.americansagainstfracking.org/get-the-facts/

    வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், அபாயகரமான வேதிப்பொருட்களும் பூமிக்குள் செலுத்தப்படுவதால் அந்த நிலமே தரிசாக போய்விடும்.

    தமிழகத்தின் காவிரிப்படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் ஷேல் வாயு பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி. (எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) கடிதம் எழுதியுள்ளது.

    இந்த அபாயகரமான திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயமே அழிந்துபோய்விடும். சுற்றுச் சூழல் மாசுபடும். விவசாயம் மட்டுமல்ல, நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் கிடைக்காத அபாயம் ஏற்படும்.

    ஏற்கனவே, நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக மத்திய அரசால் 3 முறை கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியாகி விட்ட நிலையில், அவசர சட்டம் மீண்டும் நீட்டிப்பு இல்லை என்றுதான் பிரதமர் சமீபத்தில் வானொலி உரையில் கூறியிருக்கிறார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கவில்லை. இதற்கு பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்க உள்ள தேர்தலும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.

    ஏற்கனவே, நஷ்டம், கடன், வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லாருக்கும் நினைவிருக்கலாம். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், விவசாயத்தையே அழிக்கும் வகையில் ஷேல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தால் நலன் விளையும் என்றால் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற ‘புண்ணிய பூமி’களில், விவசாய நிலங்களில் முதலில் அதை பரிட்சார்த்த ரீதியில் செயல்படுத்தி பார்க்கட்டுமே. விலங்குகளுக்கு மருந்து கொடுத்து பரிசோதிப்பது போலே, தமிழன் தலையில்தான் கைவைப்பார்கள்.

    இது ஏதோ விவசாயிகளை பாதிக்கும் திட்டம் மட்டுமே அல்ல. விவசாயமே அழிந்து விட்டால் நாம் சோற்றுக்கு என்ன செய்வோம்? நம்மையும் பாதிக்கும் திட்டம் இது. கேட்டால், இதுபோன்ற திட்டங்களால் இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அறிவு ஜீவிகள் கூறுகின்றனர்.

    ஏன்யா, சோறும் தண்ணியும் இல்லாதபோது கோட்டும் சூட்டும் எதுக்குய்யா?

    மண்ணை நேசிக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலம் அபகரிக்கப்படுவதையோ, தரிசாவதையோ விரும்பமாட்டான்.

    தலைவர் நடித்து சுனாமியாய் வசூலை சுருட்டி வெள்ளி விழா கண்ட உரிமைக்குரல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் தலைவரின் குடும்ப சொத்தான நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க திரு. நம்பியார் முயற்சிப்பார். கடனுக்காக நம்பியார் குடும்பத்திடம் அடமானம் வைத்திருந்த தலைவரின் நிலம் ஏலத்துக்கு வரும். ஏலம் முடிவதற்கு முன்பே தலைவர் கடனை திருப்பிக் கொடுத்தும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று நம்பியார் அடம் பிடிப்பார்.

    நெருக்கடிகளுக்கு நடுவே பணத்தை திரட்டி கடைசி விநாடியில் ஏலம் நடக்கும் இடத்துக்கு வந்து, ரேக்ளாவில் இருந்தபடியே நோட்டுக் கட்டை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது தலைவர் வீசும் ஸ்டைலும் வேகமும் அழகும்...... சொல்ல வார்த்தைகள் இல்லை.

    தனக்கு சொந்தமான நிலத்தில் தலைவர் உழும்போது அடியாட்களுடன் வந்து தடுப்பார் நம்பியார். அப்போது, மின்சாரமே மனித உருவெடுத்து வந்ததுபோல சுற்றிச் சுழன்று மோதும் தலைவரின் வேகத்தை என்னென்பது? அந்த சண்டைக்கு முன் உணர்வுபூர்வமாக தலைவர் பேசும் வசனம் பிரபலம்.

    தனது உயிரைக் கொடுத்தாவது நிலத்தை காப்பாற்றப் போராடும் விவசாயியின் ஆக்ரோஷம் தலைவரின் நடிப்பிலும் வசனத்திலும் தெரியும். இது ஏதோ, புகழ்ச்சிக்காகவோ உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

    ‘ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான்’ என்று சொல்லும்போது, ‘வந்தவன்டா நான்’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது நெஞ்சில் வேகமாக தட்டியபடியே சொல்லுவார். முகத்தில் கோபமும் பெருமிதமும் கொப்பளிக்கும். அப்போது வாய்ஸ் பிரேக் ஆகி விட்டு விட்டு வரும். ஆக்ரோஷமாக, வேகமாக நெஞ்சில் தட்டிக் கொண்டால்தான் குரல் இப்படி விட்டு விட்டு வரும். லேசாக தட்டிக் கொண்டால் வராது. அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நடித்துள்ளார் தலைவர்.

    ‘இந்த மண்ணுல இருந்து என்னை பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்’ என்று தலைவர் கூறும்போது கங்கையின் பெருக்கை போன்ற கண்களுடன் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்துதான் போகும். விவசாயியுடைய ஆக்ரோஷம் மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் தன் மீதான கொலை முயற்சிகளுக்கும் தலைவர் பதில் சொல்வது போல இருக்கும்.

    டேய், துரைசாமி (நம்பியாரை) என்று அழைத்து வசனத்தை பேசுவார் தலைவர். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, திரைப்படத்திலும் கூட பெரும்பாலும் யாரையும் வாடா, போடா என்று தலைவர் பேசமாட்டார். அடிமைப் பெண்ணில் மனோகரிடம், ஆசைமுகத்தில் நம்பியாரிடம் என்று காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்பின் பெட்டகமான தலைவரே ‘டா’ போட்டு பேசுகிறார் என்றால் எதிராளி எவ்வளவு மோசமான குற்றத்தை செய்திருக்க வேண்டும்? அதையும் இந்த ‘டா’ என்ற ஒரு சொல்லிலேயே விளக்கி விடுவார் தலைவர்.

    வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத்தானே சொல்கிறார் ? என்று கேட்கலாம். தலைவர் அனுமதியில்லாமல் அவர் படத்தில், அதுவும் அவரே பேசும் வசனத்தை ஒரு வசனகர்த்தா தன்னிச்சையாக எழுத முடியாது. அது சர்வாதிகாரம் அல்ல. படத்தில் எல்லாமே சிறப்பாக வரவேண்டும், தனக்காக படம் பார்க்க வரும் தனது ரசிகர்கள், படத்தை பார்த்து விட்டு முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதில் தலைவருக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடு அது.

    விவசாயத்தை முடக்கி வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் திட்டத்துக்கு எதிராக தலைவர் பேசுவது போல இருக்கும் உணர்ச்சிகரமான அந்த வசனத்தை அப்படியே கீழே தருகிறேன்.

    --------------------------------------



    ‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.

    ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.

    ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல் இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 3rd September 2015 at 03:53 PM.

  2. Thanks oygateedat, orodizli, Richardsof thanked for this post
    Likes oygateedat, orodizli, uvausan, mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •