-
21st July 2016, 07:32 AM
#1
Junior Member
Senior Hubber
இரவென்ற ஒன்று
வந்து விட்டால்
இருள் சூழ்தல்
இயல்பு.
அந்த இருள்
நிரந்தரமானதல்ல.
நிலவையோ,
செயற்கை வெளிச்சங்களையோ,
அதிகாலைச் சூரியனையோ
கண்டு
அரண்டோடுவதுதான்.
அய்யா...!
2001-ஜுலை '21 அன்று
முன்னிரவிலும்
உங்கள் மறைவுச் செய்தியோடு
ஒரு இருள் சூழ்ந்தது.
அந்த இருள்
நிலவுக்குப்
பயப்படவில்லை.
செயற்கை வெளிச்சங்களின்
அதட்டும் குரலுக்கு
அந்த இருள்
அச்சப்படவில்லை.
அடுத்த நாளில் வந்த
அதிகாலைச் சூரியனே
அழுது கொண்டு வந்ததால்
அதனிடம் பயப்பட
அவசியமில்லாமல் போயிற்று
அந்த இருளுக்கு.
அந்த தினம்-
வெளிச்சங்கள்,
இருளுக்குள் கிடந்து
அழுத தினம்.
அந்த தினம்-
புனிதனை மீண்டும்
பூமிக்குத் தர வேண்டி
இயற்கையே இறைவனை
தொழுத தினம்.
அந்த தினம்-
மனித உயிர்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும்
எவ்வளவு கண்ணீரிருக்குமென்று
காலம் கண்டுபிடித்த தினம்.
அந்த தினம்-
சிவாஜி வாழும்
இதயவெளிகளில்
காலன் குண்டு வெடித்த தினம்.
அய்யா...!
கடைசிப் பக்கம் கிழிந்து போன
மர்மநாவல் போல்
எங்களைத் தவிக்க விட்டது
தங்களின் மறைவு.
நெஞ்சோடு பொருந்தியவர்கள்
நம்மைப் விட்டுப் பிரிவதை,
பிரிக்கப்படுவதை
ஏற்றுக் கொள்ளவே
முடிவதில்லை.
எமன் என்று
ஒரு முரட்டு முட்டாள்
இருக்கிறான்..
சாக மாட்டாமல்.
பூலோகத்தை
நரகமாக்கி விட்டு
எங்கள் சொர்க்கத்தை
திருடிப் போன கிறுக்கன்.
எதையோ சொல்லி நடித்து
உங்களை அழைத்துப் போயிருக்கிறான்.
அந்த எமன்.
நீங்களே நம்பினீர்களென்றால்
அவன் பெரிய நடிகன்தான்.
ஆனால்
அவனொன்றும்
சிவாஜியாகி விட முடியாது.
யாருக்குமே பிடிக்காதவன்
எப்படி சிவாஜியாக முடியும்?
எல்லோருக்கும்
பிடித்தவன்தானே
சிவாஜியாக முடியும்?
எல்லோரும் வெறுக்கும்
எமனாகவும் நடித்து
ரசிக்க வைக்க
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
பதினைந்து ஆண்டுகளாய்
அழுது தீர்த்தாலும்
கண்ணீர் வற்றாத
பல கோடிக் கண்களைத்
தனதென்று உரிமை கொள்ள
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
இன்னும்
பத்துத் தலைமுறைக்குப் பின்னும்
என்னைப் போல் ஒரு எளியவனைத்
தன்னைப் பற்றி
எழுத வைக்க
யாரால் முடியும்
உங்களைத் தவிர...?
பிறப்பு துவங்கி
நெருப்பு வரைக்கும்
குழந்தையாகவே இருப்பதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
கூட்டுக்கு ஒரு அடுப்பும்,
குழம்புக்கு ஒரு அடுப்புமாய்
குடும்பங்கள் சிதறிக் கிடக்கும்
உலகத்தில்
கூட்டுக் குடும்பத்தின்
மகத்துவம் உணர்த்த
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
பெருங்கூட்டம் பின்னே வர
முன் நடக்க
நிறையப் பேர் ஆசைப்பட...
"உன் கடமையைச் செய்
என் பின்னே வராதே"என
அன்போடு கடிந்து கொள்ள
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
தான் மலர
தரையான தாயை
மழையாகிக் குளிர்விக்க
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
பத்தடி இடைவெளி விட்டே
மனைவியை வரச் சொல்லும்
புருஷர்கள் திரியும் பூமியில்,
மரணப்படும் நொடி வரைக்கும்
மனைவியைப் பிரியாதிருக்க
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
"என் அரசியல் பொய்யில்லை"
என்று நெஞ்சு நிமிர்த்திச்
சொல்வதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
சார்த்திய கதவுகள் என்றாலும்
சாவித்துவாரத்தில்
கண் பொருத்தும்
சண்டாள உலகம்
வெட்கித் தலைகுனிய
விரியத் திறந்த கதவுகளோடு
ஒரு "அன்னை இல்லம்"
எழுப்புவதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
எங்களுக்குப் பிரியமான
ராகமே..!
எங்களை வாழ்விக்கப்
பொழிந்த மேகமே..!
காலம் எழுதிய
காவியமே..!
கடவுள் தீட்டிய
ஓவியமே..!
கலை என்ற
மறுபெயர் கொண்ட மனிதனே..!
கையெடுத்து
நாங்கள் வணங்கும்
புனிதனே..!
உன் நினைவு தினம்
சொல்லும் நிஜம்...
உனைத் தினம்
நினைப்பது கடமை.
உனக்காக அழுவது பெருமை.
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
21st July 2016 07:32 AM
# ADS
Circuit advertisement
-
21st July 2016, 08:31 AM
#2
Junior Member
Newbie Hubber
ஆண்மைக்கும்,அழகுக்கும்,கம்பீரத்துக்கும் இலக்கணம் கண்டவன்,தமிழ் மொழியின் ஆண்மை மிகு கம்பீரத்தை குரலால் உயர்த்தி சொன்னவனே,மன்னனாக நீ ஆண்டிருந்தால் தமிழகத்தின் தலைவிதி மாறியிருக்குமே ?
தமிழர்கள் ,தங்கள் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொள்ளும் யானைகளாக விளங்கிய படியால் ,இந்த பட்டத்துக்குரிய ஆண்மை யானை போல குலம் அரவணைத்து, சிம்மம் போல ஆளுமை கொண்டு,எருது போல இலக்கை நோக்கி சீறி பாயும் உண்மை தமிழனை கலைக்கு மட்டும் என்று தாரை வார்த்தார்களோ?
நீ ஆண்டு கொண்டிருக்கிறாய் அனைத்து தமிழர் இதயத்தை. அரசுகள் போகும் வரும். நீ நிரந்தர ஆட்சியாளன்.
நீ வருடம் ஒரு முறை இந்த நாளில் மட்டும் வந்து ,புண்பட்டு துடிக்கும் எங்கள் மனதை தேற்றி செல்ல கூடாதா?
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
Bookmarks