-
17th July 2017, 04:21 AM
#11
Senior Member
Devoted Hubber
Nagarajan Velliangiri
வாசுதேவன் சார்,
உங்கள் பதிவைப் படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'பொம்மி குத்துனா என்ன திம்மி குத்துனா என்ன, நமக்கு வேண்டியது அரிசிதான்' னு. அது மாதிரி, திலகத்தின் புகழை நம்மில் யார் ரசித்துப் பாராட்டி எழுதினாலும் சந்தோசம்தான். நம் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான், அது யார் மூலமாக நடந்தாலும் ஐயன் சந்தோசம்தானே அடைவார்?
நீங்க அநியாயத்துக்கு எதேதோ என்னைப் பத்தி புகழ்ந்து எழுதியிருக்கீங்க. அப்படி எல்லாம் ஒரு சிறப்பும் என் கிட்ட இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். நான் எதையும் யோசித்து எழுதுவது இல்லை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி விடுவேன். எந்த விதமான குறிப்புக்களோ ஆதாரங்களோ என்னிடம் இல்லை.எழுதும்போதும் எந்த விதமான தயாரிப்புக்களும் செய்வது இல்லை. அதே மாதிரித் திலகம் பற்றிய விசய ஞானமும் பெரிதாக ஒன்றும் கிடையாது. எனவேதான் என் பதிவுகள் எல்லாம் மேலோட்டமாக, நுனிப்புல் மேய்ந்த மாதிரி தான் இருக்கும். முரளி சீனிவாஸ், நீங்கள் மற்றும் ஜாஹிர் அவர்கள் எல்லாம் எழுதுவது போல கனமான கருத்துக்கள் எல்லாம் என் பதிவுகளில் இருக்காது. ஒரு சாதாரணமான, அதே சமயம் , வெறித்தனமான ஒரு சிவாஜி ரசிகனின் பார்வைதான் என் பார்வை. எதாச்சும் எழுதனும்னு தோணினா அப்படியே அதை எழுதி விடுவேன். அதுதான் என் பலவீனம், அதே சமயம் பலமும் கூட அதேதான்.
அடுத்தவர் மனதை அறியும் சக்தி என்றெல்லாம் உயர்த்தி இருக்கிறீர்கள், சும்மா தமாசுக்குத் தானே சொன்னீர்கள்? அதே மாதிரித்தான் தமிழறிந்ததாகத் தாங்கள் சொன்னதும். நான் தமிழைப் பள்ளியில் படித்ததோடு சரி. கல்லூரியிலும் ஒரே ஒரு பேப்பர், அதுவும் முதல் வருடம் மட்டும் நான் டீடெய்ல் மாதிரி இருந்தது. அவ்வளவுதான் தமிழுடன் என் உறவு. ஆனால் தமிழார்வம் உண்டு என்பது உண்மை. காரணம் பள்ளியில் போதித்த தமிழாசிரியர்கள் ஒரு புரமும், என் ஐயன் நடிகர் திலகம் பேசிய தமிழ் மறுபுரமும்.
அப்புறம் ஒரு சிறிய எக்ஸ்ட்ரா தகவல். எனக்கு இனப் பற்று ரொம்ப ரொம்ப அதிகம். என் ஐயனின் பிள்ளைகள் எல்லாம் என் இனம். அதுதான் என் உயிரினம். அவர்கள் எந்த நாடு எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி, என் ஐயனின் அன்பை மொழியாகப் பேசுபவர்களாக இருந்தால் போதும். அவர்களுடன் நான் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஐக்கியமாகி விடுவேன், எந்த வயதினராக இருப்பினும் சரி. அந்த ஒரு விசயத்தில் எந்த விதமான காம்ப்ரமைசும் நான் செய்தது கிடையாது. இனியும் செய்ய மாட்டேன்.
அப்புறம் நம் அன்புத்திலகத்தின் ரசிகர்களிடம் நாம் சொல்லும் கருத்துக்கள் பற்றி. நீங்கள் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன். நம் ஆட்கள் எல்லாம் எல்லா விசயங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு அமைதியான கடலைப் போலச் சாந்தமாகத்தான் இருப்பார்கள்.இந்தக் கொல்லன் தெருவில் அவ்வளவு எளிதில் நம் ஊசியை விற்று விட முடியாது. ஒரு சிறு தவறான செய்தியைக் கவனக் குறைவாகச் சொல்லி விட்டால் போதும், அப்படியே சுனாமியாகப் பொங்கி எழுந்து விடுவார்கள்.இப்போது கூடப் பாருங்கள், கொஞ்ச நேரம் முன்பு 'எங்க மாமா' படத்தின் ஒரிஜினல் 'ஹிந்தி'யில் நடித்தது ஷம்மி கபூரும், ஆஷா ஃபாரேக் என்றும் வேறொரு பதிவில் சொன்னேன். உடனே ஆஷா இல்லை, அது ராயஸ்ரீ, பழம் பெரும் இயக்குநர் ,தயாரிப்பாளர் சாந்தாராம் அவர்களின் மகள் என்று தவறைச் சுட்டிக் காட்டி விட்டார் நண்பர் பூபால் சிங். இதிலிருந்து என்ன தெரிகிறது ? திலகம் நடித்த படங்கள் பற்றி மட்டும் அல்ல, அவற்றின் நதிமூலம் , ரிஷிமூலம் எல்லாம் கூட நம்மவர்களின் நெஞ்சத்தில் பதிந்து போனவை என்று.இது கூடப்பரவாயில்லை சார், அந்த நடிகையின் மூலத்தைக் கூட விரல் நுனியில் வைத்திருக்கும் அந்த அற்புதத்தை எந்த வார்த்தை சொல்லிப் பாராட்டுவது. நான் அம்பேல். உண்மையிலேயே இவ்வளவு அருமையான, விசய ஞானம் நிறைந்த அதே சமயம் வெறித்தனமான , நம் திலகத்தின் ரசிகர்கள் போல உலகில் வேறெந்த நடிகருக்கும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பது மிகவும் சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கிறது எனக்கு.
நீங்கள் சொன்ன இன்னொரு விசயம் நிச்சயம் எல்லோருமே கவனித்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த அவசரமான வாழ்க்கை முறையில், பல வேலைகளுக்கு இடையில், திலகத்தைப் பற்றிப் புதிது புதிதாக, அதே சமயம் ஆழ்ந்த செய்திகளும் கருத்துக்களும் கொண்டதாகவும் , தவறில்லாமலும் ஒரு பதிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு பதிவர் நிறைய நேரம் செலவழித்து அதை உருவாக்க வேண்டி உள்ளது. அப்படிப் பட்ட பதிவுகளுக்குக் கிடைக்கும் பாராட்டுக்களும், சிறந்த பின்னோட்டங்களும் தான் அவரை மேலும் ஊக்குவிக்கும் உற்சாக டானிக் என்பது கலப்படமற்ற அக் மார்க் உண்மை. நிச்சயம் எனது பாராட்டுக்கள் உங்களுக்கு உண்டு இதைச் சொன்னதற்கு. எனவேதான் நான் யாரையும் பாராட்டுவதில் எந்த விதமான கஞ்சத்தனத்தையும் காட்டுவதில்லை. மனமாறப் பாராட்டி விடுவேன், யாராக இருப்பினும்.அப்படிப் பாராட்டும் போது, பாராட்டப் படுபவர் மகிழ்கிறாரோ இல்லையோ, எனக்கு நிஜமாகவே மனசு சந்தோசமாக இருக்கும்.
( பதிவர்களைப் பாராட்ட வேண்டியதன் அவசியத்தைச் சமீபத்தில்தான் ஒரு தனிப்பதிவாக நான் பகிர்ந்திருந்தேன்)
பதிவுகளின் நீளத்தைச் சுருக்காமல், எடிட் செய்யாமல் அப்படியே பகிருமாறு சொன்னீர்கள்.முயற்சி செய்கிறேன் சார். (உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல் கிறேன், யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.பெரிய அளவில் எழுதும் அளவுக்கு என்னிடம் சரக்கு ஒன்றும் ஸ்டாக்கில் இல்லை.எதோ சின்னச் சின்ன விசயங்கள் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு கொஞ்சம் சொந்தக் கற்பனைச் சரக்கைக் கலந்து, கலப்படம் செய்து, பதிவுகள் என்ற பெயரில் எதையோ எழுதி ஒப்பேத்திக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். பெரிய பதிவுகளுக்கு நான் எங்கே போவேன்? மயில் ஆடுகிறது என்று வான்கோழியும் ஆட ஆசைப்படலாமா ? அதுதான் என்னுடைய உண்மை நிலைமை, திறமை எல்லாம்.எனவே என் பதிவுகளின் மேல் பெரிதாக எதிர்பார்ப்புகளை வைக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ஏமாற்றங்களைத் தவிர்க்கும்).
என்னுடைய ஆசையெல்லாம் இப்படி ஒரு சிலபேர் மட்டுமே எழுதிக் கொண்டிருக்காமல் , நிறையப் பேர் எழுத முன் வரவேண்டும் என்பதுதான். பல்லாயிரக் கணக்கில் நம் குழுவில் இருக்கிறார்கள். அதில் நல்ல விசய ஞானமும், அறிவுக் கூர்மையும், எழுத்தாற்றலும், மொழி நடையும் உள்ளவர்கள் குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல் நிச்சயம் இருப்பார்கள்.அவர்கள் எல்லாம் ஏன் எதையுமே எழுதாமல் தவிர்க்கிறார்கள் ,தயங்குகிறார்கள் என்றுதான் எனக்குப் புரிபடவில்லை. என்னைப் போன்ற குறை குடமெல்லாம் கூத்தாடும் போது, நிறைகுடங்கள் எல்லாம் தளும்பாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இன்னும் நிறையப் பேர் எழுத ஆரம்பித்து, இந்தக் குழு முழுவதும் திலகத்தின் புகழாறு பாய வேண்டும் என்ற என் விருப்பத்தை மீண்டும் சொல்லி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
வாசு தேவன் சார், உங்களின் அருமையான 'பந்தம்' எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியம்.
மீண்டும் நன்றி, வணக்கம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th July 2017 04:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks