-
5th June 2016, 03:48 PM
#11
Junior Member
Diamond Hubber
1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டிருக்க, அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாலும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. "என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வந்திருந்தார் அலி. விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்) செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் ( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன் இருப்பவர்) செய்திருந்தார்.
காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம். முதல், 'ஷோ- பைட்' டில் வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது அலியுடன் மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான், எட்டாவது வகுப்பு கூட படித்து முடிக்காத என்னை தென்னக ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.
ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்' என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். முகமது அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை மக்களிடமும், மக்கள் திலகத்திடமும் இருந்து பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார்.
முகமது அலி மீது அதீத பிரியம் கொண்டிருந்த, எம்.ஜி.ஆருக்கும், முகமது அலிக்கும் ஒரு ஒற்றுமை, இருவருமே ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தவர்கள்
- Vikatan EMagazine
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th June 2016 03:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks