Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம் -12
    -----------------------------------------------------------------

    "அன்பைத் தேடி"-

    நேற்று 42 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது.. நம் இதயத்தின் தேவைகளை
    நடிகர் திலகம் பூர்த்தி செய்வதைப் போல.

    "ஏனோ வெற்றியடையவில்லை" என்று வாசு சார் வருத்தப்படுகிறார். ஏன் எடுபடவில்லை
    என்று ராகவேந்திரா சார் விளக்குகிறார்.

    படம் வெளியான நாளிலிருந்து வெகுகாலம்
    தள்ளி,நிறைந்த அரங்கத்தில், நிறைவோடு
    "அன்பைத் தேடி" பார்த்த என் போன்றோருக்கு அந்தக் கவலையில்லை என்று ஒரு பக்கம் மனம் சந்தோஷித்தாலும், "அன்பைத் தேடி" யின் காலத்தில் அது குறித்த வெற்றிக் கனவுகளோடும், அது குறித்த நினைவுகளோடுமே பயணித்துக்
    கொண்டிருந்த மூத்த ரசிகர்களின் மெலிதான ஏமாற்றங்கள் அவர்களின் வார்த்தைகளில்
    ஒட்டியிருப்பதைப் பார்க்க வருத்தமாகத்தான்
    இருக்கிறது.

    நல்லதைக் கொண்டாடத் தெரியாத சண்டாளத்
    தமிழர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து
    தொலைக்கிறார்கள்.
    ---------------------

    இத்துடன் ஒரு பத்து நிமிடக் காணொளி
    இணைத்துள்ளேன். அதில் கடைசி நான்கு
    நிமிடத்தைப் பாருங்கள்.

    இதில் அய்யா ஏற்றிருக்கிற அந்த "ராமு" கதாபாத்திரம் திடீரென்று ஒரு நிமிஷத்தில் மாற்றம் பெற்று, அனைவரின் கவனத்தையும்
    தன் வசம் ஈர்க்கக் கூடிய கதாபாத்திரம். சிறப்பு மிக்க அந்த "திடீர் நிமிஷத்தை" இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்டோரைத் தாண்டி நடிகர் திலகமே தீர்மானித்திருக்கிறார் என்பது இந்தக்
    காட்சியில் விளங்கும்.

    சதா கனவுகளோடு வாழும் நாயகன், தன் கனவுப்
    பழக்கத்தால் தனது பிரியமான அக்காள் மகள்
    குழந்தை இந்திராவைத் தொலைத்து அவளது
    சாவுக்கும் காரணமாகிறான். "எங்களைப் போலவே பெற்றுப் பறி கொடுப்பாய்" என்று
    அத்தான் கொடுத்த சாபத்தை, தலை வணங்கி
    ஏற்றுக் கொள்கிறான்.

    புராண, சரித்திர பாத்திரங்களில்.. படித்தறிந்ததை,
    கேள்வி ஞானத்தை வைத்து நடித்து ஜெயித்து விடலாம்.

    நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கவே
    வாய்ப்பில்லாத, நாசமாய்ப் போன இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் நல்லவனான "ராமு"
    என்கிறவனை தன் கலையறிவால் கற்பனை செய்து, நடித்து ஜெயிப்பது எளிதான காரியமல்ல.

    அத்தான் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொண்டு,
    மணந்து,பெற்று, தானம் தந்து விடத் தயாராகும்
    ராமு, தனக்கு இதில் உதவுமாறு கேட்டுக் கொள்ள
    தன் காதலியை வரச் சொல்லியிருக்கிறான்.

    காதலி, ராமுவின் மாளிகைக்கு வருகிறாள்.

    பளீரென்று வெள்ளை உடை தரித்து மாடி விட்டு
    ராமுவாக இறங்கி வருவார்.. நடிகர் திலகம்.

    காதலியிடம், தன்னை மணந்து கொள்ளச் சம்மதமா என்று ஒரு ஒழுக்கமான ஆடவன்
    பொட்டிலடித்தாற்போல் கேட்டு விட மாட்டான்.

    கேட்க வேண்டிய கட்டாயத்திற்கும், அதிரடியாகக்
    கேட்கவியலாத சூழலுக்கும் ஊடே "நீ என்னைக்
    கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று தயங்கிக்
    கேட்பதற்கு நடிகர் திலகம் எடுத்துக் கொள்கிற
    கால அவகாசம் அற்புதமானது.

    ஒரு தேர்ந்த இசையமைப்பாளர்,ஒரு நல்ல பாடலுக்கான தாளத்திற்கு சரியான இடைவெளிகள் விட்டுத் தரும் கால
    அவகாசத்தையொத்தது அது.

    காதலி கல்யாணத்திற்கு சம்மதித்த பின் அடுத்த
    இறைஞ்சுதல்.

    "நமக்குப் பிறக்கும் குழந்தையை நம்ம குழந்தை
    இல்லேன்னு நினைச்சு வேற ஒருத்தருக்குத்
    தானம் குடுக்க நீ சம்மதிப்பியா?"

    சில த்வனிகள் நம்பிக்கையைத் தன்னுள் நிறைத்தபடி வெளிப்படும். நடிகர் திலகம் இதைக்
    கேட்கும் த்வனி, 'காதலி இதற்கு(ம்) சம்மதிப்பாள்'
    என்கிற நம்பிக்கையுடையதாகவே இருக்கும்.

    அதிர்ந்து போகும் காதலி, "யாராவது அப்படி தானம் குடுப்பாங்களாய்யா? என்று கேட்க...

    "யாரும் குடுக்குறாங்களோ.. இல்லையோ? நான்
    குடுக்கணும்" எனும் நடிகர் திலகத்தின் உறுதிக்
    குரல் அவரது லட்சியத்தில் அவர் பிடிவாதமாய்
    இருப்பதைக் குறிக்கிறது.

    உறுதிக் குரல் அடுத்த விநாடியே மென்மையாகி,
    தனது லட்சியத்திற்குப் பின்னால் இருக்கும் சோகக் கதையை காதலியின் முன் விரிக்கிறது.

    கதை கேட்டு, நல்லவனான தன் நாயகனை வியந்த காதலி அவனது லட்சியத்திற்கு தான்
    உறுதுணையாக இருப்பதாக உறுதி சொல்லும்
    போது, ஒரு நெகிழ்வான அழுகையைக் கரைத்துக்
    கொண்டு உருகுகிறது. உருக்குகிறது.

    ஒரே ஒரு நாயகரின் உலகறிந்த சிம்மக்குரல்..
    அந்த மகாகலைஞரோடு சேர்ந்து கொண்டு
    விதவிதமாய் நடிக்கிறது.

    ஆண்டாண்டு காலங்களுக்கு முன் அய்யன் செய்த
    அற்புதம் இந்தத் தலைமுறைக்கும் பிடிக்கிறது.

    எனக்கு ஆறு வயதாயிருக்கையில் உலகம் பார்த்த
    ஒரு உற்சாகத் தீபாவளியை "அன்பைத் தேடி"
    பார்த்து ஆனந்தமாய்க் கொண்டாடிய பொறாமைக்குரிய மூத்த ரசிகர்களுக்கு என் வந்தனங்கள்.



    Sent from my P01Y using Tapatalk

  2. Thanks saradhaa_sn, Gopal.s thanked for this post
    Likes Harrietlgy, saradhaa_sn, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •