-
11th August 2017, 05:51 PM
#11
Junior Member
Devoted Hubber
By Vasudevan In FB.
சத்ரபதி சிவாஜி' (1974)
மிக மிக அரிய பதிவு. (இதுவரை நீங்கள் காணாத மிக அரிய புகைப்படங்களுடன்)
'சத்ரபதி சிவாஜி' (1974) (தமிழில் முதல் டெலி-பிலிம்) ஒரு முழு பார்வை. நடிகர் திலகம் இதிலும் முதல்வர்.
(நண்பர்களே! இப்பதிவில் எங்கும் கிடைக்காத, அரிய, 'பொதிகை' தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய அற்புத புகைப்படங்களை இணைத்துள்ளேன். மொத்தம் 33 படங்கள்.சேமித்து வைத்துக் கொள்ளவும்)
1974-இல் பம்பாய் வானொலி நிலையத்துடன் பம்பாய்த் தொலைக்காட்சி நிலையம் இணைந்து முதன் முதலில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் டெலிவிஷனுக்காக முதன் முதலாக தமிழில் ஒரு நாடகம் தயாரிக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அப்போது பம்பாய் டெலிவிஷன் நிலையத்திற்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தது நடிகர் திலகம்தான்.
நடிகர் திலகத்தை நடிக்க வைத்து 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகம் தயாரிக்க பம்பாய் டெலிவிஷன் நிலையம் முடிவு செய்து நடிகர் திலகத்தை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது. நடிகர் திலகத்திடம் விஷயம் தெரிவிக்கப்பட சந்தோஷத்துடன் அதில் நடிக்க சம்மதமளித்தார் நடிகர் திலகம். தஞ்சை வாணன் அவர்களின் அனல் கக்கும் தமிழ் வசனங்கள். பம்பாய் டெலிவிஷன் குழுவை சேர்ந்த நாராயணசாமியின் மேற்பார்வையில் சிவாஜி நாடக மன்ற இயக்குனர் திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்கள் இந்த தொலைக்காட்சிக்கான படத்தை இயக்கினார்.
ஆனால் மிகவும் குறுகிய காலத்திற்குள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. டெலிவிஷன் நிலையத்தாருடன் நடிகர் திலகம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒப்பந்தத்ததில் கையொப்பமிட்டார். ஒரு வார காலத்துக்குள் படத்தை எடுக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் அற்புதமாக ஒத்துழைத்து 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படத்தை முடித்துத் தந்தார் நடிகர் திலகம்.
சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் கர்ஜிக்கும் காட்சிகள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. சத்ரபதியைக் காண இயக்குனர்கள் ஸ்ரீதர், திருலோகச்சந்தர், பி. மாதவன் மற்றும் வி.சி.குகநாதன் போன்ற திரையுலகப் பிரபலங்கள் ஏ.வி.எம்.க்கு வருகை புரிந்தனர். (நன்றி: பொம்மை சினிமா இதழ்)
படப்பிடிப்பைக் காண வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருக்கும் தன் சார்பில் விருந்து வைத்து கௌரவித்தார் நடிகர் திலகம் அவர்கள்.
மணிமகுடம் தரிக்க தனக்கேற்பட்ட ஒவ்வொரு தடையையும், அதைத் தான் உடைத்தெறிந்த ராஜ தந்திரத்தையும், வீரத்தையும் ஒவ்வொரு படிக்கட்டாக நின்று வீறுகொண்டு மராட்டிய குல திலகம் சிவாஜி பேசுவதாக இந்த டெலி-பிலிம் எடுக்கப்பட்டுள்ளது. 'ராமன் எத்தனை ராமனடி'யில் ஒவ்வொரு கோட்டை மாடல்கள் அருகே நின்று தன் சாதனைகளை முழங்குவாரே அது போல.
1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பம்பாய் டெலிவிஷனில் மராட்டிய மன்னர் சிவாஜியாய் நம் நடிகர் திலகம் சிவாஜி சின்னத் திரையில் கர்ஜித்ததை பலர் கண்டு களித்தனர். ('இந்த நிகழ்ச்சி 1974 ஜூலை 21-ந் தேதிதான் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பபட்டது...சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இதே நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது'.என்று நமது முரளி சார் சொன்னதும் நினைவிருக்கிறது)
ஆனால் அடித்தட்டு மக்களிடம் டெலிவிஷன் பார்க்கும் வசதி அப்போது வெகுவாக இல்லாததால் வசதியுள்ளோர் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு. அதன் பின் ஒரிருமுரைதான் இந்த நாடகத்தை பம்பாய் டெலிவிஷன் நிலையம் ஒளிபரப்பு செய்தது.
நம் போதாத காலம் இந்த டெலிவிஷன் படத்தின் ஒலி ஒளி வடிவம் காணமல் போய் விட்டதாகத் தகவலகள் வருகின்றன. பொக்கிஷமாக பாதுகாத்து போற்றப்பட வேண்டிய இந்த 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படம் தூர்தர்ஷனின் அலட்சியத்தால் நாம் அனைவரும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை தூர்தர்ஷனே ஒத்துக் கொண்டும் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிமின் போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்கள் மட்டும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் சந்தோஷமே. அப்படி தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அந்த அபூர்வ புகைப்படங்களைத் தான் இங்கு காணப் போகிறீர்கள்.
கீழ்க்காணும் பத்திரிகையில் நீங்கள் பார்க்கும் செய்தி. (படம் பார்க்க)
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ள 'சத்ரபதி சிவாஜி' திரைப்படத்தை தலைவர் காமராஜர் மிகவும் பாராட்டினார். மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு 'சத்ரபதி சிவாஜி' என்ற தலைப்பில் படமாக்கப் பட்டிருப்பதும், கலையுலகச் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாவீரன் சிவாஜியாக நடித்திருப்பதும் தெரிந்ததே.
பம்பாய் வானொலி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பம்பாய் டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
முதலில் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வேறு மொழிகளிலும் 'டப்' செய்யப்படவிருக்கிறது. (கிட்டத்தட்ட 4 மொழிகளில்)
டெலிவிஷனில் காட்டப்படுவதற்காக தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான்.
"மக்களிடையே தேசபக்தியையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக தமிழில் முதன் முதலாக டெலிவிஷனுக்காக இப்படிப்பட்ட ஒரு படம் தயாரிக்கப்பட்டிருப்பது பெருமைப் படத்தக்கதாகும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல இது போன்ற படங்கள் நல்ல சாதனமாக இருக்கும்" என்று தலைவர் காமராஜர் கூறினார்'.
அந்தப் பத்திரிக்கையில் தஞ்சை வாணனுக்குப் பாராட்டு மற்றும் சிவாஜிக்கு ஏவிஎம் பாராட்டு என்ற தலைப்பில் செய்திகள் வந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்.
சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய தஞ்சை வாணன் அவர்கள் வழங்கிய இந்த அபூர்வ நிகழ்ச்சியை என்னால் பதிவு செய்ய இயலவில்லை. அதனால் என்னுடைய வீடியோ காமிராவினால் அந்த அபூர்வ ஸ்டில்களை முடிந்த மட்டும் டிவியிலேயே கிளிக் செய்து இங்கே பதித்து வழங்கியுள்ளேன்.
அதன் பின்னணியில் திரு.தஞ்சை வாணன் அவர்கள் தந்த ஒரு சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.
தஞ்சை வாணன் கூறியவை.
"நடிகர் திலகத்திடம் இப்படத்தைப் பற்றிய கதையை கூறும் போது மிக உன்னிப்பாகக் கேட்டார். வீர சிவாஜியின் உருவ அமைப்பும், அவருடைய மானரிசங்களும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு டெலிவிஷன் நிலையத்தார் படங்களுடன் விளக்கிக் காட்டியபோது அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொண்டார்.
பின் ஒரு நடிகன் எப்படி உருவாகிறான்? ஒரு நடிகனுக்கு நடிப்பில் மட்டுமே ஆர்வம் இருந்து பயனில்லை... அந்தப் பாத்திரத்தின் உடையமைப்பு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க போடப்படும் ஒப்பனை என்று அவன் எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆற்றல் நடிகர் திலகத்திற்கு உண்டு. சாதாரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் இந்த ஒப்பனை முடிந்தவுடன் 'சிவாஜி' யாகவே ஆகி விட்டார். மீசையின் வலது பக்கம், இடது பக்கம், காதோர முடி அமைப்பு, கண்களுக்கும், புருவங்களுக்கும் எவ்வளவு மை தீட்ட வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய நாடக அனுபவத்தை நிலைநாட்டி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கலைப் பொக்கிஷத்தை வழங்கினார். ஒப்பனையிலோ அல்லது வடிவமைப்பிலோ ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் தானே கண்ணாடி முன் நின்று சரி செய்து கொள்வார். காமெராவில் வருவதற்கு முன்பு அதற்கு உகந்ததாக தன்னை தயார் செய்து கொள்வதில் நடிகர் திலகத்திற்கு இணை நடிகர் திலகமே! அவருக்கு இந்த தொலைக்காட்சி நாடகம் மூலம் மிகப் பெரிய புகழ் கிடைத்தது. அவரால் எனக்கும் பெரும் புகழ் கிடைத்தது"
ஒளி ஒலிக்காட்சியாக இந்த அற்புத டெலி பிலிமை ஒளிபரப்ப முடியா விட்டாலும் புகைப்படக் காட்சியாகவாவது நம் சத்ரபதியைக் காண முடிந்ததே.
இப்படியாக பொதிகை தஞ்சை வாணன் மூலம் தன் கலை மைந்தனைப் பாராட்டி மகிழ்ந்தது. நமக்கு சில அபூர்வ படங்களையும் தந்தது. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு
மிக முக்கியம்.
இனி மிக அபூர்வமான புகைப்படங்கள் பற்றி. பதிவில் கீழ்க்கண்ட தலைப்புகளுக்கேற்றவாறு இமேஜஸ் கொடுத்துள்ளேன். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்
டெலிவிஷன் நிலைய அதிகாரிகளுடன் இதய தெய்வம்
தொலைக்காட்சி நிலைய ஒப்பந்தத்தில் நடிகர்
திலகம் கையெழுத்திடும் மிக மிக அபூர்வமான ஸ்டில்.
'சத்ரபதி சிவாஜி'யைப் பற்றி ஸ்க்ரீன் வாயிலாக விளக்குவதை உன்னிப்பாக கவனிக்கிறார் நடிகர் திலகம்
பத்திரிகையில் செய்தி.
நடிகர் திலகம் சிவாஜி 'சத்ரபதி சிவாஜி' யாக ஒப்பனை செய்ய ஆரம்பிக்கும் அபூர்வமான காட்சி.
'சத்ரபதி சிவாஜி' யாக படிப்படியாக மாறும் காட்சிகள்.
வசன, மற்றும் காட்சி ஒத்திகையில் நடிகர் திலகம்.
அன்னை பவானியிடம் அருள் வேண்டல்.
வெற்றிப்படிக்கட்டுகளின் அருகே மராட்டிய மன்னனின் சிம்ம கர்ஜனை.
சிம்மாசனம் சென்று அமர முதல் படிக்கட்டைத் தொட்டு வழிபாடு முழக்கம்.
மராட்டிய மன்னனுக்கு மண்டியிட்டுக் காத்து நிற்கும் சிம்மாசனம்.
வீர முழக்கம் தொடர்கிறது....
வாளெடுத்து சூளுரைக்கும் சூரக்காட்டை சிவாஜி சிங்கம்.
வெண்கொற்றக்குடையின் கீழ் ஒத்திகை பார்க்கப்படுகிறது.
வெற்றிப்படிக்கட்டுகளைத் தாண்டி சிம்மாசனத்தில் அமர்ந்த அழகு கம்பீரம்.
அழகும், வீரமும், கம்பீரச் சிரிப்பும் ஒருங்கே அமையப் பெற்ற 'வீர சிவாஜி'
இனி தயாரிக்கப்பட்ட காவிய டெலி-பிலிம் தொலைக்காட்சி வடிவத்தில்
இரத்தத் திலகமிட்டு சிம்ம கர்ஜனை முழங்கும் சிம்மக் குரலோன்.
தலைவர் காமராஜர் புகழாரம்.
தஞ்சை வாணன் அவர்களுடன்.
நன்றி நண்பர்களே! சேமித்து வைத்துக் கொண்டீர்களா?
Last edited by Barani; 11th August 2017 at 05:53 PM.
-
11th August 2017 05:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks