-
16th November 2015, 08:38 PM
#11
Junior Member
Senior Hubber
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
---------------
அழும் குழந்தையை தேற்றும்
வேலையைச் செய்யும் போதே
அன்னை அதனைப் பிரிந்து
செல்ல வேண்டியிருப்பதை
நாசூக்காகச் சொல்வதைப்
போல..உமா, தனக்கும் சுந்தருக்குமான காதலைத்
திருமணமாக்க தன் அண்ணனின் அனுமதி கோரும்
பொருட்டு தான் ஊருக்குச்
செல்லவிருப்பதாகவும்,
அண்ணனின் அனுமதி கிடைத்து விட்ட நல்ல செய்தி
தாங்கிய தனது கடிதம், அக்டோபர் 10 ந் தேதி சுந்தரை
வந்தடையும் என்று உறுதி
சொல்லி அழுத பிள்ளையைச்
சிரிக்க வைக்கிறாள்.
----------------
இங்கே அழுத உயிர் சிரிக்க..
அங்கே சுந்தரின் வீட்டில்
சிரித்த உயிர் அழுகிறது.
வெகு தற்செயலாக சுந்தரின்
நாட்குறிப்பைப் படிக்க நேர்ந்த
சாந்தி, தன் அத்தான் சுந்தருக்கும், உமாவுக்குமான
ஆழமான காதலைத் தெரிந்து
கொள்கிறாள்.
அழுகிறாள்.
அத்தானுடன் அவளிருப்பதாய்
அவள் இதயத்துள் தீட்டிக்
கொண்ட ஆசை ஓவியங்களை
அவளது கண்ணீரே கரைத்து
அழிக்கிறது.
---------------
அலுத்துக் களைத்து இரவில்
வீடு திரும்பும் மாமாவை,
தினமும் இரவில் களைத்து
வருவது குறித்து கனிவுடன்
விசாரிக்கிறாள்.
அவளுக்கும், சுந்தருக்கும்
மணமுடிக்கும் பொருட்டு
தான் வேலை செய்து சம்பாதிக்கச் செல்வதாக மாமன் சொல்ல..
அவரது எண்ணம் பொய்க்கப்
போகிற யதார்த்தம் தெரிந்து
அவரைப் பரிதாபமாய்ப்
பார்க்கிறாள்.. சாந்தி.
சாந்தியை மணந்து கொள்ளும்
விஷயத்தில் சுந்தரின் முடிவைத் தெரிந்து கொள்ள
சிவக்கொழுந்து உறுதி காட்ட..
சாந்தி தவிக்கிறாள்.
இன்று என்னவானாலும் சரி..
சுந்தர் வீடு திரும்பியவுடன்
அவனது முடிவைத் தெரிந்து
கொள்வதென சிவக்கொழுந்து
திடமாயிருக்கும் போதா
சுந்தர் வீடு திரும்ப வேண்டும்?
மெல்ல மெல்ல..சாந்தியை,
சுந்தர் மணக்க வேண்டும்
எனும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் தந்தையிடம்
தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும்
நடிகர் திலகத்தின் நடிப்பில்
வெட்கி, அவருக்குக் கிட்டாத
உயரிய விருதுகள் தலைகவிழ்கின்றன.
மகன் சொல்லும் மழுப்பலான
பதில்களால் சந்தேகமுற்ற
தந்தை விடாமல் கேள்விகளால்
துளைக்க, தான் வேறொரு
பெண்ணை விரும்புவதாய்
ஒரு வழியாய்ச் சொல்லி விட,
உள்ளத்தின் ஆத்திரத்தையெல்லாம் கைக்கு
கொண்டு வந்து மகனை
அறைந்த பின்னும் மனசாறாத
தந்தை, மகனின் காதலியால்
மகனே அழியப் போவதாய்
கடுஞ்சொல் பேச..
கண்களில் மளமளவென்று நீர்
திரள, வேதனையுடன் தன்
தந்தையை நோக்கி "யாருன்னே
தெரியாத பொண்ணைப் பத்தி
ஏன் கேவலமாப் பேசுறீங்க?"
என்று குரல் கம்ம கேட்கும்
சுந்தர் கதாபாத்திரத்திற்கு
யார் இப்படிப்
பொருந்துவார்கள்..
நடிகர் திலகம் போல.
--------------
உமா கிளம்பி விட்டாள்.
சுந்தர், பரிசுப் பொருளோடு
வழியனுப்ப வந்து விட்டான்.
இனிமேல் நிரந்தமாகப் போகிற
தங்கள் பிரிவை, தற்காலிகமானதென்று எண்ணிக் கொண்ட இரண்டு
அப்பாவி உயிர்களின் கண்ணீரும், நம்பிக்கையும்,
ஏக்கங்களும் அந்த ரயிலடி
இரைச்சலை மீறி சத்தப்படுகின்றன.
இதயத்தின் வடிவங் கொண்டதாய், மூடி திறந்தால்
உருவங் காட்டும் கண்ணாடியைப் பரிசளிக்கிறான்..சுந்தர்.
சொல்லும் போது சுருக்கமாகத்
தெரியும் பிரிவு, அனுபவிக்கக்
கொடியது.
இதனை உணர்ந்து கொண்ட
சுந்தர், உமாவிடம் வேகமாகக்
கேட்கிறான்.
"நானும் இப்படியே உன் கூட
ரயிலேறி வந்துடவா?"
உமாவின் பிரிவு தாங்கா மனம்
பதிலுக்குப் பதிலாக வேறொரு கேள்வியை வீசுகிறது.
"அதுக்குப் பதிலா..இப்படியே
என்னை ஒங்க வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போயிடுங்களேன்."
கூட்டிப் போய் விடலாம் என நினைத்து வரும் சந்தோஷம்,
அப்படியெல்லாம் கூட்டிப்
போய் விட முடியாது என்கிற
யதார்த்தத்தில் துளிர்க்கிற
கண்ணீர்..
கண்ணிமைக்கும் நேரத்துக்கும்
குறைவான கால வித்தியாசத்தில்,இரண்டையும் ஒரே முகத்தில் கொண்டு வர வேண்டும்.
அப்படியெல்லாம் நடிப்பதற்கு
உகந்த அந்த ஒரே
கலைஞனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
அதற்கு, அந்த நடிகர் திலகம்
வாழும் அந்த சொர்க்கம்
நோக்கி கைகூப்ப வேண்டும்.
(...தொடரும்...)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th November 2015 08:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks