Originally Posted by
Gopal,S.
இரும்பு திரை- 1960- பகுதி-2
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
(தொடரும்)