-
30th January 2016, 08:39 AM
#1861
Junior Member
Seasoned Hubber
Courtesy: Dinamani
டி.ஆர். ராஜகுமாரி: 3.கூண்டுக்கிளி !
1948--ல் டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு ஜாக்பாட் கிருஷ்ணபக்தி. லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் உருவாக்கிய உன்னதச் சித்திரம்!
ரஸ்புடினின் பிரெஞ்சு நாவல் தி மான்க் அதைத் தமிழுக்கேற்றாற் போல் வெற்றிகரமாகப் படைத்திருந்தார் டைரக்டர் ஆர்.எஸ். மணி.
கண்ணகி போல் அவரது படைப்புகளில் மறக்க முடியாத ஓர் அற்புத சிருஷ்டி கிருஷ்ணபக்தி.
முதலில் ஸ்திரிலோலன் என்பதை மறைத்து வாழும் கபட சந்நியாசி, பிற்பாதியில் தவறை உணர்ந்து திருந்தும் ஸ்வாமிகள் என்று பி.யூ. சின்னப்பா சிறந்த நடிப்பின் சிகரத்தில் பின்னிப் பிணைந்து நின்றார்.
வழக்கமாகத் திரையில் வசீகரமான தாசியாக வலம் வந்து, தனது கற்கண்டு பேச்சாலும், காண்போர் மயங்கும் கண் கவர் ஆடைகளாலும், கண்களின் வீச்சாலும், குளிர்ச்சி தரும் சந்தனப் புன்னகையாலும், நாயகர்களை மோகவலையில் விழ வைத்து, மோசம் செய்து ஏமாற்றித் துடிதுடிக்கச் செய்வார் டி.ஆர். ராஜகுமாரி.
கிருஷ்ணபக்தியில் அவர் ராஜநர்த்தகி தேவகுமாரி! - டி.ஆர். ராஜகுமாரியின் அபார நடிப்பாற்றலை அரங்கேற்றிய அட்சயப்பாத்திரம்!
மன்னனின் மஞ்சத்தில் விழ வேண்டிய மந்தார மலர் தேவா சரஸத்தை ஏற்க மறுத்து, பி.யூ. சின்னப்பாவைச் சரணடைவார் நாயகி.
சாரஸம் - வசீகர கண்கள் சீர் தரும் - முகம் சந்திர பிம்பம்
செக்ஸ் சாமியார் பி.யூ. சின்னப்பா சொப்பனத்தில் மோகனாங்கி டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்துப் பாடிய, கேட்கத் தெவிட்டாத கானம்!
தட்டு வாணிக்குத் தாலி பாக்கியம் கிடையாது என்று வசனம் பேசி,
தேவதாசிகளின் அவலத்தைக் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறிய டி.ஆர். ராஜகுமாரி ரசிகர்களுக்குப் புதுசு!
தன் ஆசைக்கு இணங்காத ஆடல் அரசியின் கற்பைப் பறிக்க முயல்கிறான் அரசன்.
மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி தன் மான்விழிகளைக் கத்தியால் குத்திக்கொண்டு, குருடாகிறாள் தேவா.
துறவறமே சிறப்பு என்று வாழும் தேவாவுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிரசன்னமாகி மீண்டும் கண் ஒளி தருகிறார்.
கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டி.ஆர்.ராஜகுமாரி குணச்சித்திர நடிப்பின் உச்சம் தொட்டார்.
இன்றைக்கும் அவ்வப்போது சின்னத் திரைகளில் அதிசயமாகக் காணக் கிடைக்கிறது கிருஷ்ணபக்தி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்த டி.ஆர். ராஜகுமாரியின் மகத்தான வெற்றிச் சித்திரம்!
பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடுவின் மற்றொரு தயாரிப்பிலும் டி.ஆர். ராஜகுமாரிக்கு அழைப்பு வந்தது. சூப்பர் ஸ்டார்களுடன் மாத்திரமே நடிப்பேன் என்று ஒருபோதும் டி.ஆர். ராஜகுமாரி அடம் பிடித்ததில்லை.
டி.ஈ. வரதன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரி நாயகியாக பவளக்கொடி சினிமாவில் நடித்தார். 1949 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது.
டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்களில் முதலும் கடைசியுமாகத் தோன்றிய டாக்கி விஜயகுமாரி. ஜூபிடர் தயாரிப்பு. எம்.ஜி.ஆரை ஹீரோவாக்கிய ஏ.எஸ். ஏ. சாமியின் இயக்கத்தில் 1950ல் வெளியானது.
அண்ணாவின் வேலைக்காரியை அடுத்து வெளியான ஜூபிடர் படம்.
வேலைக்காரி மாதிரி சமூக விழிப்புணர்வுச் சித்திரமாக அமையவில்லை. மாயாஜாலக் கதையாகப் போனதால் மக்கள் நிராகரித்தனர்.
டி.ஆர். ராஜகுமாரியுடனானத் தனது அனுபவங்களை ஏ.எஸ். ஏ. சாமி எழுதி இருக்கிறார்.-
ஒன்பது மணி கால்ஷீட்டுக்கு எட்டு ஐம்பத்தைந்துக்கெல்லாம் முழு மேக் அப்போடு செட்டுக்குள் தயாராக இருப்பார்.
யூனிட்டின் ஃபேனை எதிர்பார்த்துக் காத்திராமல், அவருடைய பிரத்யேக மின்விசிறியைச் சுழல விடுவார்.
ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போகும் வரை டி.ஆர். ராஜகுமாரி நடந்து கொள்ளும் விதமும் அவரது பண்பாடும் இருக்கிறதே ... அப்பப்பா!
சினிமா ஸ்டார்கள் குறிப்பாக நடிகைகள் பலரிடமும் காண முடியாத ஒரு தனித்தன்மையோடு நடந்து கொள்வார்.
இத்தனைக்கும் அம்மையார் புகழின் உச்சத்தில் இருந்த சமயம்!
தனக்கான காட்சிகள் ஓவர் என்று டைரக்டர் கூறுகிற வரையில் சேரை விட்டு எழுந்தது இல்லை. அங்கும் இங்கும் போவது, அரங்குக்கு வெளியே சென்று அரட்டை அடித்துத் திரிவது அறவே கிடையாது.
யாராக இருப்பினும் ஒரு வார்த்தை கூட வீணாகப் பேச மாட்டார்.
படப்பிடிப்பு சமயத்தில் நான் எடுக்க இருக்கும் காட்சியைப் பற்றி, இது எதற்கு அது எதற்கு என்றெல்லாம் குறுக்கு கேள்விகள் இருக்காது.
வீண் விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பு நேரத்தையும், தயாரிப்பாளரின் முதலீட்டையும் விரயம் செய்ய மாட்டார்.
ஷூட்டிங்குக்கு வருவதற்கு முதல் நாளே ஏதாவது சந்தேகங்கள் தோன்றினால், இயக்குநரிடம் முழு விளக்கமும் கேட்டுக் கொள்வார். தன் இஷ்டத்துக்குக் கருத்து சொல்ல மாட்டார். தேவை இருந்தால் மாத்திரமே அபிப்ராயங்களைத் தெரிவிப்பார்.
டைரக்டர் சொல்கிற மாதிரி நடிப்பில் செயல்படுவதைத் தனது தலையாய கடமையாகக் கருதியவர் டி.ஆர். ராஜகுமாரி.
----------------
டி.ஆர். ராஜகுமாரியுடன் மனோன்மணி, பவளக்கொடி ஆகிய டாக்கிகளில் இடம் பெற்றார் டி.ஆர். மகாலிங்கம்.
டி.ஆர்.கள் இருவரும் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் சிட்டாடலின் இதயகீதம்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய ஜோசப் தளியத்தின் படைப்பு. இனிய பாடல்களுடன் கூடிய காதல் சித்திரம். வெற்றிகரமாக ஓடியது.
1951ல் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா நிறைவாக இணைந்து நடித்த வனசுந்தரி, 1952ல் டி.ஆர். ராஜகுமாரி முதலும் கடைசியுமாக பாகவதருடன் ஜோடி சேர்ந்த எம்.கே. டி.யின் தயாரிப்பு அமரகவி இரண்டும் தோல்வி அடைந்தன.
1953ல் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்து, சித்தூர் வி. நாகையா இசை அமைத்து உருவாக்கிய சிறந்த படைப்பு என் வீடு பிரமாதமாக ஓடியது.
அதே ஆண்டில் எம்.ஜி.ஆர்.- டி.ஆர்.ராஜகுமாரி தோன்றிய பணக்காரி வசூலில் வறுமையைத் தழுவியது.
1954 ன் மனோகரா. மார்ச் 3ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்தது.
தொடர்ந்து சில தோல்விகளைச் சந்தித்துப் பொருளாதார ரீதியில், மிகவும் நலிவடைந்தது ஜூபிடர். நன்றி மறவாமல் மனோகராவில் பங்கேற்று டி.ஆர். ராஜகுமாரி ஜூபிடரைக் கைத்தூக்கி விட்டார்.
டி.ஆர். ராஜகுமாரி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் அல்ல.
தனது புகழ் பெற்ற சொந்தத் தியேட்டரில் மனோகராவை திரையிட்ட அன்று, ஈவினிங் ஷோவில் இன்டர்வெல் நேரத்தில்,
அவையில் தோன்றி ரசிகர்களுக்கு அதிசயக் காட்சியும் அளித்தார் டி.ஆர். ராஜகுமாரி.
வசந்தசேனை வேடத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்திருக்காவிடின், மனோகராவுக்கு மாபெரும் வெற்றி வாய்த்திருக்காது!
1936ல் தயாரான மனோகரா ஓடவில்லை. மனோகரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியாரே அதில் மனோகரனாக நடித்திருந்தார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவான டி.ஆர். ராஜகுமாரி படம் மனோகரா மாத்திரமே.
நடிகர்திலகமும் வசந்தசேனையாக அநேக முறை நாடகங்களில் நடித்திருக்கிறார்.
கணேசனின் கண் எதிரிலேயே ஆளை மயக்கும் காஸ்ட்யூமில், போதை வழியும் விழி அசைவில், புருவங்களை உயர்த்தி, புயலின் சீற்றத்தைச் செந்தமிழ் உதடுகளில் உயர்த்திப் பிடித்து ... டி.ஆர். ராஜகுமாரி புத்தம் புது வசந்தசேனையாக வடிவெடுத்தார்.
கதைப்படி மட்டுமல்லாமல் நடிப்பிலும் வீழ்த்தி விடுவாரோ சிவாஜியை...! என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
அத்தனை எளிதில் மறக்க முடியுமா...! டி.ஆர்.ராஜகுமாரி எழிலாகத் தோன்றி வஞ்சக மொழி பேசி வசீகரிக்கும் முதல் காட்சியை...
நான் சிரித்தால் போதும்... சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வையை வீசினால் இந்த மண்டலமே என் காலடியில்..!
நான் நினைத்தால் இப்போதே ராணி. என் மகன் வசந்தன் இளவரசன்
மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் படம் மனோகரா.
முந்தானை நுனியைக் கைகளில் சுற்றிக் கொண்டு மந்திர ஆலோசனை புரிவது டி.ஆர். ராஜகுமாரி ஸ்டைல்! மனோகராவிலும் அது மகிழ வைத்தது.
-------------
மனோகராவோடு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் டி.ஆர். ராஜகுமாரி.
ஒவ்வொர் விடியலிலும் சூர்யோதயமாக டி.ஆர். ராஜகுமாரியின் முகம் பார்க்கும் சுற்றம். சம்சாரக் கப்பலை எந்த வித சேதாரமும் இன்றி கரை சேர்த்தாக வேண்டும்.
பல ஆண்டுகள் அரிதாரம் பூசி செயற்கை அனலில் பாடுபட்டு சம்பாதித்த காசு பணம்... தன் தம்பிக்காகத் தைரியமாகப் படத் தொழிலில் முதலீடு செய்தார்.
டி.ஆர். ராஜகுமாரி கனவுக்கன்னியாக மட்டும் வெற்றி பெறவில்லை. தரமான படத் தயாரிப்பாளராகவும் பிரமாதப்படுத்தினார்.
தனது தம்பி டி.ஆர். ராமண்ணாவை பிரபல டைரக்டராக்கி அழகு பார்த்தார். ராமண்ணாவுக்காக அக்கா ஆரம்பித்த நிறுவனம் ஆர்.ஆர். பிக்சர்ஸ்.
நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளர் ராமச்சந்திரன். இளைய சகோதரர்கள் ராமு அண்ணா என்று சேர்த்து அழைக்க, ராமண்ணாவானார்.
அக்கா நடிக்கும் காட்சிகள் இன்னமும் தரமானவையாக இருந்திருக்கலாம்... என்று தினந்தோறும் டி.ஆர். ராஜகுமாரியுடன் தர்க்கம் செய்வார் ராமண்ணா.
ராமு, டைரக்டர் எப்படி நடிக்கச் சொல்றாரோ... அப்படியே நடிக்கிறேன். என் படத்துக்கு நீயா டைரக்டர்...?
நீ சினிமா டைரக்டர் ஆகும் போது என் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கணும்னு சொல்லு. அப்பப் பார்த்துக்கலாம்.
வெளியார் யாரும் நிச்சயம் உனக்குத் துணிஞ்சு டைரக்டர் சான்ஸ் தர மாட்டாங்க. நாமே சொந்தமாப் படம் தயாரிச்சா நீ சொல்றது நடக்கும்.
உன்னை டைரக்டராக ஆக்குறதுதான் அதுக்கு ஒரே வழி.
டி.ஆர். ராஜகுமாரிக்கு மூன்று தம்பிகள். 1.ராமச்சந்திரன் என்கிற ராமண்ணா 2. சக்கரவர்த்தி 3.பார்த்தசாரதி
இரண்டு தங்கைகள் சேதுலட்சுமி மற்றும் ரங்க நாயகி.
எஸ்.பி. எல். தனலட்சுமி கடைசி சித்தி. விகடயோகியில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்த டி.எஸ். தமயந்தி ராஜகுமாரியின் பெரியம்மா பெண். சொந்தங்களில் முதலில் திரையில் முகம் காட்டியவர் அவரே.
டி.எஸ். தமயந்தியின் மகள் குசலகுமாரி. கூண்டுக்கிளியில் சிவாஜியின் காதலியாகவும், கல்கியின் கள்வனின் காதலியில் தங்கை அபிராமியாகவும் நடித்திருப்பார். ஜெமினியின் அவ்வையாரில் இளைய அவ்வை.
நேற்றைய தமிழகத்தின் நாட்டிய நடிகை. கொஞ்சும் சலங்கையில் குமாரி கமலாவுடன் அவர் ஆடிய போட்டி நடனம் வெகு பிரபலம்.
கவர்ச்சி சுனாமிகளில் உடன்பிறப்புகளான ஜோதிலட்சுமியும் -ஜெயமாலினியும் டி.ஆர். ராஜகுமாரியின் கலைக் குடும்ப வாரிசுகளே!
அவர்கள் இருவரும் டி.ஆர். ராமண்ணாவால் முறையே பெரிய இடத்துப் பெண், தாலியா சலங்கையா ஆகிய படங்களில் அறிமுகமாயினர். டாக்டர் சிவா ரிலிசில் முந்திக் கொண்டு ஜெயமாலினிக்குப் புகழ் பெற்றுத் தந்தது.
மேற்கூறிய அனைவரும் டி.ஆர். ராஜகுமாரியின் கன்னியாகுமரி பவனத்தில் ஒன்றாக வாழ்ந்தனர்.
டி.ஆர். ராஜகுமாரியின் கடுமையான உழைப்பு அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தந்தது.
குசலகுமாரி முதுமையாலும் வறுமையாலும் அவதியுற்றதை அறிந்ததும், முதல்வர் ஜெயலலிதா கருணையுடன் வீடு ஒன்றை ஒதுக்கித் தந்து அவர் கண்ணீரைத் துடைத்தார் என்பது வரலாறு.
சாய்பாபாவை கும்பிட்டு விட்டு ஆர்.ஆர். பிக்சர்ஸ் தன் சரித்திரத்தைத் தொடங்கியது. முதலில் வாழப்பிறந்தவள் படத்துக்கு பூஜை போட்டார்கள்.
இதோ பார்... நான் உன் சிஸ்டர், அது இதுன்றதெல்லாம் வீட்டோட. செட்ல நீதான் கமாண்டர். நீ சொல்ற மாதிரிதான் நாங்க நடக்கணும்.
நடிக்கும் போது நான் ஏதாவது தவறா செஞ்சிட்டா அதைத் திருத்தறதுக்கு நீ தயங்கக் கூடாது. ஆர்ட்டிஸ்டை கண்டிக்கப் பின் வாங்கக் கூடாது.
உன் படம் நல்லா இல்லேன்னா... பாதிக்கப்படப் போற முதல் நபர் நீ தான்... அதைப் புரிஞ்சி நடந்துக்க.
கட்டளை போல் ஒலித்தது அக்கா டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்.
அடுத்து கூண்டுக்கிளி.
தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க?
போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.
டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!
நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன்.
சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!
நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்!
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே.
அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க?
கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க.
நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.
சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.
நாம் படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.
கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.
அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.
சினிமா பாஷையில் கேட்கிறார்... என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.
என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.
ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016 08:39 AM
# ADS
Circuit advertisement
-
30th January 2016, 08:42 AM
#1862
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
நினைவுகளின் சிறகுகள்: தாய்மையின் குரல்! - எஸ். வரலட்சுமி
‘ஐந்தாவதாகப் பெண் பிறந்தால் அதிர்ஷ்டம்!’ என்றார்கள் மூத்த குடிகள். வரலட்சுமியின் பெற்றோர் தங்களின் கடைசி, ஐந்தாவது மகளைத் தத்துக்கொடுத்துவிட்டார்கள். குழந்தையில்லாத கர்நூல் பெரியம்மாவின் சுவீகாரப் புத்திரி வரலட்சுமியை, பெரியப்பா - ரங்கப்ப நாயுடு கானக் குயிலாக வளர்த்தார்.
“பெரியப்பா எல்லாத்துலயும் எனக்குச் செல்லம் கொடுப்பாரு. ஆனா சங்கீதப் பயிற்சியில கொஞ்சமும் கருணை காட்ட மாட்டார். காலையில நாலு மணிக்கு எழுந்து பாட்டு பாடலைன்னா காதைப் பிடிச்சித் திருகிடுவாரு. காது மடல் செவந்து கன்னிப்போயிரும். ஒரு பானையில் தண்ணி கொட்டி அதுல ஐஸ் கட்டிகளை மிதக்க விடுவார். குடத்தை அணைச்சபடி நான் பாடணும்.
பானையோட ஜிலுஜிலுப்பு என் நெஞ்சுல பட்டதும் ஒரு உதறல் வரும். பாடும்போது குரலே புதுசாகிப் பல சங்கதிகள் உருவாகும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பயிற்சி பண்ணியிருக்கேன்” என்று எஸ். வரலட்சுமி சொல்லியிருக்கிறார்.
இரண்டு பாடல்கள்
கே. சுப்ரமணியத்தின் ‘சேவா சதனம்’ டாக்கியில் பத்து வயதில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் பாடி நடிக்கத் தொடங்கியவர் வரலட்சுமி. நிறைவாக கமல் ஹாஸனின் ‘குணா’வில் மாறுபட்ட அம்மாவாகத் தோன்றி, ‘உன்னை நானறிவேன்... என்னை அன்றி யார் அறிவார்...’ என்று அவர் பாடியது இளையராஜாவின் இசையில் தாய்மையின் குரலாக ஒலித்தது.
வரலட்சுமி திரையில் பாடி நடித்த இரு தாலாட்டுகள் சென்ற நூற்றாண்டுத் தமிழச்சிகளின் தாய் வீட்டு சீதனங்கள்!
1.சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே... ( படம் - வீரபாண்டிய கட்டபொம்மன் - கு. மா.பாலசுப்ரமணியம் பாடல் - இசை ஜி.ராமநாதன்)
2. ‘இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் நான் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ (படம் - நீதிக்குத் தலை வணங்கு; புலமைப்பித்தன் பாடல்; இசை எம்.எஸ். விஸ்வநாதன்) .
கட்டபொம்மனின் போட்டிப் படம் கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’. பரபரப்பான சூழலில் இரண்டிலும் ஒரே சமயத்தில் வரலட்சுமி பாடி நாயகியாக நடித்திருக்கிறார். ‘தென்றல் வந்து வீசாதோ... தெம்மாங்கு பாடாதோ...’ என்று ‘சிவகங்கைச் சீமை’யில் வரலட்சுமி பாடிக் கண்ணீரைச் சிந்திய தாலாட்டில், கவிஞரின் மண்ணின் மணமும் நாட்டுப்பற்றும் வேர் பிடித்து நின்றன. கனிவும் கம்பீரமும் தண்டவாளங்களாகத் தாங்கி நிற்க, வரலட்சுமியின் குரலில், நம் செவிகளில் வந்து சேர்ந்த சுக ராக ரயில்கள் ஏராளம்!
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பாடகி- நடிகைகளில் கணீர் கணீரென்று அட்சர சுத்தமாகத் தமிழை உச்சரித்தவர் எஸ். வரலட்சுமி மட்டுமே!
திரையிசைக்குத் தேசிய விருது
‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி சினிமாவுக்காகப் பாடியது சீக்கிரத்திலேயே பலித்தது. வரலட்சுமியின் நட்சத்திரப் பரமபதத்தில் அவர் ஏறிய ஏணிகளை விட, அவரது சங்கீதம் சாகடிக்கப்பட்ட தருணங்களே அதிகம். பாடல் பறிபோனதற்காக எஸ். வரலட்சுமியோடு சேர்ந்து கலைவாணரே வருந்திய நிகழ்வும் உண்டு.
நடிகர் திலகத்துடன் எஸ். வரலட்சுமி பாடி நடித்தவை, அவரை இருட்டடிப்பு செய்யாமல் பேரும் புகழும் பெற்றுத்தந்தன. 1959ல் தமிழின் முதல் சரித்திரப் படமான ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னின் ‘பட்டமகிஷி ஜக்கம்மா’வாக நடித்து அவர் பாடிய ‘மனம் கனிந்தருள் வேல் முருகா’ பார்ப்போர், கேட்போர் உள்ளத்தை உருக்கியது.
1967-ல் தமிழ்த் திரை இசைக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த ’கந்தன் கருணை’யில் இந்திராணியாக, கே.வி. மகாதேவனின் இசையில் (‘வெள்ளி மலை மன்னவா’), சிம்மக்குரலோன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஒரே வண்ணப் படம் 1969-ன் ‘தங்கச் சுரங்கம்’. அதில் தாயாக (‘பெற்ற மனம் சிறையிலே’) , 1973-ல் முதல் சினிமாஸ்கோப் வண்ணச் சித்திரமான ‘ராஜராஜ சோழ’னில் - பெரிய குந்தவையாக (ஏடு தந்தானடி தில்லையிலே, தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!), 1974ல் சிவாஜி நடித்த கடைசி கருப்பு-வெள்ளை சினிமா ‘தாய்.’
அதில் நாயகனின் அம்மாவாக (’மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி’) ஆகிய பாடல்கள் அவரது குரலில் ஆன்மிக இனிமையின் உச்சமாக நேற்றைய வெள்ளிக் கிழமைகளில் விவித பாரதியில் தவறாது ஒலித்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
1979-ல் சிவாஜி கணேசனின் 201-வது படம் கவரிமான். அதில் நாயகனின் அன்னையாக - பிரபலமான கர்நாடக இசைப் பாடகியாக எஸ். வரலட்சுமி! இளையராஜாவின் இசையில், மகாகவி பாரதியின் ‘சொல்ல வல்லாயோ கிளியே’ கவிதையைப் பாடினார்.
ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற ‘அமர’ தீபங்களில் வரலட்சுமியும் ஒருவர். ‘மாட்டுக்கார வேலன்’, ‘சவாலே சமாளி’, ‘ஆதிபராசக்தி’ ஆகிய வெற்றிப் படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். 1968-ல் ‘மீனாட்சி’ என்கிற ஆணவமிக்க சீமாட்டியாக, வரலட்சுமியின் அட்டகாச நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடியது கே.எஸ். ஜியின் ‘பணமா பாசமா.’
வரலட்சுமியின் நடிப்பாற்றலை முதலீடாகக் கொண்டு உடனடியாக, 1969-ல் கே.பாலசந்தரும் ‘பூவா தலையா’ 100 நாள் படம் கண்டார். கே.பி.யின் ‘காவியத்தலைவி’ போன்ற வெள்ளி விழா சினிமாக்களிலும் வரலட்சுமியின் பங்களிப்பு உண்டு. முதல் சுற்றைக் காட்டிலும் இரண்டாம் இன்னிங்ஸில் வரலட்சுமி நன்கு பிரகாசித்தார். ‘பணமா பாசமா’வில் வரலட்சுமியை இரும்பு மனுஷியாகக் காட்டியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
தனது மிக பிரம்மாண்ட புராணச் சித்திரமான ‘ஆதிபராசக்தி’யில், தயையும் கருணையும் ததும்பும் லோக மாதாவாக வரலட்சுமியைக் கூடு விட்டுக் கூடு பாய வைத்தார். வரலட்சுமியை ‘அம்பாளாக’ ஏற்றுக்கொண்டனர் மக்கள். 1971-ன் தீபாவளி வெளியீடான ‘ஆதிபராசக்தி’ அமோக வசூலோடு வெள்ளிவிழா கொண்டாடியது.
எம்.கே. தியாகராஜபாகவதர் (சியாமளா), பி.யூ. சின்னப்பா (வனசுந்தரி), டி.ஆர். மகாலிங்கம் (மச்ச ரேகை) ஆகிய முன்னாள் மூன்று சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்து உடன் பாடிடும் வாய்ப்பையும் பெற்றவர் வரலட்சுமி.
‘ஜெமினி’ வெளியீடான ‘சதி முரளி’ டாக்கியில் நடித்தபோது அரும்பியது டி.ஆர். மகாலிங்கம் - வரலட்சுமியின் தோழமை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வாழ்விலும் இணைந்தார்கள். மகாலிங்கம் மறைந்த பின்னர் கண்ணதாசனின் அண்ணன் - பட அதிபர் ஏ.எல். ஸ்ரீநிவாசனுடன் வாழ்வில் இணைந்தார் வரலட்சுமி. இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள். தமது 82 வயதில் சென்னையில் மறைந்த வரலட்சுமியின் குரலும் நடிப்பும் மறையவே மறையாது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016, 08:44 AM
#1863
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 40: இசை என்றொரு பெரும் வரம்!
திரைக்கதையின் நிகழ்வுகளுக்கேற்ப பொருத்தமான பாடல்கள் ஒலிப்பது இந்தியத் திரையுலகின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்துவரும் மரபுதான். பரஸ்பரம் தங்கள் கலை வெளிப்பாட்டுடன் பகிர்ந்துகொண்டதன் மூலம், அந்த மரபின் செழுமையை, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை ரசிகர்களுக்கு உணர்த்திய மேதைகள் இளையராஜாவும் மகேந்திரனும்.
இக்கூட்டணியின் முக்கியமான படைப்பு 1980-ல் வெளியான ‘ஜானி’. மகேந்திரன், இளையராஜா, ரஜினி என்று ‘முள்ளும் மலரும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி இப்படத்தில் மீண்டும் அமைந்தது. இவர்களுடன், இந்திரனின் மோதிரத்தைத் தவற விட்டுவிட்டதால் பூமிக்கு வர நேர்ந்த தேவதையான தேவியும் இணைந்துகொண்டார். ஐந்து பாடல்கள், படத்தின் மவுனங்களுக்கு இடையில் இழைந்தோடும் பின்னணி இசைக்கோவை என்று தேனில் தோய்த்தெடுத்த இசையை வழங்கியிருந்தார் இளையராஜா.
படத்தின் தொடக்கப் பாடலான ‘ஒரு இனிய மனது’ பாடல் சுஜாதா பாடியது. அமைதியைக் குலைத்துவிடாத மென் குரலில் ‘லால..லாலலா..லாலலா’ எனும் ஹம்மிங்; வழிந்தோடும் ஒற்றை வயலின் என்று முகப்பு இசையே பாடலின் தன்மையைச் சொல்லிவிடும். பல்லவியைத் தொடர்ந்து துயரங்களைக் கரையவிடும் ஒற்றை வயலின் ஒலிக்கும். ஐரோப்பிய கிராமத்தின் வனப்பை விரிக்கும் சிம்பனி பாணி இசைக்கோவை அதைத் தொடரும்.
இரண்டாவது நிரவல் இசையில் சாக்ஸபோன், புல்லாங்குழலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஒற்றை வயலின். இந்த முறை அதில் தொனிக்கும் துயரம், அன்பின் வரவுக்காகக் காத்திருக்கும் அர்ச்சனாவின் மனதைப் பிரதிபலிக்கும். சில்ஹவுட் பாணியிலான ஒளியமைப்பில், தலைமுடி தங்கமாக மின்ன மேடையில் பாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அழகு வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. பாடல் தரும் பரவசத்தில் ‘வந்த வேலையை’ மறந்து வேறு உலகத்தில் மூழ்கிவிடுவான் ஜானி.
‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் ‘ராமே(ன்) ஆண்டாலும்’ பாடலில் மலைவாழ் மக்களின் குரல்களையும் இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா. ‘ஜானி’ படத்தில் ஷைலஜா பாடும் ‘ஆசையைக் காத்துல’ பாடலும் அந்த வகையைச் சேர்ந்தது. கானகத்தின் கனத்த மவுனத்தைப் பிரதிபலிக்கும் புல்லாங்குழல், மலை முகடுகளில் எதிரொலிக்கும் பழங்குடியினப் பெண்களின் கோரஸுடன் தொடங்கும் இப்பாடல் மலைக் காடு ஒன்றில் இரவில் தங்கும் அனுபவத்தின் சிலிர்ப்பைத் தரக்கூடியது.
வித்தியாசமான தாளக்கட்டில் அதிரும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னதாக, ‘யோ…யோ’ எனும் பெண் குரல்களைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் ஷெனாயை ஒலிக்க விடுவார் இளையராஜா. தீக்காய்தலுக்காக மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து பரவிச் செல்லும் புகையைப் போல் பாடல் முழுவதும் புல்லாங்குழலைக் கசிய விட்டிருப்பார். இப்பாடலில் தோன்றும் நடிகை சுபாஷிணி, பாடலுக்கு வாயசைக்காமல் நடனம் ஆடுவதாகக் காட்சிப்படுத்தியிருந்தார் மகேந்திரன். “என்னங்க இது, இப்படிப் பண்ணிட்டீங்களே என்று மிஸ்டர் இளையராஜா என்னிடம் கேட்டார்” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் புன்னகையுடன் குறிப்பிட்டார் மகேந்திரன்.
வாவா பெடல் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டாருடன் டிஸ்கோ பாணியில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கும் ‘ஸ்னோ ரீட்டா ஐ லவ் யூ’ பாடல், அகன்ற கண்ணாடியும் பெல்பாட்டமும் கலைந்த கேசமுமாய் வளையவரும் ரஜினியின் ஸ்டைலுக்காகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை வேகம் கொண்ட பாடல் இது. அதேசமயம், கரடுமுரடான பாத்திரமான வித்யாசாகருக்குள் எழும் காதல் உணர்வைப் பிரதிபலிக்கும் மெல்லிசையை, பாடல் நடுவே கசிய விட்டிருப்பார் இளையராஜா.
முதல் நிரவல் இசையில் சற்றே நகைச்சுவை உணர்வு ததும்பும். வா வா பெடல் இசைக்குப் பின்னர், பாறையிலிருந்து விழும் அருவியின் சாரல் போன்ற வயலின் இசைக்கோவை ஒலிக்கும். பாடல் காட்சியிலும் அதையே பிரதிபலித்திருப்பார் மகேந்திரன். இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் ஒற்றை வயலின், அதைத் தொடர்ந்து, கைக்கெட்டும் தொலைவில் மிதக்கும் மேகத்திலிருந்து விழும் தூறலைப் போன்ற இசை என்று இனிமையைச் சேர்த்துக்கொண்டே போவார் ராஜா. எஸ்.பி.பி. குரலின் கம்பீரம், பாடலின் புத்துணர்ச்சியை இரட்டிப்பாக்கும்.
ஜென்ஸி பாடிய மிகச் சிறந்த பாடல், ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’. பியானோவின் அதிகபட்ச இனிமையை வெளிக்கொணர்ந்த அதி உன்னதமான பாடல்களில் ஒன்று இது. மெலிதான முணுமுணுப்பாகத் தொடங்கும் பியானோ, ரஷ்ய நாவல்களில் வருவதுபோல், மெலிதான பனிப்படலம் போர்த்திய ஸ்டெப்பி புல்வெளி நிலத்தில் இருக்கும் ஒற்றை வீட்டை நினைவுபடுத்தும். அர்ச்சனாவைப் பொறுத்தவரை, தவறான நோட்ஸைத்தான் பியானோவில் ஜானி வாசிப்பான்.
ஆனால், அதுவே நம்மை உருக வைக்கப் போதுமானதாக இருக்கும். அர்ச்சனாவின் வாசிப்பில் அவள் வீட்டின் வரவேற்பறையில் உருக்கொள்ளும் இசை, மெள்ளப் பெருகிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் இடம்கொள்ளாமல் வெளியே மிதந்து சென்று, மாலை நேரத்தின் மலைப் பிரதேசங்களில் உலவத் தொடங்கிவிடும். நிரவல் இசையை அப்படித்தான் உருவாக்கியிருப்பார் இளையராஜா. அடிவானத்தில் மெல்லியக் கீற்று போல் தோன்றி வளர்ந்துகொண்டே வரும் வானவில்; மலை முகடுகளின் வழியே எல்லைகளற்ற பயணத்தில் நீண்டு செல்லும் மாலை நேரச் சூரியனின் கதிர் என்று வயலின் இசை மூலம் ஒரு தேர்ந்த ஓவியனின் படைப்பாற்றலுடன் காட்சிகளை உருவாக்கியிருப்பார்.
சரணம் தொடங்குவதற்கு முன்னர், மலை மீதிருந்து மிதந்து வரும் இசை மீண்டும் வரவேற்பறையில் பரவும். இரண்டாவது நிரவல் இசையில் வால்ட்ஸ் பாணி தாளத்தில் பியானோ, புல்லாங்குழல், வயலின் என்று இசைக் கருவிகள் ஒன்றையொன்று தழுவியபடி பாலே நடனம் ஆடுவதைப் போன்ற விரிவான இசைக்கோவையைத் தந்திருப்பார். அதைத் தொடர்ந்து வரும் ‘நீ தீட்டும் கோலங்கள்’ எனும் வரி, உண்மையில் இளையராஜாவைக் குறிப்பதாகவே தோன்றும்.
சிறந்த பாடல்கள் நிறைந்த இந்த ஆல்பத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘காற்றில் எந்தன் கீதம்’. பொன்னிற மழைத்துளிகளின் நடுவே சில்லிடும் மாலை நேரக் காற்றாக, கிட்டார் இசைக்கு மேல் ஒலிக்கும் ஜானகியின் ஆலாபனையுடன் பாடல் தொடங்கும். காதலனின் வருகைக்காகத் துடிப்புடன் காத்திருக்கும் இதயத்தின் புலம்பல் இப்பாடல். முதல் நிரவல் இசையில் மெல்லிய முணுமுணுப்பாகத் தொடங்கும் புல்லாங்குழல், அதைத் தொடரும் சாக்ஸபோன், சந்தூர், கிட்டார் இசைக் கலவை ஆகியவை துயரார்ந்த மனதுக்குள் இருக்கும் வார்த்தைகளின் இசை வடிவங்களாக வெளிப்பட்டிருக்கும்.
ஆனால், அதைத் தொடர்ந்து விவரிக்க முடியாத சோகத்தின் வெளிப்பாடாக ஒலிக்கும் அமானுஷ்யம் கலந்த பேரோசை சாதாரணமாகத் திரைப்படப் பாடல்களின் தென்படாத நுட்பத்தைக் கொண்டது. தனது அன்புக்குரியவர் தொலைதூரத்தில் எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கற்பனை செய்யும் ஆழ்மனதின் வெளிப்பாடு இந்த இசைக்கோவை. இப்பாடல் அமரத்துவம் பெறுவதற்கான அடிப்படை ஆன்மா இந்த இடம்தான். இரவுகளில் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்கும்போது இந்த இடத்தில் மிகப் பெரிய வெற்றிடத்தை உணர முடியும்.
இரண்டாவது நிரவல் இசையிலும் இதுபோன்ற இசைக்கோவை உண்டு. சந்தூர் இசையைத் தொடர்ந்து, அடை மழை சற்றே குறைந்து சாரலாவது போன்ற வயலின் இசைக்கோவையை ஒலிக்கச் செய்வார் ராஜா. அதைத் தொடர்ந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மற்றும் கிட்டாரின் சம்பாஷணையும் மனதின் பரிதவிப்பைப் பதிவுசெய்திருக்கும். துயரத்தில் தளும்பும் குரலில் பாடியிருப்பார் ஜானகி. கிளைமாக்ஸ் பாடலான இப்பாடலுடன் படம் சுபமாக முடிவடையும். அப்போது ‘மியூசிக் இஸ் தி லைஃப் கிவர்’ எனும் வாசகம் திரையில் ஒளிரும். இளையராஜா போன்ற அபூர்வக் கலைஞர்களின் படைப்புகள் இருக்கும் வரை இந்த வாசகம் சாஸ்வதமானது!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016, 08:47 AM
#1864
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
திரை வெளிச்சம்: கோடம்பாக்கத்தின் இன்றைய சூதாட்டம்!
தமிழ் சினிமா கோடிகள் புழங்கும் துறையாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தொகையை முதலீடு செய்வது தயாரிப்பாளர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு வசதியாக இருக்கு வேண்டும்.
ஆனால் உண்மை நிலவரம் வேறு. இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாடகை காரில் செல்ல, நடிகர்கள்தான் விதம்விதமான சொகுசு காரில் வலம் வருகிறார்கள். செல்வம் கொழிக்கும் எந்தத் துறையிலும் முதலாளிகள் அல்லது தயாரிப்பாளர்களின் நிலை இப்படி இல்லை. ஆனால் இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.
ஏன் இந்த நிலை?
தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். “ஒரு நடிகருக்கு ஒரே ஒரு படம் பிரம்மாண்ட வெற்றியடைந்துவிட்டால், அந்த நடிகர் அடுத்த படத்துக்கான தனது சம்பளத்தில் 3 கோடி வரை உயர்த்திவிடுகிறார். சம்பளம் உயரும்போது படத்தின் தயாரிப்புச் செலவு உயருகிறது.
அதே நடிகரின் படம் தோல்வியடையும் பட்சத்தில் சம்பளத்தைக் குறைக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. சம்பளத்தைக் குறைப்பது என்பது தங்கள் தன்மானத்துக்கு இழுக்கு என நடிகர்கள் கருதுகிறார்கள்” என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் கூறுகிறார்.
இந்த உதாரணத்தைப் பார்த்தால் அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது புரியும். 2015-ம் ஆண்டு ஒரு நடிகரின் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்துப் படம் பண்ண அணுகியிருக்கிறார். அந்த நடிகர் கேட்ட சம்பளத்தால், அப்படியே திரும்பிவிட்டார்.
படத்தின் விநியோக வியாபாரத்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ‘கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்புச் செலவு 22 லட்சம். படத்தின் மொத்த வசூல் சுமார் 6.5 கோடி என்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளருக்கு, அதே நடிகர் அடுத்த படம் பண்ணுகிறார். முதல் படம் 6.5 கோடி வசூலானது, இப்படமும் அந்த அளவுக்கு வசூலாகும் என்று கணக்குப் போட்டு 6.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முனையவில்லை. ரூ. 28 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படத்தைத் தயாரித்து அதில் சில லட்சங்களை மட்டும் லாபம் வைத்து விற்றார்கள்.
இது இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகரின் படம் ரூ.14 கோடி செலவில் தயாரானது. அது சுமார் ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆனது. சுமார் ரூ.35 கோடி வசூலை அள்ளியது. அந்த நடிகர் உடனே தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தினார். அதே நடிகரின் அடுத்த படத்தினை ரூ.34 கோடிக்கு ஒரு முன்னணி நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தது.
அதில் பெருத்த நஷ்டமே கிடைத்தது. ஆனால் இந்த நஷ்டம் வாங்கியவருக்குத்தான். நடிகருக்கு அல்ல. அவர் ஏற்றிய சம்பளம் ஏற்றியதுதான். அதன் பிறகு அவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்றுவரை அவரது சம்பளம் ஏறுமுகத்தில்தான் உள்ளது.
தயாரிப்பாளர்களாக மாறும் நடிகர்கள்
முன்னணி நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டேவருவதுதான். தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. காரணம், தற்போதைய மாற்றம்தான். பட வியாபாரத்தின் இன்றைய நிலவரத்தின் சூட்சுமம் தெரியாமல் வரும் தயாரிப்பாளர்கள் பலரும் ஒரே படத்தோடு ஓட்டமெடுக்கிறார்கள்.
தொலைக்காட்சி உரிமத்தில் பிரச்சினை, இசை உரிமை விலைகுறைவது, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நடிகர்கள், இயக்குநரின் சம்பளவு உயர்வு, தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள உயர்வு... இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு படத் தயாரிப்பாளரின் நிலைமை என்பது பெரும் சோகக் கதைதான். இவ்வாறு பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பை நிறுத்திக்கொண்டதால் நடிகர்களே தங்களது படத்தைத் தயாரிக்கிறார்கள்.
தமிழ்நாடே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகரின் அடுத்த படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. 3 படங்களுக்குப் பிறகு ஒரு தயாரிப்பாளருக்குப் படம் பண்ணித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரைத் தற்போது அழைத்து எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் நீங்கள்தான் என்று தெரிவித்திருக்கிறார்.
விளம்பரங்களில் மட்டுமே வெற்றி
ராமராஜன், மோகன் உள்ளிட்ட பழைய நடிகர்கள் எல்லாம் நடித்துக்கொண்டிருந்த போது தயாரிப்பாளர்கள் லாபமடைந்து தொடர்ச்சியாகப் படம் பண்ணினார்கள். ஆனால், இன்றைய தயாரிப்பாளர்கள் நிலைமை அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகில் தற்போதைய தயாரிப்பாளர்கள் லாபம் அடைகிறார்களா என்று கேள்வியை முன்வைத்தால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால், ஒரு படம் ஓடுவது அதிகபட்சம் 25 நாட்கள்தான். பல படங்கள் ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிப்பதில்லை.
ஒரு தயாரிப்பாளரிடம் போய், உங்கள் தயாரிப்பு செலவு எவ்வளவு, வசூல் எவ்வளவு என்று கேட்டால் அவர்களால் சரியான தகவல்களைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு படத்தின் வசூல் கணக்கின் உண்மையான நிலவரம் வருமான வரி சமர்ப்பிக்கும் பேப்பரில்தான் இருக்கும். 100 கோடி வசூல், பிரம்மாண்டமான வசூல், எதிர்பாராத, திகைக்க வைக்கும் ஹிட் எல்லாம் விளம்பரங்களோடு சரி. மிகச் சில படங்களே இதற்கு விதிவிலக்கு.
பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது தமிழ் திரையுலகில் எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஒரு படம் ஓடினால் சம்பளத்தை உயர்த்தும் நீங்கள் தொடர்ந்து உங்கள் படங்கள் நஷ்டமடைந்தால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகர்களைப் பார்த்துத் தயாரிப்பாளர்களால் கேட்க முடியவில்லை.
அந்தச் சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம், அதே நடிகரின் அடுத்த படம் நன்றாக ஓடிவிட்டால் தனக்குப் பெரிய லாபம் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்புதான். இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடினால் தெலுங்கு, இந்தி மொழிகளில் மறுஆக்க உரிமை உள்படப் பல விதங்களில் பெரும் லாபம் கிடைப்பதால் முன்னணி நடிகர் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலை. எனவே தொடர்ந்து இந்தச் சூதாட்டம் நடக்கிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016, 08:49 AM
#1865
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
‘சிரிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறேன்’ - கல்பனா ரஞ்சனி அஞ்சலி
தமிழில் ‘சின்ன வீடு’ படம் தொடங்கி ‘சதி லீலாவதி’, ‘டும் டும் டும்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ வரை மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த கல்பனா, ‘குண்டு கல்பனா’ என்றே இங்கே பொதுவாக அறியப்பட்டிருந்தார். தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஊர்வசியின் அக்காவும் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையுமான கல்பனா ரஞ்சனியின் அகால மரணம் தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் உண்மையாகவே இழப்புதான்.
இன்னும் அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் நிறைய இருந்தன. அவற்றை கல்பனாவைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் மலையாள நடிகர் முகேஷ்.
‘சதி லீலாவதி’ படத்தில் அவர் தனது சேலை முந்தானையை உதறி ஆத்திரமும் அழுகையுமாய் பேசி கமல் ஹாசனுக்கு ஈடாகப் பிய்த்து உதறும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் ஞாபகத்தில் எப்போதும் இருக்கும். அவர் நடித்த அந்தக் கதாபாத்திரத்தை அதன் இந்தி மறுஆக்கமான ‘பீவி நம்பர் 1’-ல் கரிஷ்மா கபூர் ஏற்றார்.
1977-ல் குழந்தை நட்சத்திரமாக ‘விதருண்ண மொட்டுகள்’ மலையாளப் படத்தில் தன்னுடைய நடிப்பு வாழ்வைத் தொடங்கிய கல்பனா, நாயகி, குணச்சித்திர வேடம் என தனது மரணம் வரை 300 படங்கள் வரை நடித்து பிஸியாகவே இருந்துள்ளார்.
தேசிய விருதுக் கலைஞர்
நகைச்சுவை நடிப்பிற்காகவே கல்பனா உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாலும் சீரியசான கதாபாத்திரத்திரங்களிலும் சோபித்தவர் அவர். 2012-ல் ‘தனிச்சல்ல ஞான்’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மலையாள சினிமாவின் கலைமுகங்களில் ஒருவரான இயக்குநர் ஜி.அரவிந்தனின் ‘போக்குவெயில்’ படம்தான் இவர் நாயகியாக அறிமுகமான படம்.
சமீபத்தில் மொழி பேதம் கடந்து தென்னிந்தியா முழுவதும் ரசிக்கப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ மலையாளப் படத்தில் நாயகன் நிவின் பாலியின் அசமந்தமான, விட்டேற்றியான, பொறுப்பற்ற அம்மாவாக அவர் ஏற்ற கதாபாத்திரம் எல்லாராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. கணவனாலேயே பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டு எய்ட்ஸ் நோயால் அவதிப்படும் குயின் மேரிஸ் கதாபாத்திரத்தில், அதன் உள்மனப் போராட்டங்களை உணர்ந்து, அவர் நடித்திருந்த ‘சார்லி’ படம் இன்னும் கேரளத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கலைக் குடும்பம்
கேரளத்தின் புகழ்பெற்ற நாடக நடிகர்களான வி.பி.நாயர் மற்றும் விஜயலட்சுமி தம்பதியருக்குப் பிறந்த கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி மூன்று சகோதரிகளும் நடிகைகளாகத் தனித்தனியாக அவரவர் வகையில் சாதனை செய்தவர்கள். கல்பனாவுக்குப் பெயர் பெற்றுத்தந்த மலையாளப் படங்கள் என்று ‘பஞ்சவடிப்பாலம்’, ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள்’, ‘கவுத்துக வார்த்தகள்’, ‘டாக்டர் பசுபதி’, ‘ஊட்டயாள் பட்டாளம்’, ‘காந்தர்வம்’, ‘குடும்பவிசேஷங்கள்’, ‘மாம்பழக்காலம்’, ‘கேரளா கபே’, ‘இந்தியன் ருபீ’ மற்றும் ‘பெங்களூர் டேஸ்’ படங்களை மலையாள விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவர் உஷா உதூப்புடன் சேர்ந்து செய்த இசை ஆல்பமான ‘பலவட்டம்’ ரசிகர்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறது. இவர் மலையாளத்தில் எழுதிய சுயசரிதையான ‘ஞான் கல்பனா’, இவரைத் தேர்ந்த எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தியது. இவரது திரை அனுபவங்களையும் இவர் ரசித்த படைப்புகளையும் பற்றிய நூல் அது. அந்தப் புத்தகத்தில் அவர், “ நான் என்னைப் பார்த்துச் சிரிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று எழுதியிருப்பார். எத்தனை ஞானமும் சத்தியமும் கொண்ட வார்த்தைகள் இவை. இவரது தங்கை ஊர்வசியும் இவரும் மத்திய வயதை எட்டுகையில் நட்சத்திர அந்தஸ்து எதையும் கருதாமல் சாதாரணமாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொண்டதற்கு இந்த ஞானமே காரணமாக இருந்திருக்கும்.
இயக்குநர் சிகரத்தின் பாராட்டு
கே.பாக்கியராஜின் இயக்கத்தில் ‘சின்ன வீடு’ மற்றும் விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ படங்களில் கல்பனா முன்னணி நாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் போற்றப்பட்டார். துயரத்தில் அழுந்திப் போராடும் பெண்களின் மன உணர்வை நன்கு வெளிப்படுத்துவதில் சரிதாவுக்கு இணை கல்பனாதான் என்று கே.பாலச்சந்தரால் பாராட்டப்பட்டவர் அவர்.
ஒரு இந்திய நடிகையிடம் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும் கவர்ச்சிகரமான உடலமைப்பைக் கொண்டவர் அல்ல அவர். தனது குண்டு உடலையே தனது மந்திர விளக்காக மாற்றிய கலைஞர் அவர். புற அழகை வென்று அக அழகால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை வென்ற சில நடிகைகளின் பட்டியலில் அவரும் இருப்பார்.
மலையாளத்திலும் தமிழிலும் அவர் சாதாரணப் பெண்களின் சாதாரண உணர்வுகளான நிராசை, ஏக்கம், ஏமாற்றம் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். அதுவே அவரது சாதனையும்கூட.
ஆயிரம் முத்தங்கள் கல்பனா சேச்சி!
துல்கர் சல்மானின் நெகிழ்ச்சியான ட்வீட்:
கல்பனா சேச்சி பற்றிய செய்தியைக் கேட்டு உடைந்துபோனேன். என்னைக் குழந்தையாகப் பார்த்தவர். எனக்கே தெரியாத எனது குழந்தைப் பருவத்துக் கதைகளை எனக்கு அவர் சொல்வார். சமீபத்தில் நானும் அவரும் ‘சார்லி’ படத்தில் நடித்தோம். அந்தப் படத்தில் சார்லி கதாபாத்திரம் மேரியை முத்தமிடும். நான் கல்பனா சேச்சியின் கன்னத்தில் முத்தமிட்டேன். அப்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். குழந்தையாக இருந்தபோது அவர் என்னை முத்தமிடச் சொல்லி வற்புறுத்துவாராம். நான் கொடுக்காமல் ஓடிவிடுவேனாம். அவருக்கு என்னுடைய ஆயிரம் முத்தங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016, 08:53 AM
#1866
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சினிமா எடுத்துப் பார் 43: அறையில் அழுது கொண்டு இருந்த ஸ்ரீதேவி!
எஸ்பி.முத்துராமன்
வெளிநாட்டில் வித்தியாசமாக எடுக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தை, தமிழில் மட்டும் எடுத்தால் பொருட்செலவு அதிகமாகும்; நிச்சயம் கையைக் கடிக்கும். அதனால் கன்னடத்திலும் சேர்த்து எடுக்கலாம் என்ற ஐடியாவை பஞ்சு அருணாசலம் கூறினார். கன்னடத்தில் எடுக்கத் தயாரிப் பாளர் ராஜண்ணாவும் தயாராக இருந் தார். அந்தப் படம் ‘ப்ரியா’. இந்தப் படத் தைப் பற்றி இந்த வாரம் எழுதும் போது நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். 1978-ம் வருஷ சிங்கப்பூருக்கும் 2016 சிங்கப்பூருக்கும் எவ்வளவு மாற்றங்கள்!
முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒரு முறை ‘‘சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர் களுக்குப் பங்கு உண்டு. தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் இந்த மண்ணில் கலந்துள்ளது’’ என்றார். சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பது நமக்குப் பெருமை.
சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழர்களோடு, இந்தியர், சீனக்காரர், மலேசியர் என பல நாட்டு இன மக்களும் ஒன்றாகக் கூடி பொங்கல் வைத்தனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ கோ பின் பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும் அவர் மனைவி பட்டுப் புடவை அணிந்தும் கலந்துகொண்டனர். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒரு மாமன்காரனாக தாய்நாட்டின் வாழ்த்து களை அவர்களுக்குக் கூறினேன். ‘ஒரே உலகம்; ஒரே இனம்’ என்று பார்க்க பூரிப்பாக இருந்தது
பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கேஎன். சுப்புதான் ‘ப்ரியா’ படத் தயாரிப் பாளர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’ நாவலைத்தான் படமாக்கினோம். வெளிநாடுகளில் நடக்கும் கதைக்களம். நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ‘ப்ரியா’ நாவலைப் படித்து கதையை உள்வாங் கிக்கொண்டோம். சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் திரைக்கதை வடிவத்தில் இருக்கும். பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கரின் படங் களில் சுஜாதாவின் பங்களிப்பு சிறப்புடன் இருந்தது. சிறந்த கணினி விஞ்ஞானியான அவர், அவ்வளவாக கணினி புழக்கத் துக்கு வராத காலத்திலேயே கமலுக்குக் கணினி கற்றுக்கொடுத்து, திரைப்பட உருவாக்க வேலைகளை அதில் செய்ய வைத்தார். எழுத்தாளர் சுஜாதாவை இந்தக் காலத்தின் ‘திருமூலர்’ என்றே சொல்லலாம். அவருடைய ‘ப்ரியா’ கதைக்கு பஞ்சு அருணாசலம் தன் எழுத் தின் மூலம் மேலும் மெருகேற்றினார்.
‘ப்ரியா’ பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாயகி தேவி. கன்னட நடிகர் அம்ரிஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என நடிகர்கள் தேர் வானார்கள். இளையராஜா புதுமையான பாடல்களை அற்புதமாக இசை அமைத்து, ‘இன்ரிகோ’ (INRECO) ஸ்டீரியோபோனிக் முறையில் ஒலிப் பதிவு செய்துகொடுத்தார். சூப்பர் ஸ்டா ரின் படத்துக்கு சூப்பராகவே பாடல்கள் அமைந்தன.
‘ப்ரியா’படத்தை சிங்கப்பூரில் படமாக் கும் வேலைகளைத் தொடங்கினோம். பொதுவாக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை மட்டுமே எடுப்பது ஒரு விதம். முழு படத்தையும் எடுப்பது சாதாரணமானது இல்லை. படப்பிடிப் புக்குப் புறப்பட்டபோது, செலவோடு செலவாக மளிகை பொருட்களை எடுத் துக்கொண்டு, உடன் சமையல்காரரை யும் அழைத்துச் சென்றோம். அதிகாலையில் படப்பிடிப்புக்குப் புறப்பட்டால் டிபன் ரெடி ஆகியிருக்காது. புகழ்பெற்ற நடன இயக்குநர் சோப்ரா மாஸ்டர் பிரட்டில் ஜாம் வைத்து காலை உணவை தயார் செய்துகொடுப்பார். பஞ்சாபிக்காரரான சோப்ரா நல்ல மனிதர்.
படத்துக்குத் தேவையான சில காட்சிகளை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் படமாக்க நினைத்தோம். ஏர்போர்ட் நிர் வாகத்தை அணுகியபோது, ‘‘பயணிகள் அதிகம் வந்து செல்லும் நேரத்தைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘‘தொகை எவ் வளவு கட்ட வேண்டும்?’’ என்று கேட் டோம். ‘‘இந்தப் படம் மூலமாக எங்கள் ஏர்போர்ட் பல நாட்டு மக்களுக்கும் தெரியப்போகிறது. இன்னும் பல நாட்டுக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவார்கள். உங்கள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்போது ஏன் பணம் வாங்க வேண்டும்? எதுவும் வேண்டாம்’’ என்றார்கள். சுற்றுலாத் துறைக்கு சிங்கப்பூர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.
படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் ஒரு விமானத்தை சில மணி நேரங்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது. சுற்றுலாவுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத் துவத்தை போல நமது இந்தியாவிலும் ‘இங்கே தடை; அங்கே தடை’என்று முட்டுக்கட்டை போடாமல் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். இந்தியாவில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறும் கஷ்டம் இங்கு சினிமா எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.
‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்’ என்ற இளமை துள்ளும் பாடலை சிங்கப்பூரில் அழகான ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண் டிய நாயகி தேவி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவர் அறையில் அழுது கொண்டு இருக்கிறார் என்றார்கள்.
ஏன்? ஏன்?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd February 2016, 07:53 AM
#1867
Senior Member
Veteran Hubber
Bhakthi - kandhan karuNai - thirupparankundrathil.....
From kandhan karuNai
thirupparankundrathil nee sirithaal.....
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th February 2016, 11:48 AM
#1868
Senior Member
Seasoned Hubber
Where's everybody???
A nice song in Sivaranjani ragam; featuring Nedumudi Venu & Sumalatha (Actors),
Bichu Thirumala (Lyricist), Raveendran (Music Director), & K.J. Yesudas...
தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி
ராகம் ஸ்ரீ ராகம்
பாடூ நீ வீண்டும் வீண்டும் வீண்டும் வீண்டும்...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th February 2016, 07:46 PM
#1869
Senior Member
Diamond Hubber
எங்கே எங்கே ? நண்பர்கள் எல்லோரும் எங்கே போய் விட்டீங்க ?
மீண்டும் மதுர கானம் மலரட்டும்..
வருக வருக
-
12th February 2016, 06:09 AM
#1870
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks