-
25th September 2016, 11:22 AM
#11
Senior Member
Devoted Hubber
Advertisement
அக்.1 - நடிகர் சிவாஜி பிறந்தநாள்
சிவாஜி குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி புரொடக் ஷன்ஸ் நிறுனத்திற்காக, வெற்றி விழா மற்றும் மை டியர் மார்த்தாண்டம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவரும், சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சூப்பர் ஹிட்டான, ஒரு யாத்ரா மொழி என்ற மலையாள படத்தை இயக்கியவருமான நடிகர் பிரதாப் போத்தன், சிவாஜி பற்றி கூறிய சில சுவையான தகவல்கள்:
நடிகர் சிவாஜி கணேசனை போல, சினிமாவை நேசித்தவர்கள், சினிமா கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் யாருமே இருக்க முடியாது.
சிவாஜி புரொடக் ஷன்ஸ்க்காக நான் இயக்கிய முதல் படம், வெற்றி விழா; சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் நடிகர் கமல் இருவரும் தான் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தனர். பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தில், அம்னீஷியா எனப்படும் ஞாபக மறதி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் கமல். இதில் இடம் பெற்ற, எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்!
படத்திற்கு இசையமைத்த இளைய ராஜாவுக்கு, இசையின் வெற்றியை கவுரவிக்கும் வகையில், 'பிளாட்டினம் டிஸ்க்' வழங்கப்பட்டது. முதன் முதலாக இசையமைப்பாளருக்கு, 'பிளாட்டினம் டிஸ்க்'வழங்கப்பட்டது இப்படத்திற்கு தான். படத்தை பார்த்து, மனதார பாராட்டினார், சிவாஜி.
அடுத்து, சிவாஜி புரொடக் ஷன்ஸ்க்கு, மை டியர் மார்த்தாண்டம் படத்தை இயக்கினேன். பிரபு, குஷ்பு இருவரும் நடித்த, மாறுபட்ட கதை அமைப்பு கொண்ட படம் இது!
இப்படத்திற்கு, ஐந்து மணி நேரத்தில் டியூன் போட்டு, சாதனை படைத்தார், இளையராஜா. படத்தில் இடம் பெற்ற, 11 பாடல்களுமே பெரிய ஹிட். வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம் இது. படத்தை பார்த்த சிவாஜி, என்னையும், பிரபுவையும் பாராட்டினார்.
சிவாஜியை வைத்து, ஒரு யாத்ரா மொழி என்ற மலையாள படத்தை இயக்கியது, வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் என்றே கூற வேண்டும். சிவாஜியும், மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் ஒரு புதுமை என்னவென்றால், படம் முழுவதும், தமிழில் பேசுவார், சிவாஜி. மற்ற எல்லா கதாபாத்திரங்களும், மலையாளத்தில் பேசுவர். இப்படத்திற்கு கதை எழுதியவர், இயக்குனர் ப்ரியன். திரைக்கதை, வசனம் எழுதியவர், ஜான்பால்; தயாரிப்பாளர், வி.பி.கே.மேனன். இப்படத்தில், இடம் பெற்ற நான்கு பாடல்களுக்கு இசையமைத்தவர், இளையராஜா.
ஒரு யாத்ரா மொழி படப்பிடிப்பில், என்னை, 'இயக்குனர் சார்...' என்றே, மற்றவர்கள் முன் கூப்பிடுவார் சிவாஜி; எனக்கு கூச்சமாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்ததும், உரிமையோடு, 'வாடா போடா...' என்று பேசுவார்; அப்போது தான், நிம்மதியாக இருக்கும்.
சிவாஜியின் நடிப்புத் திறமை, நேரம் தவறாமை இவை இரண்டும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அவற்றை நேரில் பார்க்கும் போது, திரில்லிங்காக இருந்தது.
ஒருசமயம், வெளிப்புறப் படப்பிடிப்பின் போது, நாங்கள் எல்லாரும் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே இருந்த ஓட்டலில் தங்கினோம். சிவாஜி மட்டும் சற்று தொலைவில் இருந்த நண்பர் வீட்டில் தங்கினார். காலை, 7:00 மணிக்கு ஷூட்டிங் என்றால், மேக் - அப் போட்டு சரியாக, 6:50க்கு வந்திருப்பார். சில சமயம், நாங்கள் தாமதமாக வருவோம்.
'அப்பா... ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துடுறீங்க...' என்று கேட்டால், 'நீ தானே, 7:00 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கணும்ன்னு சொன்னே... முதல் ஷாட்டை என்னை வைத்து எடுப்பதற்கு, 'பிளான்' செய்திருந்தால், நான் லேட்டாக வந்து உங்களை காத்திருக்க வைத்தால் நன்றாகவா இருக்கும்...' என்பார். அத்துடன், 'பிரதாப்... எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும்; வேறே எதுவும் தெரியாது. நான் நடித்துக் கொடுக்கிறேன்; எது வேண்டுமோ நீ எடுத்துக்கோ...' என்பார்.
அவரை, 'குளோசப்'பில் எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். படத்தில் அவருக்கு நிறைய, 'குளோசப்' காட்சிகள் இருக்கும். அவர் மாதிரி, முகத்தில் பல்வேறு உணர்ச்சி பாவங்களை, வேறு யாராலும் காட்ட முடியாது.
இப்படத்தில், சிவாஜிக்கு, மணல் சப்ளை செய்யும் கான்ட்ராக்டர் கதாபாத்திரம்; மோகன்லால் ஒரு ரவுடி. தன் அப்பாவை பார்த்தால், கொன்று விட துடிக்கும் கதாபாத்திரம். இவர்கள் அப்பா - மகன் என்பது அவர்களுக்கே தெரியாது. மலையாள நடிகர் திலகன் நடித்த கதாபாத்திரத்துக்கு மட்டும் தான் இந்த உண்மை தெரியும்.
படத்தில், திலகன் - சிவாஜி இருவருக்கும் பெரிய, 'ஷாட்' இருந்தது. அந்த, 'ஷாட்' முடிந்ததும், 'யாருடா இவன்; ரொம்ப நல்லா நடிக்கிறான்...' என்று திலகனை பாராட்டினார் சிவாஜி. அவர் பாராட்டியதை கேட்டு, நெகிழ்ந்து போனார் திலகன். மலையாளத்தில் திலகன் பெரிய குணசித்திர நடிகர்.
அடுத்து, திலகன் சொன்னது தான், சிவாஜி உட்பட அனைவரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
'பல ஆண்டுகளாக, உங்கள் படத்தை வீட்டில் வைத்து, ஆராதித்து வருகிறேன்...' என்றார் திலகன். உடனே, அவரை கட்டித் தழுவினார், சிவாஜி.
இப்படம் படமாக்கப்பட்ட போது, சிவாஜிக்கு இதய ஆபரேஷன் நடந்து, 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டிருந்தது. எனவே, சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை, மிகவும் கவனமாக படமாக்கினேன்.
என்ன காரணத்தினாலோ, ஒரு யாத்ரா மொழி படத் தயாரிப்பாளர்கள், இப்படத்தை விருதுக்கு அனுப்பவில்லை. அப்படி அனுப்பியிருந்தால், கண்டிப்பாக சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோ, சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதோ கிடைத்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பி செல்லும் சினிமா சம்பந்தப்பட்ட ஒரே வீடு, சிவாஜியின் அன்னை இல்லம் தான். பலமுறை அங்கு அவர்களது விருந்தோம்பலை அனுபவித்துள்ளேன்.
அநேகமாக சிவாஜி நடித்திருக்கும் எல்லா முக்கிய படங்களையும் பார்த்து, ரசித்துள்ளேன். அதிலும், வியட்நாம் வீடு, எங்க மாமா, தெய்வமகன், தேவர் மகன் மற்றும் முதல் மரியாதை போன்ற படங்களை, எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கே இல்லை என்றார், பிரதாப்.
நடிகர் திலகம் பெற்றுள்ள விருதுகள் மற்றும் கவுரவங்களில் முக்கியமானவை:
கடந்த, 1962ல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், 1966ல் பத்மஸ்ரீ மற்றும் 1984ல் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றார், சிவாஜி. மேலும், 1995ல் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதும், 1997ல் திரைப்படத்திற்கு ஆற்றிய அளப்பெரிய சேவைக்காக, மத்திய அரசின், தாதா பால்கே சாஹிப் விருதும் பெற்றார்.
கடந்த, 1972ல் வெளியான, ஞானஒளி, 1973ல் வெளியான, கவுரவம் மற்றும் 1985ல் வெளியான, முதல் மரியாதை போன்ற படங்களுக்காக, சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது, பிரபல மும்பை பத்திரிகை.
கடந்த, 1986ல், சிவாஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மேலும், மஹாராஷ்டிரா மாநில அரசு, சிவாஜி பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி வருகிறது.
சிவாஜி, மூன்று வேடங்களில் நடித்த, தெய்வமகன் திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில், 2006ல் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டது. அங்கு சிலை நிறுவப்பெற்ற ஒரே நடிகர், சிவாஜி கணேசன்!
பிரதாப் வீட்டிலிருந்து, அவருக்காக ஸ்பெஷலாக தயாரித்து அனுப்பிய வாத்துக்கறி, மீன் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார், சிவாஜி. அதே போன்று, பிரதாப் வீட்டு எலுமிச்சை ஊறுகாய் சிவாஜியின் மனைவி கமலா அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்.
எஸ். ரஜத்
dinamalar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2016 11:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks