-
12th January 2016, 09:53 PM
#11
Moderator
Diamond Hubber
சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும்! - டெலிபோன் ராஜ் பேட்டி
நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்து விட்டு, சின்னத்திரை சீரியல்கள், சினிமா என பரவலாக நடித்து வருபவர் டெலிபோன் ராஜ். அதிகமாக காமெடி வேடங்களிலேயே நடித்துள்ள எனக்கு சீரியசான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், ரசிகர்களை அழ வைக்கக் கூடிய கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் டெலிபோன் ராஜ்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி..
இதுவரை என்னென்ன சீரியல்களில் நடித்திருக்கிறீர்கள்?
மெளலி இயக்கிய பிளைட் நம்பர் 172 தான் நான் நடித்த முதல் சீரியல். கமல்ஹாசன் சாரே அப்போது எனது நடிப்பை பாராட்டினார். அதன்பிறகு செவன்த் சேனல் தயாரித்த மரியாதை ராமன், கள்வனின் காதலி, வாழ்க்கை, பாண்டியன் பரிசு, எத்தனை மனிதர்கள் என பல சீரியல்களில் நடித்தேன். டைரக்டர் வசந்த் தயாரித்த சீனியர் ஜூனியரில் நடித்தேன். வாரம் ஒரு விஐபி இடம்பெற்ற அந்த சீரியலில் ஒரு வாரம் சூர்யாவும் நடித்தார். பின்னர் பாக்யராஜின் ஒரு கதையின் கதை, ஏவிஎம்மின் கீதாஞ்சலி, இப்படிக்குத்தென்றல், நடிகை ரோஜா நடித்த நதி எங்கே போகிறது, ராதிகாவின் செல்லமே, கோவை சரளாவுடன் தம்பதிகள் களப்படம், ஊர்வசி நடித்த ருக்கு ருக்கு ருக்குமணி, மசாலா குடும்பம், நாம் சிரித்தால் தீபாவளி என கிட்டத்தட்ட நூறு சீரியல்களில் நடித்து விட்டேன்.
சமீபத்தில் மடிப்பாக்கம் மாதவன் தொடரில் 25 எபிசோடு நடித்தேன். எமன், அரசியல்வாதி, கந்துவட்டிக்காரன், பெரிய தாதா, லோக்கல் தாதா, தெலுங்கு தாதா என பல கெட்டப்புகளில் நடித்தேன். அடுத்து ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் ஆ மாமியார் ஓ மருமகள் -என்ற சீரியலில் நடிக்கயிருக்கிறேன்.
கேரக்டர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
என்னைப்பொறுத்தவரை கேரக்டர்தான் முக்கியம். நல்ல வேடம் கொடுத்தால் நான் பணத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எத்தனை பக்கம் டயலாக் கொடுத்தாலும் பேசி நடித்துக்கொண்டேயிருப்பேன். நேரம் காலம் பார்க்கவே மாட்டேன். மேலும், இன்றைக்கு சின்னத்திரையில், தெரிந்தவன், வேண்டப்பட்டவன் என யார் வந்தாலும் சான்ஸ் கொடுத்து சீரியல்களை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தகுதியான வர்களை நடிக்க வைத்து தரமான படைப்புகளை டைரக்டர்கள் நேயர்களுக்கு கொடுக்க வேண்டும்.
காமெடி வேடங்களாக நடித்துள்ள உங்களுக்கு குணசித்ர வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதா?
நிச்சயமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் நான் தோழர்கள் கலைக்களம் -என்ற நாடக ட்ரூப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் 200 நாடகங்களை நடத்தியிருக்கிறேன். பி.எல். ராகவன் எனது 50 சீரியல்களில் நடித்துள்ளார். ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துவோம். தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கோல்கட்டா என பல வெளிமாநிலங்களுக்கு சென்று நாடகம் நடத்தியிருக்கிறேன். பின்னர் மெளலியின் டிராமா ட்ரூப்பில் பத்து வருடம் இருந்தேன்.
முக்கியமாக, மேடை நாடகங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி அழவும் வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு அப்போதே நான் குணசித்ர வேடங்களிலும் நடித்து பெயர் வாங்கினேன். என்னுடன் சேர்ந்து ரசிகர்களையும் கதறி அழ வைத்திருக்கிறேன். அந்த மாதிரி நாடகங்களில் எனக்கு கதாபாத்திரங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது எனக்கு தொடர்ந்து சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே என்னை காமெடியனாகவே பயன்படுத்தி வருகிறார்கள். இவர் இந்த மாதிரி மட்டும்தான் நடிப்பார் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர். ஆனால், எனக்கு சீரியசான, எமோசனலான, செண்டிமென்டான வேடங்களில் நன்றாக நடிக்கத் தெரியும். அதற்கான வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை
உங்களது விருப்பத்தை டைரக்டர்களிடம் தெரிவித்ததுண்டா?
இதுவரை சொல்லவில்லை. ஆனால் இப்போது எனது விருப்பத்தை சில டைரக்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், கடல் படத்தில் மணிரத்னம் சார் ஒரு வேடம் கொடுத்தார். அலையில் விழுந்த என மகன் இறந்து கிடப்பான். அவனை மடியில் போட்டுக்கொண்டு நான் அழுகிற மாதிரி காட்சி. சுற்றி நின்றவர்கள் கண்கலங்கும் அளவுக்கு நடித்தேன். மணிரத்னம் உள்பட அனைவருமே பாராட்டினார்கள். காமெடி பண்றவர் இப்படி நடிக்கிறீர்களே என்றனர். எனக்குள் ஒரு குணசித்ர நடிகர் இருப்பதை அப்போது வெளிப்படுத்தினேன். ஆக, சரியான சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கிறேன்.
ஆனால், காமெடியாக நடிப்பதுதான் கடினம் என்று சிலர் சொல்கிறார்களே?
என்னைக்கேட்டால், நடிப்பைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதிப்பது, சண்டை காட்சிகளில் நடிப்பதுதான் கடினம். மற்றபடி எந்த நடிப்பிலும் கஷ்டம் இல்லை. அதேசமயம், நம்முடன் இணைந்து நடிப்பவர்களும் நல்ல நடிகர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் போட்டி போட்டு நடிக்க முடியும். காட்சிகளும் நன்றாக வரும். இதை வடிவேலு செய்வார். அவருடன் நடிக்கிற அனைவருமே நல்ல நடிகர்களாக போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் அவரது காமெடிகள் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது என்கிறார் நடிகர் டெலிபோன் ராஜ்.
நன்றி: தினமலர்
Last edited by aanaa; 12th January 2016 at 09:56 PM.
"அன்பே சிவம்.”
-
12th January 2016 09:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks