-
25th June 2015, 12:47 PM
#11
படிக்காத மேதை - 55 [தொடர்ச்சி]
இந்தப் படத்தைப் பற்றி இனியும் என்ன சொல்வது? நான் ஒரே முறை படத்தின் சிறப்புகளை எழுதினேன். பிரபுராம் அழகாக சில விஷயங்களை தொடுத்திருந்தார். ரவி ஸ்ரீரங்கத்து ரங்கனை கொஞ்சும் பாணியில் பங்களிப்பு செய்திருந்தார். கோபாலோ கேட்கவே வேண்டாம். அப்படி இருக்க இனியும் எழுத விஷயம் இருக்கிறதா என்று கேட்டால் நிறைய இருக்கிறது என்பதே பதிலாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஞாயிறு மாலை ரசிக நெஞ்சங்களோடு பார்த்த பிறகு.
எனக்கு எப்போதும் நமது ரசிகர்களைப் பற்றி ஒரு பெருமிதம் உண்டு. நடிகர் திலகம் எத்தனை நுணுக்கங்களை தன் நடிப்பில் கொண்டு வந்தாலும் அதை மிக சரியாக இனங்கண்டு தங்கள் ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்துவார்கள். அதில் உயர்நிலை ரசிகன், கடைநிலை ரசிகன் என்ற பாகுபாடே கிடையாது.
அதில் மற்றொரு வியப்புக்குரிய விஷயம் சோகத்தை கூட எந்தளவிற்கு இவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னும் அந்த பெருமிதம் கூடும். இப்படிபட்ட ரசிப்புத்தன்மையை அந்த கடைகோடி ரசிகனுக்கும் சென்று சேர்த்திருக்கிறார் என நினைக்கும்போது நடிகர் திலகம் மனதுக்கு இன்னும் பிரியப்பட்டவராகிறார்.
படிக்காத மேதை படமெல்லாம் எப்படி என்றால் திருஷ்டி பூசணிக்காய் முகத்தை மறைக்க எடுத்து வரும் நடிகர் திலகம் அறிமுகமாகும் முதல் காட்சியில் ஆரம்பித்து இறுதியில் ஒரே ஒரு ஊரில் பாடல் ஒலிக்க [படத்தின் நடுவில் இடம் பெறுவதிலிருந்து காட்சியமைப்பு மாறுபட்டு] a film from Bala movies Krishnaswamy என்று படம் முடிவைடையும்வரை ஒவ்வொரு காட்சியும் ரசித்து சுவைத்து அனுபவிக்கப்படும் படம். அன்றும் அப்படிதான் நடந்தது. முழு காட்சிகளையும் எழுத முடியாது என்பதனால் முக்கியமான காட்சிகள் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக இரண்டு மூன்று காட்சிகள்.
ரங்காராவ் நடிகர் திலகத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் காட்சி. மாமா தன்னிடம் சீரியசாக பேசுகிறார் என்பதே புரியாமல் பதில் சொல்லுவது, அவரிடம் தன நிலைமையை எடுத்துச் சொல்வது, அதனால் மிகுந்த கோவத்துடன் ரங்காராவ் அவரிடம் கேள்விகள் கேட்க அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்வது, [உன் உடம்பிலே நல்ல ரத்தம் ஓடலே? ஓடுது], இறுதியாக வேலைக்கு போய் உன் மனைவியை வச்சு காப்பாத்த முடியாது என்று கேட்க முடியாது என்று அதே தொனியில் பதில் சொல்லிவிட்டு முடியாது மாமா என்று என்று பாவமாக அப்பாவியாக பதில் சொல்லும்போது அரங்கமே ஆர்ப்பரித்தது. தான் படிக்காதவன் வெளியில் போனால் வேலை கிடைக்குமா பணத்திற்கு எங்கே போவது? மனைவியை எப்படி காப்பாற்றுவது? இதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல் மாமா பேசுகிறாரே என்ற அந்த தவிப்பை கவலையை அந்த ரங்கன் பாத்திரத்தின் மனநிலை வழியாக நடிகர் திலகம் வெளிப்படுத்தும் அழகு அற்புதம் என்றால் அதை புரிந்து அதற்கான அங்கீகாரத்தை தன கைதட்டல் மூலம் வெளிப்படுத்திய அந்த ரசிகர்களுக்கும் ஆஹா!
அதன் தொடர்ச்சியாக கண்ணாம்பாவிடம் போய் புலம்பும் காட்சியும் ஓஹோ ரகம். "ஓஹோ உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா? வெளியே போனா எனக்கு என்ன வேலை கிடைக்கும்? உன் பையன்களை மாதிரி என்னை BA, MA படிக்க வச்சியா? முட்டா பயலாத்தானே வளர்த்தே! இப்போ தீடீர்னு வெளியே போன்னு சொன்னா எப்படி?" என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுவாரே அதுவும் பிரமாதமாக வரவேற்கப்பட்டது. . .
சாமான்களையெல்லாம் கட்டிக் கொண்டு புறப்படும்போது தான் பயன்படுத்திய தபலாக்களை எடுத்துக் கொண்டு போக முற்பட அதை தடுத்து அசோகன், நடிகர் திலகம் கையிலிருந்து பிடுங்க முற்பட அப்போது அங்கே வரும் கண்ணாம்பாவிடம் புகார் கூறும் நடிகர் திலகத்திடம் தபலாவை திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு " இந்த தபலாவுக்கு போய் சண்டை போடறியே விலை மதிப்பில்லாத உன் அன்பையும் பாசத்தையும் இந்த வீட்டை விட்டு எடுத்துட்டு போறியே அதுக்கு நாங்க யார்கிட்டடா கேட்கிறது?" என்ற வசனத்திற்கும் செம அப்ளாஸ்.
வீட்டை விட்டு வெளியே குதிரை வண்டியில் வரும் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் நிறுத்தும் ரங்காராவை பார்த்தவுடன் வந்டிளிருந்து இறங்கி முதுகு காட்டி நிற்கும் நடிகர் திலகம், சௌகாரிடம் பேசிவிட்டு தன்னுடன் பேச வரும் ரங்காராவை திரும்பி பார்க்காமல் முதுகு காட்டியே நின்று விட்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து போய் காலை பிடித்துக் கொண்டு அழுவாரே, அதுவும் அள்ளியது அப்ளாஸ்.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது ரங்காராவ் மறைந்த பிறகு அது தெரியாமல் நடிகர் திலகம் வீட்டிற்கு வரும் காட்சி. ஞாயிறன்று படம் பார்த்த பிறகு மறுநாள் மாலை நண்பர் சாரதியோடு பேசினேன். அவரை முதல் நாள் பார்க்கவில்லை என்பதால் படத்திற்கு வந்திருந்தீர்களா? என்று கேட்டேன். வந்தேன். லேட்டாக வந்தேன். மேலே குறிப்பிட்ட காட்சியை பார்க்க வேண்டும் என்று காத்திருந்து அது முடிந்தவுடன் கிளம்பி போனேன். வேலையிருந்தது. இருந்தாலும் இதை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக வந்தேன்.என்று சொன்னவர் அந்த காட்சியை எடுத்துச் சொல்லி அதை மீண்டும் என் மனக்கண் முன் ஓட விட்டார். அவர் அதை பற்றி பேசும்போது சட்டென்று வேறு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.
அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர் அதிகாரி ஒருவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். அவர் சொன்னது என்னவென்றால் மனிதனின் மனநிலை தனக்கு பிடிக்காத தான் விரும்பாத ஒன்றை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. அந்த உண்மையை எதிர்கிறது. பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இது மனோததுவத்தின் அடிப்படையில் கண்டறிந்த உண்மை என்றார். ஆங்கிலத்தில் இதை Deny, Resist, Accept mode என்று கூறுவார்கள் என்று சொன்னார். இதை உங்களுக்கோ மற்றவர்களுக்கோ நடந்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். அந்த நேரத்தில் எதுவும் தோன்றவில்லை. படிக்காத மேதை படம் ஞாயிறன்று பார்த்த பிறகு, மறுநாள் நண்பர் சாரதியோடு பேசியபோது அலுவலக அதிகாரி சொன்னதை 55 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் காட்சி வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருந்தது.
வீட்டிற்கு வருகிறார். ரங்காராவின் படம் மாலையிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நேரம் அவர் முகபாவம் காண்பிக்கப்படுகிறது. இல்லை இது உண்மையில்லை என்ற denial முகபாவம் காண்பிக்கிறார். முகம் மாறுகிறது உண்மைதானா என்று ஒரு சிந்தை தெரிகிறது. அப்படி கிடையாது என்ற resistance நிலை. வலது பக்கம் திரும்புகிறார். அங்கே பொட்டிழந்து அமர்ந்திருக்கும் கண்ணாம்பாவை பார்க்கிறார். இப்போது உண்மை பொட்டில் அறைகிறது. Acceptance mode-ற்கு வருகிறார். அந்த உண்மையை தாங்க முடியாமல் அப்படியே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கதறுவார். அரங்கமே அதிர்ந்து போனது. இங்கே என்ன அற்புதம் என்றால் இந்த மறுப்பு, எதிர்ப்பு, ஒப்புதல் என்ற மூன்று நிலையையும் நிமிட நேரத்தில் முகத்தில் கொண்டு வருவார். அதை பார்வையாளனுக்கும் கடத்துவார்.
நடிகர் திலகம் பங்கு பெறும் பாடல் காட்சிகளும் அன்று மிகுந்த வரவேற்பை பெற்றது. சீவி முடித்து சிங்காரித்து பாடல் காட்சி. திருமணம் நிச்சயமாகியிருக்கும் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 70-களின் மத்தி வரை கேரக்டர்ஐ மீறி நடிகர் திலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். படிக்காத மேதையிலும் அப்படியே. படிக்காத முரட்டுதனமான ரங்கன் எப்படி நடந்துக் கொள்வானோ அப்படிதான் எல்லா காட்சிகளிலும் வருவார், ரங்கன் போன்ற குணாதிசயம் கொண்ட ஒருவன் கிண்டல் செய்து பாடினால் எப்படி இருக்குமோ அப்படியே செய்வார்.
ஒரே ஒரு ஊரிலே பாடல் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாடல் ஆரம்பிக்கும்போது அவர் பாடும் மூடிலேயே இருக்க மாட்டார். குழந்தைகளை விளையாடுவதற்கு கூட்டிக் கொண்டு போவார். சௌகார் பாட ஆரம்பிக்கும்போது குழந்தை டெய்ஸி ராணியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். சௌகார் இரண்டு வரி பாடியதும் உடனே அவருக்கும் பாட தோன்ற இடது கையை மேலே உயர்த்தி சௌகாரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரேயொரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை.என்று பாட ஆரம்பிப்பார். செயற்கையான பாடல் காட்சியில் கூட எப்படி லாஜிக்கான gestures செய்திருக்கிறார் என்று யோசிக்கும்போதுதான் அவரின் மேதமை புரிகிறது.
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் என பாடும்போது முகத்தில் ஒரு பாவம். அதே போல் சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை என்ற வரியில் சோபாவில் உட்கார்ந்திருப்பார் அவர் முகத்தில் ஒரு சாந்தம் தென்படும். அதே சரணத்தில் இறுதி வரி பாடும்போது [நாய்கள் மேலடா] முகம் மாறி கோவம் கொப்புளிக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு ஆணை உடைந்து பாய்வது போல் பாய்ந்தது.
இறுதியாக எங்கிருந்தோ வந்தான் பாடல். கிருஷ்ண பரமாத்மாவாக நடிகர் திலகம். 5,6 ஷாட்கள்தான். அதற்குள்ளாகவே கண்ணனின் குறும்புத்தனம், குழந்தைகளோடு விளையாட்டு, வேணுகானமிசைத்தல், ஆலோசனை கூறுதல், பகவத்கீதையை உபதேசித்தல், இறுதியில் விஸ்வரூபம் காட்சி அருளால் என்று அதகளம் பண்ணியிருப்பார்
அந்த பாடலின் பல்லவியில் வரும் வரிகள்தான் நடிகர் திலகத்திற்கு என்னமாய் பொருந்துகிறது!
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்! .
உண்மைதானே! அந்த ஒப்புயர்வற்ற கலைஞனை கலைத்தாயின் தவப்புதல்வனை பெற நாம் தவம்தான் செய்திருக்க வேண்டும்!
அன்புடன்
சின்ன பதிவு என்று சொல்லி (வழக்கம் போல்) பெரிய பதிவாகி விட்டது. படித்த அனைவருக்கும் நன்றி! .
-
Post Thanks / Like - 8 Thanks, 11 Likes
ifohadroziza,
uvausan,
Georgeqlj,
Russellmai,
KCSHEKAR,
Harrietlgy,
adiram,
sss,
vasudevan31355,
Subramaniam Ramajayam,
Gopal.s liked this post
-
25th June 2015 12:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks