நம்மை போன்ற பதிவர்கள் ஏற்கனவே படித்த செய்தி ஆக இருக்கலாம் இருந்தாலும் என்னுடய ஆத்மா திருப்திகாக மீள்பதிவு செய்கிறேன்
இழக்கும் ஆச்சர்யங்கள்!
நடிகை சுவலட்சுமியின் வீட்டில் சத்யஜித் ரே புகைப்படம் இருக்கும். அவருடைய படம் ஒன்றில் நடித்திருப்பதாகப் பெருமையாகக் கூறுவார். கூர்மையான அவதானிப்பு உள்ள நடிகை அவர். "ஆசை' படத்தில் அஜீத் ஜோடியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த்.
"என் ஆச ராசாவே' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜிகணேசன் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சுவலட்சுமி தூரத்தில் உட்கார்ந்தபடியே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
"அவரை ஏன்அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றேன்.
அங்கே அமர்ந்திருந்த மற்ற நடிகர்களைக் காட்டினார். "வித்தியாசம் தெரிகிறதா?'' என்றார்.
அது சாப்பாட்டு இடைவேளை. எல்லோருமே உண்ட களைப்பை அனுபவிப்பது மாதிரி ஓய்வில் உட்கார்ந்திருந்தனர் . "வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை'' என்றேன்.
"அவர் மட்டும்தான் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கிறார். மற்றவர் எல்லோரும் சரிந்தும் சாய்ந்தும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர் தியேட்டரில் இருந்து வந்தவர். அவருக்கு இது பால பாடம். அரிதாரம் பூசிவிட்டால் இப்படியும் அப்படியும் அசைந்து அதை உடையெல்லாம் பூசிக் கொள்ளக் கூடாது. கழுத்தில் இருக்கும் அரிதாரம் காலரில் படக்கூடாது என்கிற அக்கறையோடு அவர் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள். காலையில் ஆறு மணிக்கு வந்ததிலிருந்து அதே விரைப்போடு நிமிர்ந்தே உட்கார்ந்திருக்கிறார்'' என்று ஆச்சர்யப்பட்டார்.
ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கவனித்து ஆச்சர்யப்பட வேண்டிய நிறைய விஷயங்களை நாம் நம் அலட்சியத்தால் கணம் தோறும் இழந்து கொண்டே இருக்கிறோம்.




Bookmarks