Quote:
“ ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர்களுக்குப் பதில் சொல்கிறார்’ என்று சென்ற இதழில் அறிவித்தவுடன் அநுபவம் மிக்க புகழ் பெற்ற நடிகர்கள், இளம் நடிகர்கள், அனைவரும் பெரும் உற்சாகம் காட்டினார்கள்.
சில நடிகர், நடிகையர் எங்களிடம் நேரில் சில கேள்விகளைச் சொல்லி விட்டு, அடுத்து சந்தித்த போது ‘சார்! அந்தக் கேள்வி வேண்டாம்! இந்தக் கேள்வியைக் கேளுங்கள்...’ என்று மூன்று, நாலு தடவை மாற்றிச் சொன்னார்கள்.
‘சிவாஜி கணேசன் பதில் சொல்லும் அளவுக்கு கேள்வி நல்லதாக அமைய வேண்டுமே!’ என்ற விருப்பம் தான் அதற்குக் காரணம் என்பதும் புரிந்தது.
‘பொம்மையின் ஏப்ரல் இதழுக்காக கலைஞர்களிடம் கேள்விகளை வாங்கி வருகிறோம். நீங்கள் பதில் அளிப்பீர்களா?’ என்று ‘நடிகர் திலக’த்திடம் முதலில் கேட்டோம்.
ஒரு பலத்த சிரிப்பு!
‘இது ஜனநாயகம்!... யார் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமே!...’ என்று சொல்லி விட்டு, ‘கலைஞர்களின் கேள்விகளை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு வாருங்கள். பதில் சொல்லி விடுகிறேன்!’ என்றார், புதுமையை என்றும் வரவேற்கும் ‘நடிகர் திலகம்’ உற்சாகமாக.
‘இட்லர் உமாநாத்’ படப்பிடிப்பின் போது ஏவி.எம்.கலைக் கூடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னார் அவர். பதில்களைச் சொல்லி வந்த போது, ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் அவர் கூறியதையே தொகுத்து ஒரு தனி சிறப்புக் கட்டுரை எழுதி விடலாம். அவ்வளவு சுவையாக இருந்தன.“