-
23rd November 2015, 08:36 PM
#11
Junior Member
Senior Hubber
தரிசனம்-1. இரு மலர்கள்.
----------------------------
தொடர்கிறது...
---------------
நான் எழுதிய கவிதை ஒன்று.
"மனிதனைப் பார்த்து
காலம் கேட்கிறது...
என்ன கிழித்து விட்டாய் நீ..?
தினமும் நாட்காட்டியிலிருந்து
ஒரு தேதியைத் தவிர!"
-காலம், சுந்தரைப் பார்த்து
இப்படியெல்லாம் கேலிக்
கேள்வி கேட்க அவன்
வாய்ப்பளிக்கவில்லை.
வியர்வை சிந்தி உழைத்தான்.
ஜெயித்தான்.
அவனது வெற்றிச் சிரிப்பு
ஒவ்வொன்றையும் தன் புன்னகையோடு துவக்கி வைத்தாள்... சாந்தி.
----------------
சாந்தி,சுந்தரைச் செல்லமாகக்
கடிந்து கொண்டாள்.. விழாவில்
சற்றும் எதிர்பாராவண்ணம்
தன்னை பேச அழைத்த குறும்புக்காக.
சுந்தரும் அவளை வியந்துதான்
போகிறான்..அவள் மிக அழகாக
விழாவில் பேசியதை நினைத்து.
ஒன்று தவறாமல் அத்தனை
விழாக்களுக்கும் அவன் தன்னுடன் அவளை அழைத்துச்
சென்றதால், அவன் பேசுவதை
கவனித்துக் கவனித்துத் தனக்கும் பேசும் திறமை
வந்து விட்டதாகப் பணிவுடன்
தெரிவிக்கும் சாந்தியை
நெகிழ்வோடு அணைத்துக்
கொள்கிறான் சுந்தர்.
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நான்
வாழல சாந்தி. நீ என்னை
வாழ வைக்கிறே."
இனிமையில் ஊறிக் கிடந்த
உள்ளத்திலிருந்து வந்து விழுந்த
தித்திப்பு வார்த்தைகள்.
இந்தக் காட்சியில் வரும் ஒரு வசனத்தை நம் நடிகர் திலகம் பேசும் அழகு..
அப்பப்பா...!
"அவள் அன்பினால் அவனைத்
திணற வைத்தாள்"ன்னு கதைகள்ல படிச்சிருக்கேன்.
அப்ப அதை நினைச்சு சிரிப்பேன்." என்று தொடரும்
வசனம்.
கதையில் படித்ததை சாந்தி
மூலமாக நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தில்
வெளிப்படும் வார்த்தைகள்.
என்னமாய்ப் பேசியிருக்கிறார்..
தலைவர்?
அதிலும், " அவள் அன்பினால்
அவனைத் திணற வைத்தாள்"
என்று சொல்வதைக் கவனியுங்கள்.
ஒரு கதையை ஆழ்ந்து படிக்கையில், அதில் நமக்குப்
பிடித்துப் போன வரிகள்
நம் நினைவடுக்குகளில்
ஆழப் பதிந்து விடும். அந்த
வரிகளை உச்சரிப்பதில்
நமக்கு ஒரு ஆர்வமும்,
எந்த நேரத்தில் அந்த வரிகளை
உச்சரிக்க நேர்ந்தாலும் அதில்
ஒரு ஜாக்கிரதை உணர்வும்
ஏற்பட்டு விடும்.
அந்த ஆர்வத்தையும், ஜாக்கிரதை உணர்வையும்
நடிகர் திலகத்தின் உச்சரிப்பில்
உணரலாம்...
மெய்சிலிர்க்க.
------------------
கீதா காத்திருக்கிறாள்.
கீதா-
சுந்தர் கட்டிலில் சொன்ன
காதல் கவிதைக்கு, கருணையுடன் சாந்தி தந்த
தொட்டில் பரிசு.
சாந்தி-சுந்தர் ராஜாங்கத்தின்
குட்டி ராணி.
இரவு படுக்கப் போகும் முன்
வழக்கமாக அப்பா, அம்மாவுக்குத் தரும் முத்தங்களைக் கொடுப்பதற்காக கண்விழித்துக்
காத்திருக்கிறாள்.
கன்னங்கள் ஆவலோடு
காட்டப்படுகின்றன.
முத்தங்கள் ஆசையோடு
வழங்கப்படுகின்றன.
-----------------
கீதாவின் பள்ளியில், அவளது
வகுப்புக்கு புதிய ஆசிரியை
வரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.
வகுப்பறைக்குள் நுழையும் பழைய ஆசிரியை, தான் வேறு வகுப்புக்குப் போகப் போவதாகவும், புது ஆசிரியை அந்த வகுப்புக்கு வரப் போவதாகவும் தெரிவிக்க..
குழந்தைகள் ஆனந்தக் கூச்சலிடுகின்றன.
அந்தக் கூச்சல் பொறுக்காத
பழைய ஆசிரியை, குழந்தைகளைக் கடுமையாகக்
கடிந்து கொள்ளும் போது
புது ஆசிரியை உள்ளே நுழைகிறார்.
அந்தப் புது ஆசிரியை-நம்
பழைய உமா.
கீதாவின் அருகிலுள்ள பெண்
குழந்தை, பழைய ஆசிரியை
மீதுள்ள கோபத்தில் மேசை
மீதிருந்த கீதாவின் புத்தகத்தை
எடுத்து வீசுகிறது.
அந்தப் புத்தகம், உமாவின் மீது
மோதி விழுகிறது. எடுத்துப்
பிரித்துப் பார்க்கிற உமா, புத்தகத்தில் கீதாவின் பெயரைப்
பார்த்து அவளிடம் வருகிறாள்.
கீதாதான் புத்தகத்தை எறிந்தாள்
எனக் கருதி அவளிடம் கேட்க, அவள் தான் எறியவில்லை என்கிறாள்.
"பொய் சொல்லக் கூடாது."
தெரியும் டீச்சர். எங்க அப்பா
சொல்லிருக்காரு".
-அங்கே சுந்தரின் கதாபாத்திரம்
கம்பீரமாகிறது.
மேலும் உமா, கீதாவுக்கு பொய்
சொல்லுதல் தவறென்று அறிவுரை வழங்க... கீதா
அழுகிறாள்.
அழுததால் அவள்தான் குற்றவாளியென உமா தீர்மானிக்க,மீண்டும் தான்
இல்லை என கீதா மறுக்க..
"நீ இல்லையென்றால் வேறு
யார்?" என உமா கேட்க, கீதா
மௌனம் சாதிக்க, நிஜமாகவே
புத்தகத்தை வீசீய பெண் குழந்தை எழுந்து தான் தான்
எறிந்ததாக ஒத்துக் கொண்டு
அழ, உமா கீதாவிடம் இதை
ஏன் முன்னமே சொல்லவில்லை என விசாரிக்க, கீதா சொல்கிறாள்...
"எப்பவும் அடுத்தவங்களைப்
பத்தி கோள் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க".
- அங்கே, சாந்தியின் கதாபாத்திரம் கம்பீரமாகிறது.
---------------
அடுத்த வேளைச் சோற்றுக்கு
வழியில்லாதவன் வீடும்
குஷியாயிருக்கிறது என்றால்
அந்த வீட்டில் குழந்தைகள்
இருக்கின்றன என்று பொருள்.
எல்லோரையும் மகிழ்வாக்க
அத்தனை வீடுகளுக்கும் தானே
போக முடியாத கடவுள்,
குழந்தைகளை அனுப்பி வைத்தான்.
கீதாவை, சுந்தர் வீட்டுக்கு
அப்படித்தான் அனுப்பினான்.
கீதாவோடு தானும் ஒரு குழந்தையாய் மாறி, சாந்தியும்
கணவனிடம் வேடிக்கை செய்து
விளையாடுகிறாள்.
சுந்தருக்கு உமா அனுப்பிய
ஏமாற்ற வெடி பெரிதாய் வெடிக்கவில்லையோ?
சாந்தியும், கீதாவும் கொளுத்தும்
ஆபத்தே இல்லாத அன்பு
மத்தாப்புதான் ஜொலிக்கிறதோ?
சுந்தர் வீட்டில் தினமும் தீபாவளிதானோ?
-------------------
"மகராஜா.. ஒரு மகராணி"
- சும்மா நேரங் கடத்த
உபயோகமாகும் பாட்டல்ல.
ஒரு அற்புதம் நிறைந்த
ஆறு வருஷ இல்லறத்தின்
நாலு நிமிஷ இசைச்
சுருக்கம்.
இன்னுமொரு அவதாரம் எடுத்து வர யுகக் கணக்கில் காத்திருக்கவில்லை..
காக்க வைக்கவில்லை..
- நடிகர் திலகம்.
கால் மணி நேரம், அரை மணி
நேரத்திற்கு ஒரு அவதாரமெல்லாம் எடுக்க
முடிகிறது.. அவரால்.
கண் அகட்டி, வாய் விரித்து,
மனித பொம்மையாய் தானும்
மாறி அவர் செய்யும் விளையாட்டுகளும், அது கண்டு மகிழ்ந்து பூரிக்கும்
அந்தக் குழந்தையும்.,
தன்னை வருத்திக் கொண்டு
கலை செய்து, காண்போரை
மகிழ்வாக்கிய காலம் வென்ற
கலைஞன் நடிகர் திலகத்திற்கும், அவரால் கால
காலமாக மகிழும் நமக்குமான
எடுத்துக்காட்டுகள்.
( ...தொடரும்...)
Last edited by Aathavan Ravi; 23rd November 2015 at 08:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
23rd November 2015 08:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks