-
12th June 2016, 09:52 AM
#1
Junior Member
Devoted Hubber
இழுபறி
மணி ஒரு பி.ஈ.. அம்பத்தூர் தொழில் வளாகத்தில் ஒரு சின்ன கம்பனியில் சூபெர்வைசர்வேலை. அவனது ரூம்மேட் ரவி ஒரு பி.பி.ஏ. அதே ஏரியாவில் இன்னொரு சின்ன தொழிற்சாலையில் அக்கௌண்ட்ஸ் மேனேஜர் வேலை. இருவருக்குமே வயது 25. வாழ்க்கையை அனுபவிக்க துள்ளும் பருவம்.
டாஸ்மாக், டெனிம் பாண்ட், சினிமா, மால். வருமானத்தை மீறிய செலவு. எதற்கும் அஞ்சாத வயது. பார்த்துக் கொள்ளலாம். இருக்கவே இருக்கு, கிரெடிட் கார்டு . பாங்க்லே வட்டிக்கு தான் கடன் கிடைக்குமே? என்ஜாய் !
***
கொஞ்ச நாளா மணிக்கு ஒரு சந்தேகம். ‘அவள் என்னை விரும்புகிறாளா? இல்லையா? எப்படித் தெரிந்து கொள்வது?’
“ரவி! எனக்கு ஒரு டவுட்ரா!” – மணி தன் சந்தேகத்தை கேட்டான்.
“என்ன?”
“இல்லேடா! நான் தினமும் ஆபிஸ் போறப்ப பார்ப்பேன்! பஸ் ஸ்டான்ட்லே அவள் என்னை பார்த்து சிரிக்கிறா மாதிரி இருக்கும்” – மணி கொஞ்சம் வழிந்தான், தன் தலையை கோதிக் கொண்டே !
“ஆள் பாக்க எப்படி இருப்பா?”
"அட்டகாசமா இருப்பா! கொஞ்சம் சமந்தா மாதிரி, கொஞ்சம் கவுதமி நாயர் மாதிரி பள பளன்னு"
"ஆமா! கொம்புக்கு புடவை சுத்தினாலும் ரம்பைன்னு சொல்ற வயசு. பாவம் , நீ என்ன பண்ணுவே?" ரவி நக்கலடித்தான் .
"இல்லேடா. இவ ரொம்ப அழகு. கண்ணை பறிக்கிற மாதிரி."
“போதும் போதும்! வாயை துடை ! வழியறது. இது எவ்வளவு நாளா?”
“இப்போதான் ஒரு பத்து நாளா”
“சரி, இன்னிக்கு அவளை பாத்து தைரியமா பேசு. லிப்ட் கொடுக்கட்டுமான்னு கேளு”
”நானா?” – மணிக்கு கொஞ்சம் உதறல்.
“பயந்தால் ஒன்னுத்துக்கும் உதவாது. தைரியம் புருஷ லக்ஷணம்”
****
பத்து நாள் கழித்து பார்க்கில் மணியும் லதாவும்
“லதா! என்னாலே நம்பவே முடியலே?”
“எதை மணி ?”
“நாம ரெண்டு பேரும் இவ்வளவு சீக்கிரம் பழக ஆரம்பிச்சிடுவோம்னு”
“ஆமா! மணி , நீங்க இவ்வளவு தைரியமானவரா இருப்பீங்கன்னு நான்கூட எதிர்பார்க்கலை”
“சரி! உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்னு ஆசை. என்ன வேணும்னு கேளு”
“என்ன வேணா கேக்கலாமா?”
“தாராளமா! என் தலையை அடகு வெச்சாவது வாங்கி தருவேன்”
“அதெல்லாம் வேணாம்! வேஸ்ட் ! உங்களாலே முடிஞ்சா ஒரு நல்ல தங்க சங்கிலி வாங்கி தாங்க! இப்போ நான் போட்டிருக்கிறது வெறும் கவரிங் தான்!”
“ஐயோ! என் கிட்டே அவ்வளவு பணம் இல்லியே! குறைஞ்சது ஒரு 50 ஆயிரமாவது வேணாமா?”
“சரி, பரவாயில்லே! விடுங்க! இது பெரிய விஷயம் ஒன்னும் இல்லை. ”
”இல்லே இல்லே ! சும்மா ஒரு தமாஷுக்கு சொன்னேன்! உனக்கு தெரியும்தானே, நான் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பனிலே ப்ரொடக்ஷன் எஞ்சினீர் ! ஜஸ்ட் லைக் தட் வாங்கிடலாம். உனக்கில்லாததா?”
“இதோ பாரு மணி ! கஷ்டம்னா வேணாம்!”
”ஒரு கஷ்டமுமில்லை. அடுத்த தடவை உன்னை பாக்கச்சே, செயினோடதான் பாப்பேன்”
****
மணியும் ரவியும் அறையில்
“ரவி, லதா நெக்லஸ் வேணும்னு ஆசைப் படறா” மணி யோசனை கேட்டான்
“என்ன மச்சி, அதுக்குள்ளே காதல் முத்தி போச்சா?”
“அதெல்லாம் இல்லேடா! எதாவது கொடுக்கணும் போல இருக்கு. பிரஸ்டீஜ்!”
“வெட்டி பந்தா! சரி வா! போய் பாக்கலாம்! நல்லதா ப்ரெசென்ட் பண்ணு. ஜமாய்”
“இப்பவேவா?”
“முடிவு பண்ணியாச்சுன்னா முடிச்சுடனும், கிளம்பு. இப்பவே இருட்டி போச்சு“.
“ரவி, செயின் வேண்டாண்டா, இப்பத்திக்கி ஒரு மோதிரம் வாங்கி கொடுத்திடறேன். நமக்கும் மத்த செலவு இருக்கில்லே.! பின்னாடி, பாத்துக்கலாம்”
“அதுவும் சரிதான், போலாம் வா. பைக் ஸ்டார்ட் பண்ணு”
****
இரண்டு நாள் கழித்து - பார்க்கில் மணியும் லதாவும்
“லதா ! இந்தா! உனக்கு ஒரு சின்ன அன்பளிப்பு. கண்ணை மூடிக்கோ!”
“என்ன செயின் தானே?”
“இப்போ ஒரு மோதிரம் ப்ரெசென்ட் பண்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணு, ஒரு மாதத்திலே உனக்கு ஒரு செயின் காரன்ட்டீ”
மணி மோதிரம் பரிசளித்தான். “நல்லாயிருக்கா?”
“ஓ. ரொம்ப நல்லாயிருக்கு. தங்கம்தானே! மணி, நிஜம் சொல்லு !”
“பாத்தியா! என்னையே சந்தேகப்படறியே! ஒரு சவரன் ! என்னோட அரை மாச சம்பளம் தெரியுமா?”
“சும்மா! தமாஷுக்கு சொன்னேன்! கோவிச்சுக்காதடா என் செல்லமே!”
****
இரண்டு மாதம் கழித்து - லதாவின் அலுவலகம்
லதாவும் கல்பனாவும் பேசிக் கொண்டிருந்தனர் .
“சாரி கல்பனா! உன் கழுத்து செயினை எவனோ அறுத்து கிட்டு போயிட்டானாமே! கேள்விப்பட்டேன். என்னடி ஆச்சு?” – லதா
“போனா போகட்டும் விடுடி! என் கழுத்து தப்பிச்சிதே! இருட்டிலே, ரெண்டு பேர் மோட்டார் பைக்லே வந்து அடிச்சிட்டு போயிட்டாங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன்”
“எனக்கு கூட பயம்பா."
“ஆமா லதா! நகை விஷயத்திலே நாமதான் ஜாக்கிரதையாக இருக்கணும்” நீ கூட பார் செயின் போட்டிருக்கே ! ஜாக்கிரதை !”
லதா தன் செயினை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். சிரித்தாள். “இது கவரிங் செயின் கல்பனா! என் கிட்டே ஏதுப்பா கோல்ட் செயின் எல்லாம் ? “
“மணியை கேக்க வேண்டியது தானே ? மணி என்ன சொல்றான் ? கல்யாணம் எப்போ லதா ?”
லதா சிரித்தாள். “அவனை இன்னிக்கு பாக்காலாம்னு இருக்கேன் கல்பனா ! அம்பா மாலுக்கு வரச் சொல்லியிருக்கிறான் ! ரொம்ப கஞ்சூஸ் அவன் . இதுவரை இந்த மோதிரம் தான் பரிசா கொடுத்தான். இந்த மாசம் சம்பளத்திலே ஒரு செயின் போடறேன்னு சொல்லியிருக்கான்! இன்னிக்கு வாங்கிட்டு வருவான்னு நினைக்கிறேன் ! ”
லதாவும் சிரித்தாள். “உடாதே ! சும்மா மிரட்டு சொல்றேன்! இப்போ விட்டா பின்னாடி வாங்கிறது கஷ்டம் ! ”
****
பத்து நாள் கழித்து
தினசரிப் பத்திரிகைகளில் நான்காம் பக்கத்தில் ஒரு செய்தி.
‘ நேற்று இரவு மாலை ஏழு மணிக்கு அமிஞ்சிக் கரையில் அம்பா மாலுக்கு அருகில் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து கழுத்து சங்கிலி பறிப்பு. மோட்டார் பைக்கில் வந்த இளைஞர்களின் துணிகர கொள்ளை. மக்கள் அவர்களை மடக்கி, கட்டி வைத்து அடித்தனர். போலீஸ் விசாரணை.'
****
போலீஸ் ஸ்டேஷன்
“நல்ல வேலையிலே இருந்துகிட்டு ஏன் தான் இப்படி புத்தி போவுதோ இந்த காலத்து படிச்ச பிள்ளைங்களுக்கு” – ஏட்டு ஏகாம்பரம் திட்டிகொண்டிருந்தார்.
“இதெல்லாம், ஹார்மோன் செய்யற வேலைங்க. உருப்பட மாட்டாங்க” – கான்ஸ்டபிள் கந்தசாமி பக்க வாத்தியம்.
“தகுதிக்கு மீறி வாழ நினைச்சா, இது தான் ஆகும். இப்போ வாழ்க்கையே வீண். ”
***
ஜெயில் அறையில்:
போலீஸ் அடி, உடம்பெல்லாம் வீக்கம். ஈன ஸ்வரத்தில் முனகினான் மணி. மணியும் ரவியும் இப்போது போலீஸ் கஸ்டடியில்.
“இதுக்கு தான் நான் அப்பவே அடிச்சிக்கிட்டேன் !இப்போ எல்லாரும் உஷாரா இருக்காங்க. ! அதுவும் இந்த ஏரியா வேண்டான்னு ! கேட்டியா ? இப்போ பாரு என்ன ஆச்சி?” மணி அலுத்துக் கொண்டான்
"இல்லேடா !. இருந்த காசை எல்லாம், உன் டிரஸ் தண்ணின்னு செலவு பண்ணிட்டே.! இதிலே அந்த பொண்ணு வேறே ! என் செலவுக்கு காசே இல்லே மச்சி ! எனக்கு வேறே வழி தெரியலே! ” - ரவி
‘என்னடா அவசரம் உனக்கு? கொஞ்ச நாள் கழிச்சி, அம்பத்தூரிலேயே அடிசிருக்கலாமில்லே?. என் பேச்சை கேட்டாத்தானே? இப்ப பாரு, உன்னாலே நானும் கெட்டேன் !” – புலம்பினான் மணி
"சாரி நண்பா!. என்னாலே தண்ணி போடாமே இருக்க முடியலே!. புரிஞ்சிக்கோ"
“சரி, சரி, முதல்லே, நாம மாட்டாமே வெளிலே வரணும். , நம்ம சேட் மூலமா அதுக்கு நல்ல வக்கீல் ஏற்பாடு பண்ணியிருக்கேன். கோர்ட்லே கேட்டா, இதுதான் நமக்கு முதல் தடவைன்னு சொல்லணும். ஓகே வா? அப்புறம், உன்னோட அம்மா மருந்து செலவுக்காகதான் இந்த சங்கிலி திருடினோம்னு சொல்லணும்.”
“சரி, எப்படியாவது சீக்கரம் வெளிலே போயிடனும்டா.”
“பாக்கலாம்! பொதுவா, தண்டனை ரெண்டு மூணு வருஷம் வரும். ஆனால், நம்ம படிப்பு வயசு பாத்து, மிஞ்சி போனா நமக்கு ஆறு மாதம் ஜெயில் இருக்கும்னு வக்கீல் சொன்னார். ஜட்ஜ் மனசு வெச்சா, நாம வார்னிங்கோட கூட வெளிலே வந்துடலாமாம்”- மணி நம்பிக்கையோட சொன்னான்.
“மச்சி! நான் முடிவு பண்ணிட்டேன். நாம படிச்ச படிப்புக்கும், தகுதிக்கும் இந்த கேவலமான வேலை வேண்டாண்டா. பிடிபட்டா, ஜனங்க பெண்டு நிமித்தறாங்க. வெளியே வந்ததும், வேறே நல்ல பிசினெஸ் பண்ணலாம்”. – ரவி
“அப்போ நாம வேலைக்கு போக வேண்டாமா?”- மணி
“இனிமே யாரு நம்மை வேலைக்கு சேர்த்துப்பாங்க.? கற்பனை கூட பண்ணாதே. நாம ரெண்டு பெரும் பேசாம ஒரு ‘சிட் பன்ட்’ ஆரம்பிச்சிடலாம். லம்பா காசு பண்ணிடலாம்”
“நல்ல ஐடியா மச்சி. நம்ம ஜனங்க சரியான காசாசை பிடிச்சவங்க! நம்பிக்கையா கொண்டு கொட்டுவாங்க. திரும்ப கொடுக்கவே வேண்டாம். அப்படியே அள்ளிடலாம். அது சிட் பன்ட் இல்லே. சீட் பன்ட் ”- மணி சிரித்தான்.
“எப்பவாவது, கை அரிச்சா, ஒன்னு ரெண்டு செயின் பறிப்பும் பண்ணலாம். தங்கம் மேலே ஆசைப் படர பொம்பளைங்க இருக்கற வரைக்கும் நம்ம காட்டிலே மழை தான்” – ரவி உடன் பாட்டு பாடினான்.
“ஆமாமா, நல்ல வேகமா போற பைக் முதல்லே வாங்கணும் !.” மணி யோசனையில் ஆழ்ந்தான். என்ன வண்டி வாங்கலாம் ?
“உன் லதாவை எப்படி சமாளிக்கப் போறே மணி? எப்படியிருந்தாலும் அவளுக்கு தெரிய வருமே ?”
“அவ கிடக்கறா விடுடா ! லதா இல்லேன்னா உஷா! செயின் கொடுத்தே கரக்ட் பண்ணிடுவோமில்லே?”
****
முற்றும்
Last edited by Muralidharan S; 12th June 2016 at 10:26 AM.
-
12th June 2016 09:52 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2016, 10:13 AM
#2
Senior Member
Platinum Hubber
ரொம்ப கேவலமா இருக்கு இளைய சமுதாயம் சீரழியும் விதம்!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
14th June 2016, 11:43 AM
#3
Junior Member
Devoted Hubber
சமுதாயத்தின் தாக்கம். பிறர் போல வாழ வேண்டும் எனும் வெறி. ஏழ்மையாக நேர்மையாக இருப்பதை விட நேர்மையின்றி பணக்காரனவாக இருப்பதை விரும்பும் கூட்டம் . இப்படி இருக்க சாதகமாக, இளைஞர்கள் சுலபமாய் கெட்டுவிட , பல வாய்ப்புகள். இது தான் இன்றைய உலகம். உண்மையில் இது நேற்றைய உலகம் கூட. நாளைய உலகமும் இப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் இப்படி இருப்பவர் ஒரு சிலரே. அதனால் மரம் தோப்பாகி விடாது என்ற நம்பிக்கையும் கூடவே உள்ளது !
Last edited by Muralidharan S; 14th June 2016 at 11:45 AM.
-
14th June 2016, 06:50 PM
#4
Senior Member
Platinum Hubber
ம்ம்ம்ம்ம்ம்...
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks