-
5th June 2016, 06:13 PM
#11
Junior Member
Devoted Hubber
Written by Mr. Sudhangan,
பெரியாழ்வார் கோதையிடம் அதை வாங்கி அப்படியே படுத்திருக்கும் அந்த அரங்கனுக்குச் சூட்டுவார். இப்போது அந்த அரங்கன் தங்கமாக ஜொலிப்பான்! திகைத்து போவார் பெரியாழ்வார்!
‘இறைவா! என்னே உன் கருணை! குழந்தை மீது நீ கொண்டுள்ள அன்பை இந்த சிறியேன் புரிந்து கொள்ள இத்தனை பெரிய நாடகமா? குழந்தையிடம் நீ காட்டிய பரிவை புரிந்து கொள்ளாமல் புலம்பினேன், கதறினேன், கண்ணீர்விட்டேன்! என் உள்ளம் கவர்ந்த பெருமாளே, உன் பெருமையை இன்றுதான் உணர்ந்து கொண்டேன்!
அப்படியே தன் மகள் பக்கமாக திரும்பி, ‘கோதை! இனி நீ என் குழந்தையல்லம்மா! அந்தத் தெய்வத்தின் குழந்தை! அவனருளை பூரணமாக பெற்றிருக்கும் உன்னை புரிந்து கொள்ளாமல் பேசியதற்கு என்னைப் பொறுத்துக் கொள்!'
‘அப்பா !’ என்பாள் கோதையான குட்டி பத்மினி!
‘ நீ போட்டுக்கொண்ட மாலையை அந்த பெருமாள் சூடிக்கொண்டார் என்றால், நீதானம்மா இன்று முதல் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி! எதிர்காலத்திலே உன் நாக்கிலிருந்து வரும் திருமொழி எல்லாம் ‘ நாச்சியார் திருமொழி’ என்றே நாடெல்லாம் புகழட்டும்! ஆண்டவன் உலகத்தை ஆண்டான்! நீ அவனை ஆண்டு விட்டாய்! ஆண்டவனையே நீ ஆட்கொண்டதால் இன்று முதல் உனக்கு ஆண்டாள் என்று பெயர் நிலவட்டும்!
‘அப்பா இவ்வளவும் அந்த கண்ணன் செய்த கள்ளத்தனம்தானே!'
‘ஆமாம்! அந்த கண்ணனின் கபடநாடகத்தை யாரறிவார் ? அம்மா! நீ அந்த கண்ணனையே நினைத்து பாடு! பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறுவதைப் போல உன்னோடு சேர்ந்து நானும் மணம் பெறுவேன்!'
அப்போது கோதை பாட ஆரம்பிப்பாள், ‘ ஹரி! ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா’
அந்த பாடல் முடியும்போது சிறுமியாக இருந்த கோதை என்கிற சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பெரிய பெண்ணாக கே.ஆர்.விஜயாவாக மாறுவாள்!
அடுத்து ஆண்டாளுக்கு திருமணம் செய்து கொடுக்காததைப்பற்றி ஊர் பேசும்!
‘விஷ்ணுஜித்தர் என்கிற பெரியாழ்வார் அந்த குழந்தையை பெத்திருந்தா காலாகாலத்தில கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார். எங்கோ தோட்டத்தில கிடைச்ச குழந்தைதானே! அதனாலதான் பெரியாழ்வார் அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்காமல் வீட்டோடு வெச்சிண்டிருக்கார்’ என்று பேசுவார்கள்!
வீட்டுக்கு வருவார் பெரியாழ்வார். தன் மகளிடம் பேசுவார்– ‘ஒரு பெண் மங்கை பருவத்தை அடைந்துவிட்டால், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்ட கதைதான் ஒரு தகப்பனுக்கு!'
‘என்ன சொல்கிறீர்கள்! ஒன்றும் புரியவில்லையே?' என்று கேட்பாள் ஆண்டாள்!
‘ விரைவில் உன்னை பிரியும் நேரம் வந்துவிட்டதம்மா.’
‘பெற்றவர்கள் யார் என்று தெரியாத என்னை அன்னையாய், தந்தையாய், ஆசானாக இருந்து வளர்த்த தங்களைப் பிரிவதா? அய்யய்யோ! இது தாள முடியாத வேதனை’ என அலறுவாள் ஆண்டாள்!
‘இன்னும் உனக்கு திருமணம் செய்துகொடுக்காமல் இருக்கிறேன் என்று ஊரார் என் மீது சுடுசொல்லை வீசுகிறார்களே! அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை!'
‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! தாங்கள் அதற்கு செவிசாய்க்க வேண்டாம்!
‘ தீயினால் சுட்ட வடுவை தாங்க முடியும்! நாவினால் சுட்ட வடுவை மனம் தாங்குமா? விரைவில் திருமணம் செய்து வைக்கப்போகிறேன்!'
‘திருமணமா? எனக்கா? பிள்ளை பருவத்திலேயே திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனுக்கு என்னை அர்ப்பணித்துவிட்டதாக தாங்கள்தானே சொன்னீர்கள்! உங்கள் திருவாக்கு பொய்யாகலாமா? வேண்டாம் சுவாமி! வேண்டாம்! மனத்தூய்மையோடு சொல்கிறேன்!
மாதவன் மலரடிக்கு சேவை செய்வேனே அல்லாது மானிடர்க்கு திண்ணமாக வாழ்க்கைப்பட மாட்டேன்’ என உறுதியாகச் சொல்வாள் ஆண்டாள்.
‘ஆண்டவனை வணங்கலாம்! அவன் திருவடிக்கு நீ சேவையும் செய்யலாம்! மனித குலத்தில் பெண்ணாக பிறந்த உன்னை தேடி வந்து அந்த பெருமான் மாலை சூடுவாரா?’
‘ஏன் சூடமாட்டார்? அறியாப் பருவத்திலிருந்து அடியாள் சூடிக்கொடுக்கும் மாலையை ஏற்றுக் கொள்ளும் எம்பிரான் என்றாவது என் மணமாலையை ஏற்றுக் கொள்ளாமலா போய்விடுவார்?'
‘கடவுளை கணவனாக அடைய முடியுமா? உன் எண்ணம் ஈடேறுமா? என்ன பைத்தியக்காரத்தனமிது?'
‘பார்க்கும் ஒளி, கேட்கும் ஒலி அனைத்திலும் அந்த ஆண்டவன் திருவுருவத்தையே காண்கிறேன்! அந்தக் கண்ணனை எண்ணி கன்னியாகவே காலங்கழித்து இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விடுகிறேன். என்னைப் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம்.’ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவாள்.
‘ஆண்டாள்! அந்த அரங்கம் மீது ஆணையிட்டு கூறுகிறேன்! உன் பிடிவாதத்தை விட்டுவிடு, விரைவில் ஒரு மணமகனைத் தேடி உன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறேன். அவனுக்கு மாலை சூட நீ உன் மனத்தை பக்குவப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.'
‘ வேண்டாம். எனக்குத் திருமணமே வேண்டாம்!’
இப்படிச் சொல்லிவிட்டு ஆண்டாள் நகர ஆரம்பிப்பாள்.
‘ எங்கே போகிறாய்?’
‘இந்த உலகத்தை விட்டே போகிறேன்!’
‘என்னிடம் பேசக்கூடிய பேச்சா இது?’
‘வளர்த்த பெண்ணிடம் காட்ட வேண்டிய பரிவா இது ?’
‘ இது தேவையில்லாத குழப்பம்!’
‘ என்னை தெய்வம் காக்கும்!'
‘இந்த உலகத்தில் கண்கண்ட தெய்வம்?'
‘ அன்னையும் தந்தையும் !’
‘ பெற்றோருக்கு தேவை ?’
‘ அறிவுள்ள பிள்ளைகள் !’
‘‘பிள்ளைகளின் கடமை?’
‘பெற்றோர் சொற்படி நடப்பது!’
‘ஆ..ம்! அந்த வார்த்தையையே பொன்மொழியாகக் கொண்டு நான் சொல்கிறடி நட !’
சொல்லிவிட்டு கோபமாக போய்விடுவார் பெரியாழ்வார்! இந்தப் படம் வந்த போது எனக்கு 10 வயது! இந்தப் படத்தை பார்த்த பிறகுதான் ஆழ்வார்களின் மேன்மையும் ஆண்டாளின் அருமையும் எனக்குப் புரிய ஆரம்பித்தது!
ஒரு படம் என்பது பள்ளிச் சிறுவர்களின் மனதில் பல பாதிப்புக்களை உருவாக்க முடியும்! ஏ.பி. நாகராஜன் புராணக் கதைகளை மனதில் விதைத்தார்! பி.ஆர். பந்துலு சரித்திரத்தையும், இதிகாசத்தையும் மனதில் வளர்த்தார்!
பீம்சிங் தன் 'பா' வரிசை படங்களினால் மனதில் ‘பாச’ மலர்களை தொடுத்தார்! கே.எஸ். கோபாலகிருஷ்ணன் குடும்ப சிக்கல்களை குழப்பமில்லாமல் சொன்னார்! ஸ்ரீதர் சிவாஜியின் பல்வேறு பரிமாணங்களை காட்டினார்!
அடுத்து திருமாலின் பெருமைதான் என்ன?
(தொடரும்)
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
5th June 2016 06:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks